"ஏண்டி வானரம் ரோட்டால போனால் அக்கம் பக்கத்தில யாரெவர் நிக்கினம் எண்டு திரும்பிப் பார்க்க மாட்டியா?"
சட்டென்று அந்தக் குரல் மனதை இழுத்து முகத்தை மலர்த்தியது. ஆனாலும் அவன் கூப்பிட்ட விதத்தில் செல்லமாய் ஒரு வீம்பு. கவனிக்காத மாதிரி நேரே பார்த்துக் கொண்டு சைக்கிளை ஓட,
"வைச்சிருக்கிறதே சைக்கிள் எண்ட பெயரில நாலு தகரக் குழாயும் அரை உயிரோட ரெண்டு சில்லும். அதையும் உள்ள பள்ளம் புட்டி எல்லாம் விழுத்தி எழுப்பி அங்க இஞ்ச கோணல் மாணலா நெளிஞ்சு கிடக்கு அதில ஏறீட்டால் போதும் ஜான்சி ராணி குதிரையில வாற நினைப்பு சீமாட்டிக்கு . பாரன் ஆளை."
அவளை சொன்னால் கோபம் வராது அவளுக்கு . அவளின் உயிர் வாகனத்தை சொன்னால் சும்மா விடலாமோ படார் என்று சைக்கிளால இறங்கி வழமை போல ஸ்டான்ட் போடுற நேரத்துக்குள்ள கோபம் ஆறிப் போயிடும் என்ற பயத்தில சட்டென்று சைக்கிளை கீழே போட்டு விட்டு சண்டை போடலாம் என்று வீராவேசமா நடந்து போனால், கிட்டப் போகும் போதே அந்த முகத்தின் புன்னகையில் கோபம் எட்டுக்கால் பாய்ச்சலில் எங்கேயோ ஓடிப் போய் பாழாய் போன பாசம் வந்து ஒட்டிக் கொள்ள
"எப்படா வந்தனி " என்றாள்
"விடிய தான். ஆறரைக்கு பஸ் வந்தது". என்றான்.
போகும் போது இருந்ததை விட இன்னும் செழித்து நிறத்திருந்தான். சும்மாவே கொஞ்சம் ஜொலிப்பான முகமும் நிறமும் , அவன் சிரிக்கும் போ து ஆரோக்கியமான கண்களின் கள்ளமில்லாத ஒளிர்வில் , சிகரற் படாத உதடுகளின் ரோஸ் நிற ஈறுகளுடன் ஒழுங்கான பல்வரிசையில் , நெற்றியில் சாய்ந்து விழும் கரு கரு நெளி முடியில் அவன் அம்மாவின் கவனிப்பு , அப்பாவின் அன்பான கண்டிப்பு அவனின் ஒழுங்கு விலகாத ஒழுக்கம் எல்லாமே அடையாளப்பட்டு இருக்கும்.
"மூன்று மாதம் இருக்குமாடி நான் போய்"
"இல்லை சுரேஷினி அக்காவின்ர கல்யாணத்துக்கு தான் கடைசியா வந்தனி அப்பிடிப் பார்த்தால் இப்ப ரெண்டு மாதம்."
"ஓ........ரெண்டு மாதத்தில மகாராணி கொஞ்சம் மாறின மாதிரி இருக்கே "
வழமை போல கொதி ஏத்தத் தொடங்கிட்டான் அடங்கு அடங்கு எண்டு மனம் சொன்னாலும் கண்ணில கோபம் எட்டித் தான் பார்த்தது அவளுக்கு.
"முகத்தில கொஞ்சம் அமைதி வந்த மாதிரி இருக்கு , பெரிய மனுஷி மாதிரி உனக்குக் கூட கொஞ்சம் நிதானம் பொறுப்பு வந்திட்டுதோ ?"
திரும்பவும் எய்து பார்த்தான் மனதின் ஏதாவது ஒரு பகுதியில் குத்தி சண்டை ஆரம்பிக்கட்டும் என்று. பொறுமை பொறுமை மனம் உருப் போட்டது. எப்பவும் மாதிரி குலைக்கிற உனக்கு கோள் தந்து நானும் எல்லாரிட்டையும் கல் ஏறி வாங்கிறதில்லை என்று திடமா இருந்தது மனம்.
"என்ன கொஞ்சம் நிறத்து முகம் எல்லாம் மினு மினு எண்டு இருக்கிற மாஆஆஆ திரி இருக்கு. என்னாச்சுடி. பொம்பிளைப் பிள்ளையா மாறீட்டியா. அதுகளை போல அடக்க ஒடுக்கமா பூ சி மினுக்கி அழகா இருக்க வேணும் எண்டு ஞானோதயம் வந்திட்டுதாடி செல்லம் " என்று இன்னும் அக்கறையா கேட்டான்.
