Sunday, May 27, 2018

அது அவர்கள் தப்பேயல்ல

"ஏதாவது பேசேன்"

"................................."

"எவ்வளவு நாளைக்குப் பின் சந்திக்கிறோம் பேசுவதற்கு ஒன்றுமே இல்லையா உன்னிடம்?"

"..................................."

"சந்திச்சுக் கனகாலமாச்சு  உன்னுடன் நிறையப் பேசவேண்டும் என்று நீதானே அழைத்தாய்"

"ம்"

"அப்போ பேசேன்"

"........................................."

"எனக்கு நிறைய வேலைகிடக்கு . நீ அழைத்தாய் என்பதால் எல்லாவற்றையும் விட்டுப் போட்டு வந்திருக்கிறன்".
குரலில் மறைக்க முடியாமல் கோபம் எட்டிப்பார்த்ததை அவள் உணர்ந்திருக்க வேண்டும். நிமிர்ந்து பார்த்தாள். நீயா  அதுவும் என்னிலா கோபப்படுகிறாய்  என்றது பார்வை.

முகத்தை இருகைகளாலும் அழுந்தத் துடைத்தாள்   இலக்கற்று நேராக வெறித்தாள்.  பின் அடிவயிற்றிலிருந்து ஆழமாய் நீண்ட பெருமூச்சொன்றை வெளியேற்றினாள்.  திடீரென

"இந்தப்  பூமி ஏன் இப்படி இருக்கிறது மாலினி?" என்றாள்

நான் திகைச்சுப் போனன். பின்னை என்ன .  பதில் இல்லாத கேள்விக்கு விடை தேடி தோத்து, அது எப்படியாவது இருந்திட்டுப் போகட்டும். மிச்சம் இருக்கிற  கொஞ்சக் காலமாவது நான் நானாக இருப்பம் என்று தீர்மானித்து விட்டவளிடம் திரும்ப பிள்ளையார் சுழியில் ஆரம்பிக்கிற மாதிரி இருந்தது அவளின்  கேள்வி.

"என்னைக் கேட்டா ? அம்மா தாயே பூமி பற்றி பூமியிடம் கேள் தெரியும். ஒன்றில் என்னைப்பற்றிக் கேள்  பதில் சொல்லுறேன் ./ அல்லது உன்னைப் பற்றிச் சொல் "

சற்றுக் கோபமாகப் பார்த்தாள்.

"நான் நிறைய மனம் நொந்திருக்கிறேன் தெரியுமா ? "
என்றவள் தன் சிறுபராயத்தில் சரியான குடும்ப அமைப்பில்லாமல் மனதளவில் அதனால் நிறையப் பாதிப்புக்களைக் கொண்டிருந்தவள் அன்புக்கும் ஆதரவுக்கும் அதிகம் ஏங்கியவள். இது தான் வாழ்க்கை விதித்தது  .அதிலிருந்து  எனக்குப் பிடித்த மாதிரி உருவாக்கிக் கொள்வதே என் வாழ்க்கை எனத் தெளிவாகி பின் திடமாகி ஸ்திரமாக வேலை செய்துகொண்டிருந்த இடத்தில் இருந்த வேலையை  உதறிவிட்டு kinderheim /சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் வேலை தேடிக்கொண்டு தன்னைப்போல மனப்பாதிப்புள்ள ஒரு குழந்தையின் மனதை  ஆறுதல் செய்தாலும் இந்த வாழ்வில் அர்த்தம் இருக்கும் எனச் சொல்லிக்கொண்டு மிக விருப்போடு முன்னூறு கிலோமீட்டர் தாண்டிய இடத்துக்கு சேவை செய்யப் போன அவள் தான் இப்போது பூமியைப்பற்றிய கேள்வியோடு முன்னே அமர்ந்திருந்தாள்

kindar heim  என்பது ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் போல இருக்காது இங்கு.  ஒரு பெரிய தனி வீட்டில் கிட்டத்தட்ட பத்துக்கு மேற்படாத குழந்தைகளை மட்டுமே கொண்டு ஒரு குடும்ப அமைப்பை அவர்கள் உணரும் விதத்தில் இயக்கப்படுவது.  இருபத்துநான்கு மணித்தியாலங்கள் மூன்றாகப் பிரிக்கப்பட்டு கவனிப்பாளர்கள் இயங்குவார்கள்.  பாடசாலை ,விளையாட்டுத் திடல் , பொழுதுபோக்கு, உல்லாசப் பயணங்கள் எல்லாமே ஒரு குடும்பம் போல அதற்குள் அடக்கம்.பதினெட்டு வயது வரை அங்கு வளரும் பிள்ளைகளுக்கு உயர்கல்வி தொழிற்கல்வி என்பன போன்ற சகல வழிகாட்டல்களும் சலுகைகளும் வழங்கப்படும்


ஆனாலும் பிஞ்சு மனதில் பெற்றோரோ உறவோ நட்போவான அவர்களுக்கு நெருங்கியவர்கள் பதித்துவிட்டுச் செல்லும்  கீறல்கள் இலகுவில்  அழிந்து விடுவதில்லை சமயங்களில் அவர்கள் அந்தப் பாதிப்பின் வடிவங்களையே பிரதிபலிப்பது தவிர்க்க முடியாதவை

அவள் இங்கு வளரும் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு நீச்சல் குளத்துக்குச் சென்றிருக்கிறாள் . நீந்திய  பின் சற்று ஓய்வெடுத்து மீண்டும் நீந்தக் காத்திருந்த நேரத்தில்  சிரிப்பும் கலகலப்பமாக குளித்துக்கொண்டிருந்த ஒரு இளைஞர் கூட்டத்தை நெருங்கி சற்று ஆபாசமான உடல் நெளிப்புக்கள்  சிரிப்புக்களுடன் ஆரம்பித்து போட்டிருந்த பிகினியின் மேல் பக்க ஆடையை உயர்த்தி  பார்  பார் அழகாக இருக்கிறதல்லவா எனக் காட்டியபெண்  குழந்தையின் வயது பன்னிரண்டு.. தாய்  உடல் விற்பனைக்கு வீதியோரங்களில் வாடிக்கையாளர் தேடும் பெண் என்பதால்  அரசாங்கம் குழந்தையை பறித்து வளர்க்கிறது.

சாமங்களில்  தவறாமல் வீறிடும் மற்றொரு குழந்தை.. அவளது கருத்துப்படி அது நிம்மதியாக நித்திரையே கொண்டதில்ல்லை.  என்ன பொருள் எனினும் அது உரிய இடத்தில் கிடக்கவிடாது தூக்கிவீசி சிதறிவிட்டு அதற்குள் இருக்கும் மற்றோர் குழந்தை.

