Monday, December 26, 2016

நிலத்தை நீர் விழுங்கி....


மனிதர் என்ற பதத்துக்குள்  அடக்கமான எல்லோரும் ஒன்றே என்ற தளத்துக்குள் நாம் நின்றிருந்தால் பிரிவுகளும் பிரிவினைகளும் பிளவுகளும் மோதல்களும் அதனால்  சிதைவுகளும் சேதங்களும் ஏற்பட்டிருக்காதோ  என்ற சாத்தியமற்ற கேள்விகள் விடைகளற்ற பதில்களாக  அடிக்கடி  மனதில்  எழுவதுண்டு  ஆனாலும், பிளவுகளும் மோதல்களும் மனிதர்க்கு மட்டுமல்ல  மண்ணுக்கும் உண்டெனும் உண்மை  உறைக்கும் போதெல்லாம் , எதோ வந்தோம் இருந்தோம் எம் ஆளுமைக்கு உட்படாத எல்லாவற்றையும் காட்சியாகவும் செய்தியாகவும்  உள்வாங்கிக்கொண்டு கையாலாகாதவர்களாக இருந்துவிட்டுச்  செல்ல முடியுமே  தவிர வேறேதும் சாத்தியமில்லை  என்ற அயர்வே இறுதியில்  மிஞ்சி விடுகிறது அப்படித்தான்  ஆழிப்பேரலை அவலமும்.

பலலட்சம் ஆண்டுகளுக்கு முன்  ஒரே தட்டாக  இருந்த  நிலம்  கண்டங்களாகப் பிரியப் பிரிய  அதன் இயற்கை வெப்ப தட்ப சூழ்நிலைகளுக்கு  ஏற்றவாறு உருவாகிய  பல்வேறு  நிலத்தட்டுக்கள் தான்  ஒவ்வொரு  கண்டங்களையும்  கடல் நிலம் என்பவற்றையும் தாங்கி நிற்கின்றன.  இந்த நிலத்தட்டுக்கள் அதிரும் போது அல்லது ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் போது  ஆழிப் பேரலைகள் வெளிக்கிளம்பி  ஊரை வளைத்தெடுத்து வாய்க்குள்  போட்டுப் பசிதீர்த்துக் கொண்டு  சற்றுக்காலம் அமைதியாகி விடுகின்றன.  எம்மைப் போல, பிரிவினைகள் தரும் போர்கள் வாய்  பிளந்து நாடுகளை  விழுங்குவது போல.





கி.மு பன்னெடும் காலத்தில் இருந்தே  நிலத்தை நீர்விழுங்கி  இயற்கையின்  முன் மனிதனின் கையாலாகா   நிலையை  நிரூபித்துக் கொண்டிருந்தாலும் தூர நாடுகளில்  நடப்பதை  அல்லது  எமக்கு  முன்னைய காலத்தில் நடந்ததை   கேள்விகளால்  அறியப்படுவதை விட நேரடியாக  உணரப்படும்  அவலத்தை  எம் வாழ்நாட்காலத்தில்  சந்திக்க  நேர்ந்த அனுபவம்  அனைவர் மனதிலும் வடுவாகவே  தங்கி விட்டிருக்கிறது. காலம்  உள்ளவரை இது  மறையாது என்பதை இந்தத்  தலைமுறையினர் சந்தித்த ஆழிப்பேரலை அவலத்தின்   12வது வருட நினைவு  நாளான  இன்றும்,  கட ந்த  சிலநாட்களின் முன்  52 ஆம்   வருட நினைவுநாள்  அனுஷ்டிக்கப்பட்ட  கடல் வழி இந்தியப் பயணங்கள் பற்றி பாட்டி சொன்ன கதைகளில்  இருந்த வில்போன்று  வளைந்த  கடற்கரையை கொண்ட கடலில்  அமைந்திருந்த  நிலமுனை நகரமான  தனுஷ்கோடி என்ற பெயர் பெற்ற  சங்ககாலப் புகழ் பெற்ற   நகரத்தினை   நீர் மேவிய வரலாறும்  உறுதி  செய்தது. 

பூமிக்குள் புதையல் கிடைப்பது  வழமை  ஆனால் .  பல மாநகரங்களை  வரலாற்றுப் புதையலாக்கி   மண்ணுக்குள்ளும் கடலுக்குள்ளும் மறைத்து  வைத்த  வரலாறுகளை இந்த ஆழிப் பேரலைகளே அதிகம்   எழுதின.   அவற்றுக்குள்  தமிழ் வளர்த்த  சங்கங்களை காவு கொண்ட கதைகளையும்  சேர்த்தே எழுதின. இலக்கியத்தில்   சிலப்பதிகாரமும் , பட்டினப்பாலையும்  மிகத்  தெளிவாக  இவ்வவலத்தை விளக்கிக் கொண்டு இன்னும்  எம்முள்  உயிர்த்திருக்க,  பாடப்பட்ட பட்டினம்  கடலுக்குள் பாலையாக  தமிழர்களின் பண்பாட்டு வரலாற்றின் தொன்மையை  தனக்குள் புதைத்துக் கொண்டு  இன்னும்  அமைதியாகக் காத்துக் கொண்டிருக்கிறது. 

அதுபோலவே  இலங்கையில் நீருக்குள் புதைந்து போன நிலப்பகுதிகளுக்குள்   நம்மால்  அறியப்படாத  சங்கதிகள்  பலவும் புதைந்து போய்  வருங்காலச்  சந்ததிக்கு  உண்மை  சொல்லக் காத்துக் கொண்டிருக்கலாம் .

மனிதன்  எத்தனை கண்டுபிடிப்புக்களையும்  சாதனைகளையும்  செய்து கொண்டிருந்த போதும்  உன்னைப்படைத்த  எனக்கே  உன்னை  விஞ்சும்  சக்தியும்  உண்டென்று  இயற்கை தன் ஆதிக்கத்தை   நேரம் பார்த்து  உணர்த்தி விடத்தான்  செய்கிறது. அதன் கைகளில் கைதாகும்  நேரம்  வரை  கிடைக்கும் ஒவ்வொரு  கணத்தையும்  மனிதர்களாகவேனும் வாழ்ந்து  முடிப்போம்.

Saturday, December 24, 2016

கற்றது கடலளவு.......

இங்கு  பாடசாலை   வகுப்புக்களின்  ஆண்டிறுதி   கால   விடுமுறை     நேரமிது.  பரீட்சைகள்   முடிந்து   படிப்பித்தல்கள்   குறைந்து  விடுமுறைக்கு  முன்னான   விளையாட்டுப் போட்டிகள்,  கல்வி ச் சுற்று லாக்கள்   என்று   மாணவ சமுதாயம்  சற்று  தம்மை   இறுக்கம்  தளர்த்திக் கொள்ளும்  காலம்.
.
ஒரு  பாடசாலை  நிர்வாகத்துக்கும்   எங்கள்  புலம்பெயர்   தமிழ்  குடும்பத்துக்குமான   விளக்கமின்மை   அல்லது  குழப்பம்  என்று   எதோ   ஒரு  சிறு பஞ்சாயத்து.  அதற்குள்  தலை  கொடுக்க   வேண்டிய  அவசியம்  எனக்கில்லை   ஆயினும்   இரண்டு பகுதிக்கும்  இடையிலான   ஒரு  இடைத்தரகு  நிலை .  குற்றம் இரண்டு  பகுதியிலும்  இல்லை   இருந்தாலும்  என்ன குளறுபடி   என்பதை ஆர்வமிருப்பின்  தொடர்ந்து   வாசியுங்கள்.
.
அந்தப் பெண் பிள்ளைக்கு   பன்னிரண்டு    வயது   எழாம்  ஆண்டு   கற்கிறாள்.   அந்த      வகுப்புக்  குழந்தைகளை   அழைத்துக் கொண்டு  ஒருவாரச்  சுற்றுலாவுக்கு  தயாராகி   இருக்கிறது  வகுப்பு.  அதற்கான   அனுமதிப் படிவத்தில்   இந்த  மாணவியின்   பெற்றார்   மட்டும்   கையொப்பம்   இடவில்லை.  வகுப்பாசிரியர்  காரணம்  கேட்டதற்கு  மாணவியால்  பதில்  சொல்ல முடியாமல்   மௌனம்  சாதித்திருக்கிறாள்.  நிர்வாகம்   திரும்பவும்   அனும தி கோரி  கடிதம்  கொடுத்திருக்கிறது   அதிலும்   காரணம்  ஏதும்  சொல்லப்படவில்லை .  கேள்விக்கான  அவளது   பதில்  மீண்டும்  மௌனமாகவே  இருக்க   பெற்றோரை   அழைத்திருக்கிறார்கள்  .
.
வந்த  பெற்றோரும்  பதில்  சொல்லாது   கேட்ட கேள்விகளுக்கு     ஆம்  இல்லை   என்ற  பதில்களையே   விளக்கமறு   சொல்லிக்கொண்டிருக்க ,  பஞ்சம் பிழைக்க   வந்த  கூட்டம்  பணம்  இல்லாமல்   இருக்கும்  என்று   பாடசாலை  நிர்வாகம்  எண்ணி , பாடசாலைக் காசிலும்   வகுப்பு  சேமிப்புக் காசிலும்  ஒருபகுதியும் ,  மற்றும்  வகுப்பில்  வசதியான  பெற்றோரிடம்  விடயத்தை  சொல்லி   மிகுதி  பணமும்  சேர்த்து  பிள்ளையை சுற்றுலாவுக்கு    அனுப்பலாம்  தனியா   ஒரு  பிள்ளை  எ ஞ்சி   இருப்பது   அதன்  மன நிலையை   கல்வியை  பாதிக்கும்  என்று   விளக்கம்  சொல்ல  நான்  குழம்பினேன்.
.
எப்படி  பணம்  இல்லாது  போகும் .  நம்மவர்கள்   பலர்   இங்கு  வேலை செய்வதையே   வேலையாக   கொண்ட  கூட்டத்தை  சேர்ந்த  பெற்றோர்  அல்லவா.  400 யூரோ   கட்ட  முடியாதா?  பிள்ளையின்   பூப்புனித   நீராட்டு  விழாவுக்கே   அமெரிக்க  கல்யாணக்கார்  வாடைக்கெடுத்து  ஐந்து  நிமிட  நேரத்தில்   போகும்   மண்டபத்துக்கு   இரண்டு மணி  நேரம்   அயல்  கிராமம் நகரம்   எல்லாம்  சுற்றி  பிள்ளையை   களைத்துச் சோர்வடைய   வைத்து  விருந்தினரை காக்க வைத்து   கொண்டு வந்து  மண்டபத்தில்  இறக்கி     அதற்காக  இரண்டு  மணித்தியாலத்துக்கு   2000  யூரோ  செலவு  செய்யும்  வசதி   நிறைந்த  இவர்களிடம்  ஒரு  வாரத்துக்கு   நானூறு  யூரோ  கட்டணமாக  கட்ட  முடியாதா  சிந்தனையினூடே  யாழ்ப்பாணத்தின் பிந்தங்கிய குக்கிராமம்  ஒன்றின்,  கல்வியறிவிலும்  மிகப்பிந்தங்கிய சாயலில்  காணப்பட்ட பெற்றோரிடம்    காரணம்  கேட்டபோது,


.

"பொம்பிளைப் பிள்ளை  அதுதான்  அனுப்ப  விருப்பமில்லை"   என்று   தீர்மானமான  முடிவாகச்  சொன்னார்கள்.
 "அது  தான்  ஏன்  என்று  கேட்கிறேன்  வகுப்பில்   எல்லாக்  குழந்தைகளும் தானே  செல்கிறார்கள்"
 "ஆனாலும்  எங்கட  பொம்பிளைப்பிள்ளை"
  "பாதுகாப்பில்லை  என்று  பயப்படுறீங்களா   வேறும்  பெண் குழந்தைகள்  சேர்ந்து  தானே  போகீனம்"
  "அவையள்  வெள்ளைக்காரப் பிள்ளைகள்.  எங்கட  பிள்ளைகள்   அவையளை போல   இல்லையே"
இந்த   பதிலிலும்  பொம்பிளைப்பிள்ளை  என்று  திருப்பி  திருப்பி  அழுத்திய  வார்த்தைக்குள்ளும்   தான்  விளக்கமின்மை   இருக்கின்றது   என்பது  புரிந்து  போக ;
 "ஆசிரியைகள்   கூடப்  போகிறார்கள்   தனிப்பட்ட   அந்தரங்க  தேவைகள்   இருந்தால்   தாய்  போல  கவனித்துக் கொள்ளுவார்கள்  பயப்படாதீங்கோ "  என்றேன்  ஆதரவாக
"அதில்லை  பிரச்சனை  அங்கே  போற  இடத்தில   பிள்ளை   பழுதுபட்டுப் போச்சுது   என்றால்...."
தூக்கி வாரிப் போட்டது  அந்தக்  கேள்வி   மனம்  ச்சே   என்றது
 "குழந்தை   பற்றி  என்ன  பேச்சுப் பேசுகிறீர்கள்"
 "பின்ன   என்ன   சுற்றுலாவுக்கு   போகேக்க பொம்பிளைப்  பிள்ளைகள்  கருத்தடை  சாதனங்களும்  எல்லோ   கொண்டு போக வேண்டுமாம்   அப்ப  எப்பிடி   எங்கட   பிள்ளை   துப்பரவா திரும்பி   வரும். "
சுத்தியல்  ஒன்றெடுத்து   தலையில்  போட்ட  மாதிரி  இருந்தது  எனக்கு
 "பாடசாலை   நிர்வாகம்  தந்த கொண்டுபோக   தேவையான   பொருட்களின்  பட்டியலில்   இதுவும்  இருக்கா ?"
  "இதை  எல்லாம்   எப்பிடி  வெளியா   எழுதுவீனம்.  நாங்க  தான்  யோசிச்சு  செய்ய  வேணும் .  அங்க  பெடியங்கள்   பெட்டையள்  எல்லாம்   ஒரே  அறையில   தானாம்   படுக்கிறது"
(நடைமுறையில்   அப்படி  அல்ல செல்லும்  இடத்தில்  உள்ள  மாணவர்  தங்கும் அரசாங்க  பொது  விடுதிகளில்   தனித்தனிப்பகுதி ஆயத்தம்  செய்திருப்பார்கள்  )
 "படுத்தா   அதுவும்   குழந்தைகள்   ஒன்றாக  படுத்தால்?"
 "ஏதும்  நடக்காதா? இஞ்ச   எல்லாம்  ஆயத்தமாக   இருங்கோ  எண்டு  தானே  நாலாம்  வகுப்பு  முடியும்  போது  எல்லாம்   சொல்லிக் குடுக்கினம்"
 "என்ன  பாலர்கள்  பள்ளிச்  சுற்றுலா  போற   இடத்தில   பாலியல் லீலைகள்  எப்படி  நடத்துவது   என்றா? "
" எங்களுக்கு  தெரியாதது   எல்லாம் சொல்லிக் குடுக்கிறது  இதுக்கு   தானே?  இந்த  வயதில   இதெல்லாம்  எங்களுக்கு  பெற்றோராவது   சொல்லித்  தந்தவையே  சொல்லுங்கோ  பாப்பம்   பொத்திப் பொத்தி   எல்லோ  ஒழுக்கமா  வளர்த்தவை "
 நான்காம் வகுப்பு  தாண்டும்  போது  பிள்ளைக்கு  பத்துவயது  முடிகிறது.  அத்துடன்   ஆரம்ப  பாடசாலைக் கல்வியும்  முடிகிறது.  பத்துவயது  தாண்டியதும்  குழந்தைகளாக   இருந்த   இவர்களின்  உடல்களில்   பருவம்   மெல்ல  மெல்ல  ஹோமோன்   மாற்றங்களால்      இளமையை எழுத  ஆரம்பிக்கும்.   அந்த  தனக்குள்  ஏற்படும்  மாற்றங்களுக்கான   காரணங்களை  குழப்பமற்று   பிள்ளை  உணர்ந்து   கொள்ளவும் ,  அதன்  மூலம்  ஏற்படும்  பயங்கள் குழப்பங்கள்   அல்லது  மன அழுத்தங்களில்  இருந்து  தப்பிக் கொண்டு   தன்  உடல்  மன   மாறுதல்களை  ஏற்றுக் கொள்ளவும் ,  தனக்கு பிறரால்   ஏற்படக் கூடிய   துஷ்பிரயோகங்களில்  இருந்து  தன்னைக் காத்துக் கொள்ளவுமே   அந்த  வயதில்  அது கற்பிக்கப் படுகிறது
" ........ அக்கா  சொன்னாவே  சுற்றுலாவில்   இதெல்லாம்  நடக்கும்  என்று"  (இந்த .......  அக்கா  வாய்  திறந்தால் வசனத்துக்கு  ஒரு  வார்த்தை  ஆங்கிலம்   அதிலும்  பாஸ்போர்ட்   இற்கும்   பாஸ் பூட் இற்கும்  வித்தியாசம்  இல்லாத   ஆங்கில  உச்சரிப்பில்   அளந்து  விடும்  அதி  மேதாவி  எங்கோ  ஒரு  கான்வென்டில்   கற்றதாக  பெரும்  படித்த   குடும்பம்  ஒன்றில்  இருந்து  வந்ததாக  சொல்லிக் கொள்ளும்  இப்படி  அப்பாவிகளின்  அட்வைசர் )
"........... அக்காவின்  பிள்ளைகள்   போகீனமா?"
"ஓம்   அவை  ஆம்பிளைப் பிள்ளைகள்  தானே  பயமில்லை"
 'ஒ....  அப்போ   விதைப்பது   பற்றியல்ல   உங்கள்   பிரச்சனை   முளைத்து   விடுமோ   என்பது  தான்   கலாச்சாரத்தை   தக்க வைத்தல்  போல'  அந்த  இடத்தில்  வாயில்  வந்த  வார்த்தையை   வெளிப்படுத்த  முடியாது  என்னால் அங்கு  என்  பணி  அந்நேரத்தில்  அதுவல்ல.
.
அவர்களின்  பயங்களையும்  குழப்பங்களையும்  நிர்வாகத்துக்கு விளக்கிய  போது திடுக்குற்று  மாறிய   அவர்களின்  முகங்களில்   வெறுப்பு  வழிய   கண்கள் பேசிய   சங்கேத  மொழிகள்  பார்த்தபோது   உடல்  கூசியது.   ஆனாலும்  உதட்டில்  புன்னகையும்  குரலில்   குழைவும்  மாறாமல்   ஆதரவாக   பேசினார்கள்  அவர்கள்  கடமை  என்பதால்.
.
நான்  விடைபெற்ற  போது  "உங்கள்  இடத்தில்  இப்படித்தானா?"  என்றார்கள்  நட்பான   புன்னகையுடன்   அந்த  இப்படித்தானாவுக்குள்   எதுவெல்லாம்   அடக்கம்  என்பது  எனக்குத்  தெரியாது   ஆனால்  என்  இடம்   இப்படி  அல்ல;  இந்த  இடத்துக்குள்   ஏராளம்  அடக்கம்.  மேல்நாட்டுக்கு   வந்து    இப்படி  அதிகம்  கற்ற  அறிவாளிகளை   சந்திக்கும்  போ து  தான்   ஏராளம்  கீழான  விடயங்களை   நான்  அறிந்து  கொள்ள  முடிகிறது.
.
வரவேற்று   தஞ்சம்  கொடுத்த  ஐரோப்பா கடலளவு   கற்ற  இவர்களிடம்   இருந்து கற்றுக் கொள்ள  இன்னும்  அதிகம்  உண்டு.   தீமிதித்தல்   மாதிரி.....  தூக்குக் காவடி   மாதிரி..... பல்லக்கில்   தூக்கி  ஊஞ்சலாட்டி  வரும்   கல்யாணப் பெண்   மாதிரி......  குத்தாட்டம்  போட்டுக் கொண்டே  மணமேடைக்கு  வரும்   மணப்பெண்  மாதிரி......  பருவமடைந்ததற்காக   சடங்கு  வரை   வீட்டில்   காக்க  வைத்து  மண்டபமும்   வேலை  விடுப்பும்   கிடைக்கும்  வரை   சடங்கை    ஒத்தி வைத்து   பள்ளியில்  வகுப்பிறக்கப் படும்   மாணவிகள்  மாதிரி   இன்னும்  இன்னும்   ஏராளமாய்......

