Sunday, February 28, 2021

தட்டிவான் காதல் 3

 கடவுளே  அவங்களைத் தான் அடிச்சிருப்பாங்களோ . பிடிச்சு  இழுத்துக் கொண்டு போயிருப்பாங்களோ. மனம் பதறிக்கொண்டேயிருந்தது. கதவைத்திறந்து வெளியே பார்த்தால் தான் நிம்மதியாகும் எண்டாலும் உள்ளேயிருந்த யாரும் கதவு திறக்கத் தயாராக இருக்கேல்ல . வாயை கையால பொத்திக் கொண்டு முழி வெளியில வாறமாதிரி நிண்டார்கள் . கதவுக் கரையில போய் கதவோட காதை வைச்சு உன்னிப்பாக் கேட்டுக்கொண்டிருக்க,   கொஞ்சம் கொஞ்சமா ஆட்கள் நடமாடுறது  கேட்டது. மெதுவாக கதவை பலதரம் தட்டிய பிறகு , அங்கிருந்த கொஞ்சம் துணிவான பெண்  எவரின் ,எதிர்ப்பையும் காதில் வாங்காமல் கதவைத் திறந்தது  நிம்மதியா  இருந்தது. 


அவங்கள்  மூண்டு பேரும் உள்ளே வந்து ஒண்டும் பயமில்லை  யாரையோ தேடினம்  பயப்படாமல் இருங்கோ  என்றாங்கள்.   சாந்தமான அவர்களில் முகம், நிதானமான  குரலும் பண்பான கதையும் அங்கிருந்தவர்களுக்கு அவங்களில் ஈர்ப்பை  ஏற்படுத்தியிருக்கும் என்பது அவங்கள்  அந்த அறையில் எனக்கும்  அனுமதி வாங்கிய போதே நான் உணர்ந்து தானிருந்தேன்.  


அவங்கள் வெளியே போய் கதவை மூடுறதுக்கிடையில் என்னிடம் கிசுகிசுப்பாக  ,

 "பக்கத்து  அறையை தட்டித் திறந்து உள்ளே  போய் தேடினவங்கள். என்ன, யாரை  எண்டு தெரியேல்ல. இந்த அறைக்குள்ளும் வந்தாலும்  நீ  பயப்படாத . இந்த ஆட்களுடன் நில்  அவை வெளியே வந்தால்  நீயும் வா.  தனியா  உள்ளுக்குள்  நிண்டிடாதே."

"அப்ப  நீங்கள்  டா"  

"உன்னை விட்டிட்டு  எங்கேயும்  ஓட மாட்டம் . உனக்கது  தெரியும் இதில இல்லை எண்டால்  பயந்திடாதே. தேடி ஓடித் திரியாதே.. இங்கன தான் அமளி இல்லாத  வேறு பக்கத்தில நிப்பம்" 

"எனக்குத் தெரியும் "

"என்ன ?"

"என்னை அந்தரத்தில  விட்டிட்டு  ஓட மாட்டீங்கள்  எண்டது." 

கதவைச் சாத்தப் போனவன்  அந்த நேரத்திலும்  முகத்தை  ஊடுருவிப்  புன்னகைதான் . மற்றவனின்  கண் ஒருமுறை சட்டென ஒளிர்ந்தது.  கவனம் என்ன பயப்படாதை என்றான் மற்றவன்.

 

"ஹ்ம் ". 

அன்றைய  இரவில்  மூன்றுக்கு மேற்பட்ட தடவைகள்  அலறல்கள் கேட்டன . இரண்டு தடவைகள் வேறு வேறு அறைக் கதவுகள்  உடைந்து விடுவது போல தட்டப்பட்டன  மனிதர்கள் அதட்டப்பட்டார்கள். . அந்த அதட்டல்களும் தட்டல்களும்  இரவுகளில் கதவுகளை உதைத்துத் தட்டும் ,அதட்டும் ஆமிக்காரரை  நினைவு படுத்தின.  குடும்பத்தில் யாருமற்று தனியாக மாட்டுப் பட்டிருந்ததால்  அதிகம் பயம் வந்தது. அந்த இரவு முழுதும் அப்பிடியே தான் கழிஞ்சது. 


விடிந்தது .இரவு நடந்த அமளி பற்றிக் கதைக்க விசாரிக்க  யாரும் தயாரா  இருக்கையில்லை .இந்த இடத்தை விட்டு ஓடினால் போதும் எண்ட பதட்டம் தான் எல்லாருக்கும் இருந்தது   


சூரியன்' சுள் ' எண்டு முகத்தில் சுடத் தொடங்கிய பிறகு தான்  மறிச்சு  வைச்சிருந்த ஒவ்வொரு பஸ் ஆக  வெளிக்கிட  அனுமதி குடுத்தாங்கள்.  பல் தீட்ட, முகம் கழுவ  வேறு எது  செய்யவும்  எவரும்  தயாரா  இல்லை.  அந்த இடத்திலிருந்து ஓடினால் போதும்  எண்டமாதிரி  எல்லாரும் அவரவர்  பஸ் இற்குள் ஏறிக் கொண்டார்கள். 


அவங்களுக்கு  அதற்கு மேல் என்னை தனியாக அனுப்பும் துணிவு இருக்கயில்லை. நானும் அவங்களும் வந்தது  வேற வேற வாகனங்களாக  இருந்தபடியால், இவளும் இதில வர அனுமதிக்கச் சொல்லி தங்கட ரைவரை கனதரம் கெஞ்சிப் பார்த்தாங்கள் .  அவருக்கும் கூட்டிக் கொண்டு போக மனமிருந்ததை  முகம் சொல்லினது .  ஆனாலும் இப்பிடி வளியில தெருவில என்ன நடக்குதோ தெரியாது இங்க  பேர் குறிச்சு வைச்சு  அனுப்பிறாங்களோ  என்ன கோதாரி  விழுத்துவாங்களோ தெரியாது. பிறகு இந்தப் பிள்ளை ஆர்  புதிசா  எண்டு தொடங்கினால்  எல்லாருக்கும்  ஆபத்து  ராசா  எண்டார். 


வழியில்லாமல் கொண்டு போய்  நான் வந்த  வாகனத்தில் ஏத்தி , இனி ஒண்டும் நடக்காது  என்று ஆயிரம் தரம் சொல்லி. பின்னாலோ முன்னாலோ  தான்  நாங்கள் வாற பஸ் வரும். உனக்குக் கிட்ட தான் நிப்பம் எண்டு எனக்கு நம்பிக்கை குடுக்கிறதா  தங்களைத் தேற்றிக் கொண்டு   பாத்துக் கொள்ளுங்கோ  அண்ணை எண்டு  ரைவரின்  காலில்  விழாத குறையா  கையை பிடிச்சு கெஞ்சி  ஒருமாதிரி  ஏத்திப் போட்டு அவங்கள் போக , வாகனம் வெளிக்கிட்டு கொஞ்ச நேரத்தில பாத்தா, வரும் போது  நிறைஞ்சிருந்த சீட்களில்  மூன்றில்  ஆளில்லாமல்  இருந்தது. 


இரவு கேட்ட அலறலுக்குரிய  குரல்கள்  இவர்களாக  இருக்கலாம்.  இப்பிடி  வெறுமையாகிப் போன இருக்கைகள்  முந்திய  பிந்திய  வாகனங்களிலும்  இருக்கலாம் .  அழுகை  வந்தது. முடிவே  இல்லையா? முடியவே முடியாதா.? 


