Thursday, December 22, 2016

குக்...குக்....கூவென கரையும் மணித்துளிகள்

சுவரில் இருந்து கூடு திறந்து சின்னதாய் ஒருமுறை செட்டையடித்து, செல்லமாய் கூவி நேரத்தை ஒருமுறை நினைவுறுத்தி விட்டு உள்ளே சென்று அப்பாவியாய் அமர்ந்து கொள்ளும் சின்னக் குருவியின் மணிக் கூடுகள் உருவான இடத்தை ஒரு தரம் எண்ணிப் பார்ப்போமா?
.
உண்மையில் இந்த மணிக்கூட்டில் இருந்து வரும் கூவும் ஒலி அதற்காக அமைக்கப் பட்டதல்ல. orgel என்ற இசை வாத்தியத்தில் வழிந்த இசையில் தற்செயலாக இந்த குக் குக் கூ... சத்தமும் பறவையின் சிறகடிப்பு போன்ற இசையும் பிடித்துப் போக, 1629 ஆம் ஆண்டு முதல் முதல் இந்தக் குக் கூ.. ஒலி (Kuckuck ) பிரத்தியேகமாக பதிவு செய்து வைக்கப் பட்டது.
.
பின் நாட்களில் ஜெர்மனியின் Schwarzwald Kreis மாவட்டத்தின் Triberg மற்றும் அதனைச் சுற்றி உள்ள மலைகிராமங்களில் உள்ளோர்களால் உருவாக்கப் பட்ட பறவையின் கூண்டு போன்ற மணிக்கூட்டுக்கு மணி ஒலிச் சத்தமாக இந்தக் கூவும் குரல் இணைக்கப் பட்டது. அத்துடன் அந்த மணிக்கூட்டுக்கு குக் கூ .. மணிக்கூடு (Kuckucks uhr) பெயரும் சூட்டப் பட்டது.
.
இந்தக் குக்கூ ... மணிக்கூடு 1730 இல் Franz Anton Ketterer என்பவரால் உருவாக்கப் பட்டது என்று ஒரு ஆராட்சியாளரும், இல்லை அவரது தந்தையால் அதற்கு முதலே இது உருவகம் பெற்றிருந்தது, அதை மகன் வெளிக் கொணர்ந்தார் என்று இன்னொரு ஆராட்சியாளரும், அதுவுமில்லை 1742 இல் Michael Dilger உம் Matthäus Hummel என்பவரும் இணைந்து உருவாக்கியதாக மற்றொரு ஆராட்சியாளரும் சொன்ன போதும்,

Triberg என்ற மலைக் கிராமத்துக்கு அருகே உள்ள பண்ணையில் இருந்து சகோதரர்களான Aandreas அவரது இரு வயது இளைய தம்பி Christian Herr ஆகியோர் இணைந்து செய்த குக் கூ..,,. மணிக்கூடு முதல் முதலில் வெளி உலகப் பாவனைக்கு வந்து இன்று உலக வீடுகள் பலவற்றின் வரவேற்பரைகளில் கூவிக்கொண்டிருக்கும் குக் கூ... குருவிகளுக்கு மூதாதையாகிப் போனது.
.
இந்த Triberg வெள்ளியை உருக்கி வார்த்தது போல் உச்சி மலையில் இருந்து அவசரமில்லாமல் ஒடுங்கி ஒழுகும் அழகிய நீர்வீழ்ச்சி கொண்ட ஒரு சுற்றுலாத் தலமாதலால் ஆரம்ப காலம் தொட்டு இந்த மணிக்கூட்டு உருவாக்கம் சுற்றுலாப் பயணிகளுடனான வியாபாரத்தைக் குறிவைத்த வீட்டுக் கைத்தொழிலாக இந்தக் கிராமத்தில் வளர்ந்தது.
.
அவரவர் கற்பனைக் கேற்ப அதன் வடிவங்களில் சிறிய மாறுதல்களை ஏற்படுத்தும் போதும் அதன் அடிப்படை வடிவமும் கூவும் குரலும் என்றும் மாற்றம் பெறாமல் இருப்பது அதன் தனிச் சிறப்பு.
.
இன்று இந்த இடத்துக்கு சம்பந்தமில்லாத நிறுவனங்கள் கூட அதைப் போல பிளாஸ்ரிக், உலோகம், கண்ணாடி என்ற பலவித மூலப் பொருட்களில் அதை உருவாக்கி விற்பனைக்கு விட்டுள்ள போதும் இதன் தாயகத்தில் அடிப்படையில் இருந்தது போலவே மரமும் மற்றும் இயற்கை மூலப்பொருட்களும் கொண்டே இதன் கூடும் அலங்காரமும் செய்யப்படுகிறது.
.
மிகச் சாதாரண விலைகளில் இருந்து மூன்று நான்கு ஆயிரம் யூரோ தாண்டிய நிலையிலும் விற்பனையாகும் இந்தக் குருவிக் கூடுகள் ஆண்டு முழுவதுமான சுற்றுலாப் பயணிகளுக்காக வீதி முழுவதும் கடைபரப்பப் பட்டிருக்கும்.
.
நத்தார் காலத்தில் இந்த நீர் வீழ்ச்சியை நெருப்பில் உருக்கி, நிறங்களில் குழைத்து வாணங்களில் வேடிக்கை காட்டும் மஜிக் நிகழ்ச்சி பிரபலமானதால் எலும்பு உருக்கும் குளிரிலும் அந்த வண்ண நீரின் வாணவேடிக்கை பார்க்க இலட்சங்களை தாண்டி எண்ணிக்கையற்றுக் குவியும் மக்கள் வாங்கிச் செல்லும் நினைவுப் பொருள் இதுவாகவே இருக்கிறது
..
எங்கே எப்படி யாரால் உருவாக்கப் பட்ட போதும், கூடு திறந்து வெளிவந்து செட்டையடித்து சிலுப்பி கூவும் ஒவ்வொரு மணித் துளியிலும் கடக்கும் எங்கள் ஆயுளை இந்தச் சின்னக் குருவிகள் நினைவுறுத்துவதாகவே எனக்கு எண்ணத் தோன்றுகிறது.

No comments:

Post a Comment