கைகால் முளைத்த இந்த மாபெரும் மருந்தை எம் சமூகத்தில் பரவலாக பலரும் பல்வேறு நோய் தீர்க்கும் சிறந்த ஔடதமாகவே உபயோகித்து வருகிறனர் என்பதைப் பார்க்கும் போது நாம் சுய அறிவு வளர்ச்சி பெற்ற ஒரு சமூகத்தில் தான் வாழுகின்றோமா என்ற குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
ஒரு ஆண் அளவுக்கு மிஞ்சி குடித்து, உலகை மறந்த மயக்கத்திலே திரிகிறானா?
பிடித்து இழுத்து வந்து போடு ஒரு கால் கட்டை. நிறுத்தி விடுவான்.
பெண் பித்துப் பிடித்து ஸ்திரீ லோலனாகி அலைகிறானா?
பிடித்து இழுத்து வந்து போடு ஒரு கால்கட்டை அவன் திருந்தி விடுவான்.
தெருப்பொறுக்கியாகி வலுச்சண்டைக்கு ஆள் சேர்க்கிறானா?
பிடித்து இழுத்து வந்து போடு ஒரு கால் கட்டை அடங்கிக் கிடப்பான்.
உழைப்புப் பிழைப்பற்று பொறுப்பற்று இருக்கிறானா?
பிடித்து இழுத்து வந்து போடு ஒரு கால் கட்டை பொறுப்பு தானாக வந்து விடும்.
சற்று மூளை பிசகியது போல அலைகிறானா?
பிடித்து இழுத்து வந்து போடு ஒரு கால் கட்டை தெளிவாகி விடுவான்.
இந்த மருந்து இந்த நோயாளிகளால் ஜீரணிக்கப் படுகிறதோ, இல்லையோ நிச்சயமாக , மருந்துக்கே தன் நிலை ஜீரணமாகாமல் வீணாகிப் போகிறது என்ற உண்மை இந்த சமூகம் அறியாமலா இருக்கப் போகிறது.
ஒரு குடிகாரனை ,அல்லது எப்போதும் போதை மயக்கத்தில் இருப்பவனை மாற்றி எடுத்து மனிதனாக்க இன்றைய காலத்தில் அதற்கென்றே எத்தனையோ மருந்து வகைகள், பிரத்தியேக வைத்தியசாலைகள் , ஆற்றுகை ஆலோசனை மையங்கள் வந்த பின்பும் இன்றும் எம்மவர்களுக்கு அதை ஏற்றுக் கொள்வதை விட ஒரு பெண்ணின் வாழ்வை இதற்காகப் பயணம் வைப்பது இலகுவாக இருக்கின்றது. அல்லது செலவற்றதாக அல்லது தம் மீதிருக்கும் பொறுப்பை அடுத்தவர் தலையில் ஏற்றி வைத்து விட்டு இளைப்பாறுவது போன்ற ஆசுவாசமாக இருக்கிறது. சரி அப்படி ஒரு கால்க்கட்டுப் போட்டாயிற்று என்று வைத்தாலுமே அதன் பின் புதிதாய் வந்த ஒருத்திக்கு தன்னை மாற்றிக் கொண்டு இருக்கப் போகிறானாஎன்றுபார்த்தால் ...
அதன் பின் அனேகமாக அது நித்தப் போர்க்களமாகவே தான் இருக்கிறது. இதற்கிடையில் திட்டமிடா நிலையில் குழந்தைகளும் வந்து சேர்ந்து கொள்கின்றன. அவை தம் குழந்தைமை வழிகாட்டலை தொலைத்து விட்டு இவற்றையே கண்டு வளர்வதால் ஒன்றில் இப்படியான ஒரு குடும்பச் சூழ்நிலைக்கு முழு எதிர்ப்பானவர்களாகவோ அன்றி இன்னொரு குடிகாரனாகவோ அன்றி ஆண்களை நம்பாத அடக்கியாளும் பெண்ணாகவோ உருவெடுக்கத்தான் அவர்களால் முடிகிறதே தவிர சிறந்தவொரு, அது கூட வேண்டாம் சாதாரண சமூகப் பிரஜையாகக் கூட இந்தச் சமூகத்தில் அவர்களால் உருவாக முடிவதில்லை.