களைப்பு  மனப் பதட்டம்  நித்திரையில்லாதது  எல்லாம் சேர்த்து தானாகவே  நித்திரை வந்தது. 


ஆழ்ந்த  நித்திரையில் இருந்த போது ,இருந்தாப் போலை  துவக்கு முனையை பின் தலையில் வைச்சு அழுத்தின மாதிரி இருந்தது அந்தச் சத்தம்.   இடைவிடாத  அந்தக் ஹார்ன் சத்தம் . துடிச்சுப் பதை ச்சு எழும்ப, என்னைவிட துடிச்சுப் பதைபதைச்சுக் கொண்டிருந்தது பஸ் . எல்லாருக்கும் தெரிஞ்சாலும் எல்லாரும் அடுத்தவைக்குச் சொல்லுறது போல  ஆமிக்காரன் வாகனம் வருகுது  எண்டார்கள்.  ஜன்னல்  சீலையை  விலத்திப் பாக்க  கட்டிடமே இல்லாத காட்டுப் பாதையில் போய்க்கொண்டிருந்தோம். வந்ததும் ஒரு வாகனமில்லை  வாகனங்கள்.  விசர் பிடிச்ச மாதிரி  ஹாரன் அடிச்சுக் கொண்டு பேய்  பிடிச்ச மாதிரி சுட்டுக் கொண்டு, வெளியால  தலையை நீட்டி வெறி பிடிச்ச மாதிரி கோபமா ஏதோ பேசிக்கொண்டு ஒருவாகனம் கடக்க  அடுத்தவாகனம் இவ்வளவத்தோடும் கூட  சுடுவித்தையும் காட்டியது. 


அவங்களின்ட வாகனத்தை கண்டதும் , அந்தக் கிரவல் ரோட்டை விட்டு இறங்கி பத்தையோட பத்தையா  ஓடின  எங்கட வாகனம்,ஆமிக்காரன்  சுடத் தொடங்கினதும் ரயரில் குந்உ பட்டு  பட்டெண்டு  குலுக்கிப் போட்டு  கோணல்மாணலா  அசைவற்றுப் போச்சு.  ஒரு  சிலருக்கு கையில்  தோள் மூட்டில்  இரத்தம் வந்தது  அடுத்த வாகனங்கள்  வரக்குமுன்னம்  ஓடித்தப்பிப் போட வேணும்  ஓடுங்கோ  எண்டு சொல்லிக் கொண்டு  பாதிச் சனம் ஓட , என்ன செய்யிறதெண்டு தெரிமாமல்  எமளிச்சுக்கொண்டு காட்டுக்கை இறங்கி மீதிச் சனம்  ஓட, கண்டபாட்டுக்கு நானும் ஓடிப்போய் நடுக்காட்டுக்கை  நிண்டு பாத்தால்  எங்க நிக்கிறன் எண்டும் தெரியயில்லை. இனி  என்ன செய்யிறது எண்டும்  தெரியயில்லை. 


அவங்கள் நிண்டால் பயமே இல்லை  அவங்கள்  இல்லாமல்  இங்கு யாரை நம்புவது .  எண்டு நினைச்ச  நேரத்தில தான்  அவங்கள்  வந்த பஸ் இற்கும் இப்பிடி ஏதாவது  ஆகியிருக்குமோ  எண்ட எண்ணமும்  அவங்களுக்கு  ஏதாவது  நடந்திருக்குமோ  எண்ட பயமும் வந்தது.  வீதிக்குத் தெரியாத தூரத்தில ஒரு பாலை மரத்தில சாஞ்சு கொண்டு  சுத்திப் பாக்க, கூட  வந்த பலரும் பத்தைகளுக்குள்  பதுங்கியிருக்கிறது தெரிஞ்சது.


பத்தைக்குள் மறையிறதும் பிறகு எழும்பி  அவங்கள் எங்காவது தெரியிறாங்களா  எண்டு பாக்கிறதும், இங்கு  சூடு பட்டால்  யாருக்கும் தெரியாமல்  கிடந்து  அழுகிப் போவன்.  அம்மா  தேடி அலைஞ்சு கொண்டே ஒருநாள் செத்துப் போவா, விண்ணானம் விடுப்புக்கெண்டு அலையிற கூட்டம் கொழும்பில  ஆரோ சிங்களப் பெடியனோட  ஓடிட்டுதாம்  எண்டு என்ற கதைக்கு முடிவுரை  எழுதுவினம்  எண்டது   தவிர  வேற  எந்த நினைவும் அப்போது  இல்லை. 

ஆமி வாகனத்தின்ர சத்தம் மட்டும் அடிக்கடி கேட்டது.

கனதரம்  எட்டியெட்டிப் பார்த்தப் பிறகு   அவங்கள் மூவரில் ஒருவனின்  தலை மாதிரித்  தெரிஞ்சது. தூரத்தில.  அவங்கள்  எண்டால் ஒரு தலை தெரியாது  சேர்ந்து தான் ஓடி வருவாங்கள்  எண்டு நினைக்கும் போதே  மற்றவங்களின்ர தலையும் ஒவ்வொண்டா  தெரியத் துவங்கிச்சு.  ஆமி கீமி  எல்லாப் பயமும்   இல்லாமல்  போச்சு 


...............  எண்டு  ஒருத்தன்ர பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு  கையை உயர்த்தி  ஆட்ட , கண்டு கொண்டு கிட்ட ஓடி வந்தாங்கள்  

"நல்லவேளை  நீ எங்கே  எண்டு  பயந்தே போனன்."X

"எருமையை  கண்டப்பிறகு தான் நிம்மதி"Y 

"உனக்கு ஏதும் நடந்திருந்தால்  பிள்ளையை  இடைநடுவில  துலைச்சுப் போட்டியளே  எண்டு கொண்டிருக்குங்கள் வீட்டில"Z 


எண்டு  அவங்கள்  சொன்ன போது  

"எண்டாலும் எருமையளுக்கு என்னில  அக்கறை  தான் என்னடா "  


"இஞ்ச பார்  தயவு செய்து உன்ர திருவாயை மூடு  நேரங்காலம் இல்லாமல் பகிடி விடுறன்  பணியாரம்  சுடுறன் எண்டு வெளிக்கிட்டாய் , ஆமி கொல்லுறானோ இல்லையோ நான் கொண்டு போடுவன்"Y

  

"கொண்டு போட்டு போய் பார் கொம்மா  வாசலிலேயே  அடிச்சுக் கொல்லுவா ". 


"ஐயோ கடவுளே நேரகாலம் தெரியாமல்  எருமை ரெண்டும்  இடிபடுகுது  பார் "X


"இப்ப உனக்கு என்ன தெரிய வேணும்"Z 


"நாங்கள் இப்ப  எங்க நிக்கிறம் எண்டே  தெரியேல்ல "Y


"அட மொக்கா  இது தெரியாதே  உனக்கு"Z 


"உனக்குத் தெரியுமோ"X  


"தெரியாமல்  பின்ன"Z 


எனக்குக் குழப்பமாக  இருந்தது.  அவங்கள்  ஒரே  தலைமையின் பராமரிப்பில் வளர்ந்த , எந்த நேரத்திலும் எங்கும் பிரிந்திருக்காமல்  கவனிக்கப் பட்ட  பிள்ளைகள்.  உடன் பிறந்த  அண்ணன்  தம்பி கூட  அவங்கள் போல நெருக்கமாக இருக்க முடியாது என எண்ணப்படும் பிள்ளைகள். இதில் ஒருவனுக்குத் தெரியாத இடம் மற்றவனுக்கு  எப்பிடித் தெரியக் கூடும் எண்டு நான் பாத்துக் கொண்டிருந்தேன் .