தன் சகோதரங்களுக்கு யார் எதை சாப்பிடக் குடிக்கக் கொடுத்தாலும் அனைத்தையும் சந்தேகக்கண்ணோடு பார்க்கும் , தன் இரு சகோதரங்களுடன் அங்கு வளரும் குழந்தை. தன் இளைய தங்கை தூங்கிக் கிடந்தால் கூட  அடிக்கடி சென்று அவளது ஏறி இறங்கும் மார்பைப்பார்த்திருக்கும்  மற்றோர் குழந்தை. இவர்கள் மூவரும்  இளையவள் ஒரு வயதாக இருக்கும் போது, நான்காவது சகோதரம் ஒன்றரை மாதத்தில் இறந்து போக , அதை ஆராய்ந்த மருத்துவம் குழந்தையின் உடலில் அதிகப்படியான போதை வஸ்து கலந்திருக்கிறது என அறிக்கை விட , காவற்துறையின் ஆய்வில் குழந்தை தூங்குவதற்காய் பாற்புட்டிக்குள் பாலோடு கலந்து கொடுத்த போதை வஸ்து அதிகமாகி குழந்தை இறந்தது நிரூபணமாக , பெற்றோர் முழுநேரமும் போதையில் கிடப்பதும் மற்றைய குழந்தைகளுக்கான பாதுகாப்பின்மையும் உணரப்பட்டதால் பெற்றவர்களை சிறையில் தள்ளிவிட்டு  கொண்டு வரப்பட்டவர்கள் . ஒரு வயதில் வந்தவளுக்கு எட்டு வயது இப்போது  இருந்தும் அண்ணன்களின் மனதில்  ஒரு மாதத்தில் கொல்லப்பட்ட சகோதரத்தின் அவலம் மறையவும் இல்லை. பெற்றவர்கள் மீது இழந்த நம்பிக்கை மற்ற எவர் மீதும் ஏற்படவில்லை.

இப்படி அவள் உடைந்துடைந்து சொன்ன கதைகள் ஏராளம்.  இருந்தும்  அவள் இறுதியாகக் கேட்ட கேள்வி மட்டும் மனதிலேயே இருக்கிறது

"சரியாக வளர்க்க முடியாது எனும் பட்சத்தில் எதற்காகப் பெறவேண்டும்.  தான் ஆண் என  உலகுக்கு  நிரூபிக்கவா ?   அல்லது பெண்ணென  நிரூபிக்கவா?  உனக்குக் காமம் துய்க்க விருப்பமா அனுபவித்துவிட்டுப் போ  அது உன்  உரிமை.  அதற்காக ஒரு உயிரை உருவாக்கி உருப்படாமல் போடும் உரிமை உனக்கு யார் தந்தார்  அதன் வலி  தெரியுமா மாலினி ?" அவள் நிறைய நேரம் உடைந்து போய்  அழுது கொண்டிருந்தாள்



                                                               

பி.கு :-  விமானத்திலிருந்து  இறங்கிவரும்  அதிசயமாக ருதுவான தேவதையை ,  சேடியர் பூத்தூவ , சிறுபடை பாதுகாப்பு வழங்கி முன்னடக்க,  வீரவாள் கொண்டு பிறந்தநாள் கேக் வெட்டும்  ஐம்பதாண்டு புலிக்கேசியை ,  அன்னப்பறவையில்  ஆலோலம் பாடிவந்து  மனமேடையேறும் மணமக்களை ,  மணவறை மேலே மணமகன் இருக்க(நேரில் பார்க்கும் போது உத்தமன் படத்தில் படகுபடகு பாடலில் , மணல் வெளி மேலே மணமகன் இருக்க மணமகள் பல்லாக்கில் போகின்றாள் மனதையும் கல்லாக்கிப் போகின்றாள் என்ற சோக வரிகள் திருமண மண்டபத்தில் ஞாபகம் வந்ததை தவிர்க்க முடியவில்லை ) பல்லக்கில் குலுங்கக் குலுங்க ஊஞ்சலாட்டிவந்த மணமகள்  இவைகள் எல்லாவற்றையும் தாண்டிய ஒரு குரூரப் பக்கமும் வெளிநாட்டில் எமக்குண்டு.

அது எம் குழந்தைகளால், திருமணம் என முகம் தெரியாதவனை நம்பிவந்து நிர்க்கதியான ,  உளவியல் ரீதியில் பாதிப்படைந்த எம் இனப் பெண்களால் ஆனது.  நான் மேற்சொன்ன பாதுகாப்பகங்களில்  எங்கள் குழந்தைகள்  கூட  வாழ்கிறார்கள் என்பது கசப்பான உண்மை.

தனியான  சூழலில் துணையென நம்பியவன் துரோகியாக இருக்கையில்  நம்பிவந்த வாழ்க்கை முழுவதும் வழி தெரியாத இருளாகி விட்ட நிலையில்,  தமது குட்டுகள் வெளிப்பட்டு விடும் என்ற அவதானத்தில் யாரோடும் பழக அனுமதி மறுக்கப்படும் பெண்கள் ,  தம்மை ஸ்திரப்படுத்து முன்  காசுக்காகவோ என்னவோ   அடுத்தடுத்து  பெறுவிக்கப்படும் குழந்தைகள் ,  புதிய நாடு, தெரியாத மொழி , மனம் திறக்க மனிதர்கள் இன்மை போன்ற கையறு நிலையில் மன அழுத்தத்துக்குள் புதைந்து போக  திடீரென தலையில் விழும் பிள்ளைகள்  பற்றிய பொறுப்புகள் அதுவரையான பொறுப்பற்ற மனிதர்களின் தாங்க முடியாத தலைவலியாகி விடுகின்றன.

விளைவு  இங்குள்ள பாதுகாப்புச் சட்டங்களுக்குப் பயந்து வெளியில் எவருக்கும் சந்தேகம் ஏற்படாமல் நடித்து வீட்டுக்குள் மனைவி  பிள்ளைகள் மீது பிரயோகிக்கப்படும்  அதீத வன்முறை . அது வெளித் தெரியாமல் சமொஓத்துடன் சேர அனுமதி மறுத்துத் தனிமைப் படுத்தல் . ஒரு கட்டத்துக்குமேல் , பாடசாலைகள் குழந்தைகளின் இயல்பின்மையை அவதானிக்கத் தொடங்குகின்றன. விசாரிப்பதுன்புரியாமலேயே அவர்களிடமிருந்து விடயங்களைக்  கிரகித்துக் கொள்கின்றன   அதிலிருந்து அவர்களைக் காப்பதற்கான பொறுப்பின் முதல் படியாக சிறுவர் நல மையங்களுக்கு அவை அறிவிக்கப் படுகின்றன.  தொடரான  விசாரணைகள் அவதானிப்புகள், தீர்வை திடமாக முன்வைக்கின்றன.