'பலமரம் பார்த்த தச்சன் (இந்த வார்த்தைப் பிரயோகத்துக்கு மன்னிக்கவும். பழமொழிக்காகவே பதிவிட்டேனேயன்றி ஒரு குறிப்புணர்த்தல் அல்ல) ஒரு மரமும் அரியான்'என்பது போல பலரோடு அலைந்தவனை ஒரு கட்டுக்குள் போடுவது என்பதே சிரமமான விடயம் என்றாகும் போது அப்படி ஒரு கலியாணம் கட்டி வைத்தாலும் பல மரம் தாவி சுவையறிந்த வௌவால் ஒரு மரத்தில் நிலைக்குமா என்பது யோசிக்க வேண்டிய விடயமே. எவரும் தன் அனுபவப் படிமங்களினூடே தான் தன்னை சுற்றிய உலகைப் பார்ப்பார்கள் என்ற அடிப்படை விதிப்படி படி பார்த்தால் பல குடும்பங்களில் உள்ள மனைவிகள் மீதான கணவன்களின் சந்தேகத்துக்கு வித்திடுவது எதுவென இலகுவில் புரிந்து விடும். கூடவே இத்தனை மனவுளைச்சலை தாங்கும் ஒருத்தி தன் சகிப்புக்கள் எல்லை கடந்த ஒரு நிலையில் "போதும் நீ போ" என ஒதுக்கிவிட்டு நகர்ந்து போக நேராதா?
யார் எவர் என்று தெரியாத, தனக்கு உரிமையற்றவர்களிடம் எல்லாம் சண்டைக்குப் போகும் எதோ ஒரு வித மன வக்கிரம் கொண்டவன் ஒருவனை, ஒருத்திக்குக் கட்டிவைப்பதான் மூலம் அமைதி கொள்ளவைத்து அடக்கிவைக்க முடியுமானால் அதில் சொல்லப்படுவது என்ன? அவனுக்கு மூர்க்கமும் ஆவேசமும் தோன்றும் நேரமெல்லாம் யாரோ எவரோ வாங்கும் அடி உதையை நீமட்டும் வீட்டுக்குள் தனியாக உரிமையோடு வாங்கு.அதற்கான அனுமதியை ஊர்கூட்டி உரிமையோடு வழங்கி வைத்திருக்கிறோம் என்பதா? அல்லது தெருவில் அவன் அடிபட்டுத் திரிந்தால் மற்றவர்கள் திருப்பியடித்து காயப்படுத்தி விடுவார்கள் அல்லது குடும்ப மானம் போய் விடும். ஆதலால் அவனில் எந்தக் காயமும் ஏற்படாது, குடும்பமானம் சந்தி சிரித்து விடாமல் இருப்பதற்காய் 'அவனின் மதம் ஓயும் வரை மனைவியான நீ அடிபட்டுச் சா' என்பதா?
உழைக்க மறுத்து திரியும் பொறுப்பற்ற சோம்பேறிக்கு ஒருத்தியை இழுத்து வந்து கட்டி வைத்தால் அவள் அவனுக்கும் சேர்த்து உழைத்து குடும்பத்தையும் சேர்த்து சுமக்கும் , தன் தலைக்கு விஞ்சிய பொறுப்புக்குத் தள்ளப்பட்டு விட மாட்டாளா? போதும் போதாமைக்கு அவனது கைச் செலவுக்கும் சேர்த்து உழைக்கவேண்டிய நிலையும், அப்படி அவன் கேட்கும் போதெல்லாம் கொடுக்காது விட்டால் ஆண் என்ற ஆதிக்கத்தில் அடியும் உதையும் வாங்கிக்கொண்டு வருசா வருஷம் வாரிசுகளையும் பெருக்கிக் கொண்டு அயல்வீடுகளில் குத்தி இடித்து வீட்டிலும் போய் குத்து வாங்கும் பெண்களை அயலில் காணாமல் நாம் இவ்வாழ்வைக் கடக்கவில்லை என்பதை நீங்களும் உணர்வீர்கள் .