"இது தெரியாதோடா  விசரா  இந்த இடத்தைத் தான்  சொல்லுறது  காடு எண்டு"Z

 . 

அடக்கமாட்டாமல்  கடகடவென்று சிரிக்கத் தொடங்கினேன்.

 

"அவர் பகிடிவிடுராராம். இவ அவரின்ர பகிடிய ரசிச்சு  சிரிக்கிறாவாம்.  வாயை  மூடு சனியன்  ஆமி வரப் போறான் ."Y

 

"டேய்  அங்கின  கல்லுக் கிடந்தால்  தூக்கி உந்த எருமையிண்ட  தலையில  போடடா. நேற்று  ஒரு கொடுமை  கடந்தாச்சு  அதாவது  ஊர்மனைக்குள்ள.  இண்டைக்கு  காட்டுக்குள்ள.  எங்க ஆமி நிக்கிறான் எதால போறது  எப்பிடிப் போறது  ஒண்டும் தெரியேல்ல.  இருட்டிறதுக்குள்ள இங்கயிருந்து எப்பிடியும் போகணும். எங்களுக்கு  என்ன நடந்தாலும் பிரச்சனையில்லை . இவளில துரும்பும்  பட்டிடக் கூடாது "X

என்று என்னைப் பார்த்துக் கொண்டு சொன்ன  முகம் கனிஞ்சிருந்தது. 


"ஏதோ உனக்கு மட்டும் தான் அக்கறை போல"Z 


அதுக்குள்ள  திரும்பவும் வெடிச்சத்தம்  கேட்டது.

 "பத்தைக்கு கல்லெறியப் பயந்தோடுற முயல் மாதிரி  சனம் வெளிக்கிட்டு  ஓடுது பார் ."

 

"பழமொழி கிழமொழி எண்டு உன்ர  மண்ணாங்கட்டி தமிழறிவை  காட்டினியோ கொலை விழும் இப்ப"Y

. முழியன் தன் பெரிய கண்ணை  இன்னும் உருட்டி முளிஞ்சான்  

நான் வாயை மூடிக் கொண்டேன் .  நாங்களும் தாறுமாறா  ஓடி  ரயில் பாதைக்கு  அருகா  ஓடிக்கொண்டிருந்தம். ரயில்பாதை  எங்காவது  ஒரு இடத்தில் வாகனப் போக்குவரத்துள்ள  வீதியைத் தொடும் எண்ட  நம்பிக்கையோடு.  

எங்களோடு கூடவே  மழையும்ஓ டிவந்து நனைச்சுக் கொண்டிருந்தது.  handbag தவிர  கையில்  எதுவுமில்லை கொஞ்சம் கொஞ்சமா  எங்களோட ஓடின மனிதர்களை நாங்கள் துலைத்துக் கொண்டிருந்தோம்.   வெயில் மங்கத் தொடங்கியிருந்தது. 


பசி, தண்ணிவிடாய் கொல்லத் தொடங்கினது.  

"போதும்  என்னால முடியல்ல  டா."

 

"இன்னும் கொஞ்சம் ஓடிப் பாப்பம் " Y


"ஓடி நாங்கள்  ரோட்டில  ஏறிற  இடத்தில ஆமி நிண்டால் "


"ஏன் அப்பிடி நினைக்கிறாய் நிக்கமாட்டான் "X


"அவள்  சொல்லுறது போல நிண்டால்  என்னடா  செய்யிறது"Z

 

"நீ வேற வாயை வைச்சுக் கொண்டு சும்மா இரு பாப்பம்"Y

 

"இருமுறாள் டா."X

 

"தொடர்ந்து மழை நனைஞ்சால்  வேற என்ன செய்யும்  போதாதுக்கு வழியில கிடந்த  கிழாத்தி , காரை, சூரை எண்டு ஒரு காயும்  மிச்சமில்லை  எல்லாம் உருவி  வாயில போடக்கையே  சொன்னனான்  கயர் இருமும் எண்டு. கேட்டாத் தானே "Y


"நேற்று வெளிக்கிடேக்க  சாப்பிட்ட  சாப்பாடு இப்பவரைக்கும் ஒண்டுமில்லை பசிச்சால்  அவள் வேற என்ன செய்யிறது"X

"நீ அவளுக்கு  வக்காலத்து  வாங்கிறதே  தொழிலா  கொண்டிரு."Z

 

"எருமை இந்த இடத்திலும்  மழைக்கு  அண்ணாந்து கொண்டு நிக்கிறாள்  பார். "Y


"அவள்  வழமை மாதிரி மழையில ஆசைப் பட்டு   அண்ணாரயில்லை"Z


மழைத் துளிகள் முகத்திலும்  சில துளிகள்  வாய்க்குள்ளும் விழுந்தது  கொஞ்சம் இருமல் குறைத்தன. 

 அவங்கள்  கைகளுக்குள்  மழையை   ஏந்திக் கொண்டிருந்தாங்கள் . 

மூண்டு முறடு தண்ணி  வாய்க்குள்  போயிருக்கும் கொஞ்சம் உற்சாகம் வந்தது.


"என்னடி  செய்யுது மயக்கம் வாறமாதிரி  ஏதுமிருக்கா."Z 


அவர்கள் முகங்களில் கவலையும்  பதட்டமும் அப்பிக் கிடந்தது. 

 

"ம்  நான் ஒகே  போவம். "


"நடப்பியா" X


அவங்கள் என்னால்  பதறிக்கொண்டிருப்பது கவலையாக இருந்தது. அவர்களைச் சிரிக்கவைப்பது அப்படியொன்றும்  சிரமமில்லை எனக்கு 


"எனக்குப் பாடவேணும் போல இருக்குடா" 


அவன் கொலைவெறியுடன் பார்த்தான்  


"என்ன பாடவேணும் உனக்கு "X 


"ஒரு சின்னப் பறவை அன்னையைத் தேடி வானில் பறக்கிறது." 


"எரும சின்னப் பறவை  எண்டு பாடாத. பத்தொன்பது வயதுக் கிழட்டுப் பறவை  எண்டு பாடு"Y 


"சரி   நீ சொன்னமாதிரி வானத்துக்குக் கேக்கப் பாடட்டே"


"பாடு  ஆமிக்காரன் வந்து  குதறிப் போட்டுப் போவான்"Z


சிரித்தோம்   


"சரி ஓடாமல்  நடப்பம் என்ன  கனநேரமா துவக்குச் சத்தம் எதுவும் கேக்கயில்லை."Z

 

"கேக்காத தூரத்தில நிக்கிறமோ  தெரியா"X

"பசிக்கேல்லையாடா  உங்களுக்கு"

 

"பசிக்காமல்  இருக்கோ பேசாமல் வா"Y

 

"டேய்  நாங்கள்  எங்க நிக்கிறம் எண்டு  எனக்குத் தெரிஞ்சு  போச்செடா"

.

