மழை பொழிந்து கொண்டிருக்கிறது. மழை பொழியும் நவம்பர் மாதக்காலைகள் இருளகற்றத் துணிவதில்லை. மழையைக் குளிரக் குளிரப் பாடும் கவிஞர்களிடம் காதல் நனைவதைக் காண்கிறேன்.
எனக்கு நவம்பர் மாதம் பிடிப்பதில்லை. அந்த மாதத்தில் தான் நிலையாமையின் தத்துவம் பற்றி அதிகமாக யோசிப்பேன்.அதற்கும் மாவீரர் நாளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இழப்புகளில் தனிப்பட்டவைக்கும் பொதுவானவைக்குமிடையில் மிகப்பெரும் வேறுபாடுகளுண்டு . வருடங்களில் அந்த மாதத்தை நீக்க முடிந்தவர் யாராவது இருந்தால் தயங்காமல் அவர்களைக் கடவுளென்பேன்..
மழை கண்டால் மயிலாகும் வழக்கம் என் சிறுபராயத்திலிருந்தது. மேகமிறங்கி குளிர்காற்று வீசத்தொடங்கும் போதே வீட்டில் நடக்கும் மழை வரவேற்பு ஆரவாரத்துக்குள் நசுக்கிடாமல் வெளியேறி, ஆச்சிகாலத் தலைவாசல் குசினியை பிரித்து வீட்டின் பின்பக்கக் கோடியில் போட்ட பெரிய கற்தூணில் ஏறி நின்று கொள்வேன் .மழை நிலத்தில் விழுந்து தெறித்து காலில் மண்படாமலிருக்க.
தேடி யாராவது கண்டுபிடித்து கெஞ்சி, கொஞ்சி மிரட்டி உள்ளே கொண்டு போகும்வரை கைகளை விரித்து கழுத்தை அண்ணாந்து மழையை முகத்தில் வாங்குவது சொர்க்கம்.
விறாந்தையில் நின்றேந்தும் தாவாரத்தண்ணி உள்ளங்கை பட்டுத்தெறிப்பது சிலிர்ப்பு.
மழைக்குள் நனைந்து கொண்டே, வானம் இறங்கிப் புகார் போட்ட கடலில் ஒழியும் துளிகளைப் பார்ப்பதும், பச்சைக் குளத்தில் குழியிட்டு குமிளியெழுப்பி தாளமிடும் அழகு ரசிப்பதும் வரம்.
காற்றடிக்கும் பொழுதும் மழைபொழியும் பொழுதும் அருகில் யாருமற்ற அமைதியில் மெதுவாய் நகர்த்தும் சைக்கிளோடு நனைவது சுகம்.
உயிரைத்தீண்டும் மழையின் தூய்மை உணர்ந்த நான், நிலத்தில் வீழ்ந்து புழுதியில் கரைந்து பெரும் அசிங்கங்களை தன்னகத்தே கொண்டு சேறாகி நகரும் வெள்ளம் வாரியிறைத்துக் கறை செய்வதும் கண்டிருக்கிறேன். ஆகையால் என்னில் தெறிக்கும் சேற்று நீர் பற்றி அப்போதும் இப்போதும் எப்போதும் எப்போதும் அலட்டிக் கொள்வதில்லை. அவைகளின் நிறம் அவற்றின் குணத்துக்கு. அது நீரின் அல்ல, சமூகத்தின் அசிங்கம்
தான் வளர்ந்ததை பெண் உணருமுன்னமே சமூகம் பராயத்தைத் தொலைக்கவைப்பது சாபம்.
பாடசாலை நாளில் அடித்துக்கொட்டிய மழையில் வெள்ளைச்சீருடையில் தெப்பலாய் நனைவது, பார்க்கும் கண்களுக்குப் பாரதிராஜா படக்காட்சி என்று உணராத போதில், உற்று உற்றுப்பார்த்து மட்டமாக வீணிவடித்தவனை பின்னால் நண்பர்களுடன் வந்தவன் இழுத்து வைத்து உதைத்து வீடுவரை துணைவந்த வரை உடல் தீண்டா அவன் கண்களுக்கு நட்பின் நிறம் எப்போதும்.
நட்பின் பார்வை காமத்தின் நிறம் கொள்ளாது. காமநிறம் கொண்ட பார்வையில் நட்பிருக்காது என்ற பாடத்தின் ஆசான் அவன் கண்கள்.