அதன் படி  குழந்தையின் எதிர்காலம் பற்றி மட்டுமே முடிவுகள் அக்கறை கொள்கின்றன. பெற்றோர் இருவருடனும்,  அல்லது ஒருவருடனாவது வளர முடியாத குழந்தைகளை அரசாங்கம் தான் பொறுப்பெடுத்துக் கொள்கிறது

இருந்தும் ...

 எத்தனை  முயற்சிகள் , வசதிகளை அரசாங்கம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக மேற்கொண்ட போதும் மனப் பாதிப்பு என்பது  இறுதிவரை வசதிகளால் தீர்த்துவிட முடியாத ஒன்று.  என்பதையும், அந்தப் பாதிப்புகள் இறுதிவரை இயல்பாக சமூகத்துடன் ஓட்ட முடியாத நிலையில் அவர்களை தனிமைப்படுத்தி விடுகின்றன என்பதை பல  குழந்தைகள் வளர்ந்து பெரிய மனிதர்களானபின்பும்  நிரூபித்து பெற்றோரின் முகத்தில் குற்றத்தை பச்சை குத்தி விடுவது அவர்கள் தப்பல்ல.

Sunday, May 13, 2018

கருணை எனும் பெரு வேதம்

"தாய்மை,  அதனோடு இறுதிவரை  மகவுக்குள்ள  பந்தம் அவ்வளவு இலகுவாக வார்த்தைகளால் விளங்கவைக்கக் கூடியதோ கடந்து விடக் கூடியதோவல்ல. பெற்ற   குழந்தையின் வாழ்க்கையிலிருந்து அதன் குணநல  விருப்பு வெறுப்புகளால்  தாய் பற்றி, ஓரளவாவது  புரிந்து கொள்ள முடியும் .  அதன் இயல்புகள் இறுதிவரை  ஏதோ ஒவ்வொரு சந்தர்ப்பங்களில் தாயின் பண்புகளை, வயிற்றில் தாங்கிய காலத்தில் தாய் கொண்டிருந்த உணர்வுகளைப் பிரதிபலிக்கும். அந்தப் பிரதிபலிப்பு தாய் உலகத்துக்கு வெளிக்காட்டாது மறைத்த  உணர்வுகளின் உண்மை அடையாளமும்  சாட்சியுமாகும் "

மேற்கூறப்பட்டவை அண்மையில் சிறுவர் பாதுகாப்பு ,மற்றும் சிறுவர் உள வள நலப்பராமரிப்பு அதிகாரியுடன் பேசிக்கொண்டிருந்த போது  அவர் சொன்ன கருத்துக்கள்.


இதை அறிந்தோ அறியாமலோ கூட தலைமுறைகள்  முந்திய கூட்டுக் குடும்பக் காலத்தில் ,  குடும்பங்களில் எப்போதுமே  மனிதர்கள்  நிறைந்திருந்ததால்  சோகமோ, கோபமோ  முடிந்தவரை  அதிகநேரம் நீடிக்கும் வாய்ப்புகள் இப்போதுடன் ஒப்பிடும் போது குறைவாகவே இருந்தன   ஆறுதல் சொல்லவும்  அரவணைக்கவும் மனிதர்கள்  இருந்தார்கள்.  கர்ப்பம் சுமக்கும் பெண்ணை  முடிந்தவரை  சந்தோஷமான  மனநிலையில் வைத்திருக்க முயன்றார்கள்.


அதற்கு அப்போது  இரண்டு  காரணங்கள் முக்கியமாக இருந்திருக்கலாம்.  ஒன்று  அதிக மருத்துவ வசதி இல்லாத காலமென்பதால்  பிள்ளை குறுக்கே கிடந்தாலும், கழுத்தில் கொடி சுற்றினாலும், குழந்தையின்  தலையின் விட்டத்துகேற்ப யோனி வாசல் விரிய  மறுத்தாலும், இரந்தப் போக்கு நிற்க மறுத்தாலும்,  பிரசவத்தின் போதான தொற்று , அதை  அடையாளம் காட்டும் காச்சலைத் தொடர்ந்து வரும் சுவாதம்  இப்படி எது  ஏற்பட்டாலும்    அப்போதெல்லாம்  அனேகமாக  மரணம் என்ற ஒன்றுமட்டுமே   ஒரே  தீர்வாக இருந்ததால்  கர்ப்பம் தரித்த பெண் அதிகம் பயந்த மனநிலையைக் கொண்டிருக்க  வாய்ப்பிருந்தது.

அந்தப் பயத்தைப் போக்கவும்,  உறவை, உரிமையை  உறுதிப்படுத்துவது  போலவும்   எந்நேரமும்  அயலவர் உறவினர்  என  நெருக்கமானவர்கள்  அவளுக்கு பிடித்தவைகளை உண்ணக் கொடுத்தும்  தலைவாரி விடல் உடலுக்கு எண்ணெய் பூசி உருவுதல். நிறைமாதக் கற்பினியின் வீக்கமுற்ற பாதங்களை அழுத்திவிடல்  என அரவணைத்தும்  கவனித்தும் கொண்டார்கள்.  அவள் மனம் நிறைந்திருந்தால்  கருவிலிருக்கும் குழந்தை  பாதிப்புகள் அற்றிருக்கும்  என  உணர்ந்திருந்தார்கள்.  உள்ளே கருவில் இருக்கும் குழந்தை  தாயின் மனநிலையை  தாய்  வாழும் சூழல், அதன் இயக்கங்கள்  எல்லாவற்றையும்  தனக்குள் உள்வாங்கிக் கொள்ளும்  என்பதையும் உணர்ந்திருக்கலாம்.  விஞ்ஞான விளக்க அறிவுக்கு முன்னாலேயே அதை உணர்ந்திருந்தார்கள்  என்பதை பாரதக் கதை மிகத்தெளிவாகச் சொல்லியும் இருக்கிறது.