"சேட்டை விடாத  களைப்பா  இருக்கு. பேசிப் போடுவன்"Y

 

"அங்க பார்  ரயில் பாதைக்கு  அந்தப் பக்கமா  தூரமா  தெரியுது பார்  அது தான் கெமிக்கல் கொப்பிறேசன்  இருந்த  இடம்.  இனி எனக்கு  இடம் தெரியும் எந்தப் பக்கத்தால திரும்பினால்  ரோட்டுக்கு  உடன போகலாம் எண்டும் தெரியும்."

 

"ஆமி  வந்தால்.  ஆரெண்டு  கேட்டால் ...."Z

 

"அவங்களின்ர  கண்ணில படாமல் எதால  எல்லாம் போகலாம் எண்டு எனக்குத் தெரியும். நான் குழந்தையில இருந்து  தேடிவந்து காடலைஞ்ச இடமெடா இது "


"இனி இந்தப்பக்கமா  நடக்கக் கூடாது  வாங்கோ குறுக்கால நடந்து ரோட்டைக் கடந்து மற்றப்பக்கமா நடப்பம்."Y

 

"பிறகு இதிலையிருந்து வேற வில்லங்கம் தொடங்கினாலும் தொடங்கும்"X

 

குறுக்க  நடந்து  ரோட்டைக் கடந்து  கனதூரம் நடந்து ரோட்டுக்கு ஏற  ஒன்றிரண்டு மினிவான்  கடந்தது.  காட்டுப் பாதையில  நிண்டு கைகாட்டினதாலேயோ  என்னவோ  ரெண்டுக்கும் எங்களை ஏத்த மனமில்லை. 

கன நேரத்துக்குப் பிறகு  நல்ல   சலங்கை  கட்டின வண்டில் காளை மாதிரி  வந்தார்  பாருங்கோ  நம்மடை  ஆள் .......


உயிரைக் கையில பிடிச்சுக் கொண்டு நாளைக்கு  அவரில பயணிச்சு  முடிப்பம் .......... 


 

Friday, February 26, 2021

தட்டிவான் part 2

 அதற்குப் பிறகும், அடிக்கடி எங்கும் காணமுடியாத, எப்போதாவது  எங்காவது  தற்செயலாக தட்டிவானைக் காண நேர்கையில் , அதைப் பார்த்து ஏமலாந்திக் கொண்டு நிற்கும் போது இதில ஒருநாள்  ஏறி, காற்றும்  இலை தலைகளும் முகத்தில்  உரச, காட்டு வழியில் நீண்ட தூரம் போகவேண்டும்  என்ற ஆசை எழும். 


பிறகு, வௌவால் கூட்டம் தொங்கும் மவுக்குனி (மஹோகனி) மரத்துக்கு  நடு இரவில் வெடி கொளுத்திப் போட்ட மாதிரி , ஷெல்லுக்கும் , குண்டு, வேட்டுக்கும்   சிதறி ,சிதறியோடி  ஒவ்வொரு முறையும்  ஒவ்வொரு இடங்களில்  வௌவால்  மாதிரித் தொங்கிக் கொண்டிருந்த  காலங்களில்  வாகனப் போக்குவரத்தே  அருகிப் போனது.  உயிரைப் பிடித்து வைத்தல் முக்கியமாகிப் போயிருந்ததில், கலைந்து போன பல ஆசைகளுடன்   தட்டி வான் நினைவும்  காணாமல் போயிருந்தது. 


அன்று அடம் பிடித்து, மேலதிகாரிக்கு முன்னால் சிங்களத்தில் ஒற்றை காலில்  நின்று  லீவு பெற்று  கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்குப் பயணம் செல்லும் பாதி வழி வரை. 


போக்குவரத்து  ஆபத்தும் பதட்டமுமாக இருந்த 

 அந்த நேரத்தில், யார் தடுத்தும் கேளாமல்   அப்படிப் பிடிவாதமாக  யாழ்ப்பாணம் போவதற்கு முக்கியமாக ஒரு காரணம் இருந்தது. "உன் கல்யாணத்துக்கு கட்டாயம்  நான் வருவேன்"    எனறு  என்றோ ஒருநாள்  கொடுத்த வாக்குறுதி ஒன்றை நிறைவேற்றி  என் அன்பை  உறுதி செய்ய வேண்டும்  என்ற தீர்மானம் அன்றைய பயணத்துக்கான  ஒரே காரணமாக  இருந்தது . 


வழமை போலத்தான்  அன்றும் அந்தப் பயணத்தின் ஆரம்பம் இருந்தது. வவுனியா  வரை.  வவுனியாத் தரிப்பிடத்திலிருந்து வெளிக்கிட்டதும்,   அதுவரை  ஜன்னல்  கண்ணாடியூடாக  நகரத்தை  வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த  நான் ஜன்னல் திரையை  இழுத்து  மூடி விட்டு  சீற்றை பின்பக்கமாகச் சரித்து, கையில் கிடந்த புத்தகத்தை விட்ட இடத்திலிருந்து  வாசிக்கத் தொடங்கினேன்.  


ஒரு அத்தியாயம் கூட முடிந்திராது  வழமைக்கு  மாறாக வேறோர்  இடத்தில்  பஸ் நிறுத்தப் பட்டது.  மெதுவாக  எழுந்த சலசலப்பு  நேரம் போகப் போக  அமளிப்பட்டது. அந்த இடத்தில்  இராணுவ முகாம்  இல்லை  என்பது  எனக்கு முதலே  தெரிந்திருந்ததால்  பதட்டம் ஏதும் எழவில்லை.  ஆனாலும் குழப்பமாக இருந்தது. 


"எதுக்காம் நிப்பாட்டினவை"  என்றேன்  

எழுந்து  நின்று வெளியே  எட்டிப்பார்த்த பலரில்  ஒருவரிடம்.  


"செக் பண்ணப் போகீனமாம்.  இறங்கக் கிறங்க விடாமல்  வாசலை  அடிச்சுக் கொண்டு நிக்கினம்"  என்றார்.  ஆமிக் காம்போ செக் பொயின்ரோ இங்கன இல்லையே  என்று வாய்வரை  வந்த வார்த்தையை  அடக்கிக் கொண்டு  புத்தகத்தில்  கண்ணையும் என்னைச் சுற்றி காதையும் கொடுத்துக் கொண்டிருந்தேன்.  நேரம் மணித்தியாலங்களாகக் கடந்தது. 


இருந்தாற்போல் பொதுபொதுவென்று  ஒரு கூட்டம்  உள்ளே  ஏறியது  அவர்கள் ராணுவ உடை  அணியாதவர்களாக  இருந்தார்கள்.  இலங்கைத்தமிழில்  கதைத்தார்கள்  எம்முடையவர்கள் என்று உணரமுடியாத  அந்நியமும்  அதட்டலும் அவர்கள்  குரலில்  இருந்தது.  


ஒவ்வொரு  சீற்றுக்கும்  அருகில் வந்து ஆமிக்காரன் மாதிரி  முகத்துக்கு ரோச்  அடித்து  ஐடன்ரிக் காட்டை வாங்கி  முகத்தை  கூர்ந்து கூர்ந்து  பார்த்தார்கள். 

