காலம் காலமாகிக் கொண்டே பயணிக்கும் பாதையில் தன் மேல் பதித்துக்கொண்ட அடையாளங்களையும் அழித்தழித்துப் புதுப்பித்துக் கொண்டே நகர்ந்து செல்லும். அதன் கடந்தகால அடையாளங்களை எவ்வளவு தான் புதுப்பித்தபோதும் உணர்வுகளோடு நிகழ்காலத்தில் அவைகளை அப்படியே மீட்டெடுத்துவிட எதிர்காலத்தால் என்றுமே முடிவதில்லை எப்போதுமே சந்தித்துக் கொண்டிருப்பவர்களை விட எப்போதோ ஒரு சந்தர்ப்பத்தில் சந்தித்தவர்கள் மனதில் அடியாழத்தில் தமக்கான ஒரு இடத்தை நிரந்தரமாகப் பிடித்துக் கொள்வது போல குறிப்பிட்ட ஒரு இடத்துக்கு அதிக சம்பந்தமில்லாது வெறும் இடைத்தங்கல் பறவையாய் தங்கிப்போன ஒருவரின் மனதில் ஒரு காலம் அதுசம்பந்தப்பட்ட இடம் நிகழ்வுகள் தன் நினைவுகளை ஆழப் பதித்திருக்கலாம்.
அடையாளமிழந்து அடிக்கல் வரை சிதைந்து அனேகமாக அனைவரின் நினைவுகளிலும் இருந்து அழிந்து போன அந்த இடமும் எனக்கு அப்படித்தான். என் மூளையின் ஞாபகச் சுவர்களில் எழுத்துக்கள் அழியத் தொடங்குமுன், முன்பொரு காலத்தில் இது இப்படி இருந்தது
அதை நான் எப்படியெப்படி எனக்குள் வாங்கிக் கொண்டேன் என ஒரு காலப்பகுதியின் சாதாரண வாழ்வியல் அடையாளங்களை ஒரு குழந்தையின் நினைவுகளில் ஆவணப்படுத்தி விட்டுச் செல்ல விரும்பும் இடங்களில் இது மனதில் முதலிடத்தில் இருக்கிறது.
அப்போது, என் சிறுவயதுகளில் எனக்கு மிகவும் வெறுப்பானதும் பயமானதும் விடயங்களில் முக்கியமானவை இரண்டு. ஒன்று பாம்பு மற்றது பயணம். வாழ்க்கையில் ஓய்ந்திருத்தலும் உறவொதுங்கியிருத்தலும் ஒருவித சாதல் நிலைபோல மனநிலை கொண்ட மூன்றாம் தலைமுறை மனையாட்சி செய்த காலமது என்பதால் நான் மாட்டேன் என அடம் பிடித்தாலும் பயணங்கள் தவிர்க்கப்பட முடியாதனவாகவே இருந்தன . மாட்டேன் என்பதற்குப் பின்னால் ஏதும் மாபெரும் வரலாற்றுக் காரணங்கள் இல்லை. இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான கதவற்ற பஸ், அது குபுகுபு என வெளித்தள்ளும் டீசல் புகை கானல் வெயிலில் மேலெழுந்து பறக்கும் புழுதியோடு கலந்து பின்வாசல் வழியாக நேரடியாகவே மூச்சில் மோதும்.