அரிச்சுனனின்  மனைவியும் கிருஷ்ணனின்  தங்கையுமான சுபத்திரை அபிமன்யூவை கருவாக வயிற்றில்  சுமந்து கொண்டிருந்த காலத்தில் கிருஷ்ணன்  சக்கரவியூகம் என்ற  போர் முறை பற்றி தங்கைக்கு  சொல்லிக் கொண்டிருக்கிறான். அதை அன்னையில் வயிற்றிலிருந்து  அபிமன்யூவும்  கேட்டுக்கொண்டிருக்கிறான்.  சக்கரவியூகத்துக்குள்  நுழைந்து  எதிரியைத் தாக்குவது வரை  கேட்டுக்கொண்டிருந்த  சுபத்திரை, வியூகத்தை  உடைத்துக்கொண்டு வெளியில் வரும் தந்திரத்தைக்  கேட்பதகுள்  தூங்கி விடுகிறாள்.  அன்னை தூங்கியதும்  வெளியிலிருந்து  எந்த ஒலியும் அபிமன்யூவின்  காதுகளை  வந்தடையவில்லை.   அதுவே  அவனது போர் வெற்றிக்கும்  உயிரிழக்கக் காரணமாகவும்  ஆகிப்போனது.  இது கதையோ  கற்பனையோ  ஆனால்  விஞ்ஞான வளர்ச்சி பேசப்படாத  அக்காலத்திலேயே  நிறைய விளக்கத்தோடு தான்  எம்மவர்கள்  ஒவ்வொரு காரியங்களையும்  உணர்ந்து செயற்பட்டிடுக்கிரார்கள்  என்பதன் அடையாளங்களில் ஒன்று .


ஆதலாலேயே   இந்தியாவிலும்  இப்போது புலம்பெயர் ஈழத்தவர்கள் மத்தியிலும் (விபரம்  உணர்ந்தா  அல்லது விழா எடுப்பதற்க்காகவா என்பது தெரியவில்லை )  வளைகாப்பு முறையும்   வழங்கப்படுகிறது.  குழந்தை தாய் வயிற்றில்  தன் முழு உருப்பெற்று,  அதன் மூளை சுற்றியுள்ள விடயங்களைக் கிரகிக்கத்  தொடங்கும் காலத்தில்  அதன் காதுகளில்  தீய சத்தங்கள், சிந்தனைகள்   வசவுகள் தவிர்க்கப்பட்டு எப்போதும் கலகலப்பான  ஒலிகள்  காதில் விழுவது அதன் ஆரோக்கிய மனநிலைக்கு  நல்லது என்பதாலேயே தாயின்  கரங்களில், அசையும் நேரமெல்லாம்  கலீரென   இனிமையான ஒலியைத்தரும்  கண்ணாடி வளையல்கள்  அடுக்கப்பட்டது.  கூடவே  உறவு அயல் மனிதர்களுடன்  அவளது இணக்கப்பாட்டை  உணரவைக்க, வாஞ்ஞையோடு வருடும் இடங்களான கன்னங்களில் மஞ்சள் தடவியதும்,  அத்துடன்  இச்சடங்குகளில்  கல்யாணமான குழந்தை பெற்ற பெண்களே  முன்னணியில்  நின்று நடத்திவைத்தமைக்கும் காரணம்  பார் நாமெல்லாம் பெற்றுத் தேறி  மகிழ்ச்சியாக  ஆரோக்கியமாக இருக்கிறோம் நீயும் உன் பிரசவத்தை  எண்ணிப் பயந்து விடாதே என்பதை  உணர்த்தவே.
இவற்றிலிருந்து  வயது தாண்டியும் திருமணமாகாத பெண்கள், குழந்தைப் பாக்கியம் அடையாத பெண்கள் மற்றும் கணவனை  இழந்த  பெண்களை  ஒதுக்கி வைத்தமை  என்பது   வேறு. அது எம் அதி மேதாவிகளின்,  உணர்விலடித்து   உயிரெடுக்கும் தவக்கிரத் ந்திரம்.  இந்தப்பதிவில் நான் அதுபற்றிப் பேசவில்லை


மேற்சொன்ன கூற்றுப்படி பார்த்தால் இன்றைய  அவசர  வாழ்வியல்,  நெருக்கமற்று  தூரமாய் போய்விட்ட  உறவு முறைகளின்  மனத்தூர  இடைவெளிகள்,  குழந்தைகளின்  ஆழ்மனதில் தன்னவர்கள்  எனப்படும் உறவுகள்  உள்வாங்கப் படாது போவதாக இருக்கவும் கூடும். எப்பவாவது காண நேர்ந்து  அறிமுகப்படுத்தினால்  எந்த உணர்வும் ஈர்ப்புமின்றி வெறும்  ஹாய்  உடன் முடிந்து போவதற்கும்  இது கூடக் காரணமாக இருக்கலாம்
இன்னுமொன்று, எமது  சமூகத்தில்  இன்னும் வழங்கப்பட்டு வருவது.  ஆணாதிக்க  மேம்பாட்டு மனநிலையை  ஊக்குவிக்கும்  ஆண் பிறந்த வீட்டுப் பெண் உறவுகள்

*அவன் ஆம்பிளை  ஆயிரம் செய்வான் பொம்பிளை தான்  பொறுத்துப் போகவேண்டும்.

*ஆம்பிளை சேறுகண்ட  இடத்தில்  மிதித்து  தண்ணி கண்ட இடத்தில்  கழுவுவான்.  பொம்பிளை  கண்டும் காணாமல்  இருந்தால் தான் குடும்ப  வண்டியோடும் .

*ஆம்பிளை என்றால்  ஆவேசமா  கையை காலை நீட்டத்தான்  செய்வான்.

போன்ற  இன்னோரன்ன  வக்காலத்துச் சொற்றொடர்களால்  வன்முறைகள்  ஊக்குவிக்கப்படும் ஆண்களுடன்  சகித்து  வலிகளை  தமக்குள்ளே விழுங்கிக் கொண்டே  கருச்சுமக்கும்  பெண்களின் கருவிலிருக்கும்  குழந்தை  தாய் வெளிக்காட்டாது  தனக்குள் புழுங்கும்   உணர்வுகளை உள்வாங்கிக்கொண்டே  பிறப்பதனால்  இயல்பாகவே அதனிடம்  தாய்  மீதான புரிதலும்  காயப்படுத்தியவர்கள்  மீதான  விலகலுக்குமான அடித்தளம்  வயிற்றிலிருக்கும் போதே  இடப்பட்டு விடுகிறது  போலிருக்கிறது.   அது மட்டுமல்லாது  இப்படியான  செயற்பாடுகள் கொண்டதாகவோ அல்லது அவற்றுக்கு முழுவதுமான எதிர்க்குணம் கொண்டதாகவோவும் தான் அது சமூகத்தில் தன்னைப் பிரதிபலிக்கிறது என்பதை அவதானித்தால் நான்  மேற்குறிப்பிட்ட விடயத்திலுள்ள உண்மை நிலையை உணர முடியும்
                           
                                                         


பிறந்த உடனேயே  தாயின் முலைதேடி ஊர்ந்து உறிஞ்சவும் ,  ஸ்பரிசங்களில்   தாயின் ஸ்பரிசத்தை தனியாக  உணர்ந்து  அழுகை நிறுத்தவும்  செய்யும் குழந்தைகள் தாயின் ஒரு அங்கமாகவே தம்மை நிரூபிக்கின்றனர்.