பார்த்து முடிய இறங்கிப் போய்  யாரும் வாகனத்தை விட்டுக் கீழே இறங்கக் கூடாது  என சத்தமாகக்  கத்தினார்கள்.  


ஆமிக்காரனுக்கு  மட்டுமல்ல  ஆயுதம் தூக்கின  எல்லாருக்கும் அடங்கி ஒடுங்கி வாழ்வதற்கு  பேசாமல் செத்துப் போகலாம் என  அடிக்கடி தோன்றும் நினைப்பு 

அப்போதும்  வந்தது. எப்போது  போக விடுவார்கள் என்பது தெரியாமல்  கோவில் வாசலில்  வரத்துக்குத் தவமிருக்கும் பக்தனைப் போல காத்துக் கிடந்தது  பஸ் . அதற்குள் நாங்கள்  தவமிருந்தோம்.


மணித்தியாலங்கள்  கரைந்தன.  இருட்டுவதற்குள்  கிளிநொச்சி  கடந்து விடலாம் என்று  கணிப்பிட்டுப் புறப்பட்ட தனிப்பயணம், இருட்டத் தொடங்கிய போது  பயம் தந்தது. 


எழுந்து போய் ரைவரிடம் "எப்ப அண்ணா  வெளிக்கிடுவியள்"   என்றேன். அவர் கண்களில்  கலவரத்துடன் வெளியில்  பார்த்தார்.   கூட்டமாக  வாகனத்தின் வாசலடியில் நின்றவர்களில் ஒருவரோ சிலரோ  திரும்பிப் பார்த்தார்கள்.  


"ஏன்" என்றார்கள். 

அந்த அதட்டல்  தொனி சுர் என்றது   

ஆயுதம் கையில்  இருக்கும்  மிதப்பு  அநேகரின் தொனிகள்  அப்போது அதிகாரமாகவே  இருந்தன.  இவர்களதும்  அப்படித்தான் இருந்தது. 


"ஏனென்டால்  எண்டால்  வாகனம் வெளிக்கிட்டால்  தான் வீட்டுக்குப் போய்  சேரலாம்  அது தான்".  


"வாகனம்  இப்போதைக்கு  வெளிக்கிடாது" 

"ஏன்"

"அலுவலிருக்கு"

அதற்கு மேல் அவர்களிடம் கேள்வி கேட்டு  அவர்களின் வெட்டிப் பிடுங்கிற  பதில் கேட்கப்பிடிக்கவில்லை. 

பொத் தென்று சீட்டில்  சாய்ந்து  புத்தகத்தை விரித்து  முகத்தை மூடிக் கொண்ட  சற்றைக்கெல்லாம்

  

"வாகனம் இண்டைக்கு இதுக்கு மேல போக முடியாது  திருப்பு"  என்ற  அதட்டல் சத்தம்  வந்தது. 


எங்கே போகிறோம் என்பது கூட ச் சொல்லாமல் இருவர் வாகனத்தில் ஏறி வழிகாட்டி  எதோ கைதிகளை அடைத்துக் கொண்டு போய்  இறக்கிய மாதிரி  ஒரு மஞ்சள் பெயின்ற் அடித்த கட்டிடத்தின் முன்னால் இறக்கினார்கள்.

                                                           


 


அது வவுனியா  இந்து கலாச்சார மண்டபம் என்ற பெயரைக் கொண்டிருந்ததாக  இன்று ஞாபகம். 


அங்கு கொண்டு சென்று இறக்கிய பின் அங்கு குவிந்திருந்தவர்களைப் பார்த்த போது தான்  தெரித்தது அள்ளி  அடைத்துக் கொண்டு வந்து கொட்டியது  எங்களை மட்டுமில்லை  என்பது. 


இங்கு எப்படித் தங்குவது.  யாரை  நம்புவது என்ற பதட்டம்  வந்தது  


அதற்குள்  அங்கு கிடந்த சில அறைகளுக்கு  அவசரமாக கட்டணம் வசூலிக்கத் தொடங்கியிருந்தார்கள்.  அதுவும் ஒரு இரவுத் தங்கலுக்கு வசூலிக்கப் பட்ட  கட்டணம்  அந்த ஏசி இணைத்த  சொகுசு  வாகனத்தின்  கொழும்பு யாழ் கட்டணத்தை விட  அதிகமாக  இருந்தது. 


அங்கிருந்த  ஒரு சில  அறைகளில்  பெண் பிள்ளைகளைத் தங்கவைத்துவிட்டு  வெளியே ஹாரிடாரில்  ஆண்கள்  இருக்கலாம் என அங்கிருந்த பயணிகளால்  அவசரத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது .  


அப்போது தான் பல அப்பா வயது வசதி வாய்த்த  ஆண்களுக்கு  அவசரமாக  நோய்கள்  அணிவகுத்தன. தங்களுக்குத் தூக்கம்  கட்டாயம் என்றும் தனி அறை  வேண்டும் என்றும் இரு மடங்கு தாள்களை  துப்பாக்கிக் காரரிடம்  நீட்டிக் கொண்டு  கூட்டத்திலிருந்து தம்மை அன்னியப் படுத்தி  ஒதுங்க முயன்றார்கள்  


அங்கு கட்டணம் கொடுப்பதோ  தங்குவதோ என்பதைத் தவிர்த்து  அறிமுகமில்லாத  இந்த மனிதக் கூட்டத்திலிருந்து  என்னைப் பிரித்துக் கொண்டு  எப்படி  வெளியேறுவது .  துப்பாக்கிகளோடு அதிகாரம் செய்யும் இவர்கள்  எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.  என்ற குழப்பம்  இருந்தது  எதைச் சேர்ந்தவர்கள் என்றாலும்  அவர்கள் நடத்திய முறையில்  அவர்களை  நம்பத் தயாராக  இருக்கவில்லை  மனது.  ஆமியைப் போலவே அவர்களையும் அந்நியமாக  எண்ணியது. 


அங்கு தங்கவைக்கப்பட்டு  அன்று இரவு ஏதோ விரும்பத்தகாதது  நடக்கப் போவதாக  மனம்  சொல்லியது . அதற்கு முகம் கொடுக்க நேராமல் வெளியேறி விடவேண்டும். வவுனியா  முழுப் பிரதேசமும்  அறிமுகமில்லையாயினும்  நகரப்பக்கம்  அறிமுகமானதாகவும் , இதற்குள் இருந்து வெளிக்கிட்டால் பாதுகாப்பாகத் தங்குவதற்கு ஏற்ற  மனிதர்கள்  இருந்ததாலும்  இதை விட்டு வெளியேறுவது ஒன்றே முக்கிய எண்ணமாக இருந்தது. 


அப்போது அது ஒரு மாடி கொண்ட கட்டிடமாக  இருந்ததாக  ஞாபகம். கொண்டு வந்து குவித்த  அனைவரையும்  மேலே அனுப்பி விட்டு அவர்கள் கீழே  உலாத்திக் கொண்டிருந்தார்கள்.  துப்பாக்கி 

தூக்கினால் எல்லாருக்கும்  இயந்திரத் தனம் வந்திடுமோ  என்னவோ  எல்லாரும் விறைத்த கடும் ரோபோக்கள்  மாதிரித்தான் நடந்து கொண்டிருந்தார்கள். 


