கடவுளே அவங்களைத் தான் அடிச்சிருப்பாங்களோ . பிடிச்சு இழுத்துக் கொண்டு போயிருப்பாங்களோ. மனம் பதறிக்கொண்டேயிருந்தது. கதவைத்திறந்து வெளியே பார்த்தால் தான் நிம்மதியாகும் எண்டாலும் உள்ளேயிருந்த யாரும் கதவு திறக்கத் தயாராக இருக்கேல்ல . வாயை கையால பொத்திக் கொண்டு முழி வெளியில வாறமாதிரி நிண்டார்கள் . கதவுக் கரையில போய் கதவோட காதை வைச்சு உன்னிப்பாக் கேட்டுக்கொண்டிருக்க, கொஞ்சம் கொஞ்சமா ஆட்கள் நடமாடுறது கேட்டது. மெதுவாக கதவை பலதரம் தட்டிய பிறகு , அங்கிருந்த கொஞ்சம் துணிவான பெண் எவரின் ,எதிர்ப்பையும் காதில் வாங்காமல் கதவைத் திறந்தது நிம்மதியா இருந்தது.
அவங்கள் மூண்டு பேரும் உள்ளே வந்து ஒண்டும் பயமில்லை யாரையோ தேடினம் பயப்படாமல் இருங்கோ என்றாங்கள். சாந்தமான அவர்களில் முகம், நிதானமான குரலும் பண்பான கதையும் அங்கிருந்தவர்களுக்கு அவங்களில் ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பது அவங்கள் அந்த அறையில் எனக்கும் அனுமதி வாங்கிய போதே நான் உணர்ந்து தானிருந்தேன்.
அவங்கள் வெளியே போய் கதவை மூடுறதுக்கிடையில் என்னிடம் கிசுகிசுப்பாக ,
"பக்கத்து அறையை தட்டித் திறந்து உள்ளே போய் தேடினவங்கள். என்ன, யாரை எண்டு தெரியேல்ல. இந்த அறைக்குள்ளும் வந்தாலும் நீ பயப்படாத . இந்த ஆட்களுடன் நில் அவை வெளியே வந்தால் நீயும் வா. தனியா உள்ளுக்குள் நிண்டிடாதே."
"அப்ப நீங்கள் டா"
"உன்னை விட்டிட்டு எங்கேயும் ஓட மாட்டம் . உனக்கது தெரியும் இதில இல்லை எண்டால் பயந்திடாதே. தேடி ஓடித் திரியாதே.. இங்கன தான் அமளி இல்லாத வேறு பக்கத்தில நிப்பம்"
"எனக்குத் தெரியும் "
"என்ன ?"
"என்னை அந்தரத்தில விட்டிட்டு ஓட மாட்டீங்கள் எண்டது."
கதவைச் சாத்தப் போனவன் அந்த நேரத்திலும் முகத்தை ஊடுருவிப் புன்னகைதான் . மற்றவனின் கண் ஒருமுறை சட்டென ஒளிர்ந்தது. கவனம் என்ன பயப்படாதை என்றான் மற்றவன்.
"ஹ்ம் ".
அன்றைய இரவில் மூன்றுக்கு மேற்பட்ட தடவைகள் அலறல்கள் கேட்டன . இரண்டு தடவைகள் வேறு வேறு அறைக் கதவுகள் உடைந்து விடுவது போல தட்டப்பட்டன மனிதர்கள் அதட்டப்பட்டார்கள். . அந்த அதட்டல்களும் தட்டல்களும் இரவுகளில் கதவுகளை உதைத்துத் தட்டும் ,அதட்டும் ஆமிக்காரரை நினைவு படுத்தின. குடும்பத்தில் யாருமற்று தனியாக மாட்டுப் பட்டிருந்ததால் அதிகம் பயம் வந்தது. அந்த இரவு முழுதும் அப்பிடியே தான் கழிஞ்சது.
விடிந்தது .இரவு நடந்த அமளி பற்றிக் கதைக்க விசாரிக்க யாரும் தயாரா இருக்கையில்லை .இந்த இடத்தை விட்டு ஓடினால் போதும் எண்ட பதட்டம் தான் எல்லாருக்கும் இருந்தது
சூரியன்' சுள் ' எண்டு முகத்தில் சுடத் தொடங்கிய பிறகு தான் மறிச்சு வைச்சிருந்த ஒவ்வொரு பஸ் ஆக வெளிக்கிட அனுமதி குடுத்தாங்கள். பல் தீட்ட, முகம் கழுவ வேறு எது செய்யவும் எவரும் தயாரா இல்லை. அந்த இடத்திலிருந்து ஓடினால் போதும் எண்டமாதிரி எல்லாரும் அவரவர் பஸ் இற்குள் ஏறிக் கொண்டார்கள்.
