Monday, July 31, 2017

பெண் எனும் பெருமருந்து + கொடும் விஷம்


தலைப்பைப் பார்த்ததுமே  வேடிக்கையாக சிலருக்கும், வெறுப்பாக சிலருக்கும் ,கோபமாக சிலருக்கும் இருக்கக் கூடும். எனக்கும் அப்படித்தான்  ஆனால் இந்த மூன்று உணர்ச்சிகளும் சேர்ந்தே இருக்கிறது. 

கைகால் முளைத்த இந்த மாபெரும் மருந்தை எம் சமூகத்தில்    பரவலாக  பலரும் பல்வேறு நோய் தீர்க்கும் சிறந்த ஔடதமாகவே  உபயோகித்து வருகிறனர்  என்பதைப் பார்க்கும் போது நாம்  சுய அறிவு வளர்ச்சி பெற்ற ஒரு சமூகத்தில் தான் வாழுகின்றோமா என்ற குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஒரு ஆண் அளவுக்கு மிஞ்சி குடித்து, உலகை மறந்த மயக்கத்திலே திரிகிறானா?
 பிடித்து இழுத்து வந்து போடு ஒரு கால் கட்டை. நிறுத்தி விடுவான்.

பெண் பித்துப் பிடித்து   ஸ்திரீ லோலனாகி   அலைகிறானா?
பிடித்து இழுத்து வந்து போடு ஒரு கால்கட்டை   அவன்  திருந்தி விடுவான். 

தெருப்பொறுக்கியாகி  வலுச்சண்டைக்கு ஆள் சேர்க்கிறானா?
பிடித்து இழுத்து வந்து போடு ஒரு கால் கட்டை அடங்கிக் கிடப்பான்.  

உழைப்புப் பிழைப்பற்று பொறுப்பற்று இருக்கிறானா?
பிடித்து இழுத்து வந்து போடு ஒரு கால் கட்டை பொறுப்பு தானாக வந்து விடும்.

 சற்று மூளை பிசகியது போல அலைகிறானா?
பிடித்து இழுத்து வந்து போடு ஒரு கால் கட்டை தெளிவாகி விடுவான்.

இந்த மருந்து  இந்த நோயாளிகளால்  ஜீரணிக்கப் படுகிறதோ, இல்லையோ நிச்சயமாக , மருந்துக்கே தன் நிலை ஜீரணமாகாமல்  வீணாகிப் போகிறது என்ற உண்மை இந்த சமூகம் அறியாமலா இருக்கப் போகிறது.

ஒரு  குடிகாரனை ,அல்லது எப்போதும் போதை மயக்கத்தில்  இருப்பவனை  மாற்றி எடுத்து மனிதனாக்க இன்றைய காலத்தில் அதற்கென்றே எத்தனையோ மருந்து வகைகள், பிரத்தியேக வைத்தியசாலைகள் , ஆற்றுகை ஆலோசனை மையங்கள் வந்த பின்பும் இன்றும்  எம்மவர்களுக்கு அதை ஏற்றுக் கொள்வதை விட ஒரு பெண்ணின் வாழ்வை  இதற்காகப் பயணம் வைப்பது இலகுவாக இருக்கின்றது.  அல்லது  செலவற்றதாக அல்லது தம் மீதிருக்கும் பொறுப்பை அடுத்தவர் தலையில் ஏற்றி வைத்து விட்டு இளைப்பாறுவது போன்ற ஆசுவாசமாக இருக்கிறது.  சரி  அப்படி ஒரு கால்க்கட்டுப் போட்டாயிற்று என்று வைத்தாலுமே அதன் பின் புதிதாய் வந்த ஒருத்திக்கு தன்னை மாற்றிக் கொண்டு இருக்கப் போகிறானாஎன்றுபார்த்தால் ...

அதன்   பின் அனேகமாக அது நித்தப் போர்க்களமாகவே தான் இருக்கிறது. இதற்கிடையில்  திட்டமிடா நிலையில்  குழந்தைகளும் வந்து சேர்ந்து கொள்கின்றன.   அவை தம்  குழந்தைமை வழிகாட்டலை தொலைத்து விட்டு இவற்றையே கண்டு வளர்வதால் ஒன்றில் இப்படியான ஒரு குடும்பச் சூழ்நிலைக்கு  முழு எதிர்ப்பானவர்களாகவோ  அன்றி இன்னொரு குடிகாரனாகவோ  அன்றி ஆண்களை நம்பாத அடக்கியாளும் பெண்ணாகவோ உருவெடுக்கத்தான் அவர்களால் முடிகிறதே தவிர சிறந்தவொரு, அது கூட வேண்டாம்   சாதாரண சமூகப்  பிரஜையாகக் கூட  இந்தச் சமூகத்தில் அவர்களால் உருவாக முடிவதில்லை.