நிற்கவும் இடமின்றி , இருக்கையில் இருப்பவர்கள் குழந்தையா குஞ்சா என்று கூட பார்க்காமல் அவர்கள் மடியிலும் உட்கார்வது போன்ற நிலையில் எண்ணிக்கையற்று உள்வாங்கப்படும் பயணிகள், கசகச என ஒரு கதம்ப வியர்வை மணம். போதும் போதாதுக்கு அந்த நெரிசலுக்குள்ளும் சில ஈர அடுப்புக்கள் வாயால் குபுகுபு என ஊதித்தள்ளும் பீடி, சுருட்டு, சிகரட் என ஒன்றாக்கிக் கலந்த மூச்சுத் திணறும் புகைமூட்டம் . பின் சீட்டில் யாரோ பாட்டியோ, தாத்தாவோ தனக்குப்பக்கத்து சீட்டை உரிமையோடு வளைத்துப் பிடித்து பக்குவமாய் உட்கார வைத்திருக்கும் காய்ந்த வாழையிலையால் மூடிகட்டிய புகையிலைக் கட்டு, அரைப் புழுங்கல்நிலையில் அந்த இலைகளில் இருந்து வெளிவரும் ஒரு வித தலை சுற்றும் மணம் . இவ்வளவும் ஒன்றாகச் சேர்ந்து பஸ்ஸில் ஏறியதுமே தொடங்கும் தலைவலியும் வாந்தியும், இறங்கும் வரை நிற்பதில்லையாதலால் பயணம் என்று சொன்னாலே பலியாட்டுக்கு மாலைபோட்டு பலிபீடத்தில் நிறுத்திவைத்த நிலைக்கு வந்து விடும் மனம். இவைகளைத் தாண்டி குதூகலித்த ஒரு இடமும் உண்டென்றால் அது........
தோளில் ஒரு குட்டிப் பயணப் பை, அது கொள்ளாது எனக்குப் பிடித்தது அவனுக்குப் பிடித்து மற்றவனுக்குப் பிடித்தது மேலும் மற்ற மற்றவர்களுக்குப் பிடித்தன என்று போன லீவுக்குப் பிறகு வாங்கிச் சேர்த்த விளையாட்டு பொருட்களும், எங்கள் எல்லாருக்கும் பிடித்த ஒரு பெரிய பக்கெட் மோல்ரீஸ்ற் உம். கண்டி வீதியில் எங்களுக்கு அண்மையில் இருந்த பஸ்ராண்டில் காத்து நிற்கும் போதே மனம் பறக்கத் தொடக்கி விடும். பஸ்ஸில் ஏறி கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமையாக விரியும் எங்கள் மதிப்பங்குளம் விளையாட்டு மைதானம், வயல் வெளிகள், தென்னந் தோட்டங்கள் கடந்து நாவற்குழிப் பாலத்தை பஸ் கடக்கும் வரை முகத்தில் மோதும் அந்தக் குளிர்ந்த காற்றில் கிறங்கி வேலியோரக் காட்சிகளில் மயங்கி முடித்து இனிப் பார்ப்பதற்கு எனக்குப் பிடித்தது போல எதுவுமில்லை என்ற நிலையில் ஜன்னலுக்கு வெளியே இருந்த பார்வையை திருப்பி பஸ்ஸின் உள்ளே பார்க்க தலைவலிக்கப் போவது போல வாந்தி வரப் போவது போல மனதுக்குள் அபாய அறிவிப்பு அதிரும். அந்த நேரம் அம்மாவின் மடியில் தலையைக் குப்புற வைத்துப் படுப்பது தான். ஆனையிறவு வரை கண்ணைத் திறப்பதோ தலையை நிமிர்த்துவதோ இல்லை. ஆனையிறவு வந்ததும் எழுப்பி நிமிர்த்தி இங்க பாரு கடல் என்று சொன்னால் தலைவலியும் வாந்தியும் எங்கோ ஓடிப் போயிடும். கடலைக் கண்டதால் அல்ல. நான் நேசிக்கும் இடத்தை நெருங்கி விட்டேன் என்பதனை அறிந்து கொள்ள நான் அப்போது நிர்ணயித்து வைத்திருந்த அடையாளம் 1946 ஏக்கர் விஸ்த்தீரணம் கொண்ட ஆனையிறவு உப்பளம்