ஒரு பெண் தாயாகும் கணத்திலிருந்து தனக்காக வாழ்தல் என்பதை அனேகமாக நிறுத்திக் கொள்கிறாள். அவளது எதிர்பார்ப்புகள் , எண்ணங்கள், திட்டமிடல்கள் எல்லாம் குழந்தையை சுற்றியதாகவே அமைகிறது.

பெண்ணுக்குத் தாய்மை இயற்கை வழங்கிய வரம் என்பதையும் தாண்டி,  ஒரு உயிரை தன் உயிருக்குள் பத்துமாதகாலம்  அதனோடான சகல அசௌகரியங்களையும்  பெருமையுடன் ரசித்துப் பொறுமையுடன் சுமந்து, தன்  உடலின் ஆரோக்கியம் வனப்பு அத்தனையும் இழந்து உயிர்வலிப் போராட்டங்கள் தாங்கி, சிலவேளைகளில் குழந்தையின் உயிர் காக்கப்பட வேண்டும் என்பதற்காக  தன் உயிரையே பணயம் வைத்து, தன்னைக் கிழித்துப் பெற்றெடுத்த பின்னும், மீண்டும் தாய்மை சுமக்கத் துணிவதில் அவளது மனத்திடத்தையும் துணிவையும் பொறுமையையும்  பூமிக்குக் கற்றுக் கொடுத்து தாய்மையின் பலம் உணர்த்துகிறாள் .


அவளது உதிரமுறிஞ்சி,  உணர்வுறிஞ்சி, அவளின் ஒரு அங்கமென  பூமியில் விழும் எல்லா உயிரினங்களிலும் அதனது தாய் வாழ்ந்து கொண்டே  பூமியை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறாள்.

ஆனாலும் ஏனோ   பல அருவருக்கத்தக்க பிறவிகளுக்கு தன் குடும்பத்தவர் தவிர்ந்த,  பெண் என்பது   வசை பாடவும் ,  இன்னொருவரை அவமதிக்கவும்  ஏதுவான, இழிநிலைச்  சொற்களாக பெண்மையும்,தாய்மையும்  தன்னைக் கிழித்து உயிரை பூமிக்குக் கொண்டு வரும் அவளது  உறுப்புமே அமையப் பெற்றிருக்கிறது என்பது அருவருப்புக்குரிய நிதர்சனம். ஒரு வேளை இவைகளும் கருவில் இருந்தே தன் சுற்றம்  சூழல்  எனும் சாக்கடையில் கற்றதாகவும் இருக்கக் கூடும். 

தாய்மையை போற்றாது விடினும், மதிக்காது  விடினும் ,மிதிக்காது, அவமதிகாதாவது இருப்போம். கர்ப்பகாலத்திலாவது அவளது உணர்வுகளைக் காயப்படுத்தாதிருந்தால், சமூகத்துக்கு அல்லது குடும்பத்துக்கு விரோதியான ஒரு வரவை  உருவாக்காதிருக்கச் செய்யும் சமூகப் பேருதவியாகக் கூட அது இருக்கலாம்

"தாய்மை இன்றி உலகுக்கு அமையாது கருணை என்னும் பெரு வேதம்"

Tuesday, May 1, 2018

ஒரு ஊர்சுற்றியின் காதல் பயணம்

அடிக்கடி பார்த்துப் பழக நேர்பவர்களையோ,   அருகிலேயே  இருப்பவர்களையோ  விட  எப்பவாவது  ஒரு சந்தர்ப்பத்தில்  எதிர்பாராது  சந்தித்துப் பிரிந்த  எமக்குச் சம்பந்தமில்லாதவர்கள் சிலர் நினைவுகளில்  நிரந்தரமான இடத்தைப் பிடித்து விடுவதுண்டு.

அப்படித்தான்  அவளும்,

வாரங்களின் முன் ஒரு விமானப்பயணத்தில்  பக்கத்திருக்கை சக பயணியாக  அறிமுகமானாள்.   அறிமுகப் புன்னகையோடான  ஹாய்  க்குப் பிறகு    இருவருமே  ஆளாளுக்கு ஒரு புத்தகத்துக்குள்  மூழ்கி விட்டோம்.    இடைக்கிடை  இருவருமே ஒரே நேரத்தில்  ஆளையாள்  பார்த்துக் கொண்ட போது புன்னகையால்  இணக்கமாகியிருந்தோம்.

எப்போதுமே மிகவும் எதிர்பார்ப்புடன்  காத்திருக்கும்  விடயங்களில்  தான் தடங்கல்களும் அதிகம் இருக்கும்  அல்லது  அப்படியான சந்தர்ப்பங்களில்  ஏற்படும் தடங்கல்கள்  தான் எம்மால்  அதிகமாக  உணரப்படும்.  அன்றும்  விமானம்  குறித்த நேரத்துக்குப்  புறப்பட முடியாத   தடங்கல்.  விமானத்துக்குள்  ஸ்ஸ்,  என்ற  சலிப்புடன்  சிலரில்  ஆரம்பித்து  ஒஹ்  என்ற  தொய்வுடன்  அது பரந்து  நேரம் போகப்போக  சலிப்புகள்  சத்தமாக  வளர்ந்து   கோபமாக மாறி  சற்று நாகரீகமான   சந்தைக்கடைச் சத்தமாக  அது மாறிக் கொண்டிருந்தது.  ஆள்  மாறி  ஆள் பணிப்பெண்களை  கூப்பிட்டுக் கூப்பிட்டு  வைத்த  விசாரணையில், பின் தாகமெடுத்தவர்களுக்குக்  கூட தண்ணி கொண்டுவரப் பயந்து  அவர்கள்  ஒளிந்து கொண்டது போலிருந்தது

தடங்கல்களை பலர் பலமாதிரி உணர முடியும். ஒரு பயணத்தின் இடைத் தடங்கல் சிலரைப்  பொறுத்தவரை  வாழ்க்கையின் பாதையையே திசைமாற்றி விடும்.  அது ஒருவகை, இன்னொருவகை  குறித்தால்  குறித்த நேரத்தில்  எல்லாமே நடந்தாக வேண்டும்  அதில் ஒரு சிறு குழப்பம் எனினும்  இவர்கள்  பெரிதாகக் குழம்பி  விடுவார்கள். இன்னொருவகை  எதோ மற்றவர்கள் ரென்ஷனாக  இருக்கும் போது  நாமும் அப்படியே  இருக்காது விட்டால்  குறைந்து போவோம்  என்பது போல  வாழ்நாள் ரென்ஷன் பார்டிகள்  இவர்களின் கசமுசாவில்  ஒட்டாத  அமைதி தேவைப்பட்டது  எனக்கு.