Thursday, December 22, 2016

குக்...குக்....கூவென கரையும் மணித்துளிகள்

சுவரில் இருந்து கூடு திறந்து சின்னதாய் ஒருமுறை செட்டையடித்து, செல்லமாய் கூவி நேரத்தை ஒருமுறை நினைவுறுத்தி விட்டு உள்ளே சென்று அப்பாவியாய் அமர்ந்து கொள்ளும் சின்னக் குருவியின் மணிக் கூடுகள் உருவான இடத்தை ஒரு தரம் எண்ணிப் பார்ப்போமா?
.
உண்மையில் இந்த மணிக்கூட்டில் இருந்து வரும் கூவும் ஒலி அதற்காக அமைக்கப் பட்டதல்ல. orgel என்ற இசை வாத்தியத்தில் வழிந்த இசையில் தற்செயலாக இந்த குக் குக் கூ... சத்தமும் பறவையின் சிறகடிப்பு போன்ற இசையும் பிடித்துப் போக, 1629 ஆம் ஆண்டு முதல் முதல் இந்தக் குக் கூ.. ஒலி (Kuckuck ) பிரத்தியேகமாக பதிவு செய்து வைக்கப் பட்டது.
.
பின் நாட்களில் ஜெர்மனியின் Schwarzwald Kreis மாவட்டத்தின் Triberg மற்றும் அதனைச் சுற்றி உள்ள மலைகிராமங்களில் உள்ளோர்களால் உருவாக்கப் பட்ட பறவையின் கூண்டு போன்ற மணிக்கூட்டுக்கு மணி ஒலிச் சத்தமாக இந்தக் கூவும் குரல் இணைக்கப் பட்டது. அத்துடன் அந்த மணிக்கூட்டுக்கு குக் கூ .. மணிக்கூடு (Kuckucks uhr) பெயரும் சூட்டப் பட்டது.
.
இந்தக் குக்கூ ... மணிக்கூடு 1730 இல் Franz Anton Ketterer என்பவரால் உருவாக்கப் பட்டது என்று ஒரு ஆராட்சியாளரும், இல்லை அவரது தந்தையால் அதற்கு முதலே இது உருவகம் பெற்றிருந்தது, அதை மகன் வெளிக் கொணர்ந்தார் என்று இன்னொரு ஆராட்சியாளரும், அதுவுமில்லை 1742 இல் Michael Dilger உம் Matthäus Hummel என்பவரும் இணைந்து உருவாக்கியதாக மற்றொரு ஆராட்சியாளரும் சொன்ன போதும்,

Triberg என்ற மலைக் கிராமத்துக்கு அருகே உள்ள பண்ணையில் இருந்து சகோதரர்களான Aandreas அவரது இரு வயது இளைய தம்பி Christian Herr ஆகியோர் இணைந்து செய்த குக் கூ..,,. மணிக்கூடு முதல் முதலில் வெளி உலகப் பாவனைக்கு வந்து இன்று உலக வீடுகள் பலவற்றின் வரவேற்பரைகளில் கூவிக்கொண்டிருக்கும் குக் கூ... குருவிகளுக்கு மூதாதையாகிப் போனது.
.
இந்த Triberg வெள்ளியை உருக்கி வார்த்தது போல் உச்சி மலையில் இருந்து அவசரமில்லாமல் ஒடுங்கி ஒழுகும் அழகிய நீர்வீழ்ச்சி கொண்ட ஒரு சுற்றுலாத் தலமாதலால் ஆரம்ப காலம் தொட்டு இந்த மணிக்கூட்டு உருவாக்கம் சுற்றுலாப் பயணிகளுடனான வியாபாரத்தைக் குறிவைத்த வீட்டுக் கைத்தொழிலாக இந்தக் கிராமத்தில் வளர்ந்தது.
.
அவரவர் கற்பனைக் கேற்ப அதன் வடிவங்களில் சிறிய மாறுதல்களை ஏற்படுத்தும் போதும் அதன் அடிப்படை வடிவமும் கூவும் குரலும் என்றும் மாற்றம் பெறாமல் இருப்பது அதன் தனிச் சிறப்பு.
.
இன்று இந்த இடத்துக்கு சம்பந்தமில்லாத நிறுவனங்கள் கூட அதைப் போல பிளாஸ்ரிக், உலோகம், கண்ணாடி என்ற பலவித மூலப் பொருட்களில் அதை உருவாக்கி விற்பனைக்கு விட்டுள்ள போதும் இதன் தாயகத்தில் அடிப்படையில் இருந்தது போலவே மரமும் மற்றும் இயற்கை மூலப்பொருட்களும் கொண்டே இதன் கூடும் அலங்காரமும் செய்யப்படுகிறது.
.
மிகச் சாதாரண விலைகளில் இருந்து மூன்று நான்கு ஆயிரம் யூரோ தாண்டிய நிலையிலும் விற்பனையாகும் இந்தக் குருவிக் கூடுகள் ஆண்டு முழுவதுமான சுற்றுலாப் பயணிகளுக்காக வீதி முழுவதும் கடைபரப்பப் பட்டிருக்கும்.
.
நத்தார் காலத்தில் இந்த நீர் வீழ்ச்சியை நெருப்பில் உருக்கி, நிறங்களில் குழைத்து வாணங்களில் வேடிக்கை காட்டும் மஜிக் நிகழ்ச்சி பிரபலமானதால் எலும்பு உருக்கும் குளிரிலும் அந்த வண்ண நீரின் வாணவேடிக்கை பார்க்க இலட்சங்களை தாண்டி எண்ணிக்கையற்றுக் குவியும் மக்கள் வாங்கிச் செல்லும் நினைவுப் பொருள் இதுவாகவே இருக்கிறது
..
எங்கே எப்படி யாரால் உருவாக்கப் பட்ட போதும், கூடு திறந்து வெளிவந்து செட்டையடித்து சிலுப்பி கூவும் ஒவ்வொரு மணித் துளியிலும் கடக்கும் எங்கள் ஆயுளை இந்தச் சின்னக் குருவிகள் நினைவுறுத்துவதாகவே எனக்கு எண்ணத் தோன்றுகிறது.

Saturday, December 17, 2016

சிறகெட்டும் தொலைவில் வானம்


அந்தப் பெண்ணை பாட்டி என்பதா? அம்மா என்பதா எனக்கு அப்போது போல் இப்போதும் புரியவே இல்லை. வயதானாலும் நெடிதுயர்ந்த நீண்ட உருவம். முழங்கைகளுக்கு கீழான கைகள் தவிர அவரின் முகத்தை கூட அதிகம் பார்த்ததில்லை. ஆளரவம் குறைந்த மங்கல் பொழுதுகளில் எப்போதாவது வீதிகளில் அவரைக் கண்டிருக்கிறேன்.
கிட்டத்தட்ட மங்கிய காவி நிறத்தில் பருத்தி நூற் புடவை, பின்னாளில் தான் புரிந்தது. அது மங்கிய காவி அல்ல பழுப்பேறிய வெள்ளை என்று. அவர் மஞ்சள் நிறத்தின் மங்களத்துக்கு மறுதலிக்கப் பட்டவர். புடவைத் தலைப்பால் தலைமூடப்பட்டிருக்கும் மொட்டாக்கு மீறி அந்த முகத்தை எப்போதும் முழுமையாகப் பார்த்ததில்லை. எப்போதும் குனிந்து கூன் விழுந்தது போல் ஓரு நடை. அந்த திடகாத்திர உருவ அமைப்புக்கு அந்தக்கூன் இயல்பாக பொருந்திப் போகாமல், அவர் தன்னை குறுக்கி நடப்பது போலவே தோன்றும் எனக்கு. சற்றே வெளித்தெரியும் கரங்கள் வாடிவதங்கிய கனகாம்பரம் நிறத்தில் இருக்கும். எப்போதும் வாயில் எதோ ஒரு முணுமுணுப்பு. அது அப்போது ஸ்லோகம் என்று நினைத்தேன். இப்போது சோகமாக இருக்கலாமோ என்று தோன்றுகிறது.
மங்கல் விழுந்த மாலைகளில், வீடுகளற்ற வளவுகளின் வேலிகளில் படர்ந்திருக்கும் பிரண்டைத் தண்டு, அல்லது மொசுமொசுக்கை, வாதநிவாரணி ஏதாவது ஒரு இலை பறித்துப் பையில் அடைந்து கொண்டிருப்பார். அவர் மொட்டாக்கு போடும் விதத்தில் அந்தக் கையும் பையும் கூட அதற்குள் மறைந்திருக்கும்.
அவர் யாரோடும் பேசி நான் பார்த்ததில்லை. தன்னோடு மட்டுமே பேசுவார். யாரும் அவரை நெருங்கிச்சென்று பேசியும் நான் கண்டதில்லை. ஒருவேளை அவர் பேசவே மாட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கலாம். தெரியாமல் நான் அருகே சென்று" பாட்டி நான் உதவலாமா" என்று கேட்டேன் ஒருநாள். அவசரம் ஏதுமில்லாமல் திரும்பி மொட்டாக்கு மறைத்த முகத்தால் அவர் என்னை நோக்கிய போது, அந்தக் கண நேரப் பார்வையில் அது வயதான முகம் அல்ல என்று கண்டேன். கனிவாக நோக்கி விட்டு பதில் ஏதும் சொல்லாமல் கருமமே கண்ணாயினார்.
அந்த நேரங்கள் தவிர அவரை எங்குமே நான் கண்டதில்லை. மாலை விளையாடிக்களைத்த பொழுதுகளில் அநேகமாய் அவரையே பின் தொடரும் என் பார்வை. பொதுவாகவே வீடுகளில் அயலட்டத்தைப் பற்றிப் பேசிக்கொள்ளும் போதும், அவர் பற்றி எந்தப் பேச்சும் வீட்டில் வந்து நான் கண்டதில்லை. நானாகவே ஒருமுறை வீட்டில் விசாரித்தபோது," அது குருக்களின் தாய்" என்ற அசுவாரசியமான பதிலுடன் வீடு தன் பாட்டுக்கு இயங்கியது.
அப்போ அவரை எப்படி எனக்குத் தெரியாமல் போகும். அங்கே அந்த வீட்டில் என் தோழிகள் இருக்கிறார்களே. அங்கு அதிகம் யாரும் போவதில்லை. நானும் எப்போதாவது தான் போவேன். அப்போதும் அவரை நான் கண்டதில்லை. ஒருமுறை அந்த வீட்டுக்கார என் நண்பிகளிடம் அவர் பற்றி விசாரித்த போது
" அது எங்கள் பாட்டி" என்றார்கள்.
" எதுக்கு அவ கோவிலுக்குக் கூட வருவதில்லை. மாலையில மட்டும் வெளியே வருகிறா " என்றேன்.
"அது கைம்பெண். முழுவியளத்துக்கு ஆகாது."
மிக இயல்பான வார்த்தையுடன் அவர்கள் தங்கள் சுவாரசியமான பேச்சை தொடர்ந்தார்கள். எனக்கு மட்டும் எதுகும் காதில் விழாமல் போனது.
அந்த வீட்டின் கடைக்குட்டியான ராஜி என்றழைக்கப்பட்ட ராஜேஸ்வரி மட்டும் அனேகமாக பாட்டி நிற்கும் இடங்களைத் தேடி வரும் . பாட்டி பேசாதபோதும் அதுவா வாய் ஓயாமல் அவவுடன் பேசிக்கொண்டே நடக்கும் . என்னோடு அந்த என்னிநிலு சின்னவளான சின்னப் பெண்ணுக்கு சற்று அதிக நெருக்கம் இருந்ததால் யாருமில்லா பொழுதுகளில் குடும்ப ரகசியம் சொல்லும். பாட்டியின் நரக வாழ்வு பற்றி உடைந்த குரலில் அது பேசும் போது அதுக்கு வயது பத்து. அப்போதே அதன் முற்போக்கு எண்ணங்களும் அதை செயற்படுத்த முடியாத சூழ்நிலையும் வித்தியாசமாக சந்தோசமாக இருக்கும்.
பின் எங்கள் வீட்டில் எப்போதும் அதையே அந்தப் பாட்டி பற்றிய விபரங்களையே விடுத்து விடுத்து விசாரிக்க ஆரம்பித்தேன்.
"உன் வயதுக்கு இதெல்லாம் வேண்டாத விசயங்கள். போய் புத்தகத்தை எடுத்துப் படிச்சு உருப்படுற வழியைப்பார்." எப்பவும் போல பாட்டியின் அறிவுரை அது.
அடுத்து
"உன்னைச் சுற்றியிருக்கிற உலகத்தைப் படி முதலில. அது தான் புத்தகப்படிபை வழிநடத்தும்" என்ற பீடிகையுடன் தாத்தா பக்கத்தில் இருத்தி அனைத்துக் கொண்டு கதைக்கத் தொடங்க பாட்டியும் சேர்ந்து கொண்டு சொன்ன விபரங்களில்.....
தலை மழிக்கப்பட்டு மொட்டாக்குக்குள் அந்தப் பெண்ணுடல் உணர்வுகள் விழுங்கிய, விருப்புக்கள் மறுக்கப்பட்ட தன் யாகத்தை ஆரம்பிக்கும் போது அவவின் வயது இருபத்தியிரண்டே மட்டும் தான்.
அதன் பின் முழுவியளத்துக்கு ஆகாத மூதேவியாகி, அந்த வீட்டின் வேலைக்காரியாகி, வெளிவாசல் தவிர்த்து கோடிப்பக்க வழிமட்டும் அவவின் உபயோகத்துக்காக்கி , கொல்லைப்புற மூலையில் தனிமையில் ஒதுக்கமாகி, வெறுந்தரைப் படுக்கையாகி , உப்புக் காரம் வெங்காயம் பூடு தவிர்த்த உணவுகளின் சுவையும் நிராகரிக்கப்பட்ட வராகி,....
தனது இருபத்தியிரண்டு வயதுக்குள் தாயாக்கிய மூன்று பிள்ளைகளை வீட்டில் உள்ளவர்களின் வசவுகளோடு வளர்த்து, அவர்களின் எந்த நன்மைக்கும் முன்னே வரும் அனுமதி மறுக்கப்பட்டவராகி கொல்லைவாசல் வழியே ஒட்டி நின்று பார்க்கும் வாழ்க்கையாகி........
உணவில் சுவை தவிர்த்து, மனதில் மகிழ்வு தவிர்த்து, மனிதர்கள் தவிர்த்து , நடைமுறை வாழ்வின் கருத்துப் பகிரல்கள், சிறிய சிரிப்புக்கள் கூட மறுக்கப்பட்டு நடந்து கொண்டிருந்த யாகத்தில் ஓரு கன்னி மன உணர்வுகள் முற்றிலுமாய் வெந்து, அந்தத் தங்கத் தேகம் தினம் தினம் தீயில் வாடிய கொடுமை நடந்து கொண்டிருந்தத காலத்தில், ..
அவரது வயோதிப அப்பாவின் மனைவி காலமான போது மட்டும் அப்பா முழுவியளத்துக்கு உதவாமல் போகவில்லை. ஆண் மகன் வருமானம் நின்றால் குடும்பம் சந்தியில் நிற்கவேண்டும். சம்சாரம் இல்லாத குருக்கள் சவுண்டியாகத்தான் போகவேண்டும். சவுண்டியாகப் போவதானால் தினத்துக்கும் ஐந்து காலப் பூஜை போல் ஐந்து சாவு விழவேண்டும். விஷேச நாட்களின் திருவிழாக்கள் போல் விஷேசச் சாவுகள் இல்லை, அதனால் மேலதிக வருமானம் இல்லை. வருமானத்துக்காக மட்டுமே மீண்டும் திருமணம் என்ற போர்வையில் வயதான அப்பா பிள்ளைகளிலும் இளமையாக ஒரு மனைவி தேடிக்கொண்டார்.
மகள் வாழவேண்டிய வயதில் மூலையில் முடங்கி ஜடம் போல் சுருண்டு உணர்வுகளை உள்ளத்துக்குள் எரித்து வென்று துடித்துக் கிடக்க, அவர் புது மனைவியுடன் பன்னீர் வாசத்தில், முகம் கொள்ளாப் பூரிப்பில் வலம் வந்து கொண்டிருந்தார்.
அதன் பின்னான காலங்களில் போரும் இடப்பெயர்வும் , புலப்பெயர்வுமாக நீண்ட வருடங்களை விழுங்கியிருந்தது. அந்த இடைவெளியில் பல மனிதர்களை என் மனம் மறக்கவில்லையாயினும், மனதில் தூரமாகி நினைவுகளில் நி ல்லாது போயினர். அப்படித்தான் அந்தப் பாட்டியும் எப்போதாவது ஒரு கணம் நினைவில் வருவதோடு சரி. புதிய சூழல், புதிய மனிதர்கள், புதிய பிரச்சனைகள் என் மனதுக்கு மனதுக்கு நெருக்கமாகிப் போயின.
நீண்ட இடைவெளியின் பின் பிறந்த மண்ணுக்கான பயணம். அதில் மனதுக்கு நெருக்கமானவர்களும், நினைவுகளில் அழிக்கமுடியாத சம்பவங்களால் பதிவாகியிருந்த இடங்களும் தவிர எதுகுமே நினைவில் இல்லாத பொழுதொன்றில் எனது சிறியதாய் வீட்டு ஹூட் இல் குடும்பமாகக் கூடியிருந்து கதைத்துக் கொண்டிருந்தோம்
வீட்டின் கேட் திறக்கப்பட்டது. யாரோ என் சித்திக்கு வேண்டியவர்கள் என்ற நினைவில் திரும்பிப் பார்த்து விட்டு நான் என் பேச்சைத் தொடர்ந்தேன். கேற்றுக்கு உள்ளே மதிலோடு ஒன்றி குறுகி நின்ற பெண்ணைப் பார்த்து
"உள்ளே வந்து இருமன் அம்மா "என்ற சித்தியின் குரலுக்கு,
" இல்லை அம்மா ரோட்டால கல்யாண ஊர்வலம் வருகுது என்ர முகத்தில முழிக்கக் கூடாது அது தான்.... அவர்கள் விலக நான் போய் விடுவேன்" என்ற பெண் அவசரமாக புடவைத்தலைப்பை இழுத்து குனிந்த தலையை மூடிக்கொண்டது.
வார்த்தைகளில் அந்தப்பெண்ணின் நிலை எனக்குப் புரிந்தது. சின்ன வயதில் இருந்து வெறுத்த ஒரு விடயத்தை புலப்பெயர்வில் கொஞ்சம் அதன் தாக்க நினைவுகளில் இருந்து விலகியிருந்து , ஊருக்குப் போய் சேர்ந்தவுடன்திரும்ப அதை வாங்கி மனதில் போட்டு கொந்தளிக்க விருப்பமற்று அதை பெரிது படுத்தாமல் இருக்க முயற்சித்தேன். கல்யாண ஊர்வலம் கடந்தது
" வரேம்மா" என்ற விடைபெற லு டன் அந்தப் பெண் வெளியேறும் போது
"இந்தப் பிள்ளையை உனக்கு மறந்து விட்டதா? எங்கட கோவில் ராஜேஸ்வரி, உன் குட்டி ராஜி" என்று சித்தி சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனது மனது.
பட்டுப் பாவாடையும் , நீண்டகூந்தலின் ஒற்றைச் சடையின் நுனியில் அசையும் அசையும் குஞ்சமும், தலை கொள்ளாக் கதம்பச் சரமும் , அதைச் சட்டமிட்டு அடக்கிய மல்லிகைச்சரமும் கைநிறைந்த கண்ணாடிவளையல்களுமாக , மஞ்சள் குளித்தமுகத்தில் கண்ணுக்குக் கருகருவென்று மையிட்டு, புருவ மத்தியில் சாந்து மின்ன அலங்கார பூஜிதையாக, பால அம்பிகைபோல் அந்தப் பெண்ணின் தோற்றம் மனதில் வந்து போனது ,
மனம் கட்டுமீறி ஹோ என்று அதிர்ந்து கதறிப் பரபரக்க எழுந்து ஓடினேன். புடவைத்தலைப்பால் தலையில் முக்காட்டிட்டு குனிந்த படி, குறுகி நடந்து கொண்டிருந்த அந்தப்பெண்
"ராஜிம்மா" என்ற அழைப்புப் போன்ற என் கூவலில் சட்டென நின்றது. கிட்டே நெருங்குகையில் அடையாளம் கண்டுகொண்டு
"அக்கா "என்ற அந்தக் குரலில் அதிர்வும் ஆர்வமும் பாசமும் கூடவே இனங்கான முடியா ஒரு இறப்பும் இருந்தது முகமும் கூட உயிரைத் தொலைத்திருந்தது .
சுகம் விசாரித்த விதத்தில் அன்பு மாறாமல் இருந்தது அவள் குரல் பின்
எந்த ஆர்வமும் அற்ற இறந்து போன இயந்திரக் குரலில்
" நான் வெளியே வருவதில்லை அக்கா. என் மகன் ஆஸ்பத்திரியில் அதால தான் வெளிக்கிட்டனான்."
" உள்ளே வரீங்களா ராஜி" என்றேன். சற்றுத் தயங்கி சுற்றும் முற்றும் பார்த்து
" இப்ப விட்டால் இனி எப்ப உங்களைப் பார்ப்பேனோ தெரியாது" என்ற முணுமுணுப்புடன், யாராவது கண்டால்...... என்ற தயக்கத்துடன் உள்ளே வந்தது நான் நேசித்த பால அம்பிகை. அமங்கலத் தோற்றத்தில்.


