.
ஒரு பாடசாலை நிர்வாகத்துக்கும் எங்கள் புலம்பெயர் தமிழ் குடும்பத்துக்குமான விளக்கமின்மை அல்லது குழப்பம் என்று எதோ ஒரு சிறு பஞ்சாயத்து. அதற்குள் தலை கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை ஆயினும் இரண்டு பகுதிக்கும் இடையிலான ஒரு இடைத்தரகு நிலை . குற்றம் இரண்டு பகுதியிலும் இல்லை இருந்தாலும் என்ன குளறுபடி என்பதை ஆர்வமிருப்பின் தொடர்ந்து வாசியுங்கள்.
.
அந்தப் பெண் பிள்ளைக்கு பன்னிரண்டு வயது எழாம் ஆண்டு கற்கிறாள். அந்த வகுப்புக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஒருவாரச் சுற்றுலாவுக்கு தயாராகி இருக்கிறது வகுப்பு. அதற்கான அனுமதிப் படிவத்தில் இந்த மாணவியின் பெற்றார் மட்டும் கையொப்பம் இடவில்லை. வகுப்பாசிரியர் காரணம் கேட்டதற்கு மாணவியால் பதில் சொல்ல முடியாமல் மௌனம் சாதித்திருக்கிறாள். நிர்வாகம் திரும்பவும் அனும தி கோரி கடிதம் கொடுத்திருக்கிறது அதிலும் காரணம் ஏதும் சொல்லப்படவில்லை . கேள்விக்கான அவளது பதில் மீண்டும் மௌனமாகவே இருக்க பெற்றோரை அழைத்திருக்கிறார்கள் .
.
வந்த பெற்றோரும் பதில் சொல்லாது கேட்ட கேள்விகளுக்கு ஆம் இல்லை என்ற பதில்களையே விளக்கமறு சொல்லிக்கொண்டிருக்க , பஞ்சம் பிழைக்க வந்த கூட்டம் பணம் இல்லாமல் இருக்கும் என்று பாடசாலை நிர்வாகம் எண்ணி , பாடசாலைக் காசிலும் வகுப்பு சேமிப்புக் காசிலும் ஒருபகுதியும் , மற்றும் வகுப்பில் வசதியான பெற்றோரிடம் விடயத்தை சொல்லி மிகுதி பணமும் சேர்த்து பிள்ளையை சுற்றுலாவுக்கு அனுப்பலாம் தனியா ஒரு பிள்ளை எ ஞ்சி இருப்பது அதன் மன நிலையை கல்வியை பாதிக்கும் என்று விளக்கம் சொல்ல நான் குழம்பினேன்.
.
எப்படி பணம் இல்லாது போகும் . நம்மவர்கள் பலர் இங்கு வேலை செய்வதையே வேலையாக கொண்ட கூட்டத்தை சேர்ந்த பெற்றோர் அல்லவா. 400 யூரோ கட்ட முடியாதா? பிள்ளையின் பூப்புனித நீராட்டு விழாவுக்கே அமெரிக்க கல்யாணக்கார் வாடைக்கெடுத்து ஐந்து நிமிட நேரத்தில் போகும் மண்டபத்துக்கு இரண்டு மணி நேரம் அயல் கிராமம் நகரம் எல்லாம் சுற்றி பிள்ளையை களைத்துச் சோர்வடைய வைத்து விருந்தினரை காக்க வைத்து கொண்டு வந்து மண்டபத்தில் இறக்கி அதற்காக இரண்டு மணித்தியாலத்துக்கு 2000 யூரோ செலவு செய்யும் வசதி நிறைந்த இவர்களிடம் ஒரு வாரத்துக்கு நானூறு யூரோ கட்டணமாக கட்ட முடியாதா சிந்தனையினூடே யாழ்ப்பாணத்தின் பிந்தங்கிய குக்கிராமம் ஒன்றின், கல்வியறிவிலும் மிகப்பிந்தங்கிய சாயலில் காணப்பட்ட பெற்றோரிடம் காரணம் கேட்டபோது,
.
"பொம்பிளைப் பிள்ளை அதுதான் அனுப்ப விருப்பமில்லை" என்று தீர்மானமான முடிவாகச் சொன்னார்கள்.