1938 ஆம் ஆண்டிலிருந்து 1990 வரை இயங்கியது இவ்வுப்பளம். அருகே உப்பு உற்பத்திமையக் கட்டிடம். அதனருகே உப்பை ஏற்றி பரந்தன் இரசாயனத் தொழிற்சாலைக்குக் கொண்டு செல்லக் காத்திருக்கும் கனவாகனங்கள். பார்வைக்கெட்டிய தூரம் வரை பரந்திருக்கும் கடல். அதனை நடுவே ஊடறுத்து பாம்பு போல நீண்டு நெளிந்து பயணிக்கும் புகையிரதப் பாதை. அதன் இருபக்கமும் சதுரச் சதுரப் பாத்திகளில் வெண்மையாக விளைந்து மினுங்கும் உப்புநீர்ப் பூக்கள் . கொதிக்கும் வெயிலில் பெயருக்குக் கூட நிழல் கொடுக்க ஒரு சிறு மரமும் இல்லாத கடல் அலை முடியும் கரைகளில் பரந்து கிடக்கும் உப்புக் குவியலை வாரிக் கொண்டிருக்கும் ஆண் தொழிலாளர்கள், கடகங்களில் அள்ளி, தலைகளில் சுமந்து கொண்டு போய் சிறு வெள்ளை மலை போல குவித்துக் கொண்டிருக்கும் பெண்கள் . கருவாடு போல மிக கறுத்துமெலிந்து, பாதங்களும் உள்ளங்கைகளும் உப்பில் ஊறவைத்துக் காயவிடப்பட்டிருக்கும் மாங்காயையோ, தேசிக்காயையோ நினைவுறுத்தும் அவர்களின் உருவ அமைப்பு. இந்தத் தொழிலாளர்களின் உழைப்பில் அப்போது வருடமொன்றிற்கு கிட்டத்தட்ட 70,000 மெட்ரிக் தொன் உப்பை உற்பத்தி செய்து , 1980 களின் முற்பகுதியில் உப்பு உற்பத்தியில் தன்னிறைவு கண்டு மேலதிக உப்பை மாலைதீவு ஆபிரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்த ஆனையிறவு உப்பளம் 1990 இல் முழுவதுமாக தன் செயற்பாட்டுக்களை நிறுத்திக் கொண்டதுடன் ஆனையிறவு என்றதும் உப்பளம் என்ற தன் அடையாளத்தை அழித்துக் கொண்டு பின்வந்த காலங்களில், தன்மீது வேறொரு வரலாற்று அடையாளத்தைக் கல்வெட்டிக் கொண்டது.
கடலிடம் மனத்தைக் கொடுத்துவிட்டுக் கடக்க சூரையும் பாலையுமாக விரியும் காடுகள் , காட்டுப் பழச் சுவைகளின் நினைவுகளில் நாவினடியில் மெதுவாய் நீருறத் தொடங்கும். ஆனையிறவு கடந்து மூன்றாவது தரிப்பிடத்தில் வீதியின் ஓரத்தில் விரவியிருக்கும் சிவந்த பாலியாற்றமண்ணையும் குருணிக் கற்களையும் சறாச் என்று தேய்த்து செம்புழுதியை மேலெழுபிப் பறக்க விட்டு நிறுத்தத்தில் தரிக்கும் பஸ்ஸில் இருந்து உற்சாகப் பந்தாய் குதித்தால் விழுந்து விடாமல் ஏந்திக் கொண்டு முத்தமிட இப்போதில்லாத அந்தக் கை அப்போது காத்திருக்கும்.
இறங்கியதும் உயர்ந்து நீண்டு செல்லும் வீதியின் இந்தப்பக்கமாக சற்றுத் தாழ்ந்த நிலப்பரப்பில் அந்த நிறுவனத்தின் ஊழியர்களால் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்ட , குட்டியாய் ஆனால் வருடாந்த மற்றும் முக்கிய உற்சவங்கள் நடக்கும் ஒரு கோவில். அதற்கு எதிராக அந்தப்பக்கமாக வீதியிலிருந்து கிளைபிரித்து குறுக்காக நேரே செல்லும் சொரசொரவென சிவப்பு நிற பாலியாற்று மண் சாலை . அதில் ஒரு கையால் மார்போடு தூக்கியணைத்து நடந்தவாறே மறுகையால் சுட்டி அதோ தெரியுது பாரு வாசி கண்ணம்மா எனும்போது எழுத்துக் கூட்டிக் கூட்டி ஒவ்வொரு சொல்லாக அந்த இடம் வார்த்தைகளால் வடிவம் பெறும் பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனம்.