'பலமரம் பார்த்த தச்சன்  (இந்த  வார்த்தைப் பிரயோகத்துக்கு மன்னிக்கவும். பழமொழிக்காகவே பதிவிட்டேனேயன்றி ஒரு குறிப்புணர்த்தல் அல்ல) ஒரு மரமும் அரியான்'என்பது போல பலரோடு அலைந்தவனை ஒரு கட்டுக்குள் போடுவது என்பதே சிரமமான விடயம் என்றாகும் போது  அப்படி ஒரு கலியாணம் கட்டி வைத்தாலும் பல மரம் தாவி சுவையறிந்த வௌவால்  ஒரு மரத்தில் நிலைக்குமா என்பது யோசிக்க வேண்டிய விடயமே.  எவரும் தன் அனுபவப் படிமங்களினூடே தான் தன்னை சுற்றிய உலகைப் பார்ப்பார்கள் என்ற அடிப்படை விதிப்படி  படி பார்த்தால்  பல குடும்பங்களில் உள்ள மனைவிகள்  மீதான கணவன்களின்  சந்தேகத்துக்கு வித்திடுவது எதுவென இலகுவில் புரிந்து விடும்.  கூடவே இத்தனை மனவுளைச்சலை தாங்கும் ஒருத்தி தன் சகிப்புக்கள் எல்லை கடந்த ஒரு நிலையில்  "போதும் நீ போ" என  ஒதுக்கிவிட்டு நகர்ந்து போக நேராதா?

யார் எவர்  என்று தெரியாத, தனக்கு உரிமையற்றவர்களிடம் எல்லாம் சண்டைக்குப் போகும் எதோ ஒரு வித மன வக்கிரம் கொண்டவன் ஒருவனை, ஒருத்திக்குக்  கட்டிவைப்பதான் மூலம் அமைதி கொள்ளவைத்து  அடக்கிவைக்க முடியுமானால் அதில் சொல்லப்படுவது என்ன? அவனுக்கு மூர்க்கமும் ஆவேசமும் தோன்றும்  நேரமெல்லாம் யாரோ எவரோ வாங்கும் அடி உதையை  நீமட்டும் வீட்டுக்குள் தனியாக உரிமையோடு வாங்கு.அதற்கான அனுமதியை  ஊர்கூட்டி உரிமையோடு வழங்கி வைத்திருக்கிறோம் என்பதா?  அல்லது தெருவில் அவன் அடிபட்டுத் திரிந்தால் மற்றவர்கள்  திருப்பியடித்து காயப்படுத்தி விடுவார்கள்  அல்லது குடும்ப மானம் போய் விடும். ஆதலால்  அவனில் எந்தக் காயமும் ஏற்படாது, குடும்பமானம் சந்தி சிரித்து விடாமல் இருப்பதற்காய்  'அவனின் மதம் ஓயும் வரை மனைவியான நீ  அடிபட்டுச் சா'  என்பதா? 

உழைக்க மறுத்து திரியும்  பொறுப்பற்ற சோம்பேறிக்கு ஒருத்தியை இழுத்து வந்து கட்டி வைத்தால் அவள் அவனுக்கும் சேர்த்து உழைத்து  குடும்பத்தையும் சேர்த்து சுமக்கும் , தன் தலைக்கு விஞ்சிய பொறுப்புக்குத் தள்ளப்பட்டு விட மாட்டாளா?  போதும் போதாமைக்கு அவனது கைச் செலவுக்கும் சேர்த்து உழைக்கவேண்டிய நிலையும்,  அப்படி அவன் கேட்கும் போதெல்லாம்  கொடுக்காது விட்டால் ஆண் என்ற ஆதிக்கத்தில் அடியும் உதையும் வாங்கிக்கொண்டு வருசா வருஷம் வாரிசுகளையும் பெருக்கிக் கொண்டு  அயல்வீடுகளில் குத்தி இடித்து  வீட்டிலும் போய் குத்து வாங்கும் பெண்களை அயலில் காணாமல் நாம்  இவ்வாழ்வைக் கடக்கவில்லை  என்பதை நீங்களும் உணர்வீர்கள் .