அவங்களுக்கு அதற்கு மேல் என்னை தனியாக அனுப்பும் துணிவு இருக்கயில்லை. நானும் அவங்களும் வந்தது வேற வேற வாகனங்களாக இருந்தபடியால், இவளும் இதில வர அனுமதிக்கச் சொல்லி தங்கட ரைவரை கனதரம் கெஞ்சிப் பார்த்தாங்கள் . அவருக்கும் கூட்டிக் கொண்டு போக மனமிருந்ததை முகம் சொல்லினது . ஆனாலும் இப்பிடி வளியில தெருவில என்ன நடக்குதோ தெரியாது இங்க பேர் குறிச்சு வைச்சு அனுப்பிறாங்களோ என்ன கோதாரி விழுத்துவாங்களோ தெரியாது. பிறகு இந்தப் பிள்ளை ஆர் புதிசா எண்டு தொடங்கினால் எல்லாருக்கும் ஆபத்து ராசா எண்டார்.
வழியில்லாமல் கொண்டு போய் நான் வந்த வாகனத்தில் ஏத்தி , இனி ஒண்டும் நடக்காது என்று ஆயிரம் தரம் சொல்லி. பின்னாலோ முன்னாலோ தான் நாங்கள் வாற பஸ் வரும். உனக்குக் கிட்ட தான் நிப்பம் எண்டு எனக்கு நம்பிக்கை குடுக்கிறதா தங்களைத் தேற்றிக் கொண்டு பாத்துக் கொள்ளுங்கோ அண்ணை எண்டு ரைவரின் காலில் விழாத குறையா கையை பிடிச்சு கெஞ்சி ஒருமாதிரி ஏத்திப் போட்டு அவங்கள் போக , வாகனம் வெளிக்கிட்டு கொஞ்ச நேரத்தில பாத்தா, வரும் போது நிறைஞ்சிருந்த சீட்களில் மூன்றில் ஆளில்லாமல் இருந்தது.
இரவு கேட்ட அலறலுக்குரிய குரல்கள் இவர்களாக இருக்கலாம். இப்பிடி வெறுமையாகிப் போன இருக்கைகள் முந்திய பிந்திய வாகனங்களிலும் இருக்கலாம் . அழுகை வந்தது. முடிவே இல்லையா? முடியவே முடியாதா.?
களைப்பு மனப் பதட்டம் நித்திரையில்லாதது எல்லாம் சேர்த்து தானாகவே நித்திரை வந்தது.
ஆழ்ந்த நித்திரையில் இருந்த போது ,இருந்தாப் போலை துவக்கு முனையை பின் தலையில் வைச்சு அழுத்தின மாதிரி இருந்தது அந்தச் சத்தம். இடைவிடாத அந்தக் ஹார்ன் சத்தம் . துடிச்சுப் பதை ச்சு எழும்ப, என்னைவிட துடிச்சுப் பதைபதைச்சுக் கொண்டிருந்தது பஸ் . எல்லாருக்கும் தெரிஞ்சாலும் எல்லாரும் அடுத்தவைக்குச் சொல்லுறது போல ஆமிக்காரன் வாகனம் வருகுது எண்டார்கள். ஜன்னல் சீலையை விலத்திப் பாக்க கட்டிடமே இல்லாத காட்டுப் பாதையில் போய்க்கொண்டிருந்தோம். வந்ததும் ஒரு வாகனமில்லை வாகனங்கள். விசர் பிடிச்ச மாதிரி ஹாரன் அடிச்சுக் கொண்டு பேய் பிடிச்ச மாதிரி சுட்டுக் கொண்டு, வெளியால தலையை நீட்டி வெறி பிடிச்ச மாதிரி கோபமா ஏதோ பேசிக்கொண்டு ஒருவாகனம் கடக்க அடுத்தவாகனம் இவ்வளவத்தோடும் கூட சுடுவித்தையும் காட்டியது.