முன்பு அவர்களது பாட்டி இருந்த கோலம் தான். சிறு மாற்றம், பாட்டியின் புடவை போல் மஞ்சலாகிய வெள்ளைப்புடவை இல்லாமல் தூய வெள்ளையில் சிறு கறுப்புப் புள்ளிகளுடன் புடவை. நெற்றியில் விபூதிக் கீற்றல், கண்களில் வெறுமையுடன் நின்ற அந்தக் குழந்தை இரு தசாப்தங்களின் பின்னும் மாறாத பெண் அடக்குமுறைச் சமுதாயத்தின் சாபத்தின் அடையாளமாய் தோன்றியது. என்னால் எந்தக் கேள்வியும் கேட்க முடியாமல் இருக்க, "மூன்று குழந்தைகள் அக்கா, மூன்றாவது பிறக்க அவர் போயிட்டார். "
" அண்ணா வீட்டில இருக்கிறேன். சடங்குகளுக்கும், பூஜைக்கும் தேவையான வேலைகள் செய்வதில்லை அது தவிர மிச்சம் எல்லாம் நான் செய்வேன். என்னையும் பிள்ளைகளையும் வைச்சு சாப்பாடு போடும் போது அசையாமல் இருக்க முடியுமா ? " என்ற ராஜியிடம்
" நல்லா தானேம்மா படிச்சுக் கொண்டிருந்தீங்க. இது உங்கட பாட்டி காலமில்லை. ஒரு வேலை தேடிக்கொள்ளக் கூடாதா" என்றேன்.
" வெளியே வெளிக்கிட்டா முழுவியளத்துக்குக் கூடாது. அறுத்துக் கொட்டினவள் வெளியே வாசலுக்குப் போனால் , நாலு பேரைப் பார்க்கையில , பேசுகையில மனம் அலைபாய்ந்து உடம்பு தினவெடுக்கும். குடும்பம் சந்தி சிரிச்சுப்போகும். வீட்டு மூலைக்குள்ள அடங்கிக் கிடக்க வேண்டும் "என்று அவள் சொன்ன வார்த்தை அவளது அல்ல. அந்த சமுதாயத்தின் வார்த்தை. அல்லது அவள் சார்ந்த குடும்பத்தின் குரல்.
உணர்வு தொலைத்த அந்தச் சிற்பம் அடுத்ததாய் சொன்ன வார்த்தை அதனுடையது.
" அவர் செத்துப் போனதுக்கு எனக்கு எதுக்கக்கா தண்டனை. கடவுளுக்கல்லவா கொடுக்க வேண்டும்." என்ற போது அந்தக் குரல் நிறையவே உடைந்திருந்தது.
"எனக்கு என் சொந்தக்காலில் நிக்க முடியும், யாரும் விடமாட்டீனம். நான் ....... நான்...... பாட்டியின் கொல்லை அறையில் ...... பாட்டிமாதிரியே,..,..... உயிரோடு இருக்கப் பிடிக்கலைக்கா".
உடைந்து குமுறி வந்த வார்த்தைகளுடன் தன்னைக் கட்டுப்படுத்தி, சுற்றி வரப் பார்த்து, அவசரமாய் கண் துடைத்து ,
" நீங்கள் என்றபடியால் தான் மனம் விட்டுக் கதைச்சனான் அக்கா. செத்துப் போய் நடைப்பிணமாகத் திரிகின்ற ராஜிக்கு கெதியா சடங்கு முடித்து காடாத்த வேணும் என்று வேண்டிக்கொள்ளுங்க"
உடைந்த குரலில் கூறிவிட்டு இயந்திரமாய் வெளியேறியது என் பால அம்பிகை.
உடைந்து நொறுங்கி, வெம்பி பேதலித்து , செயலற்ற கோபத்தில் துடித்த மனம் கட்டுப்பாட்டை இழந்து கண்ணீராய் வடிந்தது.
இத்தனை வருட இடைவெளியில் பெரிதாக எந்த மாற்றத்தையும் சமுதாயம் கொண்டுவரவில்லை. கொண்டுவரவும் மாட்டாது. மாற்றங்கள் தேவை எனில் பாதிக்கப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும். சடங்குகள் தேவையில்லை," சிறை உடைத்து வெளியே வா என் சிறு கிளியே. நீ பார்க்காத தூரத்தில், உன் சிறகெட்டும் தொலைவில் விரிந்திருக்கிறது உன் வானம்." என்ற வார்த்தைகள் மட்டுமே என் உதடுகளால் உச்சரிக்க முடிந்தன..

Saturday, November 5, 2016

மொட்டைத் தலையையும் முழங்காலையும் ஹோலியால் முடிச்சிடுவோம்

இப்போதெல்லாம்  எந்த  நிகழ்வுக்கும்  எந்தக் காரணங்களும் அதிகமானோருக்கு  அவசியமாக  இருப்பதில்லை.  களிப்பாடல்  அதாவது அந்தக்  கணத்தில்   காரணமற்றெனினும்  கண்மூடி மடையராகவெனினும் களிப்போடிருத்தல்  மட்டுமே  அவர்களின்  தேவை.  அந்த  பலவீன மான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு  தான்  மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும்  முடிச்சுப் போட்ட  மாதிரி  இப்ப  புதிதா  ஹோலியும் இறக்குமதியாகுது.    சரி  யாழுக்கும்  ஹோலிக்கும்   என்ன  சம்பந்தம்  என்று   நானும்  எனக்குத்  தெரிந்த  அளவில்   என்  சிற்றறிவை   கிளறிப் பார்த்தேன்
ஹோலி அல்லது ரங்கபஞ்சமி என்றழைக்கப் படும் பண்டிகை இந்து மதப் பிரிவினரால்  இந்தியா, நேபாளம், வங்கதேசம், போன்ற நாடுகளிலும், தென்னாபிரிக்கா, மொரீஷியஸ் போன்ற இந்திய இந்து மக்கள் அதிகம் வாழும் நாடுகளிலும் உள்ள இந்துக்களால் கொண்டாடப் படுகிறது. தவிர இந்திய ஹிந்துக்கள்  எங்கெல்லாம்  அதிகளவில் பெயர்ந்து  வாழுகிறார்களோ ஓரளவு அந்தந்த  நாடுகளிலும் அவர்கள்  வாழும் பகுதிகளில்  அவர்களாற் கொண்டாடப் படுகிறது.

ஆசியப்பகுதியில் குளிர்காலம் நிறைவாகி இளவேனில் தொடங்கும்  முன் வரும் பங்குனி மாத முழு நிலா நாளில்  இந்நிகழ்வின்  பிறப்பிடமான  நாடுகள் நகரங்களில்  கொண்டாடப்படும்  போது  வண்ணப் பொடிகளையும் வண்ணம் கலந்த நீரையும் ஒருவர் மேல் ஒருவர் தெளித்துக் களிப்பார்கள். ஹோலிப் பண்டிகைக்கு முதல்  நாள்  ஹோலிகா தகனம் என்ற பெயரில் பெரிய அளவிலான  நெருப்புகளை மூட்டுவார்கள். ஹிரண்ணியகசிபுவின் சகோதரி அரக்கி ஹோலிகாவின்  மடியிருத்தி   சிறுவன் பிரகலாதனை நெருப்பில் எரிக்க  முயன்றபோது  விஷ்ணு பக்தியால் அவர் அதிலிருந்து தப்பியதாகவும் , நெருப்பாலும்  தீய்க்க முடியாத  ஹோலிகா விஷ்ணுவின் சக்தியால் அந்த நெருப்பில்  எரிந்து மாண்டு போனதாகவும் . அதன் நினைவாகவே இது கொண்டாடப்படுவதாகவும்  புராணம்  சொல்கிறது. அதன்  மூலம் மறைமுகமாக   இன்னொன்றையும்  புராணம்  சொல்கிறது.  நாங்கள்   சாவுகளை  கொண்டாட  சமயங்களால்   கற்றுக் கொடுக்கப்பட்டவர்கள்.

ஆனாலும்   எனக்குள்   அப்போதிருந்து  சில  கேள்விகள்  இப்போது அவை சந்ததி  வழியாகவும்  தொடரும்  போது  கேட்காமல்  இருக்க முடியவில்லை.

#சர்வ வல்லமையும்  பொருந்திய  கடவுள்கள்   தப்பானவர்கள்   என்று சொல்லப்பட்டவர்களை   திருத்தி  நல்வழிப்படுத்தி   அருள்  வழங்காமல்   எதற்காக   எதிர்த்துப் போராடினார்கள்?

#கொன்று   போட்ட   நாட்களை  கொண்டாட்ட  தினங்களாக  சமயங்கள்   எப்படிப் பிரகடனம்  செய்தன?

#எல்லா  மதமும்  சொல்லும்  ஒரே  மொழி  கருணை  எனில்  புராணங்களில்   போர்  எப்படி   உருவாச்சு?

கேள்விகள்  இருந்தும்  விடைகளை   எங்கே  கேட்பது  என்று  மட்டும்  தெரியவில்லை.


ஒரு  போர் கடந்த, புண்பட்ட  சமூகத்தில்  அந்த வலிகளில்  இருந்து மீண்டு வெளியே  வரத்  துடிக்கும் தேடுதலும் , துடிப்பும்,   அவசியங்களும்  எல்லாப் போர் வரலாறுகளிலும்   வரலாறாக இருந்து கொண்டே  தான்  இருக்கிறன.

படரத்  துடிக்கும் கொடியின்  தவிப்புணர்ந்து   'தவிச்சமுயல்  அடிக்கும் 'பாவனையில் அல்லாதவைகளைப் புணரவைக்கும்  அடாத்துக்களில் ஆன்மீகத்தின்  பெயர் சொல்லும்  அராஜகமும்   அன்றிலிருந்து  இன்றுவரை   சளைக்காமல்  தன்  கடமையை? நேரம் பார்த்து  இடம் பார்த்துக் கச்சிதமாகச் செய்து  கொண்டே  தான் வந்திருக்கிறது.


அப்படியே  தான்  போர்  இருளுக்குள்  கிடந்து  வெளிச்சம்  தேடி வெளிவரத் துடிக்கும்  எம் சமுதாயத்துக்கு  புதிய வெளிச்சத்தில்  கண்களின்  கூச்சம் அடங்கி  சரியான  பார்வை தெளிவாக அறிமுகமாக  முன்  ஒரு  இனத்தின் அடையாளத்தையே  வேருடன் அழித்து விட  முனையும்    அனைத்துச் சமூகச் சீரழிவுகளின்    இன்னொரு  முகமாக   கலர்ப் பொடிகளால்  தன்  முக அழுக்கை மறைத்துக் கொண்டு  உள்  நுழைகிறது.    எம்  இன அடையாளத்துக்கும்   கலாச்சார வடிவத்துக்கும்  நாமம் போடும்   'ஹோலி'  என்ற நாமஹரணத்தோடு  ஒரு நயவஞ்சகத்   தெரு விழா.



ஒரு  இனத்தின்  அடையாளத்  தொலைப்பை  ஏற்படுத்த  வேண்டுமாயின் அதைத்  தட்டிக் கேட்கும்  கொதிப்புள்ள  பின்  அதைக் கட்டிக் காக்கும் கடமையுள்ள  இளைய  சமுதாயத்தை குதூகல  மாயைக்குள்  கட்டிவைத்து விட்டுக் காய்  நகர்த்தல்  மிகத்   தெளிவாகத்  திட்டமிடப்பட்ட  சாணக்கியம். அதன் வழியில்   இத்தெரு விழாவிற்குள்  இன அடையாளத்  தொலைப்பு  மாத்திரமல்ல.   இன்னும்  பாரிய   சமூகச்  சிறப்புக்களும்   அடங்கியிருக்கிறன.
அவையாவன.....