ஒரு இருபத்தைந்து அடி நடந்தால் ஊர்மனையோடு ஒட்டிக் கொள்ளாமல் காட்டுக்குள் தனிப்பட கிட்டத்தட்ட 220 ஏக்கர் நிலப்பரப்பை வளைத்து அமைக்கப்பட்ட அந்தத் தொழிற்சாலைப் பிரதேசம். அதன் பிரதான நுழைவு வாசலில் பெரியதொரு அகல கேட். அதை நெருங்க நெருங்க நாசியைச் சுரண்டும் குளோறின் நெடி.. கேற்றுக்குப் பக்கத்தில் தொழிற்சாலைக்கு எதிர்ப்புறமாக செக்கியூரிட்டிக் கட்டடம். கதவு திறக்க முன்னமே கம்பிக் கதவுக்குப் பின்னால் இருந்து விபரம் வினவும் காவலர்கள் . விபரங்கள் சரிபார்க்கப்பட்ட பின் அதற்குள் நுழைந்தால் விருந்தாளிகளைக் கூட்டிச்செல்ல அந்தச் சிறு கொலனி போன்ற பிரதேசத்துக்குள் இருந்து உரியவர் வரும் வரை காத்திருப்பதற்கான ஒழுங்காக இருக்கைகள் அடுக்கப்பட்ட கச்சிதமான இளைப்பாறு மண்டபம் .
அதற்கெதிரே பாரவூர்திகள் பயணிக்க வசதியாக பரந்திருக்கும் பாதைக்கு சற்றுத் தள்ளி ஆரம்பிக்கும் நெடிய கோபுரங்களைக் கொண்ட அந்தப் பிரமாண்டமான வெண்ணிறக் கட்டிடம். அதன் உச்சிகளில் கிடந்த அகன்றுயர்ந்த புகைப்போக்கிக்கருவிகளினூடே குபுகுபுவென புகையை வெளித்தள்ளிக் கொண்டிருக்க , அதனை அண்டிய பின் சுற்றுப் பகுதிகளில் இதன் பாதிப்புக்களால் சற்று மஞ்சள் பாரித்த புற்களும் செடிகளும், அந்தப் பகுதி முழுவதற்கும் கேட்கும் படி பத்து யானைகள் ஒரே நேரத்தில்பெருங்குரலெடுத்துப் பிளிறுவது போல் அதிரவைக்கும் மணிக்கொருதரம் ஒலிக்கும் சங்கொலி. புதிதான ஒரு உலகத்துக்குள் நுழைந்தது போன்ற பிரமையை ஏற்படுத்திக் கொண்டு நிமிர்ந்து நிற்கும் சோடா பக்டரி என்று அழைக்கப்பட்டஅது , திரு .ஜி.ஜி பொன்னம்பலம் அவர்கள் இலங்கை அரசாங்கத்தில் கைத்தொழில் அமைச்சராக இருந்த காலத்தில் தமிழ்ப்பிரதேசங்களில் நிறுவப்பட்ட தொழிற்சாலைகளில் ஒன்றான 1954 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பரந்தன் கெமிக்கல் கொப்பரேஷன்.
இந்த இரசாயனத் தொழிற்சாலைக்கு அதிகம் தேவையான மூலப்பொருட்களில் ஒன்றான கடல் நீர் உப்பை ஆனையிறவு உப்பளத்தில் இருந்து பெறக்கூடிய வாய்ப்பிருந்ததால் அதனை அண்மிய பிரதேசமான பரந்தனில் இத்தொழிற்சாலை அப்போது நிறுவப் பட்டது. குளோரின், ஐதரோகுளோரிக்அமிலம் மற்றும் கோஸ்டிக் சோடா போன்ற இரசாயனப் பொருட்களை உற்பத்தி செய்தமையால் அது அப்போது சோடாப் பக்டரி என பொதுமக்களால் அழைக்கப்பட்டிருக்கலாம் என எண்ணுகிறேன்.
அந்த சோடாப் பக்டரி பிராந்தியத்துக்குள் நுழைந்து கொண்டு எப்போதும் இரசாயன மணம் நாசியரிக்கும் காற்றைச் சுவாசித்துக் கொண்டு நடந்தால் தொழிற்சாலைக் கட்டிடங்கள் முடிந்து சற்றுத் தூர இடைவெளியின் பின் குடியிருப்புப் பகுதி ஆரம்பமாகும் தார்பாவாத பாலியாற்று மணற் செஞ்சாலைகளில்நடந்து சென்றால் பொதுவாக ஊர்மனைகளில் இருப்பது போல குறுக்குத் தெருக்கள் பிரித்து வீதிகள் அமைக்கப் படாமல் ஒரு பகுதியை வட்டமிட்டது போல நேராகச சென்று வளைவாகத் திரும்பும் வீடுகள். அதில் ஒரு வீடு தான் என்வரவுக்காக எப்போதும் வாசல் திறந்து வைத்துக் காத்திருந்து என் சிறுவயதுக் காலச் சந்தோசம் முழுவதையும் தனக்குள் தத்தெடுத்துக் கொண்டிந்தது.