பிறப்பில் சீராக இருந்து இடைக்காலத்தில் சற்று மூளை பிசகி பிதற்றுகின்றானா அவனுக்கும் வைத்தியசாலை வைத்தியம் எதுவும் தேவையே இல்லை. பெண்ணே சரியான மருந்தென தீர்மானித்து விடுகிறார்கள். அவள் பொறுமை உள்ளவள் என்றால் குரங்கு கையில் கிடைத்த பூமாலையாகி ஒரு கட்டத்துக்குமேல் சகித்து சலிப்பாகி மனம் சின்னாபின்னமாகி
மனச்சிதைவடைந்த நிலைக்கே வந்து விடுகிறாள். மனைவி பொறுமையற்றவள் எனில் வன்முறையை கையில் எடுத்தாள் என்றால் அவனுக்கு நோய் நிலை முற்றி விடும்.
இந்த எதிர்பார்ப்புக்கள் நம்பிக்கைகள் எல்லாமே நிறைவேற சாத்தியமான ஒரு புள்ளியும் உண்டு. அது என்றோ எங்கோ ஒருவன் யாரோ ஒருத்திமேல் கொண்ட தீராத காதலால் தன் தகாத பழக்க வழக்கங்களை அவளுக்காக மாற்றிஇருக்கலாம். அவளும் அவன் மீது கொண்ட காதலால் நம்பிக்கையோடும் பொறுமையோடும் முயன்று இருவரும் ஒரு திருந்திய சிறந்த வாழ்வை வாழ்ந்திருக்கலாம் . அதை மனதில் கொண்டு பின்னாளில் அதுவே ஒரு தீர்வு போல புலியை பார்த்து பூனை குறிசுட்ட கதையாக கேலிக்குரியதாக அல்லது மிக காயப்படுத்துவதாக மாற்றமடைந்து இருக்கலாம்.
ஆனால் .... நாம் தீர்மானம் செய்து திணித்த முடிவை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட நாம் கொண்டிருக்கும் ஆயுதம் என்னவென்றால்,எம் சமுதாய அமைப்பில் கழுத்தில் ஒரு முறை விழுந்து விட்டால்,விழுந்தது இறுக்கிக் சாகும் நிலை வந்தாலும் , அது விலங்கெனினும் சகித்துக் கிடக்கும் மனப் பக்குவத்தில் பெண்ணை குடும்பமும் சமூகமும் சேர்ந்து மனச்சலவை செய்து உருவாக்கி வைத்திருக்கும் கட்டுப்பாடு அல்லது சமூகக் கடமைப்பாடு. .
அது என்ன மாதிரியெனில் சில மேற்குலக நாடுகளில், வீதிக்கும் வீட்டுக் காணி எல்லைக்கும் இடையில் உயரமான மதில்களோ வேலிகளோ எழுப்பப்படாமல் மிக பதிவான ஒரு அடிக்குக் உட்பட்ட உயரத்தில் மதில்கள் இருக்கும். தங்கள் காணிகளில் உலவும் தம்வீட்டு நாய்கள் வீதியில் இறங்கும் அபாயம் உண்டு என்பதால் அது குட்டியாக இருக்கும் பருவத்தில் எல்லையில் வேலிபோல கம்பிகளை சுற்றி அதில் சிறியளவு அதிர்வு தரக்கூடிய அளவில் குறைந்தளவு மின்சாரம் பாச்சி இருப்பார்கள். துள்ளிக்கொண்டு வீதிக்கு ஓட நினைக்கும் நாய் அதில் மோதுண்ட அதிர்வில் பயந்து திரும்பி விடும். பலமுறை அப்படியான அனுபவத்தைப் பெற்றபின் அவ் வேலியைநீக்கி விடுவார்கள். ஆனாலும் அதன் பின் அதன் அடிமனதில் அதைத் தாண்டக் கூடாது என்ற எண்ணம் திடமாகப் பதிவாகி இருக்கும். தன் வாழ்விடத்தில் உயிராபத்து ஏற்படும் அபாயம் ஏதும் நிகழும் நிலைவந்தால் கூட அது அந்த எல்லைகளை தாண்டி வீதியில் இறங்கித் தன்னைக் காக்கத் துணியாது.