இவங்ககிடமிருந்து  எப்படி வெளியேறிப் போவது  என்று தடுமாறிக் கொண்டு, போரில்லாத காலத்து  நல்லூர்  தேர்காலக் கூட்டம்  போல அந்தச் சிறு கட்டிடத்தை நிறைத்திருந்த கூட்டத்தில்  நின்ற போது,  பரீட்சயப்பட்ட  அந்தக் குரல் கேட்டது .  நிமிர்த்து அந்த முகங்களைக் கண்ட போது  நிம்மதி வந்தது. 


இனி சாவு வரலாம்,  ஆனால் வேறெதுவம் நிகழாது.  நிகழ விடமாட்டாங்கள்  என்ற  நிம்மதி வந்தது. 


கூட்டத்தில் இடறி மிதந்து பக்கத்தில் வந்து கொஞ்சமா  நிலையை  பகிர்ந்து கொண்டபோது,  


"எதுக்காக  இதுக்குள்ள கொண்டு வந்து  வைச்சிருக்கிறாங்கள்  எண்டு  தெரியேல்ல  வெளியே போக நினைக்காதே.  என்ன செய்வாங்களோ தெரியாது.  நாங்கள் இருக்கிறமெல்லோ பயப்படாதே" என்றார்கள். 


அதை அவர்கள் வார்த்தையாகச் சொல்லியிருக்கத் தேவையில்லை. 


"பொறு ஏதாவது ஒரு ரூமில்  இடம் பிடிச்சுத் தாறம்."   என்று ஒவ்வொரு  அறையாக நுழைந்து  கதைத்து கால்மணி நேரத்துக்குள் இரவு ஒதுங்குவதற்கு  ஒரு அறைக்குள்  இருந்த எட்டுப் பேருடன் ஒன்பதாவதாக  என்னையும் இணைக்க  அனுமதி வாங்கிக் கொண்டார்கள். 


"நீ உள்ளே  பூட்டிக் கொண்டு  இவர்களுடன்  தங்கு  இங்கு  ஏன்  அடைத்து வைத்திருக்கிறார்கள் என்று தெரிவில்லை.  என்ன நடக்கப் போகுது என்றும்  ஊகிக்க முடியவில்லை. அதனால் நித்திரை கொள்ளாதே.  நாங்கள் மூண்டு பெரும்  நீ இருக்கிற அறைக் கதவு  வாசலில  தான்  சுவர்க்கரையில இருப்பம்.  ஏதும் வில்லங்கம் மாதிரித் தெரிஞ்சால்  கதவில  தட்டுவம்  திறந்து கொண்டு  எங்களிட்ட  வந்திடு  என்ன.  கவனம்.  பயப்படாதே . "


"ம் "


  என்று சொல்லிக் கொண்டு உள்ளே போனாலும் அங்கும் குழப்பமும் பதட்டமும் அடங்காமல்  இருந்தது.  அந்த அறையில்  வழமையாக  கூட்டம் நடப்பதாக இருக்கக் கூடும்  நீள் சதுரமாய்  ஒரு மேசை இருந்தது  நாங்கள்  அதைச் சுற்றி  சுவர்க் கரைகளில்  அமர்ந்து கொண்டோம் .  அனேகமாக  அனைவரும் இளம் பெண்கள் என்பதால்  கொஞ்சம் கொஞ்சம் நட்பாகிக் கொண்டோம் 


அவங்களை  வெளியே விட்டு விட்டு  உள்ளே பாதுகாப்பாக இருப்பது  என்னமோ போலிருந்தது.  வெளியே இருக்கும் ஆண்களை  இரவு சுட்டு விடுவார்களோ  பிடித்துச் செல்வார்களோ  என்ற குழப்பம் வந்தது .  இந்த இரவே வெளியே இருக்கும்  அவங்களுக்கு  ஏதும்  ஆகி  விடுமோ.   அப்படி நடந்தால்  அதை அவர்கள் வீட்டில்  நான்  எப்படிச் சென்று  சொல்ல முடியும்  இங்கு அடைத்து  வைத்திருப்பவர்களுக்கும்  ஆமிக்காரனுக்கும்  தொடர்பிருக்குமோ   மனம் நிலையற்றுக் குழம்பியது 


நடு இரவில்  திடீரென்ற  அலறலில் உயிர் நடுங்கியது  தமிழ்  அதட்டல்,   தமிழ்  அலறல்  ஒன்றாய் இரண்டாய் மேலுமாய்  ஓலமாய் ...........



தட்டிவானை நாளை  பார்ப்போம் .................  

தட்டி வான்

 