அங்கே தான் அவளுக்கு ஐடியா உருவாகி சனியன் அவனது முகத்தில் ஏறக் காத்திருந்தான். என்பது அவனுக்குப் புரிந்திராது.
"நான் இப்ப பயறும், கஸ்தூரி மஞ்சளும், பாலாடையும், வேப்பிலையும், மாதுளை இலையும் , அரைச்சு பாலில குழைச்சு ராவும் பகலும் பூசுறனான். சோப் கிரீம் பவுடர் ஒண்டும் தொடுறது கூட இல்லை அது தான்."
"உண்மையாவே நல்லா இருக்குடி தொடர்ந்து பூசு." அக்கறையாகத் தான் சொன்னான்.
"உனக்கும் வேணுமா ?"
"நான் boy டி குரங்கு. "
"boy எண்டால் பூசக் கூடாதா?"
"சிரிப்பினம் டீ குரங்கு "
"உங்கட வீட்டில யாரு சிரிக்கிற. உன் அம்மா அப்பாவா.?"
"ம். அதோட பக்கத்தில மதிலால மீரா கண்டால் ஊரெல்லாம் சொல்லிப் போடுவாள். அதோட அம்மா பின்னேரம் போய் பெரியம்மா வீட்டுப் படியில இருந்து கதா காலோட்ஷேபம் மாதிரி சொல்லுவா பெரியம்மாவும் சின்னம்மாவும் மிச்சமில்லாமல் எல்லா சகோதரங்களுக்கும் சொல்லுங்கள்டீ. அண்ணாமார் பெட்டையாடா நீ எண்டு பேசுவாங்கள் "
"நீ யாருக்கும் தெரியாமல் இரவு படுக்கும் போது பூசேன்டா. விடிய எல்லாரும் எழும்ப முதலே எழும்பிக் கழுவு. நீ இங்க நிக்கிற இந்த ஒரு கிழமையும் பூசு. திரும்ப பேராதெனிய போறதுக்குள்ள இன்னும் நிறத்து மினுமினுப்பா ஆகீடுவாய்."
"நீயே ஐடியாவும் தந்திட்டு வழமை போல மாட்டியும் விட மாட்டியே?"
"இல்லைடா எருமை எல்லாத்திலுமா நான் விளையாடுவன். என்னை நம்பினால் பூசு இல்லாட்டி விடன் எனக்கென்ன. ஏதோ முகத்துக்கு குளிர்ச்சியாக இருக்கும் என்று சொல்லவந்தன் "
"அதுக்குள்ளே கோவிக்காதடி குரங்கு "
"டேய். இன்னொண்டும் மறக்காதே . போறதுக்குள்ள கங்கா அக்காவிட்டை உன்ர கண்டறியாத காதலை சொல்லு என்ன . சொல்லும் போது ஹீரோ மாதிரி இருக்க வேணும் டா நீ . அவவை சந்திக்கப் போகும் போது நீயா டிரஸ் எதுவும் செலக்ட் பண்ணாதே. எல்லாம் நான் சொல்லுறது மாதிரி செய். அந்த black jeans and light blue shirt போடு. மறக்காமல் டெனிம் பெர்பியூம் ஸ்ப்ரே பண்ணு. அதில் ஒரு மயக்கும் வாசம் இருக்கு . தலை முடியை கொஞ்சமா மேவி இழு அப்ப தான் முகம் உனக்கு பளீர் என்று இருக்கும். தோலோட ஒட்டின மாதிரி தாடிய ட்ரிம் பண்ணு......"
சொல்லிக் கொண்டே போக அவனுக்குக் கண்களில் ஆசை கனவுகளோடு எட்டிப் பார்ப்பதை காண உள்ளிருந்த குட்டிச் சாத்தான் கை கொட்டி சிரித்தான் மாட்டீட்டுது பறவை என்று.
"அது சரி எண்டா இன்னும் சொல்லலை நீ ?"
"நீ சின்னப்பிள்ளை இதெல்லாம் கதைக்கக் கூடாது வாய் பொத்து." இருந்தாற் போல் அண்ணனாகி மிரட்டினான்.
"அப்ப சின்னப்பிள்ளைக்கு வந்து நீங்கள் உங்கட காதல் கதை சொல்லலாமோ?"
