பத்து யூரோ கொடு.
மணித்தியாலத்துக்கா
மொத்தமாக
என்னது
நீதானே கூலி எவ்வளவு தரவேண்டும் என்றாய்.
ஆமாம்.
அது தான் பத்து யூரோ என்றேன்.
சற்று நேரம் எனக்குப் பேச்செழவேயில்லை.
உறவுகளையே பணத்தின் அடிப்படையில் கணக்குப்பார்க்கும் நாடென்ற பெயர். ஆனாலும் பணத்தையும் உறவையும் தாண்டி மனதை நேசிக்கும் வெள்ளை மனிதர்கள் பலரை இங்கான வாழ்க்கையில் நான் கண்டிருக்கிறேன்.
கூட்டு வாழ்க்கை குழம்பாத இனமும் நாடும் என்ற பெயர் தான் எமக்கு ஆனாலும் , என்னைப்பொறுத்தவரை இப்போதெல்லாம் கொடுத்துக்கொண்டேயிருக்கும் வரை, குனிந்து கொண்டேயிருக்கும் வரை தான் . நட்போ உறவோ நிலைக்க முடிகிறது. வாழ்வோ உடலோ வீழ்ந்து போனால் ஏறி மிதித்து தாண்டி நடக்கும் மனிதர்களைத் தான் அதிகம் காணவைத்தது எனது வாழ்க்கை.
எத்தனை நாள். எவ்வளவு வேலை செய்திருக்கிறாய் அதற்கு இதுவா கூலி என்றேன்.
நான் முறைப்படி உன்னிடம் பணம் பெறுவதானால் ரசீது எழுதி வருமானவரி கட்ட வேண்டும்
ஆமாம்.
ஆகையால் உனக்குச் செய்த வேலைக்கு ரசீது எழுதவும் இல்லை . அதனால் வரிகட்டும் தேவையுமில்லை.
எனக்கு வார்த்தை வரவில்லை சங்கடமாக இருந்தது. ஆனாலும் இவர் போன்றவர்களோடு முரண்பட முடியாது. அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்று சரியாகக் கணிக்காமல் நாம் வினையாற்றும் போது மிகவும் குழம்பிப் போய் ஆக்ரோசமாக எதிர்வினையாற்றும் அல்லது அதிகமாக உடைந்து போய் உடலியக்கம் கூட தளும்பும் நிலை அவர்கள் பலருக்கும் உண்டு. அத்துடன் முழுவதும் வெறுத்து விடும் வாய்ப்பும் உண்டு. அவரின் வெறுப்புக்கு ஆளாகும் தைரியம் ஏனோ என் மனதுக்கு இருக்கவில்லை. சில மனிதர்களோடான சந்திப்புக்கள் பிரிவைச் சந்திக்க விரும்பாதவை. முக்கியமாக வெறுப்பை, அவர்கள் காயப்படும் வேதனையை எதிர்கொள்ளவே மனம் ஏற்காதவை, அவரும் மாதக்கணக்கில் தொடர்ந்த வேலையில் அப்படித்தான் மனதுக்குள் நெருங்கியிருந்தார்..
எதுவும் செய்யத் தோன்றாமல் அவரையே பார்த்திருந்தேன். யாரிடமும் இலவசமாக எதுவும் பெற்றுக்கொள்ளக்கூடாது என்ற வழக்கம் எனக்கும் இருக்கலாமில்லையா என்றேன்
மெல்லிய புன்னகையுடன் என் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். அப்போதைய அவர் மனதை என்னால் படிக்க இயலவில்லை.
ஞாயிற்றுக்கிழமைகளில் மனைவியை அழைத்துக்கொண்டு ரெஸ்டாரெண்ட் போவது என் வழக்கம் அதற்கு நூறு யூரோ தா போதும் என்றார்..