என்னைப் பொறுத்தவரை   தடங்கித்தடங்கி, தடைகள்  தாண்டி  நிறைவேறும் விடயங்கள்  நல்லபடியான  முடிவுகளையே  தரும்  என்ற என் அனுபவங்களிலும்,   ஒருவேளை  தடங்கத் தடங்க  அதில் நான் கூடிய  கவனம் செலுத்துவதும், தடைகள்  வர வர  அதன் மீது நான் அதிக ஈடுபாடும் முனைப்பும் கொள்வதும்  கூட  அதற்குக் காரணமாக இருக்கலாம்   சற்றுப் பிந்தினாலும் கூட  முடியவேண்டிய இடத்தை என்பயணம் அடையும் என்ற தெளிவினாலும்  அந்தக் காத்திருத்தல்களில்   நான்   அதீத சலிப்போ  பொறுமையிழப்போ  அடையவில்லை.

வாசிப்பதை  விட எழுதினால்  என்னை முழுவதும் அதற்குள் அமிழ்த்திவிடலாம்  போலிருந்தது.  hand bag  இலிருந்து  பேனாவையும் கொப்பியையும் எடுத்துக்கொண்டு பக்கத்தில்  பார்த்தேன்  அவள்  ஒரு  ரிங் file லை  விரித்து வைத்து  அதிலிருந்த  பிஸிக்ஸ் போலான  கணிப்பீடுகளுக்குள்   பென்சிலை  உலவவிட்டு யோசித்தவாறே   என்னைப் பார்த்து அமைதியாகப்  புன்னகைத்தாள்.

தன் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டு

May I know your good name pls   என்று  கண்களால்  புன்னகைத்தாள்

பெயரைச் சொன்னபின்  "இவர்களின் அமளியில்  நீ  கலந்துகொள்ளவில்லையே " என்றாள்.
 
புன்னகைத்தேன்.  நான்  வீணாகவே அற்பமாகத் தொலைத்த  காலங்களோடு ஒப்பிடுகையில்  இந்தக் காத்திருப்பின் நேரம்  கணக்கில் எடுக்கவே முடியாத மிக சொற்பம்  என்பதை அவள்  அறியாள்.

"எனக்கு  இதுவொரு  விடயமல்ல, எனதிந்தப் பயணத்தின் திட்டமிடலில்   காத்திருப்பில் கழிக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் இழக்கிறேன் .என்னை அழைத்துச் செல்லக் காத்திருப்பவர்களைக் காக்க வைக்கிறேன்  அதுதான் கஸ்ரம். நீயும்  அமைதியாகத்தானே  இருக்கிறாய்"  என்றேன்.

"you know மாலினி  என்று ஆரம்பித்தவள்  எது  எங்கே  எந்த நேரத்தில்   என்று  விதித்திருக்கிறதோ  அது அது  அந்தந்த நேரத்தில்  தான்  நடக்கும்"  என தத்துவப் பாணியில்  ஆரம்பித்தாள். 

இருந்தாற்போல்  "நான் இறந்துவிட்டால்  இந்தப் பூமியை விட்டு முழுதாகச் சென்றுவிடுவேன்  என நினைக்கிறாயா ?" என்றாள். 

"நான் நினைப்பதிருக்கட்டும்  அதைப்பற்றிப்  பின்பு சொல்கிறேன்.   முதலில் நீ என்ன நினைக்கிறாய்?"  என்றேன். 

" எனது மூச்சு  இந்தக் காற்றில்  ஒரு மிகச் சிறிய அளவில்  கலந்திருக்கும். விருப்பும் வெறுப்புமான  என் எண்ண அலைகள் இந்தப் பூமியில்  அலைந்துகொண்டேயிருக்கும். எனது உடல்  கூட  இந்தப் பூமியின் துணிக்கைகளில் கலந்திருக்கும் you know யாராலும் முழுமையாக  எதிலுமிருந்து  விடைபெற  முடியாது . வாழும் போதும், இறந்த பின்பும் "  என்றாள்.

ஒவ்வொரு விடயத்தின் முதலிலோ  முடிவிலோ இல்லை நடுவிலோ   இந்த you knowவை  அடிக்கடி பாவித்தாள்.  சுவாரசியமானவளாகத் தெரிந்தாள்.  தொடர்ந்து ஆர்வமாகப் பேசிக்கொண்டிருக்க முடிந்தது.

பிரேஸில்  தனது சொந்த நாடு  என்று சொல்லாமல் தனது பிறப்பிடம் என்றாள்.  உலகில் எதுவும்  எவரின் சொந்த இடமும் அல்ல  எதுவும் சொந்தமல்லாத  இடமும் அல்ல  என்ற  ரீதியில் பேசிக்கொண்டிருந்த  அவள்  ஒரு யூனிவர்சிட்டி  மாணவி.   நான் சந்தித்த மனிதர்களிலிருந்து சற்று   வேறுபட்டவள் 

அவளுடன் எது பற்றிப் பேசலாம்  என நாம் ஆராயாமல்  எம்முடன்  எவையெல்லாம் பற்றிப் பேசமுடியும் என்றளவில்  அவளது  வாசிப்பின்  வெளி   பரந்திருந்தது.  போர்,  கலாச்சாரம், அதன் இறுக்கமும்  மீறலுமான  அவசியமும் அவசியமின்மைகளும்,  சாப்பாடு, ஆன்மிகம் , விவேகானந்தர், ரமணர் ,  என்று  தாராளமாக  விரிவாக பேசவும் விசாரிக்கவும் அவளால்  முடிந்தது.  அவளின் கருத்துகளில்  ஓஷோவும்  புத்தரும் நாங்களும்  அவளுக்குள் இருக்கிறோம் என அடிக்கடி எட்டிப்பார்த்துச் சொன்னார்கள். அதே ரீதியில் அனைத்து நாட்டவருடனும் அவரவர்  நாட்டு விடயங்களுக்கேற்பப் பேசக்கூடியவள்  மாதிரி  இருந்தாள்.