பிறப்பில்  சீராக இருந்து  இடைக்காலத்தில் சற்று மூளை பிசகி பிதற்றுகின்றானா அவனுக்கும் வைத்தியசாலை  வைத்தியம் எதுவும் தேவையே இல்லை. பெண்ணே சரியான மருந்தென தீர்மானித்து விடுகிறார்கள்.   அவள் பொறுமை உள்ளவள் என்றால் குரங்கு கையில் கிடைத்த பூமாலையாகி  ஒரு கட்டத்துக்குமேல்  சகித்து சலிப்பாகி மனம்  சின்னாபின்னமாகி
மனச்சிதைவடைந்த நிலைக்கே வந்து விடுகிறாள். மனைவி பொறுமையற்றவள் எனில் வன்முறையை கையில் எடுத்தாள் என்றால் அவனுக்கு நோய் நிலை முற்றி விடும்.

இந்த எதிர்பார்ப்புக்கள் நம்பிக்கைகள் எல்லாமே நிறைவேற சாத்தியமான ஒரு புள்ளியும் உண்டு.  அது என்றோ எங்கோ ஒருவன் யாரோ ஒருத்திமேல் கொண்ட தீராத காதலால் தன் தகாத பழக்க வழக்கங்களை அவளுக்காக மாற்றிஇருக்கலாம். அவளும் அவன் மீது கொண்ட காதலால் நம்பிக்கையோடும் பொறுமையோடும் முயன்று இருவரும் ஒரு திருந்திய சிறந்த வாழ்வை வாழ்ந்திருக்கலாம் .  அதை மனதில்  கொண்டு பின்னாளில் அதுவே ஒரு தீர்வு போல புலியை பார்த்து பூனை குறிசுட்ட கதையாக கேலிக்குரியதாக அல்லது மிக காயப்படுத்துவதாக மாற்றமடைந்து இருக்கலாம்.




ஆனால் .... நாம் தீர்மானம் செய்து திணித்த முடிவை   வெற்றிகரமாக நிறைவேற்றிவிட நாம் கொண்டிருக்கும் ஆயுதம்  என்னவென்றால்,எம் சமுதாய அமைப்பில் கழுத்தில் ஒரு முறை விழுந்து விட்டால்,விழுந்தது இறுக்கிக் சாகும் நிலை வந்தாலும் , அது விலங்கெனினும் சகித்துக் கிடக்கும் மனப் பக்குவத்தில் பெண்ணை குடும்பமும் சமூகமும் சேர்ந்து மனச்சலவை செய்து  உருவாக்கி வைத்திருக்கும் கட்டுப்பாடு அல்லது சமூகக் கடமைப்பாடு. .  

அது என்ன மாதிரியெனில்  சில மேற்குலக நாடுகளில்,  வீதிக்கும் வீட்டுக் காணி எல்லைக்கும் இடையில் உயரமான மதில்களோ  வேலிகளோ எழுப்பப்படாமல் மிக பதிவான ஒரு அடிக்குக் உட்பட்ட   உயரத்தில் மதில்கள் இருக்கும். தங்கள் காணிகளில் உலவும் தம்வீட்டு  நாய்கள்  வீதியில் இறங்கும் அபாயம் உண்டு என்பதால் அது குட்டியாக இருக்கும் பருவத்தில்  எல்லையில் வேலிபோல  கம்பிகளை சுற்றி  அதில் சிறியளவு அதிர்வு தரக்கூடிய அளவில் குறைந்தளவு மின்சாரம் பாச்சி இருப்பார்கள். துள்ளிக்கொண்டு வீதிக்கு ஓட நினைக்கும் நாய் அதில் மோதுண்ட அதிர்வில் பயந்து திரும்பி விடும். பலமுறை அப்படியான  அனுபவத்தைப் பெற்றபின்  அவ் வேலியைநீக்கி விடுவார்கள். ஆனாலும் அதன் பின் அதன் அடிமனதில் அதைத் தாண்டக் கூடாது என்ற எண்ணம் திடமாகப் பதிவாகி இருக்கும்.   தன் வாழ்விடத்தில் உயிராபத்து ஏற்படும் அபாயம் ஏதும் நிகழும் நிலைவந்தால் கூட அது அந்த எல்லைகளை தாண்டி வீதியில் இறங்கித் தன்னைக் காக்கத்  துணியாது. 

எம்மைப் பொறுத்தவரை அப்படியான மின்சாரம் பாச்சிய கம்பிகளின் வேலையை எம் நாவே  செய்து கொள்வதால் தாண்ட தைரியம் அற்ற,தாண்டி விட்டு நம் சமூகத்தின் பார்வைக்கும் நாக்குக்கும் முகம் கொடுக்கும் திராணியற்ற பலவீன நிலையில் நிகழும் அதிக தற்கொலைகளையும் குற்ற உணர்வே அற்று இதற்கு இதை விட நல்லவொரு தீர்வு இருக்க முடியாது என்பது போல வேடிக்கை பார்க்கும் வக்கிரத்திற்கு நன்றாகவே பழக்கப் பட்டிருக்கிறோம்.

