பலலட்சம் ஆண்டுகளுக்கு முன் ஒரே தட்டாக இருந்த நிலம் கண்டங்களாகப் பிரியப் பிரிய அதன் இயற்கை வெப்ப தட்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு உருவாகிய பல்வேறு நிலத்தட்டுக்கள் தான் ஒவ்வொரு கண்டங்களையும் கடல் நிலம் என்பவற்றையும் தாங்கி நிற்கின்றன. இந்த நிலத்தட்டுக்கள் அதிரும் போது அல்லது ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் போது ஆழிப் பேரலைகள் வெளிக்கிளம்பி ஊரை வளைத்தெடுத்து வாய்க்குள் போட்டுப் பசிதீர்த்துக் கொண்டு சற்றுக்காலம் அமைதியாகி விடுகின்றன. எம்மைப் போல, பிரிவினைகள் தரும் போர்கள் வாய் பிளந்து நாடுகளை விழுங்குவது போல.
கி.மு பன்னெடும் காலத்தில் இருந்தே நிலத்தை நீர்விழுங்கி இயற்கையின் முன் மனிதனின் கையாலாகா நிலையை நிரூபித்துக் கொண்டிருந்தாலும் தூர நாடுகளில் நடப்பதை அல்லது எமக்கு முன்னைய காலத்தில் நடந்ததை கேள்விகளால் அறியப்படுவதை விட நேரடியாக உணரப்படும் அவலத்தை எம் வாழ்நாட்காலத்தில் சந்திக்க நேர்ந்த அனுபவம் அனைவர் மனதிலும் வடுவாகவே தங்கி விட்டிருக்கிறது. காலம் உள்ளவரை இது மறையாது என்பதை இந்தத் தலைமுறையினர் சந்தித்த ஆழிப்பேரலை அவலத்தின் 12வது வருட நினைவு நாளான இன்றும், கட ந்த சிலநாட்களின் முன் 52 ஆம் வருட நினைவுநாள் அனுஷ்டிக்கப்பட்ட கடல் வழி இந்தியப் பயணங்கள் பற்றி பாட்டி சொன்ன கதைகளில் இருந்த வில்போன்று வளைந்த கடற்கரையை கொண்ட கடலில் அமைந்திருந்த நிலமுனை நகரமான தனுஷ்கோடி என்ற பெயர் பெற்ற சங்ககாலப் புகழ் பெற்ற நகரத்தினை நீர் மேவிய வரலாறும் உறுதி செய்தது.
பூமிக்குள் புதையல் கிடைப்பது வழமை ஆனால் . பல மாநகரங்களை வரலாற்றுப் புதையலாக்கி மண்ணுக்குள்ளும் கடலுக்குள்ளும் மறைத்து வைத்த வரலாறுகளை இந்த ஆழிப் பேரலைகளே அதிகம் எழுதின. அவற்றுக்குள் தமிழ் வளர்த்த சங்கங்களை காவு கொண்ட கதைகளையும் சேர்த்தே எழுதின. இலக்கியத்தில் சிலப்பதிகாரமும் , பட்டினப்பாலையும் மிகத் தெளிவாக இவ்வவலத்தை விளக்கிக் கொண்டு இன்னும் எம்முள் உயிர்த்திருக்க, பாடப்பட்ட பட்டினம் கடலுக்குள் பாலையாக தமிழர்களின் பண்பாட்டு வரலாற்றின் தொன்மையை தனக்குள் புதைத்துக் கொண்டு இன்னும் அமைதியாகக் காத்துக் கொண்டிருக்கிறது.
அதுபோலவே இலங்கையில் நீருக்குள் புதைந்து போன நிலப்பகுதிகளுக்குள் நம்மால் அறியப்படாத சங்கதிகள் பலவும் புதைந்து போய் வருங்காலச் சந்ததிக்கு உண்மை சொல்லக் காத்துக் கொண்டிருக்கலாம் .
மனிதன் எத்தனை கண்டுபிடிப்புக்களையும் சாதனைகளையும் செய்து கொண்டிருந்த போதும் உன்னைப்படைத்த எனக்கே உன்னை விஞ்சும் சக்தியும் உண்டென்று இயற்கை தன் ஆதிக்கத்தை நேரம் பார்த்து உணர்த்தி விடத்தான் செய்கிறது. அதன் கைகளில் கைதாகும் நேரம் வரை கிடைக்கும் ஒவ்வொரு கணத்தையும் மனிதர்களாகவேனும் வாழ்ந்து முடிப்போம்.
No comments:
Post a Comment