அவங்களின்ட வாகனத்தை கண்டதும் , அந்தக் கிரவல் ரோட்டை விட்டு இறங்கி பத்தையோட பத்தையா ஓடின எங்கட வாகனம்,ஆமிக்காரன் சுடத் தொடங்கினதும் ரயரில் குந்உ பட்டு பட்டெண்டு குலுக்கிப் போட்டு கோணல்மாணலா அசைவற்றுப் போச்சு. ஒரு சிலருக்கு கையில் தோள் மூட்டில் இரத்தம் வந்தது அடுத்த வாகனங்கள் வரக்குமுன்னம் ஓடித்தப்பிப் போட வேணும் ஓடுங்கோ எண்டு சொல்லிக் கொண்டு பாதிச் சனம் ஓட , என்ன செய்யிறதெண்டு தெரிமாமல் எமளிச்சுக்கொண்டு காட்டுக்கை இறங்கி மீதிச் சனம் ஓட, கண்டபாட்டுக்கு நானும் ஓடிப்போய் நடுக்காட்டுக்கை நிண்டு பாத்தால் எங்க நிக்கிறன் எண்டும் தெரியயில்லை. இனி என்ன செய்யிறது எண்டும் தெரியயில்லை.
அவங்கள் நிண்டால் பயமே இல்லை அவங்கள் இல்லாமல் இங்கு யாரை நம்புவது . எண்டு நினைச்ச நேரத்தில தான் அவங்கள் வந்த பஸ் இற்கும் இப்பிடி ஏதாவது ஆகியிருக்குமோ எண்ட எண்ணமும் அவங்களுக்கு ஏதாவது நடந்திருக்குமோ எண்ட பயமும் வந்தது. வீதிக்குத் தெரியாத தூரத்தில ஒரு பாலை மரத்தில சாஞ்சு கொண்டு சுத்திப் பாக்க, கூட வந்த பலரும் பத்தைகளுக்குள் பதுங்கியிருக்கிறது தெரிஞ்சது.
பத்தைக்குள் மறையிறதும் பிறகு எழும்பி அவங்கள் எங்காவது தெரியிறாங்களா எண்டு பாக்கிறதும், இங்கு சூடு பட்டால் யாருக்கும் தெரியாமல் கிடந்து அழுகிப் போவன். அம்மா தேடி அலைஞ்சு கொண்டே ஒருநாள் செத்துப் போவா, விண்ணானம் விடுப்புக்கெண்டு அலையிற கூட்டம் கொழும்பில ஆரோ சிங்களப் பெடியனோட ஓடிட்டுதாம் எண்டு என்ற கதைக்கு முடிவுரை எழுதுவினம் எண்டது தவிர வேற எந்த நினைவும் அப்போது இல்லை.
ஆமி வாகனத்தின்ர சத்தம் மட்டும் அடிக்கடி கேட்டது.
கனதரம் எட்டியெட்டிப் பார்த்தப் பிறகு அவங்கள் மூவரில் ஒருவனின் தலை மாதிரித் தெரிஞ்சது. தூரத்தில. அவங்கள் எண்டால் ஒரு தலை தெரியாது சேர்ந்து தான் ஓடி வருவாங்கள் எண்டு நினைக்கும் போதே மற்றவங்களின்ர தலையும் ஒவ்வொண்டா தெரியத் துவங்கிச்சு. ஆமி கீமி எல்லாப் பயமும் இல்லாமல் போச்சு
............... எண்டு ஒருத்தன்ர பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு கையை உயர்த்தி ஆட்ட , கண்டு கொண்டு கிட்ட ஓடி வந்தாங்கள்
"நல்லவேளை நீ எங்கே எண்டு பயந்தே போனன்."X
"எருமையை கண்டப்பிறகு தான் நிம்மதி"Y
"உனக்கு ஏதும் நடந்திருந்தால் பிள்ளையை இடைநடுவில துலைச்சுப் போட்டியளே எண்டு கொண்டிருக்குங்கள் வீட்டில"Z
எண்டு அவங்கள் சொன்ன போது
"எண்டாலும் எருமையளுக்கு என்னில அக்கறை தான் என்னடா "
"இஞ்ச பார் தயவு செய்து உன்ர திருவாயை மூடு நேரங்காலம் இல்லாமல் பகிடி விடுறன் பணியாரம் சுடுறன் எண்டு வெளிக்கிட்டாய் , ஆமி கொல்லுறானோ இல்லையோ நான் கொண்டு போடுவன்"Y
"கொண்டு போட்டு போய் பார் கொம்மா வாசலிலேயே அடிச்சுக் கொல்லுவா ".