தொழிற்சாலைக் குவாட்டஸ் என்பதால் ஒவ்வொரு வீட்டுக்குமிடையில் பெரிதான வேறுபாடுகள் இருக்காது. குடும்ப அங்கத்தவர்களைக்கணிப்பிற் கொண்டு அறைகளின் எண்ணிக்கையில் மட்டும் வேறுபாடுகள் இருக்கும். மற்றப்படி முதலாளி தொழிலாளி என்ற அதி பெரிய வித்தியாசங்களை வீடமைப்புக் கொண்டிருக்கவில்லை எனினும், உள்வீட்டுப் புழங்கு பொருட்களில் அந்த வித்தியாசம் இருந்தது.
வீடுகளின் பின் புறத்தில் சமயற்கட்டையும், நீர்க்குளாயைத் திறந்தால் குளோரின் வாசனையுடன் குபுகுபுவென எந்நேரமும் நீர்பாயும் குளியலறையையும் தாண்டி படியிறங்கி நடந்தால் வெறும் பசிய நிலப்பரப்புக்கள். அவற்றைத் தாண்டி நீண்ட தூரம் பின்னோக்கி நடந்தால் வெண் மணற் தரையில் முதிரை வீரை பாலை மரங்களோடு காரை கிளாத்தி போன்ற முட்செடிகள் பற்றையாகக் கிடக்கும். யாழ்ப்பாணப்பகுதிகளில் நீரூற்றிக் காப்பாற்றி வளர்க்கப்படும் எக்ஸ்போ(f)றா அங்கு காடுகளில் மரங்கொள்ளாமற் பூத்துக்குலுங்கும்.
வீடுகளுக்கு முன்புறத்தில் வீதிக்கு எதிர்ப்பக்கமாக தூரம் தூரமாக ஒவ்வொரு வீட்டுக்கு எதிரிலும் பாலை மரங்கள். பகல் முழுவதும் வீடுகளையும் சுற்றுப் புறங்களையும் சுற்றியலைந்த கோழிகளின் இரவுப்படுக்கைகள் அவை. அவற்றின் அடியில் தரையில் ஆழஅடித்து ஊன்றப்பட்ட மரக்கட்டைகளில் பகல் முழுவதும் காடுகளைச் சுற்றியலைந்து இரவு கட்டைக்கு வரும் நாட்டு மாடுகள் கட்டப்பட்டிருக்கும். ஒவ்வொரு காலையும் மாலையும் சமையலறையில் இருந்து பொங்கி வீட்டு வாசல் வரை பசும்பால் வாடையை அவை பரப்பிக் கொண்டிருக்கும் .
குடியிருப்புக்களின் மத்தியில் பெரிதாக ஒரு விளையாட்டு மைதானம். அதனோடு கூட கிளப் என அவர்களால் அழைக்கப்பட்ட ஒன்று கூடல் மண்டபம். அதனோடு சேர்ந்து சிறுவர் பாடசாலை. வாசிகசாலை. அவர்களுக்கான அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைக்கட்டுப்பாடுகள் கொண்ட விற்பனை நிலையம்.
அதற்குள் இருந்த சிறுவர் பாடசாலைக்கான வயதெல்லை தாண்டிய சிறார்களுக்கான வெளியிற் சென்று கற்பதற்கான வாகன வசதி, வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வுகள். ஒளிவிழா என்ற பெயரில் பெரியளவில் நடக்கும் நத்தார் விழா. என் சிறுவயதுகளில் அந்த விழாவுக்காகவே அங்கு போன குதூகல நினைவுகள் இப்போதும் உண்டு. தவிரவும் தூள் உப்புப் பாவனையும் அங்குள்ள குடியிருப்புக்களில் தான் அப்போதிருந்ததாக நினைவுண்டு.