இதற்கெல்லாம்  வசதியாக  அமையப்பெறுபவர்கள்  தாயை, தந்தையை  அல்லது இருவரையும் இழந்த  நிலையில்  மற்றோரின் பராமரிப்புக்குள் ஒடுக்கப் பட்டிருக்கும்  பரிதாபத்துக்குரிய  சீவன்கள்.    ஏதோ  ஒன்றில் தள்ளி விட்டு விட்டு  வாழ்வமைத்துக் கொடுத்துய் விட்டேன் என மார்தட்டிக் கொண்டு எது நடந்தாலும் கண்டு கொள்ளாமல் ஒதுங்கி விடுவார்கள்   அப்பெண்ணின் பாதுகாவலர்களாக  அறியப்பட்டார்.   நாதியற்ற சீவன் தானே என்ன நாய்ப்பாடு படுத்தினாலும்  போக்கிடமற்றுக் காலுக்குள்ளேயே  விழுந்து கிடக்கும் என்ற திட்டமிடலோடு தான் இப்படியான வைத்தியத்துக்கான  மருந்து நிலையான பெண்கள் தீர்மானிக்கப் படுகிறார்கள்.  ஆக அவர்களுக்கான முன் வாழ்விலும் அமைதியில்லை. திருமண வாழ்வும் பணயம் வைக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது.

மேற்படி இந்நடைமுறைகள்  காலமாற்றத்தில் தம் தடங்களையும் சற்று மாற்றி அல்லது விரித்துக் கொண்டு பயணிக்கத் தொடங்கிய படிமுறை மாற்றத்தில் இன்று  மேற்குறிப்பிட்ட இத்தனை சீரழிவுகுள்ளும்  அடங்கும் ஆண்களின் முக்கிய தகுதி ஊரிலிருந்து ஒரு பெண்ணை ஸ்பொன்சர் செய்து கூப்பிட முடிந்த  வெளிநாட்டு நிரந்தர வதிவிட உரிமையாக இருக்கிறது. நெருப்பில் விழுந்த விட்டில் போலாகிவிடப் போகிறது கனவு சுமந்த தம் வாழ்வு என அறியாது அப்படி வந்து சேரும் பெண்கள் சுதாரித்துக் கொண்டு இந்தப் பந்தத்தை விட்டு வெளியேறிவிடாமல் கட்டிப் போடக்கண்டு பிடித்திருக்கும் விலங்கு இன்னும் வேடிக்கைக்கும் வேதனைக்கும் உரியது.

"மனிசி வந்தவுடன ஒரு குழந்தையைக் குடுத்துப் போடு. அப்பத்தான் அங்க இங்க என்று விலகாமல் வீட்டுக்குள்ள கிடக்குங்கள். இல்லாட்டி ஆபத்துத்தான்"  என்று ஆணுக்கு நெருங்கிய வட்டாரங்கள் கொடுக்கும் அறிவுரையைக் கேட்டால் முகத்திலேயே காறியுமிழத் தான் தோன்றும்.  மேற் குறிப்பிட்ட அறிவுரைக்குள் அடங்கியிருக்கும் ஒரு அநாகரீகமான  கட்டாயத் திணிப்பு தம்பதிகள் இருவருக்கான தனிப்பட்ட தாம்பத்தியத்துக்குள் மூக்கு நுழைக்கும் மிக அருவருப்பான செயல் என்பதோ அல்லது  அறியாத புதிய நாட்டில் அவனை மட்டுமே நம்பி வந்து அந்தரித்து நிற்கும் அவளின் விருப்பின்றிய இத் திணிப்பு ஒரு வித ஆணாதிக்க வல்லுறவு என்பதோ இவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை.

மொத்தத்தில் குழந்தை கூட இருவரின் அன்பின் அடையாளச் சின்னமல்ல. ஒருத்தியை ஒவ்வாத சிறையிலடைக்க   அவளது கால்களில் நீங்கள் பூட்டும் விலங்கென்றே நீங்கள் விளங்கிக் கொள்வதால் அதையும் எந்தவொரு எதிர்கால லட்சியத்தோடும் வழிநடத்த எண்ணுவதில்லை.

ஒரு காலத்தில் வெள்ளைக்காரர்கள் வாழ்க்கை முறையைப் பார்த்து முகத்தைச் சுளித்த  எம் சமுதாயத்தைப் பார்த்து இன்று வெள்ளையின நாடுகளின் காவற்துறையும், குடும்ப நல மன்றங்களும், குடும்ப நீதிமன்றங்களும் வெளிப்படையாக காறித் துப்பவில்லை, முகம் சுளிக்கவில்லை  அவ்வளவு தான்.