"உன்னளவுக்கு யாரும் எனக்கு கம்படபிலா இல்லடி. மனதில உள்ளது எல்லாம் சொல்ல. சண்டை பிடிக்க, எனக்கு உன்னை விட்டா யாரோடும் அவ்வளவா ஒத்துக் கொள்ளாதுடி. என்ன ஒன்று ஒரே வயிற்றில் பிறக்கலை என்ற குறை. அதுவும் ஊருக்காக. மற்றப்படி நீதாண்டி கண்ணம்மா எனக்கு அண்ணா அக்கா தம்பி தங்கை எல்லாமே."
வார்த்தைகளின் உண்மையை அப்பாவி முகம் உணர்த்தியது. .
"உன்னோட கூடப்பிறந்து 24 மணி நேரமும் நான் உன்னோட கூடவே இருந்திருந்தால் ஒன்றில் நீ என்னை கொன்றிருப்பாய் அல்லது நான் உன்னை கொன்றிருப்பேன் அதை விடு. ஏண்டா மண்டு இன்னும் சொல்லாமல் இருக்கிறாய்?"
"இல்லடி மறுத்திட்டா கஸ்ரமாகியிடும் மூண்டு வருசக் காத்திருப்பு தோற்றுப் போனால் தனியா தாங்க மாட்டேன்டி. அது தான் இந்த லீவில் வரேக்க சொல்லலாம் எண்டு காத்திருந்தன்."
" இப்ப மறுத்தால் தாங்குவியாடா?"
"மறுத்தாலும் இங்க அம்மா அப்பா நீ மீரா ப்ரியா பெரியம்மா சின்னம்மா என்று என்னுடைய எல்லாரும் கூட இருக்கும் போது ஓரளவு தேற்றிக் கொண்டு விடுவன் அதிலும் நீ என்னோட வலியக்கொழுவி சண்டை போட்டே என்னை சோர்ந்து போக விடாமல் பார்த்துக் கொள்வாய்."
அவனது அப்பாவித்தனம் பாவமாக இருந்தாலும் எப்போதும் அண்ணன் தங்கைக்கு இடையில் ஒத்து வராத ஜாதகம் என்ன செய்வது.
"ஒண்டு செய்யிறியாடி . கங்காவோட கதைச்சு சர்ச் கு கூட்டி வாறியா? அங்க வைச்சு சொல்லுறன். நீங்கள் மூண்டு பேரும் ஒழுங்கான தங்கச்சிமாரா இதிலாவது உதவுங்கோ நீ நல்ல நெருக்கம் தானே கங்காவோட."
"அதெல்லாம் செய்யலாம். உன்ர கல்யாணத்துக்கு எங்கள் மூண்டு பேருக்கும் முத்து மோதிரம் போடுவியா நீ அதை சொல்லு முதலில"
"வந்து பிறந்திட்டன் செய்து துலைக்கிறன்" கொஞ்சம் பொய்க் கோபத்தில் சொன்னான்.
"கங்கா அக்காவிட்ட என்னடா சொல்லிக் கூட்டி வர. ஹிரஞ்சன் உங்களை லவ் பண்ணுறான் அதை உங்களிட்ட தன்ர வாயால சொல்ல வேணுமாம். சர்ச் கு வாங்கோ எண்டோ ?"
வேணுமெண்டே அவள் சத்தமா சொல்ல அவன் தடுமாறி வெருண்டு அவளின் வாயப் பொத்திறதுக்குப் பதில் அவசரத்தில் தன்ர வாயை தன்ர கையால பொத்திக் கொண்டு
"கத்தாதடி குரங்கு அம்மா நிக்கிறா" என்றான். பின்
" உன்னை விட்டால் யாரிட்டை நான் இப்படி உரிமையா வெளிப்படையா கேக்க முடியும் சொல்லு" என்று ஒரு வாளி ஐஸ் கிரீம் அள்ளி வழமை போல தலையில் கொட்டினான்.
"காரியம் ஆகவேணும் என்றால் குளிரக் குளிரக் கொஞ்சிப் போட்டு, காரியம் முடிஞ்சதும் காலகாலமாய் துரத்தி அடிக்கிற உனக்கு வைக்கிறேன் பாருடா வேட்டு" என்று அவளுக்கு மனதுக்குள் குட்டிச் சாத்தான் குமுறியது.
"உனக்கு நான் செய்யாமல் வேறே யார் செய்யிறது சொல்லு நான் நாளைக்கே கூட்டி வரவா டா?"
"என்ர செல்லம் கூட்டி வாறியா டீ என் நித்திலம் "
"அது என்ன புதிசா இண்டைக்கு நித்திலம்?"
"என் முத்தே என்று சொல்லவந்தேண்டி கண்ணம்மா"
"ஓ.. அதுவா சொல்லு சொல்லு. குடுத்த வாக்கை நிறைவேற்றுவேன் நம்புடா சகோதரா. ஆனால் நீ முத்தே என்று கொஞ்சிப்போட்டு முத்து மோதிரத்தில கழிச்சு விடக்கூடாது "
அவனின் முகம் இளகியது.