இளையவர்களையே   அதிகம்  ஈர்ப்புக் கொள்ளவைக்கும்  இந்நிகழ்வில் மரியாதை, நாகரீக   எல்லை  என்ற  எல்லைவகுப்புக்களைக் கொண்ட மக்கள்   தான்  கலந்து  சிறப்பிப்பார்கள்   என்றில்லை.  அவைகளின்   நிறங்கூட   அறியாத   மாக்களும்   கலந்து  கொள்ளலாம்.  கொள்வார்கள். கலர்ப்பொடிகளால்  முகமூடியிட்டுக் கொண்டு   தமது  வக்கிர புத்திக்கு   எதுவெல்லாம்  தோணுகிறதோ  அதாவது  கொலை வரை  கூட, அதுவெல்லாம்   அரங்கேற்ற  வண்ணப்பொடிகளின்  பாதுகாப்புக்குள்  பதுங்கிக் கொள்ளலாம். எவருக்கும்  எவரையும்  அடையாளம்  தெரியாமல்   எல்லாமும் ஜாலியாக  ஹோலியில்   நிறைவேற்றி  முடிக்கலாம் .

இறுதியாக  ஒன்று  நான்  வாழும்  நாட்டில்  உச்சி வெயில்  மண்டையைப் பிழந்த  ஆடிமாதத்தில்  வெள்ளையர்கள்  கொண்டாடிய  ஹோலி  பற்றி  2014 இல்  நான்  இதே  முகநூலில்  பதிவிட்திருந்தேன். அந்த  நிகழ்வின் போது நான்குமணி  நேரமாக  அதிர்ந்த  இசைக்கு  கட்டுப்பட்டு  நிறங்களுக்குள் தங்கள்  முகங்களைத்  தொலைத்து  விட்டு  அடையாளம்  அற்று   வந்த வெள்ளையர்களிடம்  " இப்படியான  ஒரு  நிகழ்வை  எதற்காகக்   கொண்டாடினீர்கள்   இதன்  அர்த்தம்  சொல்லமுடியுமா?"   என்று கேட்டேன். "ஜாலியான  பொழுது  போக்கு " என்று  தோள்களைக் குலுக்கிக் கொண்டு சொன்னவர்களுக்கு   அதன்  அர்த்தம்  ஒரு  நூல் முனையளவு  கூடத் தெரியவில்லை.

ஒரு  பாரம்பரிய வடிவத்தை    அறியாத,  அடிப்படையில்  அதனோடு   எந்தச்    சம்பந்தமும்  அற்றஒரு  கூட்டத்துக்குள்  அப்படியான  ஒரு  விடயத்தைத்  திணித்தல்   என்பது அந்த  விடயத்தையும்   திணிப்பை  ஏற்றுக் கொள்ளும்  கூட்டத்தையும்   அவமானப்படுத்தும்  செயல் என்பது  எனது  கருத்து.

"கொண்டாடங்கள்   மனிதனை  குதூகலப்படுத்துகின்றன. அது   எதுவெனிலும்.  அதை  எவர்  கொண்டாடுவதிலும்  அதன்  மூலம்  மகிழ்வு கிடைக்குமெனில்   தப்பில்லை"  என  முகநூலில் என்னுடன்  வாதிட்டவர்கள்   இருக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை  காரணம்   இல்லாமல்   செய்யப்படும் காரியங்களும் காரியங்கள்   ஊடாக   முன்னெடுக்கப்படுவனவற்றின்  காரணங்களும்   உணராமல்,  நின்றபாட்டில்  கொண்டாட்டம்  என்று   குதிக்கும்  மந்தைத் தனமும்    இருக்கும்  வரை, மஞ்சள்  கரைத்து  குளிப்பாட்டி  மாலையிட்டு பலிபீடம்  கொண்டு  செல்லும்  ஆடுகள்  மாதிரி  வெட்டி  வேரோடு முடிக்கப்படும்  வரை   எல்லாவற்றையும்  கொண்டாடுவோம்.  வீழ்ந்த  பின் வாழ்ந்த  அடையாளத்தை  எங்கே  தேடலாம்  என   கேட்டு  வைத்த பின்னாவது  வீழ்வோம் !

Monday, October 31, 2016

அனலை வைத்ததனாலேயே தணலானோம்

நேற்றுக்கு முதல்நாள் கடந்து போனது போல அன்றி ஆனால் அன்றும் இப்படித்தான் ஒரு தீபாவளி நாள். இப்போது போல எதையும் அர்த்தம் தேடி ஆராய்ந்து எது தேவை எது தேவையற்றது எது முக்கியமானது முக்கியமற்றது அல்லது நிராகரிக்க வேண்டியது எது என்று தீர்மானம் செய்யாத பருவமது. அப்படி ஆராய்ந்து கேள்விகள்கேட்டிருந்தால் கூட அதற்கான சரியான அங்கீகாரம் கிடைக்காமல் அந்தக் கேள்வியே  கடவுள் நிந்தனை என்று  கன்னத்தில் போட்டுக் கொள்ளச் சொல்லி கன்னத்தில் இரண்டு வைத்திருப்பார்கள் வீட்டுப் பெரியவர்கள். ஆனாலும் மனதுள் அடக்கிவைக்கப்படும் கேள்விகள் மறைக்கப்படலாமே  அன்றி மறக்கப்படுவதில்லை. தனக்கான தனித்துவமும்  தேடலுக்கான வாய்ப்புக்களும்  அமையும் போது கேள்விகள் முன்னெழுந்து பதில்களைத் தேடத்தொடங்கி விடும் என்பது தான் நிதர்சனம்.

 நான் தனிப்பட்ட நானாக, எனக்கான அடையாளங்களை என்னைச் சுற்றித் தேடுவதற்கு முன்னான காலத்தின் எதிர்பார்ப்புக்களைக் கொண்டிருந்த என் இறுதித் தீபாவளி அது.  அதற்கு முன் கடந்த எல்லாத் தீபாவளிகளும்  போல அந்த வருடத்திய தீபாவளிக்கும் வழமையான அத்தனை எதிர்பார்ப்புக்களும் எனக்கும்  இருந்தன.
 
அது 1987 ஆம் ஆண்டு.எங்களுக்கு முற்பட்ட தலைமுறையின் தீபாவளி போலோ, அன்றி நேற்று முதல்நாள் கடந்த தீபாவளி போலோ அன்றி,   அது மிக ஆரவாரமான தீபாவளி.  இந்த சாதாரண சீன வெடிகளும், சக்கர வாணங்களும் வெடித்து வழமைபோலக் கொண்டாடாமல் எங்களுக்காக அன்று இந்திய வல்லரசு  அக்கறையோடு அனுப்பிவைத்திருந்தவை சிவகாசிப்பட்டாசுகள் அல்ல. ஷெல்கள், விமானங்கள் பொழியும் குண்டுகள், துப்பாக்கி வேட்டுக்கள். இவைகளை ஈழத்தமிழர்களான அசுரர்கள் மீது  வெடித்து கோலாகலமாகக் கொண்டாடுங்கள் உங்கள் தீபாவளிப் பண்டிகையை என்று அன்று ஒருவேளை இந்திய மத்திய அரசு கட்டளையிட்டு தன் படைகளை அனுப்பியிருக்கலாம். அவர்களும் மிக ஆடம்பரமான வாணவேடிக்கைகளுடன் அந்தவருடத்  தீபாவளியின் அதிகாலையை ஆரம்பித்து வைத்தார்கள்.

அன்று நாங்கள் வழமை போல காலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து, முழுகி, புது உடுப்புப் போட்டுக் கோவிலுக்குப் போகவில்லை.  குளிக்காமல், முழுகாமல் பலநாள் போட்ட பழைய உடுப்புடன், வியர்வை  நாற்றத்தோடு எங்கள் ஊரின் அம்மன் கோவிலுக்குள்  இருந்தோம். வழமை போல விதவிதமான பட்சணங்கள் வேண்டாம் பசிக்கு ஒரு வாய் உணவு தானும் இல்லை.   கோவிலின் களஞ்சிய அறையில் நிவேதனத்துக்காக இருந்த சொற்ப  அரிசியையும்  கடந்திருந்த இரண்டு கிழமைகளாக ஒவ்வொருநாளும் ஒரு நேர நீர்க்கஞ்சிக்காக உபயோகித்து அதுவும் தீர்ந்து இரண்டு நாட்களாகியிருந்தன.  விடியும் ஒவ்வொரு பொழுதும், கடக்கும் ஒவ்வொரு கணமும் இது தான் வாழ்வின் கடைசிக்கணம் என உணரவைத்துக் கொண்டு நெஞ்சுக்கூட்டை உதறவைத்துக் கொண்டிருந்த வெடியோசை காதுபிழந்து ஷெல்துண்டங்களும் துப்பாக்கி  ரவைகளும் மழை பொழிந்து கொண்டிருந்த பொழுதில்  உறவுகளும் அயலும் ஒன்று கூடியிருந்தது மட்டுமே பண்டிகை போல் இருந்தது.

விடிசாமம் முழுதும் சுற்றி எங்கும்  ஒலித்த வேட்டொலிகள்  அதிகாலைப் பொழுதின் இருள் பிரியும் நேரத்தில் சற்று  அடங்கியிருந்தன. ராணுவம் எங்கே நிற்கின்றது என்ற அரவம் தெரியவில்லை.  காட்டில் எதிரிகளின் அரவங்களைக் காட்டிக் கொடுக்கும் ஆட்காட்டிக் குருவிகளின் வேலை நாட்டில் நாய்களுக்கு.  அவைகளின் குரைப்பொலி தான் எமக்கான பாதுகாப்பு எச்சரிக்கை. அதை அன்று அவர்களும் அறிந்திருந்தார்கள். ஆதலால் மனிதருக்கு முன் நாம் வளர்த்த நாய்களையே துப்பாக்கிக்கு பலி கொடுத்து எங்கள் வீடுகளின் கிணறுகளுக்குள் வீசியோ, அன்றி  எமது அடுப்புக்களுக்குள் அமுக்கி வைத்து விட்டோ தான்  அவர்கள் அன்று இரவில் முன்னேறிக் கொண்டிருந்தார்கள். போர் நேரத்திலும் வளர்ப்புப் பிராணியைச்  சுட்டு குடிக்கும் நீருக்குள் போடும், சமைக்கும் அடுப்புக்குள் வைக்கும் இந்தப் போக்கிரித்தனம் காக்கிச் சட்டைகளுக்கு மட்டும் தான் கை வருமோ என்னவோ.



இரவு முழுவதும் செவிப்பறையை வெடிக்கவைத்து பின்  அதிகாலை வெடிச்சத்தங்கள் அடங்கியிருந்ததில்  ராணுவம்  எதுவரை வந்து  விட்டார்கள் என்று சத்தத்தின்  தூரங்களை வைத்து தோராயமாகக் கணிப்பிட முடியவில்லை. அந்த இரண்டு கிழமைகளிலும் வழமையாகிப் போனது போல் ஆளை ஆள் தெரியாத இருட்டுப் பொழுதில்ஒவ்வொருவராக  இயற்கை உபாதைகளுக்காக கோவிலை விட்டு வெளியில்  இறங்கி அருகில் உள்ள வெறும் காணிகளை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போதெல்லாம் இரவுகளில் பயங்கருதி மட்டுமல்ல, ஒதுக்குப் புறமும் மறைப்புக்களும் அற்ற வசதியீனங்கள் காரணமாகவும் உண்ணவும் குடிக்கவும் எதுவும் அற்ற வயிற்றில் இருந்து  கழிவகற்ற வேண்டிய தேவைகள்  கூட அவ்வளவாக  இல்லாததாலும் அதிகம் யாரும் பகல்களில் இயற்கை உபாதைகள் பற்றி எண்ணுவதில்லை.

எல்லாநாட்களும் அதிகாலைப் பொழுது மட்டும் தான் அதற்காக அனைவருக்கும் ஒருக்கப்பட்டிருந்தது. அதிலும் புனிதம் பேணும் கோவில் வீதியைச் சுற்றி  அந்தத்  தேவைகள் தீர்க்கப்பட்ட கூச்சம் சேர்ந்த குற்ற உணர்வு, இயலாமை அநேகம் எல்லா முகங்களிலும் பிரதிபலித்தது. இருந்தும் வேறுவழியின்றி அது தான்  நடைமுறையாக இருந்தது.

அன்று வெளியில் இறங்கிய யாரும் வழமை போலத் திரும்பி வரவே இல்லை. அயலே உறவாக, உறவுகள் எல்லாமே கூடிய அயலாக, உறவுகளின்  கூட்டமாக நாம் கூடி வாழ்ந்த வாழ்க்கையில் கிட்டத்தட்ட  அனைவருமே அந்த நேரத்தில் அந்தக் கோவிலுக்குள் தான்  இருந்தோம் என நினைக்கிறேன். போனவர்கள் திரும்பி வராத போதும், வெடிச்சத்தம் ஏதும் கேட்காத நம்பிக்கையில் சுற்றுச்  சூழலில் இராணுவம் இல்லை என்ற தீர்மானத்தோடு அந்த மைமல் பொழுதில் ஒவ்வொருவராக படியிறங்கி வெளியே செல்ல, கோவிலை சுற்றி எல்லா வீடுகளையும்  இரவே ஆக்கிரமித்திருந்த இராணுவம் ஓசை அமுக்கிய வேட்டுக்கள்  மூலம் ஒளிந்திருந்து அவர்களை வீழ்த்திக் கொண்டிருந்தது.

எனக்கும் இயற்கை உபாதைகளுடனான தேவை எல்லோரையும் போல் இருந்தது. அம்மாவிடம் சொல்லக் கூட  கூச்சமாக இருந்தும் சொல்லியே ஆகவேண்டிய கட்டாயத்தில், கூட்டத்தில் இரகசியம் போலச் சொன்னேன். அதற்குள் என் தங்கை ஒருத்தி கைகளால் அடிவயிற்றை அழுந்தப் பிடித்துக் கொண்டு "வலிக்குது பெரியம்மா" என அரற்றிக் கொண்டிருந்தாள். அம்மா "பொறு  போனவையளைக் காணவில்லை வந்திடட்டும்" என்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தா. அவள் ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாமல் கோபமாகி "நீங்கள் வராட்டி இப்ப நான்  தனியாப் போவன்" என்று  சீறத் தொடங்கினாள்.

"இரு தங்கச்சியை கூட்டிக்கொண்டு போயிட்டு  வந்து உன்னைக் கூட்டிக் கொண்டு போறன் " என்று சொல்லிப்போட்டு அம்மா  போனாலும், இயற்கை பொறுக்காதே. வயிறு வலித்து முகம் வியர்த்தது. நான்  நடுவிலும் என் கைகளைப்ப்றிய படி இரு சகோதரர்களுமாக பொந்துக்குள் இருந்து வெளிப்பட்ட பாம்புக் குட்டிகள் போல கோவில் வாசலுக்கு வந்து  எட்டிப் பார்த்தோம். எந்த  அசுமாத்தமும்  ஆபத்தானதாகத் தெரியவில்லை. மெதுவாக வீதியில் கால்வைத்தோம் அவ்வளவு தான் சரமாரியாக பாய்ந்து  வந்தன வேட்டுக்கள். கோவில் சிவரோடு என்னைச் சாய்த்து இருவரும் என்னை  மூடிக் கட்டிக் கொள்ள கண்களை இறுக மூடிக் கொண்டோம்.  வேட்டு  நின்றது நாம்  அசைந்தோம். திரும்ப சரமாரியான வேட்டுக்கள் உடலை துளைக்கும் அருகாமையில் உடைகளைச் சிராய்த்துக் கொண்டு  சிவரைத்  துளைத்தன.
திரும்பவும் இறுக்கிக் கட்டிக் கொண்டு கண்களை  மூடிக் கொண்டோம்.

வேட்டொலி நின்று ,மூச்சு  சற்று  நிதானமாகி கண்திறந்து  பார்த்தபோது கோவிலுக்கு  மிக  அருகே  ஒரு  ஆறு  அல்லது  எழு அடி தூரத்தில் எங்களுக்கு  நேராக இருந்த  மதிலுக்குள் மறைந்திருந்த  ராணுவத் தொப்பி  தெரிந்தது. இப்போது நினைத்துப் பார்க்கிறேன்  அன்று அவன் மட்டும் எங்களை கொல்லவிரும்பாதவனாக, மனிதனாக இருந்திருக்க வேண்டும்.  அதன் பின்னணியில் அவனுக்கு எங்கள் வயதில் குழந்தைகளோ இளைய சகோதரங்களோ கூட  இருந்திருக்கலாம். உள்ளே ஓடி வந்தோம் அப்போது அவன்  சுடவில்லை. அம்மாவுக்காக எல்லோடும் காத்திருந்தோம். அம்மா  தொடையில் குண்டு துளைத்து இரத்தம் வடிந்த தங்கையை  தூக்க நேரமற்று இழுத்த படியே ஓடிவந்து கொண்டிருந்தா.