பிறகுமொரு நவம்பர் மாத மழையிரவில் அம்மாவும் நந்தினி அத்தையும் இடியப்பம் அவித்துக்கொண்டிருந்தார்கள். குண்டுச்சத்தம் அதிர்ந்து அதன் துண்டுகள் வீட்டைச் சல்லடையிட்டுக்கொண்டிருந்தன..ஒரேயொரு குப்பி விளக்கு திரியைக்குறைத்து தூங்கலாக எரிந்துகொண்டிருந்தது. அந்த வெளிச்சமும் வெளியில் தெரியாமல் மறைத்து வைத்திருந்தார்கள். நானும் பிரமிளாவும், நாதனும் புஸ்பனும் லாவணியும் குருட்டு வெளிச்சத்தில் குரண்டிப்போயிருந்தோம். அயலட்டையெங்கும் யாருமில்லை என்பதை அறியாமலிருந்தோம்.
பொத்தலாக ஓட்டை விழுந்து போன வீட்டின் மேற்பகுதியிலிருந்து அங்கிங்கெனாத படி ஒழுகிக் கொண்டிருந்தது மழை. வாளி சருவம் குடம் என எல்லாப்பத்திரமும் வைத்து முடித்து, கட்டுப்படாத ஒழுக்கை அம்மா பயன்படுத்த அனுமதிதராமல் பொக்கிசமென பொத்தி வைத்து எனது எதிர்காலத்தில் ஒப்படைக்க விரும்பிய, அப்பாவின் மிகப்பெரியதும் கனமானதுமான இரும்புப்பெட்டிகளில் ஒன்றைத்திறந்து அதற்குள் தங்கமென மின்னும் பித்தளையிலானபெரும் அண்டாவிலிருந்து வரிசையாக கைக்குள் பொத்தும் சின்னஞ்சிறு பாத்திரம் வரை அடுக்கிய அடுக்குக் குலைத்து ஒழுக்குக்கு வைத்தபோதும் மழை வீட்டுக்குள் வெள்ளம் போட்டது
காயப்பட்டதும் இறந்ததுமான உடல்களை, தண்டவாளத்தில் மனிதவலுவில் உந்தி நெம்பும் ஊர்தியொன்றில் வைத்துக் கொண்டுவந்து அவர்கள் விறாந்தையில் கிடத்திக்கொண்டிருந்தார்கள். அவைகளை ஏற்றிப்போக வெளிச்சம் அணைக்கப்பட்ட வாகனங்கள் முடக்கில் தயாராக நின்றன. ஏற்றிக்கொண்டிருந்தாலும் தொடர்ந்து விறாந்தை நிறைந்து கொண்டிருந்தது. ௸ல்லும் வெடியும் நெருங்கி அதிரும் இரவில் உடல்களுடனும் உச்சவலியின் அனுக்கத்திலும் இருப்பது பயமாக இருந்தது. விறாந்தையிலிருந்து வழிந்து சொட்டிய இரத்தத்தோடு தாவாரத்தண்ணி சிவப்பாக ஓடிக்கொண்டிருந்தது. முதல் முறையாக மழை ஏந்தத் தயங்கியது கை.
இறுதியாய் என் வீட்டில் வாழ்ந்திருந்த நாளும், அந்த வீடும் விட்டோடிய அந்த நாளுடன் அற்றுப்போய் வெறும் மண்மேடாக்கப்பட்டதுடன் என் அப்பாவின் நினைவுதாங்கி அம்மா பாதுகாத்த அனைத்தும், அப்பாவின் புகைப்படம் கூட அற்று ஒரு காலம் முற்றாகக் கரைந்து போயிற்று அன்றைய மழை கரைத்த போதில்.
பின் வந்த மழைகள் எல்லாம் எங்கெங்கோ பெய்தன. நான் காய்ந்து போயிருந்தேன். நனைத்துக் கொள்ளத் தோன்றவில்லை.
கொழும்பில் இருந்த காலத்திலும் மழை பெய்தது. அதில் தூய்மை இருக்கவில்லை. அதுவரை சீழும் காயமும் பட்டுவிடாமல் இருந்த எனக்கு நிறையப் புண்களும் வலியும் தந்து குடைபிடிக்கவும் வெள்ளத்தை விட்டு விலகிச்செல்லும் எண்ணமும் சொல்லித்தந்தது.