வாழ்வில் எதிர்பார்த்தேயிராத சிலவற்றுக்கு நினைவுகள் முக்கியத்துவம் கொடுத்து விடும். சம்பந்தப்பட்ட அதை எப்போது எங்கு காண்கிறோமோ உணர்வுகள் உடைப்பெடுக்கும் . இன்று ஒரு நட்பின் பதிவில் தட்டிவானைக் கண்டேன். கடந்தவைகளைக் கடந்து போக முடியவில்லை.
எல்லோருக்கும் பிளைட்டில் போக ஆசை வரும் உயர்ரக சொகுசுக் காரில் போக ஆசை வரும் ரயிலில் கப்பலில் போக ஆசை வரும் . எனக்கென்னவோ அந்த காஸ்ட்லியான ஆசை எல்லாம் எப்போதும் இருந்ததில்லை. தட்டி வானில் போக வேண்டும்
தட்டிவானின் பின் பக்கத்தில அரைவாசி திறந்தபடி இழுத்துக் கொழுவுற அந்தத் தட்டிப் பலகையில இருந்து கொண்டு ஒற்றைக் கையில வானின்ர மேற்பக்கத்தைப் பிடிச்சுக்கொண்டு காத்து முகத்தில மோதி தலைமுடிஎல்லாம் பறக்க பயணம் செய்ய வேணும் அல்லது தட்டி திறந்து தட்டையா கொழுவியிருக்க வானின்ர கூரையைப் பிடிச்சுத் தொங்கிக் கொண்டு பயணம் செய்யவேணும் எண்ட பெரிய ஆசை எனக்கு அப்போது .
இந்தத் தட்டிவான் ஆசை தொடங்கினதென்னவோ வல்லிபுரக் கோவில் கேணியடி மடத்து வாசலில தான். அப்போது இந்தப் போரெல்லாம் மனத்தைக் குதறி எடுக்காத என் சிறுபிள்ளைப்பிராயத்தில வழமை போல வல்லிபுரக் கோயில் தேர்த் திருவிழாவுக்குப் போயிருந்தோம். அம்மாவழித் தாத்தா ஒருவர் தேருக்கு அன்னதானம் வைக்க தட்டிவான் பிடிச்சு பெரும் சமையல் பாத்திரம் பண்டம் எல்லாம் அதுக்குள்ள அடைஞ்சு கொண்டு வந்து சேர்ந்திருந்தார்.. அண்டைக்குத் தான் நான் தட்டிவானை எனக்கு நெருக்கமா கண்டதெண்டு நினைக்கிறன்.
அம்மாவையள் எல்லாம் அமளிதுமளியா சமைச்சுக் கொண்டிருக்க அந்த வெக்கைக்குள்ளும் இடைச்சலுக்குள்ளும் ஓடிப்பிடிச்சு விளையாடின எங்களைப் பிடிச்சு வெளியால மண்டபத்தில இருத்தி எங்கேயும் போகக்கூடாது கால் கையை வைச்சுக் கொண்டு சும்மா இருக்க வேணும் எண்டு இருத்தி விட்டிச்சினம். எவ்வளவு நேரத்துக்குத் தான் நல்ல பிள்ளையாவே நடிக்க முடியும் கால் கை விறைச்சுப் போயிடும் எண்டு போட்டு மெதுவா அந்த இடத்தை விட்டு வெளிக்கிட்டிட்டம்
கோயிலுக்கு எந்தப் பக்கமா போனம் எண்டு தெரியாது . ஆனால் நடக்க நடக்க தூ ...ரமா வானம் இறங்கி நிலத்தை தொடுறது போல இருந்திச்சு கூட வந்தவங்களில் ஒருத்தன் சொன்னான் பூமி வட்டம் அது தான் வானம் வளைஞ்சு தெரியுது பாத்தியோ எண்டு. அப்பவெல்லாம் எனக்குப் பிடிச்ச எல்லாருக்கும் என்னை விட கனக்கத் தெரியும் எண்டு நினைக்கிற அதை அப்படியே நம்பிற அறிவாளி நான். அந்த வானம் வளைஞ்சு பூமியை தொடுற இடத்தை பார்க்க வேணும் எண்டு தான் நாங்கள் ஆவலா நடக்கத் தொடங்கினம்.
கால் புதையிற குறுமணலும் கொதி வெயிலும் இப்ப நினைச்சாலும் ஏனோ அப்பளம் ஞாபகம் வருகுது. அந்தப் பொரிவிலும் அந்த வெள்ளை மணல் மீது இருந்த மோகம் இப்பவும் நினைவில் இருக்கு. கால் சூடு தாங்க முடியாமல் பொத்தெண்டு கீழே இருந்து காலைத் தடவப் போட்டு தடவாமல் பின் பக்கத்தைத் தடவிக் கொண்டு துடிச்சு எழும்ப எங்களில் மூத்தவன் சொன்னான். கால் வெந்து போகும் தாங்க மாட்டாய் முதுகில ஏறு நான் உப்புமூட்டை சுமந்து கொண்டு ஓடுறன். அவங்கள் பின்னால ஓடி வருவாங்கள் எண்டு.. இல்ல எல்லாருக்கும் தானே சுடும் . எல்லாரும் ஓடுவம் என்று சொல்லிக்கொண்டு ஓடத் தொடங்கினம். கால் கொதிச்சாலும் தெரியாத இடத்தில் யாரின்ர அதிகாரமும் இல்லாமல் ஓடுவது நல்லாத்தான் இருந்தது எங்களுக்கு.
நாங்கள் ஓட ஓட நிலத்தைத் தொட்ட வானம் எட்டவே இல்லை. கடல் தான் வந்தது. கடற்கரையில நிண்டு பாக்க . கடலுக்குத் தூரமா வானம் வளைஞ்சு கடலைத் தொட்டு பூமி உருண்டை எண்டு சொன்னது. ஆனாலும் எங்களுக்கு அப்ப அதில ஆர்வம் போயிருந்தது. வெள்ளையா தூய்மையா அந்தக் கடற்கரையும் பெரிசு பெரிசா எழும்பி வேகமா வந்து மோதுற அலையும் பெரிய அதிசயமா இருந்தது
ஒரு முறை பெரும் அலை மோதி திரும்பிப் போகேக்குள்ள எங்களையும் இழுத்துக் கொண்டு போய் பாதியில மண்ணில விட்டிட்டுப் போகும் போது தான் முழுக்க நனைந்த படி இந்த உலகத்தின் சந்தோசம் எல்லாம் திரட்டி சத்தமா சிரிச்சபடி அப்பிடியே மண்ணுக்கை குப்புறப்படுத்துக் கொண்டு அடுத்த அலை வந்து வழுக்கிக் கொண்டு இழுக்கிறதுக்காகக் காத்துக் கிடக்கேக்க தான் பார்த்தம். குட்டிக் குட்டியாய் ஏராளம் சிப்பி சோகி எல்லாம் அலையோட வந்து சர் எண்டு ஈரமண்ணை துளைச்சுக் கொண்டு உள்ள போறதை .
வெள்ளை வெள்ளையா மினுங்க மினுங்க சிப்பி சோகிகள் அதில கருப்பும் மண்ணிறமுமா புள்ளிகளும் கோடுகளும். எங்களுக்கு கடல் முத்தைக் கண்டதை விடப் புழுகம் . கடல் ஆர்வம் ரெண்டாம் பட்சமா போச்சு. ஒவ்வொரு அலைக்கும் காத்திருந்து அது கொண்டு வந்து குவிச்சுத் தள்ளுற இந்த அழகுக் குவியலை ஓடியோடி பொறுக்கத் தொடங்கினம். நாங்க பொறுக்கி எடுத்ததும் அது அசைவற்றுப் போனது. இதெல்லாம் தொட்டு விளையாடக் கிடைச்ச முதல் அனுபவம் அத்தனை சந்தோசம் தந்ததில நேரம் என்று ஒன்று இருக்கிறதும் எங்களுக்கு குடும்பம் இருப்பதும் அது தேடும் என்பதும் எல்லாமும் எங்களுக்குத் தெரியவே இல்லை. அதிலும் பேருக்குக் கூட மனித சஞ்சாரமில்லாத அந்த உலகத்தில் நாங்களே அனைத்துமா இருந்ததில் எல்லாமும் மறந்து போயிருந்தது.