எம்மைப் பொறுத்தவரை அப்படியான மின்சாரம் பாச்சிய கம்பிகளின் வேலையை எம் நாவே செய்து கொள்வதால் தாண்ட தைரியம் அற்ற,தாண்டி விட்டு நம் சமூகத்தின் பார்வைக்கும் நாக்குக்கும் முகம் கொடுக்கும் திராணியற்ற பலவீன நிலையில் நிகழும் அதிக தற்கொலைகளையும் குற்ற உணர்வே அற்று இதற்கு இதை விட நல்லவொரு தீர்வு இருக்க முடியாது என்பது போல வேடிக்கை பார்க்கும் வக்கிரத்திற்கு நன்றாகவே பழக்கப் பட்டிருக்கிறோம்.
இதற்கெல்லாம் வசதியாக அமையப்பெறுபவர்கள் தாயை, தந்தையை அல்லது இருவரையும் இழந்த நிலையில் மற்றோரின் பராமரிப்புக்குள் ஒடுக்கப் பட்டிருக்கும் பரிதாபத்துக்குரிய சீவன்கள். ஏதோ ஒன்றில் தள்ளி விட்டு விட்டு வாழ்வமைத்துக் கொடுத்துய் விட்டேன் என மார்தட்டிக் கொண்டு எது நடந்தாலும் கண்டு கொள்ளாமல் ஒதுங்கி விடுவார்கள் அப்பெண்ணின் பாதுகாவலர்களாக அறியப்பட்டார். நாதியற்ற சீவன் தானே என்ன நாய்ப்பாடு படுத்தினாலும் போக்கிடமற்றுக் காலுக்குள்ளேயே விழுந்து கிடக்கும் என்ற திட்டமிடலோடு தான் இப்படியான வைத்தியத்துக்கான மருந்து நிலையான பெண்கள் தீர்மானிக்கப் படுகிறார்கள். ஆக அவர்களுக்கான முன் வாழ்விலும் அமைதியில்லை. திருமண வாழ்வும் பணயம் வைக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது.
மேற்படி இந்நடைமுறைகள் காலமாற்றத்தில் தம் தடங்களையும் சற்று மாற்றி அல்லது விரித்துக் கொண்டு பயணிக்கத் தொடங்கிய படிமுறை மாற்றத்தில் இன்று மேற்குறிப்பிட்ட இத்தனை சீரழிவுகுள்ளும் அடங்கும் ஆண்களின் முக்கிய தகுதி ஊரிலிருந்து ஒரு பெண்ணை ஸ்பொன்சர் செய்து கூப்பிட முடிந்த வெளிநாட்டு நிரந்தர வதிவிட உரிமையாக இருக்கிறது. நெருப்பில் விழுந்த விட்டில் போலாகிவிடப் போகிறது கனவு சுமந்த தம் வாழ்வு என அறியாது அப்படி வந்து சேரும் பெண்கள் சுதாரித்துக் கொண்டு இந்தப் பந்தத்தை விட்டு வெளியேறிவிடாமல் கட்டிப் போடக்கண்டு பிடித்திருக்கும் விலங்கு இன்னும் வேடிக்கைக்கும் வேதனைக்கும் உரியது.