முகச்சாயலிலும்  அனுபவங்களிலும் உலக அறிவிலும் நிதானத்திலும்  இருந்த முதிர்ச்சி  அவளது வயது பற்றிய என் அனுமானங்களை  விட குறைவாக  இருந்தாள்.   இசை  வாசிப்பு  என்பனபோன்ற  பலருக்கும் இருப்பன தாண்டி அவளுக்கு பிரத்தியேகமாக வித்தியாசமான  பொழுது போக்கு  ஏதாவது  இருக்கக் கூடும் என்ற எண்ணத்தில்

 " உன் அதிவிருப்பப் பொழுது போக்கு  என்ன?"  என்றேன்

"பொழுது போக்கு  என்று எதுவுமில்லை. பொழுது போக்கு  என்பது  போகாது கிடக்கும் பொழுதை  எதோ ஒன்றால்  நெட்டித் தள்ளுவது  போல .  எனக்கு  பொழுது கிடைக்கும் போதெல்லாம்  அதைப் போக்காமல்  என் கைகளுக்குள்  அடைத்து வைத்து  நான் விரும்புபவைகளை  செய்ய  விரும்புகிறேன்."  என்றாள்

"சரி  கல்வியோ  தொழிலோ  தாண்டிய மிகுதி நேரங்களில்  அதிகமாக  விரும்பிச் செய்வது  என்ன?" 

"அது  கிடைக்கும் நேர அளவைப் பொறுத்தது.  நான் இன்னும் என் கல்வியை முடித்து  ஒரு நிரந்தர  உத்தியோகத்தில்  உட்காரவில்லை.  வாரவிடுமுறை  நாட்களில் ஒரு விரைவு உணவகத்தில்  வேலை செய்கிறேன்.   வாரவிடுமுறையை  விட சற்று  அதிகமாகக் கிடைக்கும் நாட்களில்  இந்தப் பூமியை  சுற்றிப் பார்க்கப் புறப்பட்டு விடுகிறேன்.  நாடு நாடாக  சுற்றுகிறேன் "

"தனியாகவா  குழுவாகவா?"

"தனியாகத்தான்". 

"நிரந்தர மாதவருமானமற்ற  ஒரு மாணவி.  நாடுநாடாகச் சுற்றுவதெனில்  பயணங்களுக்கான பணத்தை  எப்படிப் பெற்றுக் கொள்கிறாய்.?"

"என் மனதில் குறித்திருக்கும் பட்டியலில் உள்ள நாடுகளின்  பயணச்சீட்டுக்கள் இணையத்தில் எப்போது விலை குறைவாக  இருக்கிறதோ அல்லது  எந்த நாட்டுக்கான  பயணச் சீட்டு  விலைகுறைவாக அந்நேரம்  இருக்கிறதோ  அல்லது இறுதி நிமிட பயணச் சீட்டு  எங்கு கிடைக்கிறதோ  அதையே  நான்  சுற்றிப் பார்க்கத்  தேர்வு செய்து கொள்வேன்."

"மிகுதிச் செலவு?"

"கையில் உள்ளபணத்தை முடிந்தவரை   செலவு செய்யாமல்  இருக்கவே  முயல்வேன்.  என் பயணத்தின் வழியில்  நட்பாகிக் கொள்வோரிடன்  என்னைப்பற்றி வெளிப்படையாகவே  பேசிக்கொள்வேன்.  குழந்தைகளோடான  குடும்பம்   அல்லது வயோதிப் பெண்கள்  போன்றோரிடம்  உங்களுக்கு  இஷ்டமானால் இன்றிரவு இங்கு தங்கிவிட்டுச் செல்கிறேன்  என்று அனுமதி கேட்பேன்  சம்மதித்தால்   அவர்கள் காட்டும் இடத்தில் உறங்குவேன். அவர்களுக்குச் சம்மதமானால்  அவர்கள் விரும்பும் நேரம் வரை  அந்த அனாடுப்றி வாழ்க்கை பற்றிப்  பேசிக்கொண்டிருப்பேன்.  உணவு தந்தால்  கூடியிருந்து  உண்ணுவேன் . இல்லையாயினும் பரவாயில்லை.   என்னிடமிருக்கும்  பிஸ்கட்டும்  தண்ணீர்ப் போத்தலும்  போதும் எனக்கு   அவர்கள்  சம்மதிக்காது விட்டாலும்  எந்த விதக் கோபமும்  எனக்கில்லை.  யாருக்கும் யாரையும் தாங்கவோ  தங்கவைக்கவோ  கடமையில்லையே.  இடங்கிடைக்காத போது விலை குறைவான  தங்குமிடங்களில்  தங்கிக்  கொள்வேன்"  என்றாள் இயல்பாய்.

"உன் இந்த வாழ்க்கை உன் குடும்பத்துக்கு ஏற்பாக இருக்கிறதா.?"

"ஆரம்பத்தில்  அவர்கட்கு  இதில் நாட்டமில்லை  என்பது தெரிந்தது.?"

"ஏசினார்களா?"

அறிவுரை போல இருத்திவைத்துப் பேசினார்கள்.  நான் என்  வாழ்தல் பற்றிய என் விருப்பத்தை  விளக்கினேன்.  பெற்றதற்காக  காலம் முழுவதுமா  அவர்கள்  முதுகில்  நான் சவாரி செய்ய முடியும் அல்லது  அவர்கள்  கூட்டுக்குள்  என்னை சிறைவைக்க முடியும்.  விஷேட நாட்களில்  குடும்பத்தோடு  கூடிக் கொள்கிறேன். எல்லோரும்  கூடி மகிழ்ந்திருக்கிறோம்.   துக்க நிகழ்வுகளில்  அவர்களைப் போல  என்னால் துக்கித் திருக்க முடியவில்லை.   வாழ்தல் போல  இறப்பும்  இயல்பான ஒன்றாகவே  எனக்குத் தோன்றுகிறது. you  know வாழ்தலும் இறப்பும்  என்பது இப்போது நான் உன்னைச் சந்தித்து இனி எப்போதும் காணச் சந்தர்ப்பமற்றுப்  பிரிவது  போலானது.  நினைவுகளில்  தான்  ஆற்றிய வினைகளில்  எப்போதும் ஒரு மனிதரால்  வாழ்ந்திருக்க முடியும் ."

"காலம் முழுவதும்  இப்படியே  சுற்றிக்கொண்டிருப்பதாகத தீர்மானித்திருக்கிறாயா?"