சூரியன் வெளிக்கிளம்பி வர அவர்கள் அன்றைய எங்கள் அஸ்தமனத்துக்கான நேரத்தை நிறுத்தி விட்டு பதுங்கிக் கொண்டார்கள்

எந்த அரவவுமே இல்லாது  இராணுவம் பதுங்கிக் கொண்டு, தங்கள் இருப்பிடத்தை மறைத்துக் கொண்ட நேரத்தில், எங்கள் ஊர் பிள்ளையார் கோவிலில் பண்டிகைக் கால விசேஷ பூஜைககளை நாட்டு நிலையின் விபரீதத்  தன்மை கருதி அன்று நடாத்தா  விட்டாலும், நித்திய பூஜை செய்ய வேண்டும் என்ற எண்ணப்பாட்டோடு,  அருகே இருந்த, நாங்கள் தங்கியிருந்த அம்மன் கோவிலில் தீபாவளி விசேட பூஜை ஏதாவது செய்ய வாய்ப்பிருக்கிறதா என்று விசாரித்து விட்டுச் செல்வதற்காக மட்டுமே அன்று எங்கள் குருக்களின் மகன், அந்தக் குடும்பத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக அவர்கள் எண்ணிக் கொண்டிருந்த அந்த இளைஞன் சைக்கிளில் வந்தார். காவி நிற வேட்டியும் கழுத்திலிருந்து தோள் வழி இறங்கிய பூணூலும்  உடலைச் சுற்றி மூடிய காவி அங்க வஸ்திரமும்  சிங்கள பௌத்த ராணுவத்துக்கு வேணுமானால் அடையாளம்  புரியாமல் போகலாம் என்று கொண்டாலும்  இந்திய இந்து ராணுவத்துக்கு எப்படிப் புரியாமற் போகக் கூடும்.

கோவிலுக்கு எதிரே இருந்த வீதியின் எதிர்ப்பக்க வீட்டு மதிலுக்குள் மறைந்திருந்து கோவில் வாசலில் சுட்டு குப்புற விழுத்தும் அளவு ஒரு குருக்களிடம் இருந்த கோபம் என்ன? ஆக சமயம் மொழி கலாச்சாரம் என்பதெல்லாம் ஒரு  கூட்டம் தன் தேவைக்காக இன்னொரு  கூட்டத்தோடு  இணைந்து கொள்ள உபயோகிக்கும் ஒரு  தந்திர வலை. தனிப்பட்ட  நிலையில் நான்  வேறு,  நீ வேறு உன் நாடு  வேறு, எந்நாடு வேறு  என்ற சிந்தனை  தான் அடிப்படை போல இப்போது உணர்கிறேன்.
   
அன்று பகல் முழுவதும் மதிற் சுவர்களுக்குள் மறைந்திருந்து சத்தம் அமுக்கப்பட்ட துப்பாக்கியால் வீதியில் வந்தவர்களின் விதி முடித்து  விழுத்துவதே குறியாக தீபாவளிப் பண்டிகை கொண்டாடிக் கொண்டிருந்தது இந்தியராணுவம். பகலில் பதுங்கியிருந்து விட்டு இரவு மீண்டும் இரைதேடும் கழுகாக வெளிப்படையாக வெளிக்கிட்டு அப்பாவிப்பொது மக்கள்  மீது  எல்லாம்  சன்னதமாடி சன்னங்களைத்  தீர்த்துக் கொண்டிருந்தது.  கோவில் கதவின் இரும்புக் கம்பிகளுக்குள்  எல்லாம் துப்பாக்கியை  நீட்டிஅப்பாவிகளைச் சுட்டது. நாங்கள் மூலஸ்தானத்துக்குள் முண்டி நெருக்கிக்  கொண்டு பதுங்கிக் கொண்டோம். மூச்சுத்  திணறியது. அனுஷா அக்காவின் ஒன்பது மாத அழகான   குழந்தை மூச்சுத்  திணறி  இறந்து போனது.

அதற்கு மேலும் அங்கிருக்க  முடியாதெனவும் இருந்தால் ஹிந்திய ராணுவக் கலாச்சாரம் கோவிலை கொலைகாடு ஆக்கி புனிதமாக்கி விடும் என்றும் அஞ்சி அடுத்த நாள்  விடிந்த போது 'உதிர்ந்தால் மயிர் வாழ்ந்தால் உயிர்' என்ற மனம் வெறுப்புற்ற  நிலையில் எஞ்சி இருந்தவர்கள் காயப்பட்டவர்களைத்  தாங்கிக் கொண்டு கோவிலை விட்டு வெளியே வந்தோம். உணவில்லாத  பலகீனம்  கால்கள் தள்ளாடின.

ஒரு கோவிலைச்சுற்றி  வயதானவர்கள் குழந்தைகள் பெண்கள் என்ற எந்த வேறுபாடுமின்றி   வீசி எறிந்த வெற்றுப் பேப்பர் போல் உறவுகளையும்  நட்புகளையும் அயலையும் சிதறிப் போட்டிருந்தார்கள். நான் மிக மதிப்பும் பாசமும் வைத்திருந்த என் கல்வியின் முதல் வழிகாட்டி என் முதல் பாடசாலையின் அதிபர். தனது  ஊரில் ஏராளம் காணி பூமியோடு ராஜா மாதிரி வாழ்ந்த செல்வராஜா மாஸ்ரரும் ஏனோ எங்கள் ஊருக்கு வந்து அனாதையாய் இறந்து விழுந்து கிடந்து நனைந்து வீங்கிப் போய் இருந்தார். கொன்ற அவங்கள் மட்டும் அந்த நேரம் கண்ணில் பட்டால் துப்பாக்கியை பறித்து.

உச்சந்தலையிலே அடிக்கவேண்டும் என்ற வெறி  முதல் முதல் மனதில் வந்தது.   அன்று எங்கள் எந்தக் கோவிலிலும் பூஜை நடக்கவே இல்லை.
பின் நாங்கள் ஒருமாதகாலம் ஸ்ரான்லிகொலீஜில் எம்மைப் போல சொந்த ஊரில் அன்னியனால்  அகதியாக்கப் பட்டவர்களோடு  தங்கியிருந்து நாளுக்கு நாள் பல இறப்புச் செய்திகள் அறிந்து கொண்டும் அழகூட முடியாதவர்களாகி மரத்துப் போயிருந்த அம்மாமாரின் மடிகளுக்குள் வெறும் பொம்மைகளாக சுருண்டு கிடந்து விட்டு ஒரு மாதம் கழிந்து வீட்டுக்குப்  போகக் கூடியதாக நம்பப்பட்ட சூழ்நிலையில் வீட்டுக்குத்  திரும்பினோம்.

வீதியெங்கும் அதிக மனிதரில்லை. காற்றெங்கும் பிணவாடை. மனம் செத்து உடல் சோர்ந்திருந்தது. ஒரு  அபாய இரவில் ஓடுகையில் நெருங்கிய  உறவுகளை அங்கிங்கென  தவற விட்டிருந்தோம். திரும்பிப் போகும் போது எங்கள் எண்ணிக்கையற்ற அன்றில் கூட்டில் எத்தனை பறவைகளை இழந்திருப்போமோ என்ற பயம் இருந்தது.

ராணுவம் சுட்டு எங்கள் அடுப்புகளுக்குள்ளேயே போட்டிருந்த எங்கள் அன்பான வளர்ப்புப் பிராணிகள், புழுக்களாக பிறப்பெடுத்து  வாசல்வரை வந்து  நன்றி மறக்காமல் வரவேற்றுக் கொண்டிருந்தன.  எங்களுக்கு முதலே வந்திருந்த பாட்டி  "என்ர குஞ்சுகள், என்ர செல்லம், என்ர கண்ணம்மா"  என்று பைத்தியம் பிடித்தது போல அரற்றிக் கொண்டு தேடிக்கொண்டிருந்தா.  அவவின்ர குணம் தெரியாமல் துப்பாக்கியை நீட்டி மிரட்டி அவவின்ர அரற்றலை  அடக்க  நினைத்த இராணுவத்தை பார்த்து  "எடுபட்டு வந்தேறி என்ர  வீட்டுக்குள்ள என்ற குஞ்சுகளைத்  தேடுறதுக்கு நீ  என்னடா முதலாளி" என நெஞ்சை  நிமிர்த்திக்கொண்டு  உள்ளே போனா.  அவன் துப்பாக்கியால் தள்ளினான்.  "என்ர வீடு.  எத்தனை பரம்பரை இருந்தாண்ட காணி  தெரியுமோ என்ர வீட்டுக்குள்ள என்னைத்  தடுக்க  நீ  ஆரெடா எடுபட்டு  வந்த பரதேசி " என்று  பேசிக்கொண்டு உள்ளே  போக நினைச்சதுக்குக் காரணம் எங்களையும் அதற்குள் சுட்டு வைத்திருக்க்கக் கூடும்  என  நினைத்திருக்கலாம்.

அவன் பொறுமையற்று துப்பாக்கி நெஞ்சுக்கு நேரே  நீட்டினான். "எனக்கு என்ர  குஞ்சுகள் வேணும். அதுகள் இல்லாட்டில் உசிர் எனக்கு  மசிரெடா" என்று பாட்டி வீரவசனம் பேசிக்கொண்டிருந்த கொண்டிருந்த போது, ராணுவத்தின் கோபம் உச்சத்தில் நின்ற போது,  "பாட்டி"  என்றேன்.  திரும்பிய பாட்டியின் கண்கள் உடைந்து வழிய, இராணுவத்தினன் கை சற்றுத்  தளைய, என்னதும் எனது பின்நின்ற என் சகோதரங்களின் கண்களிலும் பாட்டி மீது துப்பாக்கி  நீட்டிய ஆத்திரத்தின் அனல் இருந்தது.

இப்படித்தான் எப்போதும் எல்லா  இடங்களிலும் தீபம் ஏற்றவேண்டிய பிஞ்சு வாழைகளில் காலத்துக்குக் காலம் யாராவது  தீவைத்துக் கொண்டிருந்தார்கள். அதனால் தான்  அனல் பற்றத்  தொடங்கியது  என் மண்.



Saturday, October 29, 2016

சிந்தித்தால் சிரிப்பு வரும்


"சொன்னால் உங்களுக்குப் பிடிக்காது " பீடிகையோடு தான் ஆரம்பித்தேன்   அந்தக் கதையை. அதைச் சொல்வதில் பெரிதாக எந்த ஆர்வமும் எனக்கிருக்கவில்லை.  ஏனெனில்   அந்தக்  கதை  பற்றி  எனக்கே   உலகமகா   குழப்பங்களும், கேள்விகளும்  ஆயிரம்.  ஒரு  நிகழ்வு  ஒரு  சம்பவத்தால் மட்டுமே அடையாளப்படுத்தப்படுமெனில் அது பற்றிய குழப்பங்களும் குறைவாகவே  இருக்கும். பல சம்பந்தமில்லாத சம்பவங்களால் ஒரு பண்டிகை அர்த்தப்படுத்தப்பட்டு கொண்டாடப்படும் எனில் அது பற்றிய   குழப்பங்களும் அதிகமாகவே   இருப்பதில்  எதுவும்  புதினமில்லை.   

அவர்கள் கதைகேட்கும் ஆவலோடு என்னைச்  சுற்றி வர   அமர்ந்திருந்தார்கள். தீபாவளி  என்ற   பண்டிகை   உருவானதற்கான காரணங்களாக    நான்  கேட்ட, வாசித்த பல  கதைகளை  எல்லாம்  கோர்த்து   ஒரு  மாதிரி  ஒரு கதம்ப மாலையாக்கி கதை போல சொல்லிக் கொண்டிருந்தேன். அல்லது கதைவிட்டுக் கொண்டிருந்தேன். இடையிடை   அங்கங்கே   பொருத்தமில்லாத   சம்பவங்கள் சிலும்பிக் கொண்டு   நின்றதில்  எனக்கே கொஞ்சம்   சங்கோஜமும்   இருந்தது. நாங்கள்   வளர்ந்த   காலங்கள்   போல கதை   சொன்னால்   அதை  அப்படியே   நம்பு   என்று  சொல்லி   அவர்கள்   சிந்தனை  விருத்தியை   முளையிலேயே   கிள்ளிவிடும்  பழக்கமும் எனக்கில்லை.  சொன்னதை  அப்படியே  ஏற்றுக் கொண்டு  தலையாட்டும்  வாத்துக் கூட்டமும்  அதுவல்ல   என்பதும்  எனக்குத் தெரியும்  அதனால் ஆரம்பம்  முதலே   ஒருவிதத்  தயக்கம்  இருந்தது     எங்கே " கதை விடுறீங்களோ "?  என்று  கேட்டு  விடுவார்களோ  என்று. 

கதை  தொடங்கி   சற்று  நேரம்  வரை    அப்படி   எந்த  அபாயமும்  நிகழாமல்   போனதில்  சற்று   ஆசுவாசமாகி   நான்  கதையை   தொடர்ந்து  கொண்டிருக்க முதல்   கேள்வி  சின்னதா  திரி  பற்றின   சத்தம்   போல  வெளிக்கிட்டது .  பின்  படபடவென  பற்றிக் கொண்டு  வெடிக்கத்  தொடங்கியது . 

"இரண்ணியாட்சன்  எதற்கு  வேதங்களை   மறைத்தான்.  அதன்   மூலம்   என்ன தீமைகளைக்  கடவுள்  அல்லது   தேவர்கள்   புரிந்தார்கள் ?"                          
அவ்வளவு  தான்   நான்  மெதுவாகப்  பின்வாங்கி   சுருளத்   தொடங்கினேன்
      
"வராக அவதாரத்தில் பூமிக்குள் பன்றியாகப் புகும் போது கடவுள் புத்தி   இருக்குமா அல்லது  பன்றிப் புத்தி  இருக்குமா ? "

 "எனக்குத்  தெரியாதே "

 "அப்போ   நீங்க  ஏன்  உங்களுக்கு சொன்னவையிட்ட   கேக்கவில்லை?"  
என்  நாக்கு   பதிலற்று   புதையத்  தொடங்கியது 

"விஷ்ணு  ஏன்  அடிக்கடி  வேஷம்   மாறினார்.  அப்ப  அவரென்ன   நடிகரா?"
எனக்கு   நடிப்பாகக்  கூட   சாதாரணமாக   இருக்கமுடியவில்லை 

"பூமியை துளைத்துக் கொண்டு வேறு  அலுவலா   போன   விஷ்ணு  போன காரியத்தை முடிக்கிறதை விட்டிட்டு  இடையில்   எதுக்கு பூமா தேவியை  திருமணம்  செய்தார். பொறுப்பே இல்லையா அந்த மனுஷனுக்கு? "

 "அது  விஷ்ணுவிடம்  தான்   கேட்கவேணும்"  

  " நீங்க  ஏன்  கேட்கல்ல  ?"

   "விஷ்ணுவிட்டையா? 
"ம் "
"நான்   காணலையே   அவரை"

    "உங்களுக்கு  சொன்னவையிட்ட   கேட்டிருக்கலாமே?" 

என்னிடம் பதிலில்லை கேட்பதற்கான வாய்ப்புக்களை  அதிகம் கொண்டதல்ல எங்கள் வளர்ப்புமுறை. திருப்பிக் கேள்வி கேட்டால் பெரியோரை   மதிக்காதோர் என்றும், கடவுள் நிந்தனை செய்தோம் என்றும் கொள்ளப்படுவோம்  என்று சொன்னால்,  எதையும் கேள்வி கேள் வந்த பதிலை உந் அறிவுக்குள் நின்று ஆராய்ந்து பார். உனக்குக் குழப்பமான எதற்கும் தலையசைக்காதே  என்று வளர்க்கப்படும்   இவர்களுக்கு  அது அந்தக் காலம், அதன் மனிதர்கள் வாழ்முறை எதுவும்  புரியாது.


"மானுட  உருவத்தில்  உள்ள  ஒருவர்,  அதிலும்  கடவுள்  எப்படி  ஒரு மிருகத்தை   திருமணம் செய்யலாம்.  விஞ்ஞான  அடிப்படையிலும்   சாதாரண வாழ்வியலிலும்   தப்பான   ஒன்றை  எல்லோரிலும்   மேலான   கடவுள்  எப்படி செய்யலாம்? " அது தப்பான வழிகாட்டல் அல்லவா. அதை  அதுவும் வழிகாட்ட வேண்டிய கடவுளே செய்யலாமா?

பெரிய   வாண்டு  கேட்ட  கேள்விக்குப்  பதிலில்லை   என்னிடம்.
 " பன்றிக்கும்   மனிதருக்கும்   எப்படி   குழந்தை   பிறக்கும் ? அது பன்றி வடிவத்தில் இருக்குமா, மனித வடிவத்தில் இருக்குமா, இரண்டும் கலந்த உருவத்தில் இருக்குமா?" 


"நீங்க  சின்னப்பிள்ளைகள்   இதெல்லாம்   கதைக்கக்  கூடாது " 

சிறுவயதில்   நான்  பெற்றுக் கொண்ட  பதிலை    அப்படியே   கவனமாகப்   பாதுகாத்து   சந்ததி   சொத்தாக   திருப்பிக்கொடுத்தேன்.

"சரி  பவுமன்  எப்படி  பன்றி  உருவமே  கலக்காத  மனித  உருவில்  பிறந்தார்?"

 "அவர்  கடவுளின்   குழந்தை  அதனால். "

"அப்போ கடவுளின் குழந்தை  கடவுள் தானே எதுக்கு  அசுரன் ஆனார்?"

"தெரியாது. "

"நிறத்தில் கருமையாகவும் பலத்தில் வலிமையாகவும் உள்ளவர்கள்   எல்லோரும் ,அசுரர்   என்றே  அழைக்கப் படுவார்களா?"
             
"ஆமாம்  என்று   தான்  நினைக்கிறேன் "

"போனவருடம்  தீபாவளிக் கதை  சொன்ன போது  ராவணனை  அழித்து  விட்டு   இராமன்  அயோத்திக்குத்   திரும்பின   நாள்  தான்  தீபாவளி   என்றீங்களே?"
           
"ஆமாம்   அப்படியும்  சொல்வார்கள்.  அதையும்  விடவும்   இன்னும்  ஏராளம்   கதைகள்   இருக்கு"

"அப்ப  தீபாவளி  என்றால்  என்ன  என்று  இன்னும்  யாருக்குமே  சரியாகத்
தெரியாதா ?"

"ஒவ்வொரு   பகுதியினர்   ஒவ்வொன்று   சொல்கிறார்கள்" 

 "ஓ.......  அப்போ   கட்டுக் கதையா?"