"அதுக்கு முதல் உன்ர முகத்தை பிரெஷ் ஆக்கு . நான் அது அரைச்சு தரட்டுமா பூசுறியா? ஒரு நாளிலேயே பலன் தெரியும் டா."
அவனுக்கு காதல் கண்ணை மறைச்சு பளபளப்பான ஆசைகளைக் கிளப்ப,
"ஒவ்வொரு நாளும் எப்படி டீ நீ வருவியா அரைச்சுத் தர?" என்றான் .
"நான் ஒவ்விரு நாளும் வர மாட்டேன். அங்க வீட்டில நடக்கிற பஞ்சாயத்துக்கு பதில் சொல்ல ஏலாதுடா . பக்கத்தில் மீராவிட்டை கேள். அல்லது நான் சொல்லிப்போட்டுப் போறன். இல்லாட்டி ப்ரியாட்டை கேளேன் அவள் வீட்டிலை தானே மருதோண்டி நிக்குது செய்து கொண்டு வந்து தருவாள் "
"அம்மா என்ன எண்டு கேப்பாடீ."
"அம்மாவுக்கு முன்னாலா இதெல்லாம் கொண்டு வந்து தருவாள் மொக்கா. அம்மாமாரை அவையவையின்ர எல்லையில மதிப்பா ஒரு சிம்மாசனம் போட்டு உட்கார்த்தி வைச்சுப் போட்டு
அடிக்கடி பூத்தூவி சாமரம் வீசிப்போட்டு இதெல்லாம் ரகசியமா தான் செய்ய வேணும் மொக்கா "
அதற்குள்
" பிள்ளையள் உள்ளே வாங்கோவன் ரோட்டில என்ன குசு குசுப்பு" என்று அவனின் அம்மாவின் அழைப்பு மணி.
"இல்லை நான் போகணும் பிரியாவிட்ட வந்தேன் பெரியம்மா. இவன் இடையில மறிச்சிட்டான்."
"அங்க போனால் இஞ்ச வரக்கூடாது வாசலில நிக்கவேணும் எண்டு சொல்லி விட்டவவே கொம்மா. "
"ஓம் அந்த நந்தி தேவர் சந்நிதியை வணங்கிப் போட்டுத் தான் இங்க பிரகாரத்துக்குள்ள கால் வைக்க வேணும் அதுக்கு முன்ன யாரும் மறிச்சால் வாசலில நில் ஜென்மக் குற்றமாகிவிடும் என்று சொன்னவ,."
"பிள்ளையளா இதுகள். பெத்ததும் அரைகுறை தேடி எடுத்ததும் தறுதலை " வழமையான ஆலாபனை தொடங்கியது.
"இது முடிய நேரம் எடுக்கும் அதுக்குள் உள்ளே வந்து அரைச்சு தாடி".
"இல்லைடா நான் பிரியா வீட்டில அரைச்சு வந்து தாறன்அங்கே தானே மருதோண்டி இருக்கு "
"ஏன் அம்மாவோட உனக்கு ஏதும் கோபமா?"
"போடா உன்ர அம்மாவில என்ன கோபம். உன்னை போல அதுவும் ஒரு லூசு மனிசி " அவனுக்கு கோபம் மூக்கில ஏற, அவள் சைக்கிளில் ஏறி அவனது தலையில் 'ணங்' என்று ஒரு குட்டு வைத்து விட்டு பறந்து ,
பிரியா வீட்டுக்குள் நுழைந்து சைக்கிளை படார் என்று அப்படியே போட்டு விட்டு அந்த பழைய கால ஐந்து கட்டு உயர வீட்டின் எட்டுப் படிகளையும் இரண்டு தாவலில் தாவி ஓடி ப்ரியாவை இழுத்துக் கொண்டு போய் கிணத்தடியில் வைத்து இரகசியம் சொன்ன போது, பிரியாவின் அம்மா வழமை போல ராமாயணத்து கூனி போல பார்த்தா.