தொழில் நிமித்தம் பல ஊர்களிலும் இருந்து வந்து அப்படியொரு குடியிருப்புக்குள் ஒன்று சேர்ந்திருந்த அந்தக் குடும்பங்களிடம் யாழ்ப்பாணத்தின் மற்றெந்தப் பகுதிகளிலும் இல்லாத அளவு சாதி சமய பேதமற்ற ஒற்றுமை இருந்தது அப்போது. அண்டை அயல் தான் அவர்களுக்கு உரிமை உள்ள உறவுகளாக இருந்தன. அப்படியே முறை சொல்லி அழைத்தும் கொண்டார்கள். அதன் படி வாழ்ந்தும் கொண்டிருந்தார்கள். ஒரு வீட்டுக்கு உறவினர் வந்தால் எல்லா வீடும் உறவு கொண்டாடியது . மாலையில் விளையாடுவதற்காக கிளப்புக்குப் போக வீதியில் இறங்கினால் பேதமற்று எல்லாக் குழந்தைகளுமே வந்து ஒட்டிக் கொள்வார்கள். விளையாடி முடித்து கூட்டமாக காட்டுக்குள் இறங்கி நேரம் போவது தெரியாமல் அலைந்து பிடுங்கி உண்ட பழவகைகளின் சுவைகளைப் பின் எப்போதும் எந்த விலை கொடுத்தபோதும் வாங்கித்தர வாழ்க்கையால் முடியவில்லை.
அண்மையில் இருந்த இரணைமடு நீர்த்தேக்கத்தின் உதவியால் காலபோகம் சிறுபோகம் என இருபோகம் விளையக் கூடிய அப்பிரதேசத்தில் இந்தக் குடியிருப்பில் இருந்தவர்களுக்குச் சொந்தமான வயல்களும் கணிசமான அளவில் இருந்தன. அனல் பறக்கும் வெக்கை மட்டுமல்ல சிறு சிறு நீர்த்தேக்கங்கள் போல குளங்களும் காடுகளும் சூழ்ந்திருந்ததால் நுளம்பும் தாராளமாகவே இருந்தது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மாலையில் பாவனைப் பொருட்கள் எல்லாவற்றையும் ஒதுக்கி ஒன்றாக அடுக்கி படங்கு போன்ற பாரிய பொலித்தீன் விரிப்புக்களால் மூடிவைத்துக் கொண்டு நுளம்பெண்ணை அடிக்க வருபவர்களுக்காக காத்திருப்பார்கள்.
அவர்கள் வந்து விசிறிச்செல்லும் நுண்ணுயிர்க்கொல்லிஇரசாயனப் புகையில் வீடுகள் ஒருதரம் மூழ்கி வெளிவந்தால் நாற்றம் மூச்சை அரித்தாலும் அன்றிரவு நுளம்புக்கடியில் இருந்து தப்பிக் கொள்ளலாம் அடுத்தநாள் நுளம்பு வலை மூடாவிடில் எத்தனை துரத்தினாலும் நுளம்பு தம் இரத்ததா தாகத்தை தீர்க்க மறப்பதில்லை.
காடண்மிய பகுதி என்பதால் காட்டுப் பூனையும் பாம்பும் பாம்பாட்டிகளும் தாராளம். மழைகாலம் அடித்துப் பாயும் வெள்ளத்தில் நீந்தி மிதக்கும் பாம்புகள் பற்றிய பயம் தாராளமானது. வேலையாட்களிடம் முழங்காலுயர கறுத்த றப்பர் சப்பாத்தக்க்கள் மழை மற்றும் இரசாயனக் கூட வேலைகள் சம்பந்தமான பாதுகாப்புக்காக வழங்கப் பட்டிருந்ததால் மழை நேரங்கள் அவர்களைத் தவிர மற்றவர்கள் வெள்ளத்தில் இறங்க மிகவும் தயங்கவேண்டிஇருந்தது. இருந்தும் அதிகமான மனிதப் புழக்கம் இல்லாத இடம் என்பதால் அந்த வெள்ளம் கூட என்னில் துள்ளி விளையாட வா என்பது போல துப்பரவாகவே இருக்கும். வெள்ளம் வடிந்து காட்டுவழியே வாய்க்கால் நோக்கிப் பாய்ந்ததன் பின் கூட்டி மெழுகியது போல அத்தனை துப்புரவாக அழகாக இருக்கும் காட்டு மணலில் காலணியைக் கழற்றி விட்டு ஊன்றி நடக்கும் சுகம் சொல்லிப் புரியாது.