ஒரு  வாண்டு   கெக்கட்டமிட்டுச்  சிரித்தது   மற்றவைகளும்  கூடிச்  சிரித்தன   என்னை  கேலி  பண்ணுவது    போல   உணர்ந்தேன். அந்தக்  கேலி எனக்கானது மட்டுமா  என்பது  எனக்குள்  கேள்வி.  

"அப்போ   இராவணன்   யார்?"

"இலங்கையை   ஆண்ட  மன்னன் "

"அவன்  அரக்கனா?"

"அப்படித்தான்  சொல்வார்கள்" 

"அப்போ   அவன்  வழிவந்ததாகச்  சொல்லப்படும்   நாங்கள்   அரக்கர்களா?" 

பதிலற்றுக் களைத்துப் போனேன்   நான். 

"அப்போ   ராவணன்  போல   தப்பை   தட்டிக்  கேட்பவன்   எல்லாம்  அரக்கனா? அவரவர் பூமிக்குள் வந்து அவர்களையும் உடமைகளையும் நாசம் பண்ணிவிட்டுச் செல்வோர்  தேவபரமாத்மாக்கள்.  தட்டிக் கேட்பவர்கள் எல்லோரும்  அரக்கர்கள் அப்படியா ?"

பதிலில்லை   என்னிடம்.

கேள்வி கேட்ட ஒன்றின் மூக்கு நுனி சிவந்தது. 

"அசுர  குலத்தை  அழித்ததாகச் சொல்லப்படும்   வரலாற்றை   அசுரர்கள்  என்று சொல்லப் படும்   நாங்களே   பண்டிகை  என்று   கொண்டாடலாமோ"? 

பதிலில்லை   என்னிடம் 

"அப்போ   பின்னால்   ஒரு  காலத்தில்  மே  மாதத்தில்  வரும்  17,18 ஆம்   திகதிகளைக்   கூட   அசுரர்களை  வென்றழித்த  பண்டிகை  என   அறிவித்தால் விசாரிக்காமல்   கொண்டாடுமோ   எங்கட  சந்ததி? "  

சற்றுப் பெரிய   வாண்டு   சத்தமாக  கண்களில்   அனலுடன்   வார்த்தைகளில்   கனலுடன்   உறுக்கிக்  கேட்ட  கேள்வியில்  நடுங்கிப் போன    என்னிடம் பதிலில்லை   ஆனால்   

"தீபாவளி  என்பது  எம்மைச்  சூழவும்  உள்ள  இருளகற்றி ஒளியேற்றி     மனதிலும் உள்ள தீயகுணங்களான இருளை அகற்றுவதற்காக   நிர்ணயிக்கப்பட்ட  தினம்  என்று  இனி   எடுத்துக் கொள்வோம்"   


என  முடித்துக்  கொண்டேன்.   

எப்போதும்    அவர்களிடம்   அர்த்தங்களோடு   ஆயிரம்   கேள்விகள்   உள்ளன.   எங்களிடம் தான் விளக்கங்களோடு சரியான  விடைகள்   எப்போதும்  இல்லை .  

ஏனெனில்,  நாம்  சிந்திப்பதே  தப்பெனவும்,  காட்டிய  வழியில்   கூட்டத்தில்   ஒரு மந்தையாகக்  கூடி  நடத்தலே  சரியெனவும்   தட்டி  வளர்க்கப் பட்டவர்கள் ஆதலால்  தான்  இன்னும்   தீர்வுகளற்ற  கேள்விகளாகவே  நிற்கிறோமோ   என்னவோ!

Saturday, October 22, 2016

நான் நடந்த பாதையிலே.....9

வேடிக்கையே வாழ்க்கையின் வினைகளா? 


"நிலானி " எப்பவும் போல் அதிக சத்தமில்லாத , அதிகளவு அமைதியோடு அழைத்து தன் முன்னே போடப்பட்ட கதிரையைச் சுட்டிக் காட்டி வந்து அமரும் படி அபிநயித்தார் Mr.K. வார்த்தைகளை அதிகம் கொட்டுவதில் விருப்பில்லாத அவருக்கு வாய் நிறைய இருக்கும் முத்து உதிர்ந்து விடாத அவதானம் எப்போதும் இருக்க, மொழியை சிக்கனமாய் செலவழிப்பவர் .
.
நிலானி போய் அவர் முன்னே இருந்த கதிரைக்குள் அடங்கிக் கொண்டு அவரைப் பார்த்தாள். எப்போதும் போல் தன் கண்ணாடிக்குக் கீழான அடிப்பார்வையில் புன்னகை கலந்து "உங்களது வேலையில் எனக்கும் டைரக்டர்ஸ் இற்கும் முழு திருப்தி " என்ற முதல் கிண்ண ஐஸ் எடுத்து அவளது தலையில் மெதுவாக கவிழ்க்க, புன்னகைத்தாள். கண்களுக்கு நேராகப் பார்க்காமல் அடிப்பார்வையில் உறுத்துப்பார்த்தபடி பேசுபவர்கள் எம்மை பேச்சினூடு அளவிட்டுக்கொண்டே நம் மனம் சஞ்சலப்படுத்தும் ஒரு இடத்தில் தமது கருத்தை திணிக்கமுயல்பவர்கள் என்பதை அறியாத வெகுளி என அவர் நிலாநியையும் தப்பாக எடைபோட்டிருக்கக் கூடும்.
.
"உங்களைப் போல பொறுப்பானவர்களிடம் தான் பொறுப்புகளை நம்பி ஒப்படைக்க முடியும் நிலானி " என்று அடுத்த கிண்ணம் ஐஸை கொஞ்சம் அதிகமாகவே அள்ளி தலையில் கவிழ்த்த போது , தான் சுதாகரித்துக் கொண்டதை புன்னகை குறைந்து கண்களில் அதிகரித்த அவதானத்தில் காட்டி "இன்னும் என்ன வேலை என் தலையில் கட்டப் போறீங்க Mr. K" என்றாள் சலிப்பான புன்னகையுடன்.
.
"வேலை அதிகமா நிலானி?" அதே தோலுக்கு வக்ஸ் தடவும் இதமான குரல் . தடவி விட்டு தோல் கிழிய உரித்து எடுப்பார்கள் என்பது நிலானிக்குப் புரிந்திருக்க , "வேலை தந்த உங்களுக்கு தெரியாதா வேலை அதிகமா இல்லையா என்பது Mr.K?" அதே மாறாத புன்னகையுடன் கேள்வியை அவரை நோக்கித் திருப்பிப் போட்டாள். அவர் முகத்தில் யோசனை போல் போலியாக பூசிக் கொண்டார்.
.
"எனக்கும் தெரியும் வேலை கொஞ்சம் அதிகம் தான் ஆனாலும் உங்கட கெட்டித்தனத்துக்கும் சுறுசுறுப்புக்கும் இது பெரிய கஸ்ரமான விஷயம் ஒன்றும் இல்லை." இப்போது ஐஸை வாளியோடே கவிழ்த்து அவளது தலையில் கொட்டினார். ஐந்து நிறுவனங்களுக்குள் நிலானி எந்த நிறுவனத்தின் வேலை செய்கிறாளோ அதற்குப் பொறுப்பான டைரக்டரின் பெயர் குறிப்பிட்டு அவரின் பர்சனல் எக்கவுன்ஸ், அண்ட் personal shares நீங்க தான் மெய்ன்டென் பண்ண வேணும் என்று அவர் விரும்பிறார் என்றார். சட்டென நிமிர்ந்து சற்றும் யோசிக்காமல் அவசரமாய் உறுதியான குரலில் "NO" என்று சற்றுச் சத்தமாகவே மறுத்தாள் நிலானி. பின் Mr.K எத்தனை எடுத்துக் கூறியும் , அவள் சற்றும் மாறாமல் தான் கொண்ட முடிவில் தெளிவாக உறுதியாக இருந்தாள்.
.
"டைரக்டர் சொல்லுற வேலையை செய்ய மறுத்தால் வேலை விட்டு போக வேண்டியும் வரலாம் நிலானி " கோபப்படாமல் அக்கறை போல் தனது அடுத்த பயங்காட்டிப் பலகீனப்படுத்தும் ஆயுதத்தை அவர் அவள் மீது பிரயோகித்த போது,
.
"அப்படி வற்புறுத்தி என்னை பெர்சனல் வேலை செய்ய வைத்தால் நானே வேலை விட்டு போகும் முடிவு தான் எடுப்பேன் Mr.K " என்றாள் திடமாக.
.
"நிலானி boss சொன்னபடி அவரிட வேலைகளும் ஏற்றுக் கொண்டு செய்தால் மற்றவர்களை விட boss இன் ஆதரவு அதிகம் இருக்கும் துணிந்து சலறி இங்கிரிமன்ட் டிமான்ட் பண்ணலாம் " என்று நடைமுறை ஆசை காட்டினார்.
.
" என்னிடம் எது உள்ளதோ அதை வைத்துக் கொண்டு அதற்குள் கணக்குப் போட்டு கஸ்ரமில்லாமல் வாழக் கற்றுக்கொண்டவள் நான். நான் இங்கு வரும் போது தந்த வேலையும் அதற்கான சலறியும் எனக்கு போதும்" என்றாள் அவள் தீர்மானமாக.
.
அவர் யோசனையாக பார்த்தார். பின் "யோசிச்சு சொல்லுங்க வேலையில் இருந்து நிக்க வேண்டிய நிலை வரலாம். " என்றார் மீண்டும் பயமுறுத்துவது போல் , தன் இயல்பான இரகசியக் குரலில்
.
அவள் அமைதியாக எழுந்து தன் இடத்துக்கு வந்தாள் . அமர்ந்தாள். கணமும் யோசிக்காமல் முகம் நிறைந்த தீவிரத்துடன் பேப்பர் எடுத்தாள் . பேனா பிடித்த கை இடமும் வலமுமாக வேகமாக நகர்ந்தது. எழுதியதை எடுத்துப் போய்" Mr. K" என்றாள் நிமிர்ந்தவரை நோக்கி சிந்திய புன்னகையுடன் , கையில் கிடந்த கவரை நீட்டும் போது வாய் " sorry" என முணுமுணுத்தது.



அவளிடம் வாங்கிப் பிரித்து கண்களை ஓடவிட்டவரின் முகத்தில் சின்னதாய் அதிர்ச்சி பரவ,
.
" ரிஸிக்னேஷனா நிலானி ?" என்று கேள்வியானார்.
.
" பெர்சனல் வேலை செய்யாவிட்டால் இது தானே நடக்கும் என்றீங்க Mr.K. கொம்பனியா நிராகரிக்கும் போது இரு தரப்புக்கும் மனக்கசப்பு ஏற்படும். staff இற்கு எல்லாம் இது ஒரு பொழுது போக்கு கதையாகும். அதனால நானாகவே விலகிப் போயிடுறேன்."
.
சொன்னவளின் முகத்தில் வலிந்து வருவித்துக் கொண்ட புன்னகைக்குள் திடம் இருந்தது . ஆழ்ந்து பார்க்க அந்த முகத்தில் செயலற்ற கவலையும் தெரிந்தது.
.
அவள் வேலை விடயத்தில் எந்த வித பிரச்சனையும் பண்ணாதவள். தன்னால் எவ்வளவு முடியுமோ, மற்றவர்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்க முடியுமோ அப்படி இருப்பவள். தனக்கு சரி என்று படும் விடயங்களில் எப்போதும் தன் கருத்தை விட்டுக் கொடுக்காத பிடிவாதம் இருந்தாலும் , நேர்மையானவள் . பார்த்துக்கொண்டிருந்த staff அதிர்ந்து போக , நான் மட்டும் அவளது அந்த முடிவை ஊகித்தே இருந்ததால் அவளது செய்கைக்கான அர்த்தம் புரிந்தது.
.
இப்படித்தான் அவளது பழைய office பற்றி, அந்த அவலத்தில் தான் மாட்டிக்கொண்டது பற்றி சொல்லி உடைந்து அழுத நாளில்........
.
அவளது பள்ளிக் குறும்பு அடங்காத வயதில் அவள் வேலைக்குப் போன ஆரம்ப நேரம் அது. உரிய வேலைகள் முடிந்ததும் மிஞ்சிய நேரமெல்லாம் கிண்டலும் கேலியும் பகிடியுமாக office ஐக் கலங்கடித்த நிலானியின் அலுவலக வேலையில், படிப்பின் நேர்த்தி கலந்த அக்கறையோடான ஈடுபாடு நிர்வாகத்துக்கு நிறையவே பிடித்திருந்தது.
.
முதலாளித் தனத்தை தேவையற்ற விடயங்களில் ஒதுக்கி வைத்து, தொழிலாளிகளோடு இயல்பாகப் பழகிய அந்த நிர்வாகிகளுக்கு , மனத்தில் கள்ளம் இல்லாமல் , ஏய்த்தலும் ஏமாற்றுதலும் தெரியாது இருந்த அந்தச் சின்னப் பெண்ணிடம் தமது தனிப்பட்ட கணக்கு வழக்குகளை ஒப்படைத்தல் நம்பிக்கைக்கு உரியதாக இருந்தது.
.
அதிலும் குடும்ப நிறுவனமான அதில், சேர்மனான தந்தைக்கு அவளது நேர்மையும் , எந்த நிலையிலும் சொன்ன சொல்லு மாறாமல் பிடிவாதம் காத்த நம்பிக்கையும் அதிகம் பிடித்துப் போக , அலுவலகத்தின் பண , மற்றும் வங்கி நடவடிக்கைகள் அவளது அதிகாரத்தின் கீழ் வந்திருந்தன.
.
எப்போதும் இறுகப் பூட்டிய அவளது மேசை லாச்சிக்குள் கிடந்த பெட்டிக்குள் நிர்வாகிகள் இல்லாத நேரங்களில் அலுவலகப் பாவனைக்கான பணக் கட்டுக்கள், கையெழுத்துப் போடாத காசோலை தவிர, சேர்மனின் கையெழுத்திட்ட வெற்றுக் காசோலைகளையும் அவளிடம் ஒப்படைத்திருந்தார்கள் அவள் அவர்கள் அலுவலகத்தில் இல்லாத பொழுதுகளில் மேசை விட்டு விலகாமல் புதையல் காக்கும் பூதமாய் அதைக் கட்டிக் கொண்டே கிடந்தாள்.
.
அந்தப் பொறுப்பைப் பொறுப்பேற்ற போது , அடுத்தவரின் காசோலை , அதிலும் ஒப்பமிட்ட காசோலை வைத்திருப்பது என்பது, வைத்திருப்பவருக்கும், கொடுத்தவருக்கும் எவ்வளவு அபாயமான விடயம் என்பது, திரிகோணமலையின் ஒரு சிற்றூரில் , ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த அவளுக்குப் புரிந்திருக்கவில்லை. அதுகும் தன் அலுவலக வேலைகளில் ஒன்றெனவே அவள் எண்ணிக் கொண்டாள்.
.
எல்லா பொறுப்புக்களுக்கும், அவளது வேலைக்கும் ஆரம்பத்தில் இருந்து அவளது எக்கவுண்டன் ஹேமந்த கொடுத்த ஆதரவில் , அவரில் வைத்த நம்பிக்கையில் எதுகும் பாரதூரமாக பயப்படக்கூடியதாகத் தெரியவில்லை அவளுக்கு. அந்த எண்ணத்தில் மண்ணைப் போடும் அளவு யாரும் தவறான அனுபவங்களை அங்கு அவளுக்கு ஏற்படுத்தாமல் தான் இருந்தார்கள் என்பதால் , அவளுக்கு அதன் அபாயம் புரியாமலேயே இருந்தது. அவன் வரும் வரை.
.
அந்த நிறுவனத்தின் டைரக்டர்களில் ஒருவராக புதிதாக அவன் அறிமுகப்படுத்தப் பட்ட போது முதலாளி வர்க்கத்துக்கே உரிய மிடுக்கும், அவன் உயர்கல்வியை முடித்துவந்த அமெரிக்கக் குளிர் தந்த குளிர்ச்சியுமாக இயல்பிலும் லட்சணம் பொருந்தியவனாக அவன் சற்று அழகாகவே இருந்தாலும், அவன் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகளில் ஒருவன் என்பதற்கு மேல் அவளுக்கு அவன் பற்றிய அபிப்பிராயம் ஏதுமில்லாது இருந்தது.
.
ஆனால் , நிறுவனம் ஓரளவு அதிகநேசமும், சலுகைகளும் குடுத்துக் கொண்டாடிய நிலானி அவனுக்குப் பிரத்தியேகமாகத் தெரிந்தாள். அதை அவனது நாளாந்த நடவடிக்கைகளில், நிலானியும் மற்றவர்களும் அப்படித்தான் உணர்ந்து கொண்டிருந்த ஒரு நாளில்....
.
வேலைகள் அதிகமற்று , அலுப்படித்து , அரட்டையடித்துக் கொண்டிருந்த ஒரு பொழுதில் ,அவள் கூட வேலை செய்த ஒருத்தியின் கையெழுத்தை அச்சுப் பிசகாமல் அப்படியே தன் கையால் எழுதி அசத்திய போது, கூட வேலை செய்த ஒவ்வொருவரும் "என் சிக்னேச்சர் வைத்துக் காட்டு பார்ப்போம் " என்று எதோ மஜிக் வித்தை நடப்பது போல் குவிந்து கும்மாளம் போட, சிலரின் கையொப்பத்தை அப்படியே எழுதிக் காட்டியவள்,
.
"உங்கட கையெழுத்து என்ன சேர்மனின் கையொப்பமே கண் மூடித் திறப்பதற்குள் அப்படியே வைப்பேன்" என்று வீரப் பிரதாபத்தில் தலை நிமிர்ந்து சொன்னாள்.
.
அதுவரை கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்து அத்தனையும் அவதானித்துக்கொண்டிருந்த அவன் எழுந்து வந்தான். நட்பாக புன்னகைத்தான்.
.
"என் தந்தையின் கையெழுத்தா..... யாராலும் முடியாது " என்றான் ஏளனமாக,
.
தீவிர தன்னம்பிக்கை கொண்டவர்களிடம் பாவிக்கப்படும் எதிர்மறைப் பேச்சு வார்த்தைகள் அவர்களை விழுத்த விரிக்கப்படும் வலை என்று தெரியாமல் ,
.
"என்னால் முடியும்" என்றாள் தலை நிமிர்த்தி.
.
" யாராலும் முடியாது " அவன் விரித்த வலையை சொடுக்கினான்.
.
" என்னால் முடியும்" என்றாள் திடமாக.
.
"பொய் ஜம்பம் அடிக்காமல் முடிந்தால் செய்து காட்டு" மேலும் இறுக்கமாக வலையை சொடுக்கினான்.
.
சிலர் கற்றுக் கொள்ளும் கல்வி அனுபவங்களை, சுயநலமாக்கி, வார்த்தைகளால் மற்றவர்களை வளைத்து சிந்தனை மழுக்கி தமக்கு வேண்டிய பதிலை பிடுங்கி எடுத்தபின் அவர்களது வாழ்க்கையோடு அவர்களையும் உடைத்து தெருவில் போடும் சுயநலத்துக்குப் பாவிப்பது போல் அவனும் அவனது செய்கைகளும் அழிவு தரும் அறிவோடு இருந்தன.
.
"என்னால் முடியும் ஆனால் அது கூடாது ஆபத்து." மீண்டும் அவள் சொன்ன போது
.
" you can`t நிலானி " என்று கேவலமாக் நகைத்தான்
.
கூடவே,
.
"ஒரு பழமொழி சொல்வாங்க. ஒருவரின் ஒரு வார்த்தை பொய் என்று நிரூபிக்கப் படும் போது இதுவரை பேசிய எல்லா வார்த்தைகளும் சந்தேகிக்கப் படுகின்றன என்று அப்படி தான் இதுவும் உங்களால் முடியாது " சொல்லி கட கடவென சிரித்தான்.
.
தோல்வியை ஏற்க முடியாமல் வெறித்து முன்னே கிடந்த வெற்றுத் தாளை எடுத்த போது அவசர வேலை போல ஹேமந்த அவளை அழைத்தார்
.
" just a minute ஹேமந்த." என்று முதலாளித்தனத்துடன் அவன் தடுக்க,
.
சேர்மனே அசந்து போகும் விதத்தில் கணத்துக்குள் அவரைப்போலவே அச்சொட்டாக கையெழுத்திட்டாள் நிலானி. அவனின் கண்களில் கூர்மை பரவி முகம் மலர்ந்தது.
.
"yes I accept that you can do it. " தப்பு செய்தது போல் தயங்கி நின்றவளைப் பார்த்து
.
" இதில் பயப்பட ஏதுமில்லை just a fun எழுதியதை கிழிச்சுப் போட்டால் போயிற்று "
.
என்று சொல்லி தன் கையாலேயே கிழித்து குப்பைக் கூடையில் போட்டு விட்டு நகர்ந்த போது மலர்ந்திருந்த அவனது முகத்தின் கூரான பார்வை அர்த்தத்தோடு அவளைக் குத்திக் கொண்டிருந்தது .
.
(குத்திக் கொண்டிருந்த பார்வை எப்படி ரணப்படுத்தியது என்று அடுத்த பதிவில் பார்ப்போமா நட்புக்களே )