நான் அவரது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
எனக்குப் பணத் தேவையில்லை ஆனால் வேலை செய்துகொண்டேயிருக்க வேண்டும். இல்லாது விட்டால் மிகவும் சிரமமாக உணர்வேன். வீட்டில் என் மனைவிக்கு அமைதியின்மையை உருவாக்குவேன் . அதனாலேயே வேலை செய்கிறேன். என் வேலைக்குரிய ஊதியம் பெறாது போனால் என் உழைப்பு தாழ்வாகக்கணிக்கப்படும் என என் மனைவி சொல்வார். அதனாலேயே எனக்கான ஊதியத்தைப் பெறுகிறேன். வரி செலுத்துமளவு தொகையான ஊதியம் கிடைக்கும் வேலைகளை நான் ஏற்பதில்லை.
எனக்குச் செய்த வேலைக்கு எவ்வளவு தொகை வரும் என்பது எனக்குத் தெரியும் என்றேன். புன்னகைத்தார்.
நான் வேலைக்குப் போகுமிடங்களில் யாரோடும் பேசுவதில்லை. இங்கு வந்த முதல் நாளிலிருந்தே உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது. . என்னை வேலை செய்ய விட்டு ஒதுங்கியிராது என்னுடன் தொடர்ந்து கூடவே வேலை செய்தும் பேசியும் கொண்டிருந்தது என் மனதுக்கு மிக நெருக்கமாக இருந்தது
நான் புன்னகைத்தேன்.
என் கையிலிருந்த பணத்தைப் பிடுங்கி நூறு யூரோவை மட்டும் எடுத்துக்கொண்டு மிகுதியை , என் கையிலிருந்த பர்சினுள் திணித்தார். எனக்கொரு மகளிருந்தால் அவள் வீட்டில் கூலி வாங்கிக்கொண்டா வேலை செய்வேன் உனக்கு என்னைத் தந்தையாக எண்ணத் தோன்றவில்லையா என்றார்.
அதிர்ந்து போயிருந்தேன் நான்.
உச்சந்தலையில் கையை வைத்து அழுத்தி, எனக்கொரு மகள் இருந்து அவளிடம் பணம் பெற்று மனைவியுடன் ரெஸ்டாரெண்ட் போகவேண்டும் என்பது என் பெரிய ஆசை சொல்லி விட்டு அவர் விடை பெற்ற பின்பு, ஏனென்றே தெரியாமல் அந்த நாள் முழுதும் அழுது தீர்த்தேன்.. அதன் பின்பும்
ஏதோ திருப்தியாக உணராமல் மனத்தைக் கீறிக்கொண்டேயிருந்தது.
அடுத்தநாள் அவரது மனைவிக்கு அழைப்பெடுத்து வேலை செய்த நாட்கள். அவர் பெற்றுக்கொண்ட பணம் பற்றிய விபரங்களைச் சொன்னபோது. என்னால் அதிகம் வெளியில் உலவ முடியாது உன் இருப்பிடம் இங்கிருந்து பத்து km தானே . வசதியானால் வருகிறாயா என்றார்.
வாசல் திறந்து கைப்பற்றி உள்ளே வா என்ற போதே , கணவனுக்கிருக்கும் பாதிப்பு அவருக்கில்லை என்றது தெளிவும் திடமுமான அவரது முகம்.
எங்களுக்கு நிறைய உறவினர்கள். ஆனாலும் எங்கும் இவரால் இயல்பாக ஒட்டிக் கொள்ள முடிவதில்லை.. இந்தக் குழந்தை மனிதன் மேலுள்ள காதலினால் நானும் என் உலகத்தினைச் சுருக்கிக் கொண்டு விட்டேன் . அவரால் சிலரோடு தான் ஒன்ற முடிகிறது. உனது வீட்டுக்கு வேலைக்கு வந்த நாள் முதல் அவரில் மகிழ்ச்சியைக் காண்கிறேன். அதை விட பணம் ஒன்றுமேயில்லை.