தற்போது போல இறக்குமதி செய்ய வேண்டிய தேவையற்று இலங்கை முழுவதற்குமான குளோரின் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய நிலையில் இயங்கிய அந்த சோடாப் பக்டரிக்கும் மனிதர்கள் போல , மற்றும் எல்லாமும் போல இறந்த காலம் என்ற ஒன்றை உள்நாட்டு யுத்தத்தின் வடிவில் காலம் குறித்தது.
பயிரும் பச்சையுமாக இருந்த அந்தப் பகுதி பரந்தன் படைமுகாமாகியது . மக்கள் வெளியேறத் தொடங்கினர். இப்படைமுகாமை அழிக்க புலிகள் பலதடவை முயன்றதில், அழிக்க, அழிக்க அது மீண்டும் மீண்டும் முளைத்ததில் அதனைச் சூழ்ந்த பகுதிகளும் குண்டுவீச்சில் குளித்து இரத்தத்தில் மிதக்கத் தொடங்கின. யுத்தம் வளர வளர தொழிற்சாலைகளில் இருந்த உபகரணங்கள் ஒவ்வொன்றாக ஆயுதம் தூக்கிய அனைத்துக் குழுவின்னரதும் தேவைகளுக்கேற்ப அபகரிக்கப் படத் தொடங்கின. நாம் மட்டும் குறைச்சலா என்ன என்பது போல எஞ்சிய சொஞ்சிய பொருட்கள் வண்டிகள் உபகரணங்களையும் தூரத்தில் வரும் போதே தொழிற்சாலையை அடையாளம் காட்டிக் கொண்டிருந்த பாரிய நீர்நிரப்புக் கொள்கலனையும் அள்ளிக்கொண்டு போய் ஆனையிறவு முகாமில் குவித்து உக்க வைத்தது ராணுவம் .
இப்படியே தொடர்ந்து கொண்டிருந்த சமர் கிளிநொச்சியை மீட்டு, அதிகளவாக பெண் போராளிகளைக் கொண்டு நிகழ்த்தப்பட்ட பெரும் சமரான ஓயாத அலைகள் மூன்றில் ஆனையிறவைக் கைப்பற்றியபின், இராணுவப் படைத்தளங்கள் அப்பகுதியிலிருந்து முற்றுமுழுதாக அப்புறப்படுத்தப் பட்டன. இரசாயனத் தொழிற்சாலை குண்டுகளால் தகர்ந்திருந்தது. இப்படியாக ஒரு தொழிற்சாலை மையம் வரலாற்றில் தன் பெயரைப் பதித்து விட்டுச் சிதைந்து போனது.
பின் அந்தப் பகுதியைப் புலிகள் தம்வசம் வைத்திருந்தார்கள். பரந்தன் புலிகள் வசம் வந்தபின் அங்கு வேரூன்ற வைக்கப்பட்ட மக்கள் மீண்டும் குடியேறத் தொடங்கினர். முன்போல தொழிற்சாலை மேலதிகப் படிகளுடனான வருமானமும் வேலையும் இல்லையாயினும் அவர்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை ஊதியம் வழங்கப் பட்டுக் கொண்டிருந்தது. மேலதிகத் தேவைகளை தம் காணிகள் மூலமான மிக குறுகிய அளவான பயிர்ச்செய்கை மூலம் கிடைத்த வரும்படிகளைக் கொண்டு காஸ்ர ஜீவனம் நடத்தத் தொடங்கிய மக்கள் முகாமிட்டிருந்த புலிகளுடன் நெருக்கமாகியும் இருந்தனர்.