இத்தனை தூரமும் இந்தக் கட்டுரையில்  ஆண்களை மட்டுமே சாடிக் கொண்டிருப்பதாக உங்களுக்குத் தோன்றினால் அதன் பின்னால் உள்ள தூண்டி யார்  என ஆராய்ந்து பாருங்கள்.  இப்படியான திட்டங்களை தீட்டி அதற்கான அபலைப் பெண்களைத் தேர்ந்தெடுப்போர் நிச்சயமாக  அந்தந்தக் குடும்பங்களில் உள்ள ஆண்கள் அல்ல.  குறிப்பிட்ட ஆணுக்கு நெருங்கிய உறவில் உள்ள பாட்டி. அம்மா, சித்தி ,மாமி,  அக்கா,  என்ற பெண் என்னும் கொடும்  விஷங்களே என்பது உணர்வீர்கள் 

இவர்களின்  இந்த விளையாட்டுக் கல்யாணங்கள்  ஒரு காலத்தில் முற்று முழுதாக செல்லுபடியாகியது.  தற்காலத்தில் எமது சந்ததியில்  ஒரு கூறிப்பிட்ட பகுதியினராவது எதிர்ப்பையும் வெறுப்பையும் தாங்கிக்கொண்டு அதை ஆராய எதிர்க்கத் தொடக்கி விட்டோம்.  அடுத்த சந்ததி தன்னைக் கட்டுப்படுத்தும்  அனைத்தையும் தட்டி விட்டுத் தாண்டிச் செல்லும் என நான்  எண்ணுகிறேன். அப்போது  உங்கள் சுயநல விளையாட்டுக் கல்யாணங்களின் விபரீதங்களே உங்கள் முகத்தில் ஓங்கி  அறைந்து கற்பிக்கும் தனிமனித வாழ்வும் அதன் உரிமைகளும் பற்றி.

"மீட்டும் விரல்கள் மீட்டினாலன்றி எந்த வீணையும் சுபராகங்களை இசைப்பதில்லை"




Saturday, July 22, 2017

ஒரு ஆத்மாவின் விடைபெறும் கானம்


"Nobody can save me......"  என்ற  இறுதி  வரிகளோடு ஓய்ந்து விட்டது அந்தக் குரலும்,  அதன் ஆத்மா தாங்கிய  அழுத்தங்களும் வலிகளும்.

CHESTER CHARLES BENNINGTON
20.03.1976  ---  20.07.2017  †

Linkin Park  இசைக்குழுவின் பிரதான பாடகர்   செஸ்ரர் சார்லஸ்  பெனிங்ரன்  நேற்று முன்தினம்  கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பதை   சடுதியாக அறிந்த போது மனம் ஒரு முறை ஸ்தம்பித்ததே தவிர அந்த முடிவில் அதிர்ச்சியேதும் ஏற்படவில்லை.  எப்போதும் வெளிப்படையான , ஒப்பனைகளற்ற  வார்த்தைகளால் தன் உணர்வுகளைக் கவிவடித்து இசையமைத்துப் பாடும் அவரது பாடல்கள்  அவர் தனது முடிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார் என்பதை  வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தும் ,   அவைகளில்  அவரது மனதின் வலிகளை அப்பட்டமாக அவர் உணர்த்திக் கொண்டிருந்த போதும், அவை வெறும் பொழுதுபோக்குப் பாடல்களாக  மக்கள் மத்தியில்  பிரபலமாகி   ரசிகர்களை மகிழ்ச்சிப் படுத்தியிருக்க  தன் வலிகளையும்  ரசிகர்கள் மகிழ்ச்சிக்கு  காணிக்கையாக்கி விட்டு இறந்து போனார் என்பதே அதிக வேதனையான விடயம்.  
.
மனவழுத்தம்  அல்லது மனச்சிதைவு,  மனச்சோர்வு  (Depression) என  வகைபிரித்துச் சொல்லப்படும்   நோய் நிலையினால் பாதிக்கப்பட்டிருக்கும்  மற்றையோரை விட தங்கள் படைப்புக்களால் நேரடியாக சமூகத்துக்கு முகம் கொடுக்கும்  எழுத்தாளர்களையும்,  கலைஞ கர்களையும் இலகுவில் அடையாளம் கண்டு கொள்ள முடியும் .  அவர்களது படைப்புக்களில் இடைக்கிடையாவது மன அழுத்த வெளிப்பாட்டுகள்  ஓவியங்களாக , பாடல்களாக கவிதைகளாக  வெளிப்படுத்தப் பட்டு  விடும் என்பது மட்டுமல்ல  மற்றவைகளை விட அவை   மிக  அனுபவபூர்வமாக உணர்ந்து தத்ரூபமாக சித்தரிக்கப் பட்டிருக்கும்.  அப்படித்தான் இவரது பாடல்களும் அனேகமாக எப்போதும்  வெளிப்படுத்திக் கொண்டே இருந்தன. 
.
அமெரிக்காவின்  அரிஸோனாவில்   பிறந்த  இவருடைய முதல்  இறுவட்டான
Hybrid Theory   2000  ஆம் ஆண்டு வெளியானது. அதற்காக  RIAA  (Recording Industry Association of America) வைர விருது வழங்கிக் கௌரவித்தது.  அதனுடன் அதிகளவில் பிரபலமாகியது  அதனைத்    தொடர்ந்து கிட்டத்தட்ட ஒன்று விட்டு ஒரு ஆண்டாவது அவரது புதிய இசை இறுவட்டுக்கள் வெளியாகி  காற்று வெளிகளில் வெற்றிகரமாக  அவரது குரலில்  இசையை கலந்து கொண்டேயிருந்தன.
.