ப்ரியாவும் அவளும் அடிவளவுக்குள் போய் மருதோண்டி இல்லை ஆயத் தொடங்க பிரியாவின் அம்மா சந்தேகமா கண்ணைக் குறுக்கி குறுக்கி ஒரு கூனிப் பார்வை பார்த்துப் போட்டு, பிறகு அப்பாவிட்ட போய்
"முதல் சின்ன வானரம் அவசரமா ஓடி வந்ததப்பா. பிறகு பெரிய வானரத்தை இழுத்துக் கொண்டு போய் கிணத்தடியில எதோ குசுகுசுத்தது. பிறகு ரெண்டுமா சிரிச்சு சிரிச்சு மருதோண்டி பிடுங்குதுகள். எனக்கெண்டா அந்தச் சிரிப்பு நல்லதாப் படயில்ல. இதுகள் ஆருக்கோ எதோ செய்யப் போகுதுகள் " என்று ராணுவ ரகசியம் போல சொன்னா.
அப்பா வழமை மாதிரி வாசிச்சுக் கொண்டிருந்த தடிச்ச புத்தகத்தை மூடி மடியில் வைச்சுக் கொண்டு இந்த மொக்கு அம்மாவைக் கட்டினதுக்கு எப்பவும் மாதிரி இப்பவும் பெருமூச்சு விட்டுக் கொண்டு சாய்மனைக்கதிரையில் இருந்து நிமிர்ந்து
"உனக்குப் பிள்ளைகளோட ஒத்துப் போகத்தெரியாது அதுகள் பூ பிடுங்கினால் சந்தேகம் மருதோண்டி பிடுங்கினால் சந்தேகம் கூடி இருந்து கதைச்சால் சந்தேகம் முதல் உன்னை திருத்து." என்றார் சற்று அதட்டலாய்.
அம்மா எப்பவும் போல அப்பா பேசின ஒரு சின்ன வார்த்தைக்கு மூக்கைச் சிந்தி சீலைத்தலைப்பில துடைச்சுக் கொண்டு
"உதுகள் பிள்ளையளா இருந்தால் நான் என் சந்தேகப் படப் போறன். குட்டிச் சாத்தானுகள்" என்று புறுபுறுத்துக் கொண்டு குசினிக்குப் போக ப்ரியாவின் அண்ணாமார் அம்மாக்கு இன்னும் ஏற்றி விட்டு அப்பாவுடன் சண்டையை வளர்த்து விட்டு இரவு அம்மாவும் அப்பாவும் முட்டிக்கொண்டு மோதும் கூத்து பார்க்க ஆயத்தமாக,
அவளும் பிரியாவும் மருதோன்றி அரைக்கத் தொடங்கியிருந்தார்கள்.
"ஏய் பிரியா பயறும் மஞ்சளும் சேர்த்து அரைடி இல்லாட்டி அவன் சந்தேகப் பட்டிருவான்."
"குரும்பட்டி போடவா டி. இன்னும் நிறம் வரும்."
"சரி செய்"
மிக கவனமா மருதோன்றி குரும்பட்டி எல்லாம் சேர்த்து மசிய அரைச்சு அதுக்கு இன்னும் நிறம் வர தேசிக்கா புளியும் விட்டுக் கலந்த பிறகு
"இது வேறை நிறமா இருக்குமேடி. நீ பயறும் கஸ்தூரி மஞ்சளும் பாலாடையும் எண்டு தானே சொன்னனீ. அவன் கெட்டிக்காரன் கண்டு பிடிச்சுடுவான்டி" என்றாள்.
"ஹா. நான் என்ன மொக்கா . வல்லவனுக்கு வல்லவள் முதலே முன்யோசனையா அதக்குள்ள மாதுளை வேப்பம் இலை எல்லாம் போடுறது எண்டு சொல்லி வைச்சிருக்கேண்டி அதோட கொழும்பில பிறந்து பிளட்சில சிறுவயதை கழித்தவனுக்கு இலைகளை மணந்து பார்த்து கண்டுபிடிக்கத் தெரியாதுடி " என்றாள்.
அரைத்ததை எடுத்துப் போய்அவனிடம் கொடுக்கும் போ து கொஞ்சம் பாவமா தான் இருந்தது ஆனாலும் வாழ்க்கை சுவையாவது இப்படி கடக்கும் சில சம்பவங்களால் எண்டு அப்ப தெரியாட்டியும் எங்கட அண்ணாவோட தானே. இன்றைய நாள் போல் நாளை பொழுது இப்படி இருக்குமா நாம் எல்லாம் இப்படி சேர்ந்து இருப்போமா தெரியாது. பிரிந்த பின் அல்லது இறந்த பின் சிலருக்கு சில நினைவுகளாவது மிஞ்சும் என்று தோன்றி இருக்கலாம் ஏன் என்றால் அப்போது பொம்பர் குண்டு போடும் காலம். சாவை கையேடு கொண்டு எந்தக் கணமும் வீதியில் விழுந்து சிதறத் தயாராக அலைந்த நாட்கள்.