காட்சி மாறியது இந்தியக் காக்கிச் சட்டைகள் ஈழத்தில் காலடி வைத்தன. சமாதானப் படை சண்டைப் படையாகிப் போர் வெடித்தது . புலிகளின் சுதந்திர நடமாட்டம் குறைந்த போனது. மறைந்து வாழ நிர்ப்பந்திக்கப் பட்ட புலிகள் தங்களை ஆதரித்த மக்களை நாடவேண்டிய நிலையில் இருந்திருக்கலாம். மாலை இருள் கவிந்த பொழுதுகளில் சில வீடுகளின் பின் பகுதிகளில் இருந்த காடுகளினூடாக அவர்கள் வருவதும், அந்தக் கஸ்ர சீவனத்திலும் அவர்களுக்காகச் சமைத்துவைத்து வைத்து நாளுக்கு ஒரு தடவை அரை வயிறாவது அவசரமாக அவர்களை உண்ணவைத்துக் காப்பாற்றிய அந்த மக்கள் காட்டிக் கொடுக்கப் பட்டார்கள்.
ஒருநாள் இருள்கவிந்த நேரம் பின்வாசல் வழியாக அவர்கள் வரும் நேரத்தில் வேறு கூட்டம் வந்தது. வாங்கோ தம்பிமார் என்ற கிசுகிசுப்பான குரலிலான அன்பான உபசரணை அன்று தான் அந்தச் சூழல் மக்களுக்கு இறுதி நாளாக இருந்தது . கூடவே கொண்டுவந்து ஒளித்துவைத்த பொல்லுகள் புளிச்ச மட்டைகள் போன்றவற்றினாலான சரமாரியான தாக்குதலில் எலும்புடைந்து சுருண்டு கூழாகிப் போன மக்கள் அவ்விடத்திலான தமக்கான நிலங்களையும் உதறிவிட்டு சொந்த மண்ணில் சொந்த மொழி பேசுவோரால் அகதியாக்கி ஓடவைத்து தொழிற்சாலைக்கு முன்னரான அவர்களது பூர்வீகப் பிரதேசங்களில் வெறும் ஒட்டுக் குடித்தனத்தில் ஒண்டவும் ஒடுங்கவும் வைத்தது. அதனோடு பழைய தொழிற்சாலையின் எஞ்சிய அடையாளங்களைச் சுமந்திருந்த மக்களும் வாழ்வியல் போராட்ட நீரோட்டத்தில் கலந்து கரைந்து அடையாளம் தொலைந்து காணாமற் போனார்கள்.
இப்போது மீண்டுமொரு முன்னெடுப்பில் அவ்விடத்தில் புதிதாய் ஒரு தொழிற்சாலை பிறப்பெடுக்கும் முயற்சிகளின் பின்னணியில் உற்பத்தி சிறக்கலாம் வருமானம் பெருகலாம் . இரசாயன வளத்தில் தன்னிறைவும் அடையலாம் ஆனால் அந்த முன்னைய காலம் அதன் நினைவுகளை சிலவேளை வரலாற்றில் சிலவரிகளால் பதித்துவிட்டு நிரந்தரமாக உறங்கிவிடும்.
ஆனால் அந்த இடமும் அது பற்றிய நினைவுகளில் இங்கு பதிவிடாதவைகளும், இராணுவக் காவல் போட்டபின்பும் வீட்டுக்கு ஒழித்து மூத்தவர்கள் மூச்சுத் திணறத் திணற சைக்கிள் மிதித்து இறுதியாய் நாங்கள் கூடிச் சென்று கால்நனைத்த இரணைமடுத் தண்ணீரின் குளிர்ந்த நினைவுகளும், அப்போது போர் உக்கிரம் பெறவில்லையாதலால் காவலில் நின்றும் குழந்தைகள் என விரட்டிவிட்ட இராணுவத் துப்பாக்கியும் , பின் எப்போதும் அப்படி நேசமான மனிதர்களை வாழ்க்கை சந்திக்கவேயில்லையாயினும், இனி எப்போதுமே அப்படியொரு நாள் திரும்பி வரப் போவதில்லையாயினும் இறக்கும் தருணத்திலும் ஒரு பட்டம் பூச்சியின் வண்ணங்களாய் கடந்த நினைவுகளுடன் வாழ்க்கை கண்மூடும் .