"ஐயோ கடவுளே நேரகாலம் தெரியாமல் எருமை ரெண்டும் இடிபடுகுது பார் "X
"இப்ப உனக்கு என்ன தெரிய வேணும்"Z
"நாங்கள் இப்ப எங்க நிக்கிறம் எண்டே தெரியேல்ல "Y
"அட மொக்கா இது தெரியாதே உனக்கு"Z
"உனக்குத் தெரியுமோ"X
"தெரியாமல் பின்ன"Z
எனக்குக் குழப்பமாக இருந்தது. அவங்கள் ஒரே தலைமையின் பராமரிப்பில் வளர்ந்த , எந்த நேரத்திலும் எங்கும் பிரிந்திருக்காமல் கவனிக்கப் பட்ட பிள்ளைகள். உடன் பிறந்த அண்ணன் தம்பி கூட அவங்கள் போல நெருக்கமாக இருக்க முடியாது என எண்ணப்படும் பிள்ளைகள். இதில் ஒருவனுக்குத் தெரியாத இடம் மற்றவனுக்கு எப்பிடித் தெரியக் கூடும் எண்டு நான் பாத்துக் கொண்டிருந்தேன் .
"இது தெரியாதோடா விசரா இந்த இடத்தைத் தான் சொல்லுறது காடு எண்டு"Z
.
அடக்கமாட்டாமல் கடகடவென்று சிரிக்கத் தொடங்கினேன்.
"அவர் பகிடிவிடுராராம். இவ அவரின்ர பகிடிய ரசிச்சு சிரிக்கிறாவாம். வாயை மூடு சனியன் ஆமி வரப் போறான் ."Y
"டேய் அங்கின கல்லுக் கிடந்தால் தூக்கி உந்த எருமையிண்ட தலையில போடடா. நேற்று ஒரு கொடுமை கடந்தாச்சு அதாவது ஊர்மனைக்குள்ள. இண்டைக்கு காட்டுக்குள்ள. எங்க ஆமி நிக்கிறான் எதால போறது எப்பிடிப் போறது ஒண்டும் தெரியேல்ல. இருட்டிறதுக்குள்ள இங்கயிருந்து எப்பிடியும் போகணும். எங்களுக்கு என்ன நடந்தாலும் பிரச்சனையில்லை . இவளில துரும்பும் பட்டிடக் கூடாது "X
என்று என்னைப் பார்த்துக் கொண்டு சொன்ன முகம் கனிஞ்சிருந்தது.
"ஏதோ உனக்கு மட்டும் தான் அக்கறை போல"Z
அதுக்குள்ள திரும்பவும் வெடிச்சத்தம் கேட்டது.
"பத்தைக்கு கல்லெறியப் பயந்தோடுற முயல் மாதிரி சனம் வெளிக்கிட்டு ஓடுது பார் ."
"பழமொழி கிழமொழி எண்டு உன்ர மண்ணாங்கட்டி தமிழறிவை காட்டினியோ கொலை விழும் இப்ப"Y
. முழியன் தன் பெரிய கண்ணை இன்னும் உருட்டி முளிஞ்சான்
நான் வாயை மூடிக் கொண்டேன் . நாங்களும் தாறுமாறா ஓடி ரயில் பாதைக்கு அருகா ஓடிக்கொண்டிருந்தம். ரயில்பாதை எங்காவது ஒரு இடத்தில் வாகனப் போக்குவரத்துள்ள வீதியைத் தொடும் எண்ட நம்பிக்கையோடு.
எங்களோடு கூடவே மழையும்ஓ டிவந்து நனைச்சுக் கொண்டிருந்தது. handbag தவிர கையில் எதுவுமில்லை கொஞ்சம் கொஞ்சமா எங்களோட ஓடின மனிதர்களை நாங்கள் துலைத்துக் கொண்டிருந்தோம். வெயில் மங்கத் தொடங்கியிருந்தது.
பசி, தண்ணிவிடாய் கொல்லத் தொடங்கினது.
"போதும் என்னால முடியல்ல டா."
"இன்னும் கொஞ்சம் ஓடிப் பாப்பம் " Y
"ஓடி நாங்கள் ரோட்டில ஏறிற இடத்தில ஆமி நிண்டால் "
"ஏன் அப்பிடி நினைக்கிறாய் நிக்கமாட்டான் "X
"அவள் சொல்லுறது போல நிண்டால் என்னடா செய்யிறது"Z
"நீ வேற வாயை வைச்சுக் கொண்டு சும்மா இரு பாப்பம்"Y
"இருமுறாள் டா."X
"தொடர்ந்து மழை நனைஞ்சால் வேற என்ன செய்யும் போதாதுக்கு வழியில கிடந்த கிழாத்தி , காரை, சூரை எண்டு ஒரு காயும் மிச்சமில்லை எல்லாம் உருவி வாயில போடக்கையே சொன்னனான் கயர் இருமும் எண்டு. கேட்டாத் தானே "Y
"நேற்று வெளிக்கிடேக்க சாப்பிட்ட சாப்பாடு இப்பவரைக்கும் ஒண்டுமில்லை பசிச்சால் அவள் வேற என்ன செய்யிறது"X
.