"தீர்மானம் செய்து  இதைத் தொடங்கவில்லை  நான்.  எனக்குப் பிடித்தவைகளை  மட்டுமே  செய்கிறேன்.  என் கல்வி உட்பட .  போதும் என  உணரும்  போது  நிறுத்திக் கொள்வேன்."

"இந்தப் பயணத்தை  எத்தனை நாட்கள் திட்டமிட்டிருக்கிறாய்?"

புன்னகைத்தாள்.  இதுவரை நேரத்துக்கும்  இப்போதுக்கும் அவளது முகத்தில்  நிறைய  வித்தியாசமிருந்தது.  பளீரென  இருந்த அவள் முகத்தில்   இப்போது  அதீத  ஜ்வாலிப்பு  அழகைக் கொடுத்தது .

"ஒரே ஒரு நாள்.  சிலமணி நேரங்கள்  அவ்வளவும் தான்"  

ஒரு முக்கிய விடயத்தில்  ஒப்பமிட ஒருநாள் விஜயம் செய்யும் பிரமுகர்  போல அவள் சொன்னது சற்று அதிர்ச்சியாக இருக்க

"அத்தனை விரைவாக  சுற்றிப் பார்த்து விடுவதற்கு அவ்வளவு சிறிய நாடா  இது?"

"இந்தப் பயணம் நாடு சுற்றிப் பார்க்க  அல்ல. ஒருவரைச் சந்திக்க"

நான் மேலே பேசாமல்  அவளது தொடர்தலுக்காகக் காத்திருந்தேன்.

"you know  மாலினி. இத்தனை வருடங்களில்  நான் எத்தனையோ  இடங்கள் சுற்றியிருக்கிறேன். ஏராளம் மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன் .  பலர்  என்னை விரும்பியிருக்கிறார்கள்.  என்னோடு கூடி வாழவிரும்பும்  தங்கள்  எண்ணத்தைத் தெரிவித்திருக்கிறார்கள்    ஆனால்  ஏனோ எனக்கு அப்படியான எண்ணங்கள் எதுவுமே வந்ததில்லை .  நலம் விசாரிப்பு  நாலு புன்னகையுடன் கடந்து  விடும். தொடர்புகளைத் தொடரக் கூட எண்ணுவதில்லை  என்னால்  ஒன்றில் ஒன்றித்து  அதற்கான  சமாளிப்புகள்  சமாதானங்களுடன்  இருக்கமுடியும் என்றோ  இருக்கவேண்டும்  என்றோ  தோன்றியதில்லை"

"இப்போது தோன்றியிருக்கிறதா?"

புன்னகைத்தாள்    

"அவனை இரண்டு வருடங்களின்  முன் மலேசியாவில்  சந்தித்தேன்.  நாடு பார்க்க வந்ததாகச் சொன்னான்.   பொதுவாக  எனக்கு  யாருடனும்  கூடிச் சுத்த முடியாது  எனது ரசனைகளும்  இன்னொருவர் ரசனையும்  வித்தியாசப்ப்படுமிடத்தில்  காத்திருத்தலும்  அவசரப்படுதலும்  தவிர்க்க முடியாதவை.  அதை நான் விரும்புவதில்லை. 

முதல் முதலாக  இவனோடு சேர்ந்து சுற்றப் பிடித்தது  பழகிய சில நாட்களில்  நட்பை  நட்பாக மதித்தான்.  எனக்கு  எது அவனில்  பிடித்ததென்பது  புரியவில்லை. அது  எனக்கு  என்னவென  விளக்கத் தெரியவில்லை.  ஆனால்  அவனுடன் இருந்த நேரங்கள்  தியானம் செய்து முடித்தது  போன்று  மனம் ஆரவாரங்கள்  அவசரங்கள்  எல்லாம் அடங்கி  நிற்சலனமாக   உணர்ந்தேன் .
அவனை விட்டுப் போனபின்  ஒவ்வொரு விடயங்களிலும்  அவனைத் தேடத் தொடங்கியது மனம்.  எதையோ  பிரிந்திருக்கும்  ஒரு ஊமை வலி தொடர்ந்து    இருந்தது.  சமூக வலைத்தளங்களில்  தேடினேன். கிடைத்தான். தொடர்பு கொண்டேன்  மகிழ்ந்தான்.

நான் சொல்லாது விட்ட என் உணர்வுகளை  தான் உணர்ந்ததாக  அவன் சொன்னான். கூடி வாழக் கேட்டான்  மறுத்து விட்டேன்.  இரண்டு வருடங்கள்  என்னைப் பரிசோதனை  செய்ய நான் எனக்குள்  விதித்திருந்த  கெடு. அந்தக் காலங்களில்  இன்னும் பல இடங்கள் , பல மனிதர்கள் கடந்து போனார்கள்   அவன் எனக்குள் இருந்து  போகவில்லை."

"that means you are in love with   him?"

"yes   இன்று விடிந்தால்  அவன் பிறந்தநாள்.   அதிகாலையில்  அவனுக்கு  வாழ்த்துச் சொல்லி அதிரவைத்து   சிலமணி நேரங்களை  அவனோடு கழித்துவிட்டு திரும்பிவிடுவேன்"

விமானம் தரையிறங்க  இருவரும் அவரவர்  வழியில் பிரிந்து போனோம்.

                                                                   
..........................................................................................................................................................

இன்றவள் தொலைபேசினாள்

"ஹேய்  மால்னி"  என்ற  குரலில்  அதீத  உற்சாகம்

"நீதான் சந்தித்துப் பிரிபவர்களைத் தேட மாட்டாயே"

"உன்னுடன்  பேசவேண்டும்  என்று தோன்றியது because I like you"

"உன் காதல்?"

அன்று சந்தித்துப் பேசிய சிலமணி நேரங்களில்  தன் குறைகள்  அடுக்கினான்.  " I'm nothing " என்றான்.

"நீ சொன்ன குறைகள்  எதுவுமே  என் கண்ணில்  படவில்லை.  அன்பின் பார்வையில்  குறைகள்  தென்படுவதில்லை . அதனாலேயே You are everything for me "  என்றேன்.

"உன்  ஊர் சுற்றும் பயணம்  ஓய்ந்து  விட்டதா.?"
  
"நிறைவு  தெரியும் ஒரு இடத்தில்  தரித்து நிற்கத் தோன்றி விட்டது." 

உண்மை தான்

'அன்பின் பார்வையில்  குறைகள் தென்படுவதில்லை .  அது இருக்கும் இடங்களில் மட்டுமே   ஆத்மாவும் இளைப்பாறுகிறது. நிரந்தர அமைதிக்குள்  சங்கமமாகிறது. '