கொடுத்ததை அவன் பயபக்தியா வாங்கிக் கொண்டதை . வீட்டில் இரவு படுத்திருகேக்க நினைக்க கொஞ்சம் கவலையா நிறைய சிரிப்பா இருந்தது அவளுக்கு . தனியா சிரித்தால் அம்மா என்ன வானர வேலை செய்தனி எண்டு சாமத்திலே தொடங்குவா அதால தலையணைக்குள் முகத்தை குப்புற வைச்சு சிரிக்கிறது தெரியாமல் மூச்சடக்கி சிரித்து அப்படியே ஓய்ந்து நித்திரையாகி, அடுத்தநாள் அகாலமாய் எழும்பும் போதே அவன் அதை பூ சி இருப்பானோ பூசி ஊற விட்டிருந்தால் இப்ப முகம் என்ன நிறத்தில இருக்கும். அருமை ஆசையாய் அவன் வளர்த்து வைச்சிருக்கிற கொஞ்சக் காலத்துக்கு முன்னால முளைத்த மீசையும் இந்த முறை புதிசா வைச்சுக் கொண்டு வந்திருக்கிற தாடியும் கூட நிறம் மாறி செம்மறியாட்டின் செம்பட்டைத தாடி போல இருக்குமோ நினைக்க நினைக்க சிரிப்பாய் கொஞ்சம் பாவமாய் இருந்தது.
அவன் பூசி நிறம் மாறி இருந்தால் விடிய எழும்பினதில இருந்து கொலை வெறியில திரிவான் கையில அம்பிட்டால் சட்னி தான் ஆனாலும் அந்தத்க் கோலத்தில அவனை பார்க்க ஆசையாகத்தான் இருந்தது. ஒரு மாதிரி ஆசையை அடக்கிக்கொண்டு மத்தியான சாப்பாடு முடியும் வரை காத்திருந்து கொஞ்சம் வெயில் சரிய
"அம்மா மீரா வீட்டை போகட்டா "
"நேற்று தானே போனனீங்கள் இண்டைக்கு எதுக்கு ?"
"அப்ப பிரியா வீட்டை போட்டு வரட்டா "
"மீரா வீட்டை போகேக்க பிரியாவும் வந்திருப்பாள் தானே வீட்டில் இருக்க போரடிக்குதா? புத்தகம் ஏதாவது தேடி எடுத்துத் தரவா வாசிக்க "
அம்மா நிலைமை புரியாமல் வழமை போல கதைச்சா. இனி மறைச்சு பிரயோசனம் இல்லை.
"ஹிரஞ்சன் அண்ணா வந்திருக்கிறான் அது தான் மீராட்ட போட்டு அவனையும் பார்த்திட்டு வர. "
அம்மா ஒரு மாதிரி ஏதாவது வில்லங்கம் செய்யப் போறியா எண்ட மாதிரி பார்த்தா. பிறகு "அவன் நல்ல பிள்ளை உன்னில வைச்சிருக்கிற பாசத்தை வைச்சு நெடுக அவனோட விளையாடாதே " என்று வழமையான அட்வைஸ் உம் தர நல்ல பிள்ளை மாதிரி
"ஓம் அது தான் அந்த நல்ல பிள்ளையை பார்க்க போகட்டா "என்று அம்மாவைக் கட்டிப்பிடிச்சு கன்னத்தில ஒரு முத்தமும் வைக்க புன்னகைச்சா. பிறகு எனக்கு இண்டைக்கு நேரமில்லை அவனுக்கு பிடிச்ச மோதகம் அவிச்சுக் கொண்டு நான் நாளைக்கு வாறன் எண்டு பெரியம்மாவுக்கு சொல்லு என்றா.