ஆனாலும் ....... என்றேன்
இப்படித்தான் ஒரு வயோதிபப் பெண் மீது அபிமானம் அவருக்கு. தன் தாய் போல் என்பார் . நேரம் கிடைக்கும் போது சென்று பார்த்து வருவார். அவர் இறந்த .போது தன் வங்கியிருப்பில் இருந்த தொகை இவர் பெயருக்கு வந்து சேர்ந்தது. இன்னும் சிறிது காலம் இருந்து விட்டுச் சென்று விடப் போகிறோம் நீயே சொல்லு . எமக்கு எதற்குப் பணம் .
எதற்குப் பணம். ? சிரிப்பு வந்தது. பணத்தால் அடிக்கும், பணத்துக்காக அடிக்கும் சுயநல உலகில் பணம் அடிவாங்கியதை முதல் முதலாகப் பார்த்தேன்.
உனது சாப்பாட்டு மேசை,, வேலை இடைவெளியில் உன் பிள்ளைகளுடன் ரக்ளாத் கிரில் போட்டு உண்பது , கூடவே , அவர்களுடன் கேம் விளையாடுவது , பேரீச்சம் பழக் கேக் , ஆரஞ்சு கேக் எல்லாம் மிகவும் பிடிக்குமாம் அவருக்கு. எனக்கும் பிடிக்கக் கூடும் வாயேன் இருவரும் சேர்ந்து செய்யலாம். என்று புன்னகைத்தார் அவர்.
நாட்கள் தொடர்ந்து கொண்டிருந் ஒரு நாளில், பிள்ளைகள் காலூன்றிய பின் தாய் நாட்டுக்குப் போகவேண்டும் என்பது என் ஆசை என்றேன். .
கையைப் பற்றிய படியே தான் அந்தக் கேள்வியையும் கேட்டார்.
நீ ஏன் உன் தாயின் நாட்டுக்குச் செல்ல விரும்புகிறாய் இங்கேயே இந்த நாட்டிலேயே எங்களுடனேயே இருந்து விடேன். . அங்கே யார் இருக்கிறார்கள் . என்ன எஞ்சியிருக்கிறது உனக்கு ?
யோசிக்கத் தொடங்கினேன். யார் இருக்கிறார்கள். என்ன இருக்கிறது. வாழ்நாட்களில் பாதியை இங்கு களித்த பின் இனி அதுவும் பழக்கமற்ற புதிய இடம் . எதைக் கொண்டு வந்தேன் எதைத் தேடித் போகிறேன். தேடித் போவதற்கு அன்பு ஒன்று தவிர வேறெந்தக் காரணமும் இல்லை..
இந்த உலகில் மிகவும் அபூர்வமான வஸ்து வாகிப்போன அன்பை இத்தனை தூரம் கடந்து பயணித்து என்னால் அடைய முடியுமா? .
நான் நகர்ந்து சென்று வீழும் இடத்தில முடிந்து விடும் இந்தப் பயணத்தில் ,அன்பினால் என்னைக் நடுங்க நடுங்கக் குளிப்பாட்டிய சில மனிதர்கள் வாய்த்தது வரம். அவர்களை இழந்த பின், நினைவுகளையும் அனுபவங்களையும் காவிக்கொண்டு தானே வந்தேன். அவற்றை த் தவிர என்னுடையது என்பதில் எது நிரந்தரமானது.
நான் பெற்றுக்கொண்ட அன்பையும் ஆதரவையும் , என்னை முழுவதுமாய் நம்பவும் ஏற்கவும் கூடியவர்கள் என்னிடமிருந்து எதிர்பார்க்கும் போது கொடுப்பதைத் தவிர வேறு என்னதான் வேண்டியிருக்கிறது இந்த ஜென்மம் நிம்மதியாய் நிறைவு பெறுவதற்கு .
கிழக்குப் பறவை ஒன்று மேற்கின் கிளை ஒன்றில் இளைப்பாற அமர்வதை ஒரு வித அகஅதிர்வுடன் வேடிக்கை பார்த்தவாறே என் கரத்தைப் பற்றியிருந்த திருமதி என்ற்விக்கின் கரத்தினை என் மறுகரத்தால் பற்றிக்கொள்கிறேன் .