"புள்ளை பெத்துக்கிறதுக்கு கல்யாணம் பண்ணிக்கணும் என்றோ, யாரோ ஒருவனுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளணும் என்றோ அவசியமில்லை. என் குழந்தையும் உன்னைப்போலவே இருக்கணும் என நினைக்கிறியா? அது எனக்குப் பிடித்தமாதிரி இருக்கணும் அதுக்கு யாரோ ஒருவனின் வெறும் (....) குரோமசோம் போதும் என்று தன்னுரிமை வாதமிடும் ஒரு மனைவி.
பெண்ணை பெண்ணாகப் பார்க்கமறுக்கும், தாயானால் மட்டுமே அவள் பெண்ணாக ஏற்கப்படுவாள் என்பதை வார்த்தை வீச்சுக்களால் ஆதாரப்படுத்தும் எம் சமூகத்தின் பிரதிநிதியாய் ஒரு குடும்பத்தலைவி, தாய்மையடையாத பெண்ணைக் குற்றவாளிக் கூட்டில் நிறுத்திவிட்டு ஆண் என்பவன் ஆண்மைக் குறைபாடற்ற பிள்ளைவரம் தரும் கடவுளாகவே வக்காலத்து வாங்கும் பெண்ணாதிக்கப் பெண்மணிகள் சமூகம்...
இப்படி குழந்தை என்பது பலதரப்பட்ட மனிதர்கள் சமூகம் என எல்லா இடத்திலும் முக்கியப்படுத்தப்படும் ஒரு விடயமாகவே பார்க்கப்பட்டு பல குடும்ப , சமூகப் பிரச்சனைகளுக்கும், தனிமனித மனச்சிதைவுகளுக்குக் காரணமாக அமைந்த போதும், மறுபக்கத்தால் தேடுவாரற்ற குழந்தைகள் சமுதாயம் ஒன்றும் புறக்கணிப்பு ஏற்படுத்திய பலவித மனநிலைச் சிக்கல்களுடன் பல்கிப் பெருகி வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்த அபத்தம் கூட மிக ஆபத்தானது ஒன்றாகவே கவனிக்கப்படவேண்டியுள்ளது என்பதை எந்தவித ஆர்ப்பாட்டமமும் இன்றி ஆதாரங்களுடன் பேசவந்திருக்கும் திரைப்படம் குற்றம் 23.
உள்ளடக்கம் திருப்திகரமாக உள்ள எதுவும் ஆர்ப்பரித்து தன்னை அடையாளம் காட்டவேண்டிய அவசியமில்லை என்பதன் இன்னொரு ஆதாரம் இத்திரைப்படம். தொடராக ஏற்படும் கர்ப்பிணிகளின் மரணம், அல்லது கொலை பற்றிய தேடலும் அதன் பின்னணியுமே கதைக்களம்.மேற்சொன்ன விபரங்கள் போதும் நீங்கள் சட்டமிட்டு ஒரு கதையை அதற்குள் பொருத்திவிட . அதற்கு மேல், வெளியாகி சொற்பதினங்களேயான ஒரு படைப்பின் உள்ளடக்கத்தைப் பகிரங்கப்படுத்துவது விமர்சன தர்மமும் அல்ல. (ஆனால் கதை பற்றி என் தனிப்பட்ட தேடலொன்று உண்டு அதை இதன் முடிவில் தனியாகப் பார்ப்போம். )
பிரபல, பிரமாண்டங்கள் என்று யாருமில்லாத, கதையை நாயகமாகக் கொண்டு அதற்கு தம் கதாபாத்திரங்களால் அனைவருமே உரிய அளவில் சிறப்பாக உயிரூட்டியிருக்கிறார்கள் என்று தான் சொல்லவேண்டும்,
அருண் விஜய்க்கு பாண்டவர் பூமி, என்னை அறிந்தாலுக்குப் பிறகு இன்னொரு சிறப்பான வாய்ப்பாக அமைந்திருக்கிறது இப்படம். எந்த அலட்டலும் இல்லாமல் துப்பறியும் அதிகாரி பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் மனிதர். இடைக்கிடை இளமைக்கால போலீஸ் அதிகாரி சரத்குமாரை நினைவுபடுத்தினாலும் அது கூட எதார்த்தமான ஒன்றாக கம்பீரமாக பொருந்தியிருக்கிறது.