"அது தான் ஏன் என்று கேட்கிறேன் வகுப்பில் எல்லாக் குழந்தைகளும் தானே செல்கிறார்கள்"
"ஆனாலும் எங்கட பொம்பிளைப்பிள்ளை"
"பாதுகாப்பில்லை என்று பயப்படுறீங்களா வேறும் பெண் குழந்தைகள் சேர்ந்து தானே போகீனம்"
"அவையள் வெள்ளைக்காரப் பிள்ளைகள். எங்கட பிள்ளைகள் அவையளை போல இல்லையே"
இந்த பதிலிலும் பொம்பிளைப்பிள்ளை என்று திருப்பி திருப்பி அழுத்திய வார்த்தைக்குள்ளும் தான் விளக்கமின்மை இருக்கின்றது என்பது புரிந்து போக ;
"ஆசிரியைகள் கூடப் போகிறார்கள் தனிப்பட்ட அந்தரங்க தேவைகள் இருந்தால் தாய் போல கவனித்துக் கொள்ளுவார்கள் பயப்படாதீங்கோ " என்றேன் ஆதரவாக
"அதில்லை பிரச்சனை அங்கே போற இடத்தில பிள்ளை பழுதுபட்டுப் போச்சுது என்றால்...."
தூக்கி வாரிப் போட்டது அந்தக் கேள்வி மனம் ச்சே என்றது
"குழந்தை பற்றி என்ன பேச்சுப் பேசுகிறீர்கள்"
"பின்ன என்ன சுற்றுலாவுக்கு போகேக்க பொம்பிளைப் பிள்ளைகள் கருத்தடை சாதனங்களும் எல்லோ கொண்டு போக வேண்டுமாம் அப்ப எப்பிடி எங்கட பிள்ளை துப்பரவா திரும்பி வரும். "
சுத்தியல் ஒன்றெடுத்து தலையில் போட்ட மாதிரி இருந்தது எனக்கு
"பாடசாலை நிர்வாகம் தந்த கொண்டுபோக தேவையான பொருட்களின் பட்டியலில் இதுவும் இருக்கா ?"
"இதை எல்லாம் எப்பிடி வெளியா எழுதுவீனம். நாங்க தான் யோசிச்சு செய்ய வேணும் . அங்க பெடியங்கள் பெட்டையள் எல்லாம் ஒரே அறையில தானாம் படுக்கிறது"
(நடைமுறையில் அப்படி அல்ல செல்லும் இடத்தில் உள்ள மாணவர் தங்கும் அரசாங்க பொது விடுதிகளில் தனித்தனிப்பகுதி ஆயத்தம் செய்திருப்பார்கள் )
"படுத்தா அதுவும் குழந்தைகள் ஒன்றாக படுத்தால்?"
"ஏதும் நடக்காதா? இஞ்ச எல்லாம் ஆயத்தமாக இருங்கோ எண்டு தானே நாலாம் வகுப்பு முடியும் போது எல்லாம் சொல்லிக் குடுக்கினம்"
"என்ன பாலர்கள் பள்ளிச் சுற்றுலா போற இடத்தில பாலியல் லீலைகள் எப்படி நடத்துவது என்றா? "
" எங்களுக்கு தெரியாதது எல்லாம் சொல்லிக் குடுக்கிறது இதுக்கு தானே? இந்த வயதில இதெல்லாம் எங்களுக்கு பெற்றோராவது சொல்லித் தந்தவையே சொல்லுங்கோ பாப்பம் பொத்திப் பொத்தி எல்லோ ஒழுக்கமா வளர்த்தவை "
நான்காம் வகுப்பு தாண்டும் போது பிள்ளைக்கு பத்துவயது முடிகிறது. அத்துடன் ஆரம்ப பாடசாலைக் கல்வியும் முடிகிறது. பத்துவயது தாண்டியதும் குழந்தைகளாக இருந்த இவர்களின் உடல்களில் பருவம் மெல்ல மெல்ல ஹோமோன் மாற்றங்களால் இளமையை எழுத ஆரம்பிக்கும். அந்த தனக்குள் ஏற்படும் மாற்றங்களுக்கான காரணங்களை குழப்பமற்று பிள்ளை உணர்ந்து கொள்ளவும் , அதன் மூலம் ஏற்படும் பயங்கள் குழப்பங்கள் அல்லது மன அழுத்தங்களில் இருந்து தப்பிக் கொண்டு தன் உடல் மன மாறுதல்களை ஏற்றுக் கொள்ளவும் , தனக்கு பிறரால் ஏற்படக் கூடிய துஷ்பிரயோகங்களில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ளவுமே அந்த வயதில் அது கற்பிக்கப் படுகிறது