ஆரோக்கியமற்ற  பாலபராயத்தைக் கொண்டிருந்ததே இவரின் பின்னாலான அத்தனை சிதைவுகளுக்கும் காரணமாக இருந்திருக்கலாம்.  தன் ஏழாவது வயதில் இருந்து  பதின்மூன்றாவது  வயதுவரை  தன் தந்தையின்  நண்பரால் தொடர்ந்து  பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளான இவர்  தனது இந்த அவலம் பற்றி வெளியில் சொல்லத் தயங்கியமைக்கு  இரண்டே காரணங்கள் தான்.  ஒன்று  அதை அவர் வெளிப்படுத்துமிடத்து  சிறுவனான தன் குரல் பெரியோர் மத்தியில் ஒரு பிரச்சனையாக எடுக்கப்பட்டு தான் காப்பாற்றப் படுவோம் என்பதை விட தான் பொய் சொல்வதாக குற்றஞ்சாட்டப் படலாம் என எண்ணினார். காரணம்  அந்நிலைக்குத் தன்னைத் தள்ளியவர் அறிமுகமற்ற ஒருவர் அல்ல. தந்தையின் நண்பர் என்பதால் தன் வாதம் நம்பப்படாமல் போகும் என நம்பினார்.  மற்றையது  தன்னை  ஓரினச் சேர்க்கையாளன் வரிசையில் சேர்த்து விடுவார்களோ என்ற பயம். இந்தக் குற்ற  உணர்வும் தாழ்வு மனப்பான்மையும்   பாடசாலையில் மற்ற மாணவர்களுடன் அவர்கள் போன்று இயல்பாக சேர்ந்திருக்க முடியாத நிலைக்குத் தள்ளிவிட, தனக்குள் ஒதுங்கிக் கொண்டவரை தம் பங்குக்கு காரணம் புரியாமல் சகமாணவர்களும் ஒதுக்கிக் கொண்டார்கள்.   தன் மனவழுத்தங்களுக்கு வடிகால் போலும்  தன்னை ஆறுதற் படுத்தவும் தனிமைக்குள் புதைந்து அவர் தன்னோடு தானே  பேசிக்கொண்ட மொழிகள் கவிதையும் ,ஓவியமும்.
.
தன்னை விட பதின்மூன்று வயது அதிகமான ஒரே சொந்தச்  சகோதரனைக் கொண்டிருந்த  இவருக்கும் சகோதரனுக்கும் வயது இடைவெளி காரணமாக அதிக வெளிப்படையாக பேசிப்பழகும் வாய்ப்புக்கள் குறைவாகவே இருந்ததில் அதிகமாக தனிமை உணர்வை சிறு வயதிலேயே உணரத்தொடங்கியிருந்தார் .    அமெரிக்கக் காவற்துறையின் சிறுவர் துஷ்பிரயோகத துப்பறியும் பிரிவில் கடமையாற்றிய இவரின் தந்தையால்  தன் மகனின் நிலைபற்றி உணரமுடியாதது  தான்   சமூக  வாழ்வியலின் வெளிப்படையான  அருவருப்பான முகம் என்றால் ,
.
தன் பதினோராவது  வயதில் பெற்றோரின் விவாகரத்துக்குப்  பின்  தந்தையிடம் வளர்ந்த இவர் தன் மனதுக்கு அமைதி தேடி போதைவஸ்து ,  மதுபாவனை  போன்ற தன்னிலை மறக்கும் வழிகளுக்கு தன்னை ஆட்படுத்திக் கொண்டிருந்து விட்டு  தன் பதினேழாவது  வயதில்  தாயுடன் இணைந்து அவரது பாதுகாப்புக்குள் வந்த பின்  போதையில் இருந்து அவரை மீட்பதற்காக அவரது அம்மாவான  மருத்துவத் தாதியினால்  வீட்டுச்சிறை வைக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப் பட்டமை இன்னொரு நேர்மாறான    வேதனையான  பக்கம்.  இக்காலத்தில் மனிதர்களைக் கொன்றுவிட்டு எங்காவது ஓடவேண்டும் போன்றதொரு வெறிக்கு ஆளாகியிருந்ததாக அவரே பிற்காலத்தில் கூறியிருக்கிறார்
.