இருந்தால் போல ஆர் நீங்கள் எல்லாம் இதில ஒருவரும் வரக் கூடாது என்னண்டு வந்தனிங்கள் எண்டு கேட்ட மனுசன் எங்களுக்கு அரக்கன் போலிருந்தார் பயம் வந்தது . ஆளையாளை இழுத்துக் கொண்டு ஓடத் தொடங்கினம். ஆனாலும் மறக்காமல் நாங்கள் அள்ளிவைச்ச கிளிஞ்சல் எல்லாத்தையும் அவங்கள் வேட்டிக்குள்ள போட்டிருந்த காச்சட்டை பொக்கற் முட்ட முட்ட அடைச்சு கொண்டும் நான் போட்டிருந்த பட்டுப்பாவடையை சண்டிக் கட்டுப் போல மடிச்சு அதுக்குள்ள நிறைச்சுக் கொண்டும் ஓடி வந்தம்.
அந்த ஆளைக் கண்ட பயம் இன்னும் இருந்தது . இங்கன தனியாத் திரிஞ்சால் கொலை கிலை செய்து போடுவாங்கள் எண்டு சொன்னது அவரே கொலை செய்வார் போல பயமா இருந்ததில எங்களுக்கு இப்ப மணல் சூடு பெரிசா தெரியயில்லை. எல்லாருக்கும் அம்மாமார் நினைப்பு வந்தது அழுகை வந்தது.
எங்கள் எல்லாரிலும் பெரிய , செய்திப்பேப்பர் . வாசிக்கிறவன் சொன்னான். இந்தக் கடற்கரையில தான் கமலத்தை கொண்டவங்கள் எண்டு அது நாம் கொலைகள் பற்றி அறியாத காலம் கொலைகளை சினிமாப் படங்களில் மட்டுமே கண்ட காலம் . அதால , கொலை நடந்த எல்லாத் திரைப்படமும் கண்ணில வந்து போச்சு . உதிலையோ கொலை நடந்தது கேட்டுக் கொண்டே கொலைகாரன் துரத்துவது போல ஓடத் தொடங்கினம். அவன் எங்களுடன் ஓடிக் கொண்டே தன் அதிமீதாவித் தனத்தை பெருமைப்படுத்த கமலம் பற்றி கொலை பற்றி சொல்லிக் கொண்டே ஓடி வந்தான். சாவுப்பயத்தில் எங்களுக்குத் தூரம் தெரியவில்லை.
நிலத்தோட ஒட்டின புல்லும் நெருஞ்சியும் காலை பதம் பாத்தபிறகு தான் அண்ணாந்து பார்த்தம் கோயில் வந்திருந்தது . அம்மாவையள் இருந்த மண்டபம் தெரியாமல் தடுமாறிக் கொண்டு நிண்டம் வீட்டுக்காரர் கோயிலில ஒரு இல்லை பல செத்தவீடே நடத்தி முடிச்ச நிலையில நிண்டிச்சினம் கண்ட உடன கட்டிப்பிடிச்சுக் கொஞ்சினதோட சரி ஒதுக்கமா இழுத்துக் கொண்டு போய் சுலரச் சுழர சப்பல் அடி.
எங்களை பட்டி அடைச்சது போல ஒண்டா மூலையில் இருத்தி காவலுக்கு ஆளும் வைச்சுப் போட்டு மத்தியானப் படையலுக்கும் அன்னதானத்துக்கும் தொடங்கின சமையலை பின்னேரம் சமைச்சினம். அந்த நேரத்திலும் நாங்கள் கடலில இருந்து கொண்டு வந்த பொக்கிசத்தை எங்களுக்குள்ள மறைச்சுத் தான் வைச்சிருந்தம் . அது வேற எங்களில என்ன வஞ்சம் வைச்சிருந்ததோ எங்களை இருத்தியிருந்த சாமான் அடுக்கியிருந்த மூலைக்குள்ள நாங்கள் ஒழிச்சு வைச்ச இடத்தில இருந்து முனகல் போலவும் கீச்சிடல் போலவும் சன்னமா சத்தம் போட்டுக் கொண்டிருந்தது. , அவசரமா அன்னதானத்தை முடிச்சுக் கொண்டு வெளிக்கிட்டீனம் .
இருண்டு போயிருந்தது. வழமைபோல பஸ் வான் எண்டு எதுக்கும் காத்திருக்காமல் பாத்திர பண்டம் எத்தி வந்த தட்டிவானிலேயே எங்களையும் இழுத்துப் போட்டு அடைஞ்சு கொண்டு வெளிக்கிட்டீனம். ரயில் பஸ் எல்லாத்தையும் விட தட்டி வான் நல்லாத்தான் இருந்தது. அதுவும் வாற வழியெல்லாம் பனங்கூடல் காத்தடிக்க ஆஹா சொர்க்கம். அந்தக் காத்தும் தட்டி வான் பயணமும் பனங்கூடலின் கூவலும் சேர்ந்தால் தக தைய தைய தையா தையா நெஞ்சு றக்க கட்டிப் பறக்குது..... எண்டு பாடலாம். ஆனால் அந்த நேரம் உயிரே படம் வரவும் இல்லை நான் வளரவும் இல்லை என்பது இப்ப ஒரு மனக் குறை தான் அதை விடுவம்
தட்டிவானில் பொருளேற்ற வந்த அண்ணா தட்டியில் தொற்றிக் கொண்டிருந்த விதம் பார்க்க நல்லா இருந்தது. நானும் அது மாதிரி தொற்றிக் கொண்டும் நிண்டு கொண்டும் வரவேணும் போல இருந்தது தட்டி குலுக்கும் போது விழுந்தெழும்பி சிரிக்கவேனும் எண்டு ஆசை வந்தது . அம்மாட்டைக் கேட்டன். மத்தியானம் நடந்ததை நான் மறந்தப் பிறகும் மறக்காத அம்மா பல்லை நெருமிக்கொண்டு ரெத்தம் வர நுள்ளி வைச்சிட்டா . இதுக்கும் மேல கேட்டால் அதுக்குகுள்ளேயே அடிநடக்கும் எண்டு போட்டு வாலைச் சுருட்டிக் கொண்டிருக்க சும்மா கிடக்கேலாத கடல் பொக்கிசங்கள் அதிகமா முக்கி முனகினதோட நாத்தமும் எடுக்கத் தொடக்கிட்டுது ஆளாளுக்கு ஆராய வெளிக்கிட்டிச்சினம்
கோயில் மடத்திலும் இப்படி சத்தம் வந்தது எண்டும் மணம் கிளம்பினது எண்டும் ஆளாளுக்கு பட்டிமன்றம் நடத்தத் தொடங்கிச்சினம் . பின் குண்டு தேடுற போல கிண்டிக் கிளறி தேடலும் நடந்தது . பொத்தி வைச்ச புதையலைக் கண்டு பிடிச்சு எடுத்ததும் நாங்கள் முழங்காலுக்குள்ள முகத்தைப் புதைச்சுக் கொண்டு ஒண்டும் தெரியாத மாதிரி நித்திரை கொண்டம் .
பாவத்தை துலைக்க கோயிலுக்குப் போனால் உதுகள் உந்தளவு உயிரையும் அள்ளிக்கொண்டு வந்து கோயிலுக்குள்ள வைச்சு சாகடிச்சு ஒரு கோடி பாவத்தை அள்ளிக் கொண்டு வந்தெல்லோ நிக்குதுகள் எண்டு ஆளாளுக்கு ஆரம்பிக்க கடைசியா தட்டிவான் ஓடின அண்ணாவும் அதில தொங்கிக் கொண்டு வந்த அண்ணாவும் தான் எங்களுக்காக வக்காலத்துக்கு வந்து அடிக்க விடாமல் கடவுள் மாதிரி காப்பாற்றி விட்டினம். சத்தியமாய் அண்டைக்கு அவை தான் எங்களுக்கு மாயவன் .
அந்தத் தட்டி வான் எங்களை இறக்கி விட்டிட்டுப் போகும் போது தான் சரியான கவலையாய் இருந்தது. அதன் மீது பெரிதாயொரு காதல் பிறந்திருந்தது. எப்பிடியும் நான் உன்னில தொங்கிக்கொண்டு போவன் எண்டொரு சபதமும் பிறந்திருந்தது.
எண்ணங்கள் தான் செயலை ஆட்சி செய்கிறது என்பார்கள் சரியோ பிழையோ தெரியாது ஆனால் என் காதலுக்குரிய தட்டிவானில் பயணிக்கும் ஒரு நாளும் வந்தது. என் வாழ்வில் மறக்க முடியாத நாட்களில் ஒருநாள். . சாவையும் சிரிச்சுக் கொண்டே ஏற்கத் தயாராக இருந்த ஒரு நாள். நான் இறுதியாய் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் பயணித்த . கண்ணீர் என் மனதைத் தீண்டிப் பார்க்காத கடைசி நாள். .........
நாளைக்குப் பார்ப்போம் ............................