தென்றலாக வரும் மகிமா நம்பியார் மெல்ல அள்ளிக்கொள்ளத் தோன்றும், இடைக்கிடை சற்று அனல் வீசி முரண்டு பிடிக்கும் வீட்டுப் பெண்போல அழகும் இயல்பான நடிப்புமாக சற்று மனதுக்குள் எட்டிப் பார்க்கிறார் . எங்கள் வீட்டில்,உங்கள் வீட்டில், பக்கத்து வீட்டில், நட்பில் உள்ளது போல தோற்றமும் பாவனைகளுமாக தன் கண்களுக்குள் உணர்ச்சிகளைக் கொண்டுவரும் அபிநயா கவனிக்க வைக்கிறார். அதே போல வம்சி கிருஷ்ணா. குறிவைத்த அந்தப் பார்வை....அமர்த்தலான அந்த முகம் அழுத்தமான அந்தத் தோற்றம் பாத்திரத்துக்கு ஏற்ற தேர்வு மாத்திரமல்ல நடிகனாக மனதில் நிற்கக் கூடிய அறிமுகம்.
அதிக சினிமா அறிமுக வெளிச்ச முத்திரைகள் விழாத நடிகர்கள் தேர்வு கதையை கதாபாத்திரங்களினூடு உள்வாங்கி ஒன்றிப்போக வைத்த சிறந்த யுக்தி. கதையோடு ஒட்டாது கௌரவப் பாத்திரங்கள் போல வந்து போன விஜயகுமாரையும் தம்பி ராமையாவையும் தவிர கதை முழுவதும் கதைமாந்தர்கள் உலவினரே அன்றி எந்த நடிகரும் தனிப்பட தன் பெயரோடு கண்ணுக்குத் தெரியவில்லை என்பது இயக்குனரின் பெருவெற்றி என்றே நான் சொல்வேன்.
கண்ணை உறுத்தாத கமெரா. உரையாடலின் சத்தத்தை மேவாத பின்னணி இசையும், கவிஞர் விவேகாவின் பாடல் வரிகளும் மனம் தொட்டுச் செல்கின்றன . அதிலும் சிந்தூரி விஷாலின் குரலில் படம் முழுவதும் மெல்லிய ஹமிங் ஒலியுடன் தொடரும் " தொடுவானம் நேற்று அது தொலைதூரம்....." பாடல் அதன் படைப்பாளிகளைத் தேடவைக்கக் கூடியது.
இத்தனைக்கும் பின்னணியில் ஒரு துப்பறியும் படத்தை இறுதிவரை முடிச்சவிழ விடாது பார்வையாளரை சலிப்புற வைக்காது தொய்வற்று நகர்த்தும் தன் திறமையை தன் முன்னைய திரைப்படங்கள் போலவே இதிலும் நிரூபித்த இயக்குனரின் திறமை பாராட்டுக்குரியது. ஒரு திரைப்படக் கதைநகர்த்தல் என்பதைத் தாண்டி துப்பறியும் கதைகளிலும் சமூகத்துக்கு அவசியமான எதோ ஒரு செய்தியைச் சொல்ல முடியும் என்பதைச் சொல்லும் அவர் முயற்சி அறிவழகன் மீதான அடுத்தடுத்த படங்களுக்கான எதிர்பர்ப்பை மேலும் தூண்டியிருக்கிறது.
எல்லாக் குற்றவாளிகளினதும் பின்னணியில் அவர்களை நியாயப்படுத்த ஒரு கதை இருக்கும் .
அதற்காக அவர்கள் செய்வது எல்லாம் நியாயமாகி விடாது என்ற தீர்க்கமான ஒரு கருத்துக்குப் பின்னால்
தாய்மை :- பெற்றெடுப்பதில் மட்டுமல்ல தத்தெடுப்பதிலும் என்பது சிறந்ததொரு நிறைவு.