பெரியம்மா என்பது அம்மாவின் நண்பி. அவனின் அம்மா. இரு குடும்பங்களும் கொழும்பில் வாழ்ந்த காலத்தில் உடன்பிறப்பிலும் நெருக்கமாக இருந்தவர்கள். " ஓம்" என்று நல்ல பிள்ளை மாதிரி தலையாட்டிக்கொண்டு பாதித் தூரம் போகவே பயத்தில கைகால் நடுங்கினது. அவளுக்கு பிடிச்சானோ செத்தன் இண்டைக்கு எண்டு நினைச்சுக் கொண்டு நேரா அவன் வீட்டுப் பக்கம் போகாமல் ஒரு மாதிரி அவன் கண்ணில் படாமல் மறைஞ்சு மீரா வீடு வரைக்கும் போ ய் மெதுவா மீராவிட்டை விசாரிக்கலாம் எண்டு நினைச்சு உள்ளே போக , மீரா அவளைக் கண்டதுமே வழமை மாதிரி கெக்கே பிக்கே எண்டு விழுந்து விழுந்து சிரிக்கத்தொடங்க, பக்கத்து மதிலுக்கால பெரியம்மா கண்டு போட்டு பெரிய வெடிச் சிரிப்பும் அதை விட பெரிய குரலில்
"ஓடு கொண்ணை கண்டான் எண்டால் கொல்லப்போறான்" எண்டு சிரிக்க, கோட்டை முன்வாசல் கதவை அடிச்சுத் திறந்த மாதிரி அந்தப் பாவி பாஞ்சு கொண்டு ஓடி வந்த நிலையிலும் உயிரை கையில் பிடிச்சுக் கொண்டு அவள் ஓடத் தொடங்க முன் நல்ல கவனமா தான் அவனைப் பார்த்தாள் . மருதோண்டி நல்ல தாராளமா முகத்தில மீசை தாடியில எல்லாம் சாயம் கக்கி எதோ அறிந்திராத உலகத்தில் இருந்து வந்த வித்தியாசமான பிராணி போல நல்ல விறுத்தமா இருந்தான்.
காலையில் இருந்து வெளியே வராமல் வெட்கப்பட்டு சொந்த வீட்டுக்குள் சுயசிறை இருந்தவன் கொலைவெறியில வெளிவாசல் வீடு எல்லாம் விட்டுத் துரத்த வீட்டைச்சுத்தி ஓடி களைத்து வெளியே ஓடினால் தப்பலாம் இந்த மூஞ்சியோட வீதியில இறங்கி துரத்த மாட்டான் என்று நம்பி கேற்றை திறக்க பாவி அவதானமாக முதலே பூட்டுப் போட்டு வைச்சிருந்ததால கையை ஊன்றி பாஞ்சு ஏறி மதிலால ரோட்டில குதிக்க, பிரியா லூஸ் காத்திருந்த மாதிரி கங்கா அக்காவை கூட்டிக் கொண்டு வந்து நிண்டுது. சேர்ச்சில காதலைச் சொல்ல போட்டுவைத்த திட்டத்தின் படி.
உயிர் பயத்தில் ஓடிக்கொண்டிருக்கும் போதும் கங்கா அக்காவைக் கண்டதும் இவன் என்ன செய்யிறான் என்று நின்று பார்க்க உயிரையும் தாண்டிய ஆவல் வந்தது அவளுக்கு.
அவ வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு வேற எங்கேயோ பார்த்துக் கொண்டு.
"சேர்ச் ஒண்டும் லவ்வேர்ஸ் பார்க் கிடையாது நீங்க அங்க வைச்சு சொல்ல நினைச்சதை உங்கட அருமை தங்கச்சி நீங்க வர முன்னமே என்னோட கதைச்சு சம்மதமும் வாங்கி வீட்டுக்கும் சொல்லிப் போட்டாள். இப்ப புதிசா எதை என்னட்டை சொல்லப்போறீங்க "
என்று சொன்னபோது, இதென்ன வில்லங்கம் லவ் என்றால் ரொமான்ஸ் இருக்கும் அதை கண்ணிலேயே வழிய விட்டு உருகிக் கொண்டு நிப்பினம் என்று பல திரைப்படங்கள், பலப்பல காதல் நவீனங்கள் எல்லாத்தின் மூலமும் கற்று வைச்சிருந்த பிம்பத்தை உடைச்சுக் கொண்டு அவ சொன்ன அடுத்த வார்த்தையில தான் அவனுக்கு வெறி தலைகேறி இருக்க வேணும்.