"மனிசி வந்தவுடன ஒரு குழந்தையைக் குடுத்துப் போடு. அப்பத்தான் அங்க இங்க என்று விலகாமல் வீட்டுக்குள்ள கிடக்குங்கள். இல்லாட்டி ஆபத்துத்தான்" என்று ஆணுக்கு நெருங்கிய வட்டாரங்கள் கொடுக்கும் அறிவுரையைக் கேட்டால் முகத்திலேயே காறியுமிழத் தான் தோன்றும். மேற் குறிப்பிட்ட அறிவுரைக்குள் அடங்கியிருக்கும் ஒரு அநாகரீகமான கட்டாயத் திணிப்பு தம்பதிகள் இருவருக்கான தனிப்பட்ட தாம்பத்தியத்துக்குள் மூக்கு நுழைக்கும் மிக அருவருப்பான செயல் என்பதோ அல்லது அறியாத புதிய நாட்டில் அவனை மட்டுமே நம்பி வந்து அந்தரித்து நிற்கும் அவளின் விருப்பின்றிய இத் திணிப்பு ஒரு வித ஆணாதிக்க வல்லுறவு என்பதோ இவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை.
மொத்தத்தில் குழந்தை கூட இருவரின் அன்பின் அடையாளச் சின்னமல்ல. ஒருத்தியை ஒவ்வாத சிறையிலடைக்க அவளது கால்களில் நீங்கள் பூட்டும் விலங்கென்றே நீங்கள் விளங்கிக் கொள்வதால் அதையும் எந்தவொரு எதிர்கால லட்சியத்தோடும் வழிநடத்த எண்ணுவதில்லை.
ஒரு காலத்தில் வெள்ளைக்காரர்கள் வாழ்க்கை முறையைப் பார்த்து முகத்தைச் சுளித்த எம் சமுதாயத்தைப் பார்த்து இன்று வெள்ளையின நாடுகளின் காவற்துறையும், குடும்ப நல மன்றங்களும், குடும்ப நீதிமன்றங்களும் வெளிப்படையாக காறித் துப்பவில்லை, முகம் சுளிக்கவில்லை அவ்வளவு தான்.
இத்தனை தூரமும் இந்தக் கட்டுரையில் ஆண்களை மட்டுமே சாடிக் கொண்டிருப்பதாக உங்களுக்குத் தோன்றினால் அதன் பின்னால் உள்ள தூண்டி யார் என ஆராய்ந்து பாருங்கள். இப்படியான திட்டங்களை தீட்டி அதற்கான அபலைப் பெண்களைத் தேர்ந்தெடுப்போர் நிச்சயமாக அந்தந்தக் குடும்பங்களில் உள்ள ஆண்கள் அல்ல. குறிப்பிட்ட ஆணுக்கு நெருங்கிய உறவில் உள்ள பாட்டி. அம்மா, சித்தி ,மாமி, அக்கா, என்ற பெண் என்னும் கொடும் விஷங்களே என்பது உணர்வீர்கள்
இவர்களின் இந்த விளையாட்டுக் கல்யாணங்கள் ஒரு காலத்தில் முற்று முழுதாக செல்லுபடியாகியது. தற்காலத்தில் எமது சந்ததியில் ஒரு கூறிப்பிட்ட பகுதியினராவது எதிர்ப்பையும் வெறுப்பையும் தாங்கிக்கொண்டு அதை ஆராய எதிர்க்கத் தொடக்கி விட்டோம். அடுத்த சந்ததி தன்னைக் கட்டுப்படுத்தும் அனைத்தையும் தட்டி விட்டுத் தாண்டிச் செல்லும் என நான் எண்ணுகிறேன். அப்போது உங்கள் சுயநல விளையாட்டுக் கல்யாணங்களின் விபரீதங்களே உங்கள் முகத்தில் ஓங்கி அறைந்து கற்பிக்கும் தனிமனித வாழ்வும் அதன் உரிமைகளும் பற்றி.
"மீட்டும் விரல்கள் மீட்டினாலன்றி எந்த வீணையும் சுபராகங்களை இசைப்பதில்லை"