.......................................................................................................................................
மேலும் என்னை அதிகம் ஈர்த்த விடயம் ஒரு கதாசிரியாரின் கதையை வேறொரு படைப்பு வடிவத்தில் வெளிக்கொணர உரிமை பெறும் போது அந்த எழுத்துக்குக் கொடுக்கப்படும் உச்சபட்ச மரியாதையே அந்தக் கதையின் மூலக்கருவைச் சிதைத்து விடாமல் அந்த எழுத்தாளரின் அடையாளத்தைக் காப்பாற்றுவது தான். அனால் அது நடைமுறையில் மிக அரிதாகவே உள்ள போதும் இத்திரைப்படத்தில், கதையின் பின்னணியில் உருவாக்கப்பட்ட உரையாடல்கள் , பாத்திரங்கள் எல்லாமுமே கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன்னால் வந்திருக்கக் கூடிய, நான் வாசித்து இருபது வருடங்களாவது கடந்து விட்ட ஒரு துப்பறியும் நாவலை படத்தின் ஆரம்பத்திலேயே கதாபாத்திரங்களின் உயிரோட்டத்திலும் திரைக்கதை வசன அமைப்புக்களிலும் சிதையாமல் அப்படியே கண்முன் கொண்டுவந்து நினைவுகளைத் தூண்டி இது குறிப்பிட்ட இந்த எழுத்தாளரின் கதையாகத்தான் இருக்கமுடியும் என்று மூலக் கதையாசிரியரைத் தேட வைத்திருந்தது.
துப்பறியும் நாவல்களுக்குத் தேவையான அளவு விறுவிறுப்பு, எதிர்பாரா திருப்பங்கள், என்பவற்றோடு கூடவே அறிவியல், விஞ்ஞான வளர்ச்சி, அதன் பன்முகப்பட்ட பார்வைகள், குடும்பம், சென்டிமன்ட் என்று தேவையான விகிதாசாரத்தில் கலந்து அதன் முடிவில் முத்தாய்ப்புப் போல இரண்டு வரியில் சமூகத்துக்கான ஒரு சேதியைச் சொல்லிவிடும் இரண்டு ஜனரஞ்சக எழுத்தாளர்கள் அப்போது கோலோச்சிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கதாசிரியர் ராஜேஷ் குமார். மற்றும் கதாசிரியர் ராஜேந்திரக்குமார்.
இப்போது போல அப்போதும் எல்லோரும் சமூகக் குப்பைகளைக் கிளறி இலக்கியம் படைத்துக் கொண்டிருந்த காலத்தில் Artificial insemination ( செயற்கைக் கருவூட்டல்) ஸ்பெர்ம் பேங்க் (sperm bank ) பற்றிய சாதக பாதக விபரங்களோடு, தமிழில் கதைசொல்ல முயன்றவர்கள் இவர்கள்.
அப்போது கிரிக்கற் வெறிபிடித்தலைந்த காலமொன்றில்தனக்குப் பிடித்த ஒரு விளையாட்டு வீரனின் கருவைச் சுமக்க விரும்பிய அவனது தீவிர விசிறியான பெண் ஒருத்தியைச் சுற்றிப் பின்னப்பட்ட கதை இத்தனை வருடங்கள் இடையில் எத்தனை எத்தனையோ பாரிய மாற்றங்களை ,மன உடைவுகளை, இழப்புக்களை சந்தித்த மண்ணில் பிறந்த, இன்னும் சொல்லப் போனால், கடந்து போன காலங்களையே அப்பட்டமாக மறந்து இறந்து பிறந்த ஒருத்தியின் பதின்மகால வாசிப்பை நினைவில் கொண்டுவரும் என்றால் , அந்த இடத்தில் ஒரு பேனாவின் வீரியத்தையும், எங்கோ எட்டாத தொலைவொன்றில் இருந்து கொண்டு தன் எண்ணங்களை உலகம் முழுவதும் கடத்தக் கூடிய ஒரு எழுத்தாளரின் வல்லமையையும் எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன் திரு. ராஜேஷ் குமார் அவர்களே.