" ........ அக்கா சொன்னாவே சுற்றுலாவில் இதெல்லாம் நடக்கும் என்று" (இந்த ....... அக்கா வாய் திறந்தால் வசனத்துக்கு ஒரு வார்த்தை ஆங்கிலம் அதிலும் பாஸ்போர்ட் இற்கும் பாஸ் பூட் இற்கும் வித்தியாசம் இல்லாத ஆங்கில உச்சரிப்பில் அளந்து விடும் அதி மேதாவி எங்கோ ஒரு கான்வென்டில் கற்றதாக பெரும் படித்த குடும்பம் ஒன்றில் இருந்து வந்ததாக சொல்லிக் கொள்ளும் இப்படி அப்பாவிகளின் அட்வைசர் )
"........... அக்காவின் பிள்ளைகள் போகீனமா?"
"ஓம் அவை ஆம்பிளைப் பிள்ளைகள் தானே பயமில்லை"
'ஒ.... அப்போ விதைப்பது பற்றியல்ல உங்கள் பிரச்சனை முளைத்து விடுமோ என்பது தான் கலாச்சாரத்தை தக்க வைத்தல் போல' அந்த இடத்தில் வாயில் வந்த வார்த்தையை வெளிப்படுத்த முடியாது என்னால் அங்கு என் பணி அந்நேரத்தில் அதுவல்ல.
.
அவர்களின் பயங்களையும் குழப்பங்களையும் நிர்வாகத்துக்கு விளக்கிய போது திடுக்குற்று மாறிய அவர்களின் முகங்களில் வெறுப்பு வழிய கண்கள் பேசிய சங்கேத மொழிகள் பார்த்தபோது உடல் கூசியது. ஆனாலும் உதட்டில் புன்னகையும் குரலில் குழைவும் மாறாமல் ஆதரவாக பேசினார்கள் அவர்கள் கடமை என்பதால்.
.
நான் விடைபெற்ற போது "உங்கள் இடத்தில் இப்படித்தானா?" என்றார்கள் நட்பான புன்னகையுடன் அந்த இப்படித்தானாவுக்குள் எதுவெல்லாம் அடக்கம் என்பது எனக்குத் தெரியாது ஆனால் என் இடம் இப்படி அல்ல; இந்த இடத்துக்குள் ஏராளம் அடக்கம். மேல்நாட்டுக்கு வந்து இப்படி அதிகம் கற்ற அறிவாளிகளை சந்திக்கும் போ து தான் ஏராளம் கீழான விடயங்களை நான் அறிந்து கொள்ள முடிகிறது.
.
வரவேற்று தஞ்சம் கொடுத்த ஐரோப்பா கடலளவு கற்ற இவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள இன்னும் அதிகம் உண்டு. தீமிதித்தல் மாதிரி..... தூக்குக் காவடி மாதிரி..... பல்லக்கில் தூக்கி ஊஞ்சலாட்டி வரும் கல்யாணப் பெண் மாதிரி...... குத்தாட்டம் போட்டுக் கொண்டே மணமேடைக்கு வரும் மணப்பெண் மாதிரி...... பருவமடைந்ததற்காக சடங்கு வரை வீட்டில் காக்க வைத்து மண்டபமும் வேலை விடுப்பும் கிடைக்கும் வரை சடங்கை ஒத்தி வைத்து பள்ளியில் வகுப்பிறக்கப் படும் மாணவிகள் மாதிரி இன்னும் இன்னும் ஏராளமாய்......
No comments:
Post a Comment