ஆரோக்கியமற்ற அவரது  சிறுவயது மனநிலையின் காரணமாக கல்வியில் எந்தவொரு உயரமான நிலைக்கும் வரமுடியாது போன அவர் தன் பாடசாலைக்காலம் முடிய  பேர்கர் கிங் உணவகத்தில் சிறிது காலம்  தொழில் புரிந்த  பின் முழுநேரப் பாடலாசிரியரும் பாடகரும் ஆனபோது புகழும் பணமும் தேடிவரத் தொடங்கின .   பிரபலமான பின் போதை வஸ்துப் பழக்கத்தில் இருந்து முழுவதுமாக வெளியே வந்தாலும் தன் மதுப் பழக்கத்தில் இருந்து அவரால் வெளிவர முடியாமற் போயிற்று.  மன அழுத்தம் அதிகமாகிய வேளைகளில்  தன்னால் இயல்பாக  ஒன்றில்  நிதானமாக நிலைத்திருக்க   முடியவில்லை என்றும்  அவரை பிரபலமாக்கி உலகத்துக்கு அடையாளப்படுத்திய  தன் பிரியமான இசைக்குழுவை விட்டே வெளியேறிவிடவும்  துடித்திருக்கிறார்.
.
ஒன்பது வருடகாலமே நீடித்த அவரது முதல் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்த பின்,  இறப்புவரை நீடித்த  அவரது  மறு திருமண  வாழ்விலுமாகச் சேர்த்து  ஆறு குழந்தைகளுக்குத் தந்தையான செஸ்ரர்  தன் வாழ்வில்  தன் உண்மை நிலையுணர்ந்து  நிரந்தர நேசிப்புக்கு ஆளானது இரண்டாவது மனைவியிடம் மட்டுமே.  பாலபராயம் தொட்டு பலரும் பலசந்தர்ப்பங்களிலும் சிதைத்துப் போட்ட ஒரு மனதை நேசித்து அவரை மனச்சிதைவில் இருந்து வெளியில் எடுக்க அவரது காதல் மனைவி  எவ்வளவு போராடிய போதும் இறுதி வரை அதிலிருந்து வெளியே வரமுடியாதவராகவே   மனைவி பிள்ளைகள் சுற்றுலாவுக்குச் சென்று  தான்  தனிமைப்பட்டு நின்ற ஒரு சந்தர்ப்பத்தில்  கழுத்தில்  சுருக்குப் போட்டுக் கொண்டு  தன் வலிகளில் இருந்து விடுபட்டு   உலகுக்கும் விடைகொடுத்து  விட்டார்.

 இது  அந்தப் பெண்ணைப் பொறுத்தவரை நேசம் கொண்ட அவரது  மனதை  இறுதிவரை அழுத்தும் ஒரு விடயமாக இந்த மரணம்  இருக்கக் கூடும்.  ஏனெனில்,   நடைமுறை வாழ்வை எடுத்துக் கொண்டோமானால்,  எவரெவரோ  எல்லாம் உருவாக்கிவைத்த  மனச்சிதைவாளரை  மீட்டெடுக்க  வேறு எவரோ தான் அவர்மீது கொண்ட நேசம் மற்றும் புரிதல் காரணமாக  நம்பிக்கையுடன்  போராடிக் கொண்டிருப்பார். மீட்டே எடுக்க முடியாத நிலையில் அவர்கள் தம்மை மாய்த்துக் கொள்ளும் போது தம்மை அறியாமலேயே தம்மை  நேசித்த இன்னொருவரை அல்லது சிலரை  மனச்சிதைவுக்குள் தள்ளி விடுகிறார்கள்  என்பதை  அவர்கள் உணர்வதில்லை உணர்ந்தால் வாழ்வதற்காக போராடக் கூடும் .