"நீ அவளுக்கு வக்காலத்து வாங்கிறதே தொழிலா கொண்டிரு."Z
"எருமை இந்த இடத்திலும் மழைக்கு அண்ணாந்து கொண்டு நிக்கிறாள் பார். "Y
"அவள் வழமை மாதிரி மழையில ஆசைப் பட்டு அண்ணாரயில்லை"Z
மழைத் துளிகள் முகத்திலும் சில துளிகள் வாய்க்குள்ளும் விழுந்தது கொஞ்சம் இருமல் குறைத்தன.
அவங்கள் கைகளுக்குள் மழையை ஏந்திக் கொண்டிருந்தாங்கள் .
மூண்டு முறடு தண்ணி வாய்க்குள் போயிருக்கும் கொஞ்சம் உற்சாகம் வந்தது.
"என்னடி செய்யுது மயக்கம் வாறமாதிரி ஏதுமிருக்கா."Z
அவர்கள் முகங்களில் கவலையும் பதட்டமும் அப்பிக் கிடந்தது.
"ம் நான் ஒகே போவம். "
"நடப்பியா" X
அவங்கள் என்னால் பதறிக்கொண்டிருப்பது கவலையாக இருந்தது. அவர்களைச் சிரிக்கவைப்பது அப்படியொன்றும் சிரமமில்லை எனக்கு
"எனக்குப் பாடவேணும் போல இருக்குடா"
அவன் கொலைவெறியுடன் பார்த்தான்
"என்ன பாடவேணும் உனக்கு "X
"ஒரு சின்னப் பறவை அன்னையைத் தேடி வானில் பறக்கிறது."
"எரும சின்னப் பறவை எண்டு பாடாத. பத்தொன்பது வயதுக் கிழட்டுப் பறவை எண்டு பாடு"Y
"சரி நீ சொன்னமாதிரி வானத்துக்குக் கேக்கப் பாடட்டே"
"பாடு ஆமிக்காரன் வந்து குதறிப் போட்டுப் போவான்"Z
சிரித்தோம்
"சரி ஓடாமல் நடப்பம் என்ன கனநேரமா துவக்குச் சத்தம் எதுவும் கேக்கயில்லை."Z
"கேக்காத தூரத்தில நிக்கிறமோ தெரியா"X
.
"பசிக்கேல்லையாடா உங்களுக்கு"
"பசிக்காமல் இருக்கோ பேசாமல் வா"Y
"டேய் நாங்கள் எங்க நிக்கிறம் எண்டு எனக்குத் தெரிஞ்சு போச்செடா"
.
"சேட்டை விடாத களைப்பா இருக்கு. பேசிப் போடுவன்"Y
"அங்க பார் ரயில் பாதைக்கு அந்தப் பக்கமா தூரமா தெரியுது பார் அது தான் கெமிக்கல் கொப்பிறேசன் இருந்த இடம். இனி எனக்கு இடம் தெரியும் எந்தப் பக்கத்தால திரும்பினால் ரோட்டுக்கு உடன போகலாம் எண்டும் தெரியும்."
"ஆமி வந்தால். ஆரெண்டு கேட்டால் ...."Z
"அவங்களின்ர கண்ணில படாமல் எதால எல்லாம் போகலாம் எண்டு எனக்குத் தெரியும். நான் குழந்தையில இருந்து தேடிவந்து காடலைஞ்ச இடமெடா இது "
"இனி இந்தப்பக்கமா நடக்கக் கூடாது வாங்கோ குறுக்கால நடந்து ரோட்டைக் கடந்து மற்றப்பக்கமா நடப்பம்."Y
"பிறகு இதிலையிருந்து வேற வில்லங்கம் தொடங்கினாலும் தொடங்கும்"X
குறுக்க நடந்து ரோட்டைக் கடந்து கனதூரம் நடந்து ரோட்டுக்கு ஏற ஒன்றிரண்டு மினிவான் கடந்தது. காட்டுப் பாதையில நிண்டு கைகாட்டினதாலேயோ என்னவோ ரெண்டுக்கும் எங்களை ஏத்த மனமில்லை.
கன நேரத்துக்குப் பிறகு நல்ல சலங்கை கட்டின வண்டில் காளை மாதிரி வந்தார் பாருங்கோ நம்மடை ஆள் .......
உயிரைக் கையில பிடிச்சுக் கொண்டு நாளைக்கு அவரில பயணிச்சு முடிப்பம் ..........