"எனக்கொரு அசமந்த அண்ணா இருக்கிறான் மூண்டு வருசமா காதலை நட்பு என்று ஏமாற்றி உங்களுக்கு கதை விடுறான். நீங்களும் எங்காவது அருமையா அதிசய நெல்லிக்கனி கிடைத்தால் அவருக்கு குடுக்கிற அளவு நட்பு என்று நம்பிக்கொண்டிருக்கிறீங்கள் அந்த எருமை தன்ர காதலை சொல்லப் போறதில்லை . பிறகு நீங்க எங்காவது கலியாணம் கட்டிப் போனப்பிறகு வீட்டுக்குப் பின்னால கோடிக்குள்ள ஒரு கொட்டிலைக் கட்டி அதை தாஜ்மகால் எண்டு சொல்லிக் கொண்டு, தாடி வளர்த்துக் கொண்டு அதில கிடந்தது தான் சாகாமல் எங்கள் எல்லாருடையதும் நிம்மதியை கொல்லப் போகுது . ஒரு மாற்றத்துக்கு நீங்களாவது அந்த மண்ணாங்கட்டிக் காதலை சொல்லி அவன்ர மூஞ்சியில கரியை பூசுங்கோ " எண்டு சொன்னா போல தான் வந்தனான் அதுக்குள்ளே நீங்களே பூசிக்கொண்டு நிக்கிறீங்கள் " என்று சொன்னா
அவள் சொன்னவைகளோடு கூட கடைசியில் சொல்லாதவைகளையும் கங்கா இட்டுக்கட்டிச் சொன்னபோது அவள் அதிர்ந்து போய் பார்க்க
அவன் உச்சந்தலை வரை நெருப்பாகி நிற்க அது விளங்காமல் அல்லது இன்னும் எண்ணையூற்றி எரியவிட்டு வேடிக்கை பார்க்கும் எண்ணத்தில்
"இது தான் தலைவிதி என்றாச்சு அதில தங்கத்தைப் பூசிக் கொண்டு வந்தாலென்ன, தார்ப்பீப்பாக்குள்ள விழுந்து எழும்பி வந்தால் என்ன கட்டி நாசமாகிப் போய் தொலைக்கத்தானே வேணும்"
என்று அவ சேர்த்துச் சொல்ல அவன் நெருப்புப் பிளம்பாகின நேரம் உயிரைக் காக்கிற கடைசி முயற்சியா பிரியாவின்ர கையில கிடந்த சைக்கிளை இழுத்துப் பறிச்சுக் கொண்டு ஏறக் கூட நேரம் இல்லாமல் உருட்டிக் கொண்டு ஓடத் தொடங்க,
"நில்லடி நில்லடி ஓடாதே நில்லு அடிக்கமாட்டேன் நில்லு"
அவன் கத்திக் கொண்டே துரத்தின நேரம், ஒருவேளை அடிக்கமாட்டான் தானோ என ஒரு நப்பாசையில் வீதி எல்லையில் அவள் திரும்பிப் பார்த்த நேரம், பெறுமாதக் கர்ப்பிணியாய் பூட்போர்ட் வரை ஒற்றை விரலில் தொங்கிக்கொண்டு சாதனை செய்த பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு பக்கம் சரிந்து கொண்டு மூச்சுவாங்க வந்த ஓட்டை மினி பஸ் வழமையான தன் மெயின் ரோட் பயணத்தை கோட்டை ஷெல் அடிக்குப் பயந்து அவசரமாக மாற்றிக் கொண்டு அந்த வீதியில் தொண்ணூறு பாகை கீழிறங்கி வளைத்து நாய் லைட் போஸ்ட்டுக்கு காலைத்தூக்கின மாதிரி ஒரு பக்கச் சில்லு ரெண்டையும் கொஞ்சம் மேலே தூக்கிக் கொண்டு திருப்பிய நேரம், கண்மண்தெரியாமல் சைக்கிளோடு ஓடிக்கொண்டு முன்னால் வருவது தெரியாமல் பின்னால் திரும்பி அண்ணனைப் பார்த்த அவள் மீது மோதியது.
மோதிய மற்றும் வளைத்துத் திருப்பிய அதிர்வில் ஓட்டை மினிபஸ் தனக்குள் தாங்கியிருந்த கொஞ்சப்பேரை பூட் போர்ட்டில் இருந்து அவள் மீது அவசரமாக பிரசவிக்க .....
அறிவு தெளிந்து பார்த்தபோது கண்ட கண்ணீரும் பதட்டமுமான முகங்களுக்கு நடுவில் அவன் கங்காவுக்குப் பக்கத்தில் கண்ணீர் வடிய நின்றிருந்தான். அவள் கண்திறந்த போது அனைவரையும் முந்திக்கொண்டு அவசரமாக நெற்றியை வருடி
"என்னை விட்டுப் போயிடாதடி கண்ணம்மா" என்றான்.
தைரியமாக இரு என்பது போல் கங்காவின் கைகள் அவனது கையை ஆதரவாக அழுத்தமாகப்பற்றியிருந்தன.
"உங்கள் கரங்கள் பற்றிப் பந்தத்தில் இணைந்த இன்றைய நாளில், அன்றிருந்தவர்கள் இன்றில்லாத போதும், இடையில் போர் எங்களுக்கு எவ்வளவோ அனுபவங்களை இரத்தத்தால் எழுதி தூரங்களால் நாம் தொலைவாகி விட்ட போதும், உண்மை நேசங்கள் இறக்கும் வரை இறப்பதில்லை என்பதன் அடையாளமாய் இன்னும் நான் இருக்கிறேன். எனக்குள் நீ இருக்கிறாய் "
"என் அன்பான வாழ்த்துக்கள் அண்ணா &அக்கா ."