தன் இறுதி இறுவட்டான  one more light  உடன்  ரசிகர்கள் மனதை வரிகளாலும் வலிகளாலும் ஆட்கொண்ட அந்தக் கவி, தன் குரலால் ஆத்மாவை வருடிய இசை  இறப்புக்குப் பின்னால் இன்னொரு வெளிச்சம் கிடைக்கும் என எண்ணிப்  புறப்பட்டு விட்டது.  அவர்கள் தீர்மானித்து  விட்டால் Nobody can save them!




I’m dancing with my demons
I’m hanging off the edge
Storm clouds gather beneath me
Waves break above my head
At first hallucination
I wanna fall wide awake now
You tell me it’s alright
Tell me I’m forgiven
Tonight
But nobody can save me now
I’m holding up a light
Chasing up the darkness inside
'Cause nobody can save me

Stare into this illusion
For answers yet to come
I chose a false solution
But nobody proved me wrong
At first hallucination
I wanna fall wide awake
Watch the ground giving way now
You tell me it’s alright
Tell me I’m forgiven
Tonight
But nobody can save me now
I’m holding up a light
I’m chasing up the darkness inside
'Cause nobody can save me

Been searching somewhere out there
For what’s been missing right here
I’ve been searching somewhere out there
For what’s been missing right here

I wanna fall wide awake now
So tell me it’s alright
Tell me I’m forgiven
Tonight
If only I can save me now
I’m holding up a light
Chasing up the darkness inside
And I don’t wanna let you down
But only I can save me

Been searching somewhere out there
For what’s been missing right here

....................................................................................................................................................

என் குறிப்பு :- 


தனிப்பட்ட முறையில் இவரது எழுத்தில் நான் கவரப்பட்டிருப்பதல்ல இப்பதிவின் காரணம்.  சமூகம். அது தான் காரணம்   எம்மைச் சுற்றியுள்ள எம் சமூகத்துக்காகவே  அவரது வாழ்க்கையைப் பதிவிட்டிருக்கிறேன்.   குழந்தைக்கால  மன அழுத்தம்  ஏற்பட பல காரணங்களில் பாலியல் துஷ்பிரயோகம் முக்கியமானது. அதற்கு முக்கியமான காரணிகளாக அமைபவர்கள்  அக்குடும்பத்துக்கு அறிந்தவர் அல்லது நெருக்கமானவராகவே   அநேகமான சந்தர்ப்பங்களில் அமைவதால் குழந்தை ஊமையாக்கப்பட்டு  வெளிப்படுத்தமுடியா உணர்வுகளுடன் தன்னைத் தனிமைப்படுத்தக் கற்றுக் கொள்கிறது . அதிலிருந்தே தொடராக அதனது அத்தனை சிதைவுகளும் ஆரம்பிக்கிறது.  நாங்கள் குடும்பத்தை குடும்ப மானத்தை கட்டிக் காக்கிறோம் பேர்வழி என்று  ஒரு மனதை அணுவணுவாக சிதைத்து சீரழிந்த,  நம்பிக்கையற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.  அல்லது உருவாவதை  வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

எவ்வளவோ சாதனைகளைச் செய்யக் கூடிய அறிவுள்ள அவர்கள் படைப்புக்களை   அதற்குள்       எ ன்ன உணர்த்துகிறார்கள் என்று  உணர விரும்பாமல் விழுந்து  விழுந்து ரசிக்கிறோம். எம்மைச் சந்தோசப்படுத்திக் கொண்டே  நாம் பார்த்திருக்க தம் படைப்புக்களில்  ஒரு விடைபெறுதலை உணர்த்தி விட்டு அவர்கள் கையசைத்து விடுகிறார்கள் .

முதல் நாள் அதிர்ச்சி,  இரண்டாம் நாள்  ஒரு உச்சுக் கொட்டல்,  மூன்றாம் நாள் வாழத்தெரியாதவர்  என்றொரு  பட்டமளிப்பு  கடந்து விடுகிறோம். 

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மட்டுமல்ல,  சிறுவயதில் ஏற்படும் குடும்ப  ஒடுக்குமுறை நிராகரிப்பு  தனிமைப்படுத்தல்  போன்றவற்றின் அழுத்தங்களும் பின்னாட்களில் இப்படியான நோயாளிகளையே உருவாக்குகிறது என்பதை  ஒரு துளி  அன்பை ஆதரவை வழங்க மறுக்கும்  நீங்களும் உணர்வீர்கள்.   நானும் உணர்வேன் .