Wednesday, October 12, 2016

நான் நடந்த பாதையிலே 8

மெல்ல மெல்லப் பிடிக்கிறதே......


வீதி நெடுக வீடுகளும், வீடுகள் நிறைய பசுமையுமாக காலைச் சூரியனின் ஒளித் தெறிப்பைக் கட்டுப்படுத்தி வைத்திருந்ததில் இரவின் மடியில் தூங்கிய தென்றல் நிலவின் ஈரம் கலந்து கன்னம் வருடிச் செல்லும் சிலிர்ப்பில் பாதையில் நடப்பது இதமாகவே இருந்தது. வீடு இருந்த ஒழுங்கையில் இருந்து காலிவீதியில் ஏறும் மூலையில் வழமை போல் , கச்சானும் கடலையும் வறுபட்ட வாசம் மூக்கை துளைத்து நல்லூர் கோவில் திருவிழாவை நினைவுபடுத்த, கச்சான் கடை யோகநாதனும் , எதிர்ப்பக்கத்தில் இளநீர்க் குவியலுக்கு நடுவில் பளபளவென்று கத்தியைத் தீட்டிக் கொண்டு நெடு நெடு என்று நின்ற விதாரணவும் ஒரே நேரத்தில் தத்தமது மொழியில் காலை வணக்கம் சொன்னார்கள், திருப்பி நானும் மொழிந்து , நடந்து ,காலி வீதி கடந்து , பஸ்ஸுக்குக் காத்திருக்கையில் ..
.
முகத்தில் அடித்த வெயில் , வாகனப்புகையில் கிளம்பிய தூசி எல்லாமே இந்த மூன்று மாதங்களில் பழக்கமாகி கொஞ்சம் பிடிக்கவும் தொடங்கியிருந்தது. சரிந்து விழுந்து உங்களைச் சாகடிக்கப் போகிறேன் என்று பயமுறுத்திக் கொண்டே சாய்ந்து செல்லும் கூட்டம் பிதுங்கிய பஸ்சிற்குள் , சாகவும் இடிபடவும் துணிந்து, ஏறவும், நெருக்குதல்களின் அழுத்தங்களில் எலும்பு நொறுங்கி கைகால் பிடுங்குப்படாமலும் நீந்தி நழுவிப் போய் டிரைவர் இற்குப் பின்புறமாக நிற்கவும் பழக்கமாகி இருந்தது. நகரும் வண்டிக்குள் இருந்து காலி வீதி நீளக் கடைகளை பராக்குப் பார்க்கப் பிடித்தது.
.
ஷோக்கேஸ் பொம்மைகளில் பிடித்த மாதிரியான உடையை , hand bags ஐ, தினுசான காலணிகளை கண் வைத்து , பின் கடைகளைக் குறித்து வைத்து ,வேலை முடிந்து வீட்டுக்குப் போய் யாரையாவது பிடிவாதமாய் இழுத்துக்கொண்டு , குறித்து வைத்த ஒவ்வொரு கடையும் தேடி அதை வாங்கு முன், அதை யாராவது வாங்கி விடுவார்களோ என்று ஏங்கி ஏங்கி office இல் தலைக்குமேல் குவிந்த files இற்கும் கணக்குப் புத்தகங்களுக்கும் நடுவில் வேலை செய்கையில் , முகத்துக்கு முன்னே வந்து நின்று "அதை யாராவது வாங்கி விட வேண்டும் " என்று வாய் விட்டு பிரார்த்தனை செய்யும் நிலானிக்கு லேட்ஜரைத் தூக்கி அடிக்க அதிகம் பிடித்தது.
.
அவள் தடுக்கிறேன் பேர்வழி என்று தன் லெட்ஜரை தற்காப்புக் கவசமாக்க, அந்தச் சண்டையை எதோ அரச காலத்து வாட்போர் அளவுக்கு கற்பனை பண்ணி , எப்போதும் அமைதியான Mr. K அமைதி இழந்து, நடுவு நிலை நடுவராகி , நடுங்கி நடுங்கி நடுவில் வர, staff தங்கள் காரணமற்ற இறுக்கம் தவிர்த்து சிரிக்க , இப்போது office இற்கு எங்களையும் எங்களுக்கு office ஐயும் ஓரளவு பிடிக்கத் தொடங்கி இருந்தது .
.
நினைவுகளோடே பயணித்து , தரிப்பிடத்தில் பஸ்சிலிருந்து முக்கித்தக்கி பிரசவமாகி பிதுங்கி விழுந்து, தடுமாற்றம் கலைந்து நிமிர்ந்து நின்று ஒரு முறை என்னை நானே நோட்டமிட்ட போது , யாரையோ கோபமாகத்திட்டும் நிலானியின் குரல் நிரும்பிப் பார்க்க வைத்தது . அவசரமாய் வந்து நின்று, அதை விட அவசரஅவசரமாய் வெளிக்கிட்ட பஸ்சில் இருந்து, தள்ளி விழுத்தியது போல் தடுமாறி கீழே சாய்ந்து குதிக்கமுயன்றுகொண்டிருந்தாள் பூமா அவளைக் கைலாகு கொடுத்துத் தாங்கிய படியே "ஹரி ஹரி ஜண்ட " ( சரி சரி போ ) சொல்லிக்கொண்டிருந்தார் கண்டக்டர். பூமாவின் புடைத்த வயிற்றைச் சுட்டிக் காட்டி அவனைத்தான் சிங்களத்தில் திட்டிக் கொண்டிருந்தாள் நிலானி.
.
தனக்காக நிலானி வக்காலத்து வாங்குவதைக் கூட கவனிக்கும் திராணி அற்று அடிவயிற்றை ஒரு கையால் பற்றி முகத்தில் வழிந்த வியர்வையை மறுகையால் துடைத்துக் கொண்டே சோர்ந்து நின்ற பூமாவைப் பார்க்க பாவமாக இருந்தது. கர்ப்பம் சுமந்த பெண்களுக்கான அலுவலக நேர ஒவ்வொரு பஸ் பயணமும் நாள் வருமுன் கட்டாயப் பிரசவிப்புக்கு ஆளாக்கி விடுமோ குழந்தை நசிந்து இறந்து விடுமோ என்ற பயம் எப்போதும் போல் அப்போதும் தோன்றியது.


.
மக்கள் வரிப்பணத்தை பொக்கற்றுக்குள் போட்டுக் கொண்டு குட்டி குட்டியாய் ஏராளம் குடும்பம் வைத்து இருட்டு வாழ்க்கை வாழும் பல அரசியல்வாதிகள், அலுவலக நேரத்துக்கு மட்டுமாவது ஒரு குட்டி பஸ், கர்ப்பிணிகள் மட்டும் பயணம் செய்யும் வகையில் பணியில் அமர்த்தக் கூடாதா என்ற என் எப்போதுமான , எப்போதும் எந்த அரசியல் வாதியும் சிந்திக்கவே நினைக்காத நடைமுறையில் எப்போதும் சாத்தியமாகவே மாட்டாத சிந்தனை எப்போதும் போல் மனதில் ஓடியது.
.
வாழ்வாதார பொருளியல் நெருக்கடி உடல் எந்தவிதப் பாதிப்பான நிலையில் இருக்கும் போதும் நெருக்குதல்களும் தாண்டி அதற்குள் நெருக்கிப்பிடித்து உயிர்வாழ்தலை உறுதிப் படுத்தும் வாழ்க்கையின் போராட்டம் மனதை வலிக்க வைத்தது. தலைநகர் வாழ்வின் சொந்த வீடு இல்லாத (அதிகமானோர் அதே நிலை தான் ) ஒவ்வொரு குடும்பத்தின் உழைப்பும், வீட்டின் ஏதாவது ஒரு இருண்ட மூலை அறையை ஒதுக்கி, அல்லது யாழ்ப்பாண வீடுகளின் விறகு அடுக்க பாவிக்கும் தாழ்வாரம் போன்ற பகுதியை ஒதுக்கி அனெக்ஸ் என்ற பெயரில் வாடகைக்கு விடும் landlord களால் முடிந்த வரை கறக்கப்படும் கொடுமையும்,
.
அந்த நிலவரம் புரியாமல் ஊரில் இருந்து அலுவலாகவும் அலுவல் இல்லாமலும் தலைநகருக்கு வந்து நட்பையும் உறவையும் காரணம் காட்டி கூடவே தங்கி நின்று , அலுவலக நிலைமை தெரியாமல் வற்புறுத்தி லீவு எடுக்கவைத்து , காரணமில்லாமல் கொழும்பு சுற்றிக் காட்டவைத்து, அதனுடன் யாழ்ப்பாண வாழ்வை ஒப்பிட்டு நாற்பது நொட்டை நொடுக்கு சொல்லி செல்லும் மனிதர்கள் திரும்பிச் சென்றபின் land lord நீட்டும் தண்ணீர் மின்சாரம் உட்பட வந்து நின்றவர்களுக்கான மேலதிக வாடகையும் கட்ட வேண்டிய அவலத்தில் மாதவருமானம் தடுமாற, அதைச் சமாளிக்கும் வழி தெரியாது, வந்தவர்கள் சொல்லிச்சென்ற நொட்டைகளுக்கான பதிலை எல்லாம் நாகரீகத்துக்காக அவர்கள் முகத்துக்கு முன் சொல்லாமல் அவர்கள் போன பின் மனதுக்குள் சேர்த்துவைத்து office நேரத்தில் காரணமில்லாமல் எப்போதும் சம்பந்தமற்றுப் புலப்பும் பூமாவைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.
.
தம்பதிகளுக்குள் அளவற்ற நெருக்கம் இருந்தும் அதைப்பகிர்ந்து கொள்ள நேரமற்று மனதை அழுத்தும் பொருளாதார , அலுவலக ,குடும்ப , வேலைச் சுமைகளை தலைக்கு மேல் சுமந்து கொண்டு , மகிழ்வான தருணங்களை தொலைத்து விட்டு மனம் புகைய, புலம்பித்திரியும் அப்பாவிகளை அலுவலகங்களில் தேடிப்பிடித்து , கதை போட்டு கதை பிடுங்கி, அழையா விருந்தாளியாய் குடும்பத்துக்குள் நுழைந்து பற்றவைத்து விடும் பொன்னுத்துரை அடுத்த பஸ்ஸில் இருந்து இறங்கி ஓடி வந்து அதி முக்கிய கேள்வியாய்.
.
"மெய்யே பூமா இப்பவும் உன்ர மனுஷன் ஓவர் time எண்டு நேரம் பிந்தித்தான் வாறவனே.? மனிசி மாசமா இருக்ககேக்குள்ள தான் உந்த சேட்டை எல்லாம் வேலை இடங்களில தொடங்குவீனம். இப்ப அதட்டி வெருட்டி அச்சறுக்கை பண்ணி வை. பிறகு ஐயோ Mr.பொன்னுத்துரை என்னைக் காப்பாற்றுங்கோ எண்டு என்னட்டை ஓடிவந்து நிக்கக்கூ டாது சொல்லிப்போட்டன் " என்று சொன்ன விதத்தில் அக்கறை இருக்கவில்லை.ஐயோ அப்படி வந்து என் காலில் விழுந்து கதறு என்ற எதிர்பார்ப்பும் , குடும்பத்தை கொளுத்தி விட்டு எரியும் நெருப்பை அழகு பார்க்கும் ஆவலும் இருந்தது. கோபமாக எதோ சொல்ல வாயெடுத்த நிலானியின் கைகளை அழுத்தினேன்.
.
பூமா பதில் சொல்ல வேண்டிய கேள்வி அது. இந்த மனிதரின் எப்போதுமான கொளுத்தி வைத்து குளிர்காயும் நடவடிக்கைகளில் எப்போதும் அவள் office இல் குழம்பி அழுத நேரங்களில் அழுத்தி அழுத்தி அவளுக்குக் கொடுத்த advaice இப்போது வேலை செய்தது. "Mr. பொன்னுத்துரை நீங்க வேலைக்கு வந்தால் உங்கட அலுவலை மட்டும் பாருங்க . என்ர குடும்பம், என்ர ரூபன் பற்றி எனக்குத் தெரியும். " முதல் முறையாய் அவரை ஒதுக்கி வைத்து கோபமாய் சொல்லிய பூமாவை அதிசயமாய் பார்த்தார் மனிதர். பின் பார்வையில் தெரிந்த தீயை மறைச்சுக் கொண்டு "யாரவோ உன்னை நல்லா மாத்திப் போட்டினம். இதெல்லாம் நல்லதில்லை கண்டியோ " என்றார் நிலானியை கோபமாய் முறைத்துக் கொண்டே. அவளது புன்னகை அவருக்கு இன்னும் உள்ளே கொதித்திருக்கலாம்
.
ஆனால் ஏனோ அந்த மனிதனுக்கு உதறி எறிபவர்களை விட்டு ஒதுங்கிப் போகும் சுரணை எப்போதும் இருப்பதில்லை. அரச அலுவலகங்களில் இருந்து ஒய்வு பெற்ற பின்பும் இன்னொரு இளையவரின் வேலையை தட்டிப் பறித்துக் கொண்டு , பொழுது போக்க வேலைக்கு வந்து வில்லங்கம் தரும் பலரில் இந்த பொன்னுத்துரையும் ஒருவர். இவர்கள் வேலை செய்த அரச அலுவலகங்களில் இருந்து இவர்களின் அறிமுகத்தின் மூலம் அணைவின் காரணமாக இலகுவாகக் கிடைக்கும் ஒரே ஒரு கையெழுத்துக்காக தனியார் நிறுவனங்கள் வேலையற்ற இந்த ஆசாமிகளை வைத்து staff இன் உயிர் எடுக்கும். அந்த மனிதர் எப்போதும் உயிர்பிடுங்குதலை அலுவலகக் கடமை போலவே செய்தார்.
.
கையெழுத்து..... நினைவு வந்த போதே நிலானியின் மீது பரிதாபம் வந்தது. எங்கெல்லாம் மனிதர்களின் தலைஎழுத்தின் அவலம் வாய் விரித்து விழுங்கிவிடக் காத்திருக்கின்றது என்று சலிப்பாக இருந்தது.
.
நிலானியிடம் நான் அதிசயித்த பல திறமைகளில் ஒன்று அவள் மற்றவர்களின் நடை , குரல் பேச்சு , என்று எல்லாவற்றையும் அப்படியே பிரதிபலிக்கக் கூடியவள். அதேமாதிரி மற்றவர்களின் கை எழுத்தையும், கையொப்பத்தையும் கூட பார்த்து சில நிமிடத்தில் அப்படியே எழுதக் கூடியவள். அப்படித்தான் அவளது பழைய அலுவலகத்தில் அப்படி எல்லோரின் கையெழுத்தையும் வேடிக்கையாக எழுதப் போக , அவளது துருதுருப்பில் இளமையின் பூரிப்பில் ஏற்கனவே கண்வைத்து காத்திருந்த , அவளது டைரக்டர் ஒருவனின் கையில் அது சிக்கிக் கொண்டது. அவன் அதைவைத்து அவளது தலைவிதியின் ஒரு காலகட்டத்தை தன் கையால் எழுத ஆரம்பித்திருந்தான்.
.
( எப்படி எழுதினான் என்பதை அடுத்த பதிவில் வாசிப்போமா நட்புக்களே)
.

Friday, October 7, 2016

நான் நடந்த பாதையிலே 7

என் கை எழுத்தின் தலைஎழுத்து


"Get in நிலானி " என உரிமையுள்ளவன் போல் அதிகாரமாய் அவன் கூறியபோது அதிர்ந்து நின்று வெறித்துப் பார்த்த நிலானியின் கண்கள் கலங்கி உதடு துடித்துக் கொண்டிருந்தது. கீழ் உதட்டை மேற் பற்களால் இறுகக் கடித்துக் கொண்டு கண்களை மூடி இரண்டு பெரிய மூச்சுக்களை வேகமாக வெளியேற்றினாள். முகம் சற்று நிதானத்துக்கு மாறி இருந்தது. அந்த இடத்தில் அவனுக்கு சம்மந்தமில்லாதவள் போல் என்னையும் இழுத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினாள். 
.
"நிலானி do what I say." அவனது குரலில் கோபமும் அதிகாரமும் பொறுமை இழப்பும் கலந்திருந்தன. நின்று திரும்பி தீர்க்கமாகப் பார்த்து " who are you?" என்று அதட்டிய அவளது குரலில் ஆத்திரமும் அலட்சியமும் இருந்தன. அதிர்ந்து உடனேயே நிதானித்து, முகம் இளக 
வீதி என்றும் பாராமல் " Love you நிலானி " என்றான். அவள் வேகமாய் அவனருகே வந்து உதட்டுக்குள் நெரிபட்ட வார்த்தைகள் சத்தத்தைக் குறைத்து வெறுப்பை கூட்டிப் பிரதி பலிக்க, "but I don't like you. I can't love you because you are a cheat" என்றாள். 
.
விபரம் ஏதும் புரியாமல் சம்பந்தமில்லாத ஒருத்தியாய் நடுவில் நிற்பது சங்கடமாய் உறுத்த. "நான் போகவேணும். நாளைக்கு office இல் பார்க்கலாம் நிலானி" என்றேன். அதற்காகவே காத்திருந்தவன் போல "ப்ளீஸ்" என்று போகும் படி கைகளால் சைகை காட்டினான் அவன். "இல்லை நானும் வாறன் போகவேண்டாம்" என்று அவசரமாக மறுத்து கையைப் பற்றிக் கொண்டவளின் கைகளில் இருந்த நடுக்கம் உறுத்தியது. அவளை அந்த இடத்தில் தனியாக விட்டு விலக தயக்கமாக இருந்தது. எதோ விபரீதம் போல் தோன்றியது. 
.
பொதுவிலேயே தமக்கான சொந்தப் பிரச்சனைகளுக்குள் நட்பின் அடிப்படையில் கூட காரணமற்று இன்னொருவரைச் சம்பந்தப் படுத்துவது பலருக்கும் சங்கடமான ஒன்று. பல சந்தர்ப்பங்களில் அப்படி ஏதாவது சுயநலமான காரணங்களை உள் மறைத்துக் கொண்டே நட்பின் போர்வையில் நெருங்குபவர்கள் பலரிடம் கற்றுக் கொண்டு காயப்பட்ட பாடங்கள் என்னைப் பதப்படுத்தியி ருந்தன. அந்தக் காயங்களில் இருந்து தற்காத்துக் கொள்ள எப்போதும் , எதிராளியைப் பேசவிட்டு , எதிர்த்து எதுவும் வாதாடாமல் அமைதியாக அவதானித்து உல் அர்த்தங்களை கிரகித்துக் கொண்ட பின் , உரையாடல் இறுதியில் அமைதியான ஒரு, வாழ்நாட்கள் முழுவதுக்குமான வாழ்த்துடன் அப்படியான மனிதர்களிடமிருந்து நிரந்தரமாகவே ஒதுங்கி விடும் என் சுபாவம் நிலானியின் விடயத்தில் மாறி இருந்தது. அவள் அப்படி எதோ ஒரு காரணத்திற்காக நெருங்கியவள் அல்ல,. பழகிய சொற்ப நேரத்தில் நெஞ்சம் தொட்டவள். முகமூடி போட்டு பொய் வார்த்தைகளால் சோடனை செய்யாதவள் என்பது உணர அவளை விட்டுப் போவதில்லை இனி எப்போதும் என்ற முடிவு தீர்மானமாகியது மனதில். 
.
என் கரத்தை இறுகப் பற்றியிருந்த நிலானியின் கரங்களை முறைத்து விட்டு "நான் உன்னோடு தனியாக பேச வேண்டும் " அதட்டினான் அவன். வீதி மெல்ல திரும்பி வேடிக்கை பார்க்கத் தொடங்கியிருந்தது. அவள் இன்னும் அதிகமாய் அவனை நெருங்கினாள். கண்களில் நெருப்பெரிய முறைத்து, "நான் மிகவும் சாதாரணமானவள். இதில் செத்து விழுந்தால் கூட யாருக்கும் அடையாளம் தெரியாத அனாதைப் பிணம். செய்திப் பேப்பர் கூட பிரசுரிக்க இடமிருக்கிறதா என்று யோசிக்கிற நிலையில் வாழ்பவள். நீ அப்படி இல்லை தலை நகரின் பெரும் புள்ளிகலீல் ஒரு வீட்டு வாரிசு. பிரபலமான ஒரு நிறுவனத்தின் முதலாளி வர்க்கத்தில் ஒருவன். ஒரு கூச்சல் போட்டேன் என்று வை நாளைக்கு மூன்று மொழிப் பத்திரிகையிலும் நீ தான் தலைப்புச் செய்தி." அவளது உதடுகளுக்குள் நெரிபட்ட வார்த்தையின் அதிர்வை அவனது முகம் அப்பட்டமாகக் காட்டியது 
.
"கொன்னுடுவேன் " அவனது வார்த்தைகள் உறுமலாய் வர , நிதானமாய் நிமிர்ந்து அலட்சியமாய் சொன்னாள் "போர் பூமியில் பிறந்து சாவுகளுடன் வளர்ந்தவள் . உன் கொலைப்பயமுறுத்தலுக்கு பயந்திடுவேன் என்று நினைச்சியா? நடுத்தெருவில என்னை நானே கொழுத்திட்டு நீ தான் கொழுத்தினாய் என்று நம்பவைச்சு, செய்தியாலே உன்னை ஓதுங்கி ஒடுங்க வைக்க எனக்கு முடியும் . உனக்கு எதிரான எல்லாக் குற்றச்சாட்டும் எழுதி, எனக்கு ஏதாவது ஆனால் நீதான் காரணம் என்றும் எழுதி உனக்குத் தேவையான என் sign போட்டு உனக்கான இடத்திலேயே மறைச்சு வைச்சிருக்கிறேன் நான். ஒரு அவலமான முடிவை நான் எடுத்தால் நீ ஆபத்தில் மாட்டுவாய். அதனால ஒதுங்கிப் போயிடு என்னை என் பாதையில் போக விடு. " அதட்டலாக கூறிய போது அவன் மனம் அதிர்ந்ததை உடல் பிரதிபலிக்க என் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு வேகமாக நடக்கத் தொடங்கினாள் நிலானி. 
.
முகத்தில் கோபம் இருந்த போதும், பற்றியிருந்த விரல்களின் நடுக்கம் அவளின் மென்மையை உணர்த்திக் கொண்டிருந்தது. கேள்வி கேட்காமல் கூடவே நடந்த போது தன்னைச் சற்று ஆசுவாசப் படுத்தி " sorry டா " என்றாள். "எதுக்கு நிலானி விடுங்க" என்ற போது "இந்த நீங்க வாங்க போங்க எல்லாம் விட்டிடலாமேங்க " என்று உரிமையாய் சொல்லிய புன்னகைகையில் இவ்வளவு நேர ஆக்ரோஷ முகம் எங்கோ தொலைந்து முழுவதும் மகிழ்ச்சிக்கு மாறி இருந்தாள். 
.
இலங்கையின் தலைநகரில் வாழ்வது என்பது, எரிக்கும் வெயிலில் உச்சி உருகி உடலில் வழிந்தாலும், வேலை முடிந்த மாலைகளில் திருவிழாக் கூட்டமாய் நெரியும் பஸ்ராண்டுகளில் தொலைந்தாலும், ஓரங்களில் வீசிப்போட்ட ஊசிப்போன சாப்பாட்டுப் பாசல்களின் புளிச்சல் நாத்தத்தில் சுவாசிக்கவே வெறுத்துப் போனாலும், வாழ்க்கை சுறுசுறுப்பானது, உற்சாகமானது, ஓய்ந்து அழுந்திக் கிடக்கத் தேவையில்லாதது. மனதுக்குள் எந்தப் பிரச்சனையையும் அதிக நேரம் அழுத்திக் கொல்லாமல் அடுத்த அலுவலுக்கு அவசரமாகத் தாண்ட வேண்டிய அவசரமானது. அதனால் என் வரையில் அது அழகானது. அப்படி நெரிசல் முட்டிய பஸ் ஸ்ராண்டில் வந்து காத்து நின்ற போது நிலானியும் சற்று முன் நடந்த எல்லாம் மறந்து உற்சாகமாய் கதைத்தாள். பின் 
.
"அவன் பற்றி இன்னொரு நாள் சொல்லுறேன். இப்ப திரும்பவும் என் மூட் ஸ்பாயில் பண்ண விரும்பல்ல "என்றாள். "அப்படி சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை நிலா. என்னோடான உங்கள் நட்பு என்பது உங்கள் மூக்கு நுணி வரையும் என் கைகளை அனுமதிப்பது மட்டுமே. மூக்கு நுணி தீண்டும் உரிமை எனக்கு இல்லை. இது வரை உடையாமல் தொடரும் என் நட்புகளில் நான் கடைப்பிடிக்கும் முக்கிய விடயம்." புன்னகைத்தாள் "ஒரு நாளிலேயே என்னை இவ்வளவு கவர்ந்த ஒரு சகோதரியிடம் சொல்லும் அனுமதி எனக்கு உண்டா." ஏனென்றாள். "எனக்கு நெருங்கியவர்களிடம் என்னைப்பற்றி மறைப்போடு பழக என்னால் முடியாதே" என்றவளின் அப்பாவிப் புன்னகை பிடித்திருந்தது. " அப்படியானால் என் காது மனதுக்குள் திறக்குமே" என்றேன். கண்களுக்குள் ஊடுருவிப் பார்த்தாள். பார்வையில் அலாதியான நெருக்கம் இருந்தது. 
.
எமக்கான 100 இலக்க பஸ் வந்தது. இலக்கம் பஸ்சுக்கானது என்பதை பிழையாக விளங்கிக் கொண்டு நூறு பேரை அந்தச் சிறிய வண்டிக்குள் அடைந்து விடும் கட்டாயத்தில் நடத்துனர் வீதியில் நின்றவர்களை கை பிடித்து இழுக்காத குறையாக இழுத்து உள்ளே அடைந்து கொண்டு "இஸ்சரட்ட ஜண்ட. இஸ்சரட்ட ஜண்ட" (முன்னாடி போ முன்னாடி போ ) என்று கத்திக் கத்தி பஸ்ஸின் கர்ப்பிணி வயிற்றை ஒவ்வொரு நிறுத்தத்திலும் ஒவ்வொரு மாதம் அதிகமாக்கி பொரும வைக்க. நாம் பின்பக்க வாசலால் ஏறி, நடக்க முடியாமல் சனக்கூட்டத்தில் மிதந்து, சாரதி இருக்கைக்கு பின்னால் வரை வந்து, கம்பியில் கை பிடித்து , ஒரு மாதிரி கீழே இடம் பிடித்துக் கால் பதித்து ஒருவரை ஒருவர் பார்த்து ஆசுவாசமாகப் புன்னகைக்க., கோல்பேஸ் கடலின் காற்று நுரையோடு மிதந்து வந்து முகத்தில் மோதியது இதமாய் . கரை எங்கும் குடைப் பூக்கள் பலவண்ணங்களில் கைமரங்களில் பூத்திருந்தன. பூக்களுக்கு அடியில் காதலோ , காதல் என்ற பெயரில் ஒளிந்து கொண்ட வேறு எதுவோ அரங்கேற்றிக் கொண்டிருக்கும் பரகசிய உண்மை புன்னகைக்க வைத்தது ,

 

கோல்பேஸ் கடற்கரையும் முகத்தில் மோதி தலை முடி கலைக்கும் குளிர்காற்றும் எவ்வளவு பிடிக்குமோ அதேயளவு கடற்கரைக்கு அருகே நிறுத்தியுள்ள பீரங்கிகளைப் பார்க்கவும் எனக்கு மிகவும் பிடிக்கும். என்னை வயிற்றில் சுமந்துகொண்டு மசக்கையும் வாந்தியும் பசியுமாக அம்மா கிடந்த நாட்களில் எல்லாம் மாலை நேரங்களில் அப்பா இங்கு கூட்டி வந்து காற்றில் நடக்கவைத்து தானே கைப்படச் சமைத்த உணவை அந்தப்பீரங்கிகளுக்கு அடியில்உட்கார்ந்தபடி உண்ணவைத்து அது சற்றுச் சமிபாடடையும் வரை மீண்டும் நடந்து கொண்டே முதலாம் இரண்டாம் உலகயுத்த அதன் பின்னான எங்கள் நாட்டின் அரசியல் வரலாற்றையும் விளக்குவதாக, அதற்குள் இரண்டு முறையாவது அம்மாவின் பிடிவாதத்தில் ஐஸ் கிரீம் சாப்பிட்டு விடுவதாகவும். இரவு வரை அதிலேயே கழித்து விட்டு செக்கண்ட் ஷோ படம் பார்த்து விட்டு வீட்டுக்குப் போவதாக அம்மா சொல்லி நான் கேட்டிருக்கிறேன் . அதை சொல்லும் நேரங்களில் அம்மாவின் முக விகசிப்புக்குள் இருக்கும் அப்பா மீதான காதல் எனக்குப்பிடிக்கும் அதனாலேயே அந்தப் பீரங்கிகளை பார்க்கும் போதெல்லாம் அம்மா அப்பா கூடி நடப்பது போல அதனடியில் பேசிக்கொண்டிருப்பது போல அவர்கள் கரங்களுக்குள் நான் இருப்பது போலமிகவும் மகிழ்வான ஒரு உணர்வு இருக்கும்
.
வளர்ந்தபின் நான் பலதடவை யோசித்திருக்கிறேன் மசக்கை நேரம் பாற்பொருட்கள் கண்டாலே குமட்டிக்கொண்டு வரும். இதற்குள் எப்படி இத்தனை ஐஸ்கிரீம் என்று ஆனாலும் கேட்டதில்லை. அவர் அருகில் இருந்து அதையும் ஊட்டியிருந்து அது வாந்தியாகாமல் இருந்திருக்கலாம். இன்றுவரை அவர்களின் தனிப்பட்ட காதல் கதைக்குள் நான் நுழைந்து பார்த்ததில்லை. ஆனாலும் ஐஸ்கிறீம் பார் என்று நட்புகள் என்னை கிண்டல் செய்யுமளவு நான் உணவாக அதை உட்கொள்வதற்கும், தோற்றத்தில் குணத்தில் வேறு யாரையும் கொள்ளாது இருவரிலும் சரிபாதி நான் கொண்டுள்ளமைக்கு அந்த நெருக்கமான நேசிப்பு தான் காரணம் என்று தோன்றும். அதுவே ஏதோ வரம் போல் உணர்வதுண்டு. 
.
வழமைபோல் கோல்பேஸ் காற்றுக்குள் தொலைந்திருந்தவளை " நான் அவனிடம் மாட்டிக்கொண்டேன்" என்ற நிலானியின் குரல் மீட்டு வந்தது . அதிர்ந்து பார்த்தபோது
அவளது முகம் கலவரமாகி இருந்தது. "நான் தெரியாமல் மாட்டிக் கொண்டேன் " என்றாள் காதருகே. கேள்வி போல்பார்வையில் அதிர்ந்த என்னை "அவன் என் சாவு வரை துரத்துவான் போல பயமா இருக்கு " என்ற போது குரலில் நிறைய கலக்கம் இருந்தது. "இவனை நெருங்கினால் நான் கம்பி எண்ண வேண்டி வரலாம்" என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு. "நிலா" என்றேன் அதிர்வாய் "எல்லாருக்கும் தலை எழுத்து சரியில்லை என்று சொல்லுவீனம். எனக்கு மட்டும் என் கையெழுத்தில் இப்படி ஒரு தலைஎழுத்து எழுதி இருக்கு போல ...... " அவள் சொல்லட்டும் எனக் காத்திருந்தேன். "அவன் எனது...,...,...... " வாக்கியத்தை முடிக்காமல் கண்கள் கடலை நோக்க பஸ் கோல்பேஸ் கடற்கரையைக் கடக்க .......
.
( அவன் அவளது .......... அடுத்த அத்தியாயத்தில் கேட்போமா நட்புக்களே)
.
***********
மாலினி