பிறிதொரு நாளில்
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் போகும் வழியில் எமது வாகனத்துக்கு அரைமணிநேரம் முன்னால் போன ராணுவட்றக் பிரட்டப்பட்டு ராணுவம் ஆடிய சன்னதத்தில் வைத்தது வைத்தபடி வெறுங்கையுடன் காட்டுக்குள் சிதறி ஓடி ஏதாவதொரு வாகனத்துக்காய் மறைந்து காத்திருந்த நாளில் இறுதியாய் ஒருமுறை மழை நனைத்தது.
மழையில் மாற்றுடையும், மாற்ற இடமுமற்ற அன்றும் வெண்ணிற கொட்டன் சல்வார் அணிந்திருந்தேன். அந்தக்காடு ,அதிலிருந்து தூரம் நடந்து பாதுகாப்பான பகுதியில் வெளியேறிச் செல்லும் வழி, அனைத்தும் தெரிந்திருந்தும் உடை உடலோடு ஒட்டியிருந்த போது மனதின் துணிவெல்லாம் வெளியேறியிருந்தது. நண்பிகளை நிமிர்ந்து நோக்கவும் கூசியது. உடலை ஒடுக்கி கூனிக்குறுகி ஒடுங்கி நின்ற போது,
எதிர்பாராமல் எதிரில் வந்தான். எங்கள் பஸ்ஸுக்குப் பின்னால் வந்த மூன்றில் ஏதோ ஒரு பஸ்ஸில் வந்து, எங்களைப்போல் சிதறி ஓடியிருக்க வேண்டும். கருப்பு நிறத்தில் ஏதோ அடர்நிறக் கோடிட்ட நனைந்த ௸ர்ட்டைக் கழற்றி நீட்டினான். வாங்கிப் போர்த்திக்கொண்டு "நீ அண்ணனாகப் பிறந்திருக்கலாம்டா" என்ற ,வாழ்வில் சொல்லியிருக்கவே கூடாதென, வாழ்க்கை வலித்த போதெல்லாம் நினைவில் வந்து முகத்திலறைந்த அந்த வார்த்தையைச் சொன்னேன்., ஆமியிடம் அகப்பட்டது போல அதிர்ந்த கண்கள், நீண்டகாலமாய் நினைவிலறைந்தன.
பின் நான் இங்கு வந்து விட்டேன். இங்கு வந்தபின் பெய்யும் மழைக்கு இருளினதும் இடியினதும் சாயல். அது மனதில் குளிர்வதில்லை. குளிர் இல்லாத மழையில் என் பெயரில்லை. அதன் வெம்மைக்கு எஃகென இறுகிய என் நினைவுகளை நெகிழ்த்தும் தன்மையுண்டு.
Saturday, November 30, 2019
Wednesday, October 30, 2019
அக்டோபர். 29
வழமையாக அதிகாலையே எழுந்து விடுவது போல அன்றும் நித்திரை கலைத்திருந்தாள் நிலா . ஆனாலும் படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாமல் கண்கள் எரிந்தன. உடல் வலி அதிகமாக இருந்தது. கைக்கும் உடலுக்குமான இடைப்பட்ட பகுதிக்குள் அவளது உடலோடு ஒட்டிக் கிடந்த மகளைக் கழுத்தை வளைத்து திரும்பிப் பார்த்தாள். தாயிடம் முலையுறிஞ்சிய நினைவுகளைத் தன் மூன்று வயதின் நித்திரையிலும் மறவாதவளாக தன் செப்பு உதடுகளை மொட்டுப்போல் குவித்து உறிஞ்சியவாறே உறங்கிக்கொண்டிருந்தாள் அவளது செல்வ மகள். அவளது இரத்தத்தில் உதித்த முதல் உறவு அது. அவளுக்கு உயிர் போன்றவள். பக்கவாட்டில் திரும்பி மகளை முத்தமிட முனைந்தாள். உடல் இயல்பாகத் திரும்ப மறுத்தது. வயிற்றில் பெரும் பாறாங்கல்லை வைத்துக் கட்டியது போல கனமாக உணர்ந்தாள். முதற்குழந்தைக்கான சிசேரியனின் போது வெட்டப்பட்ட இடம் உடன் வெட்டுக்காயம் போல எரிந்தது. அந்த வடு அப்படியே பிளந்து கொண்டு குழந்தை வெளியே விழுந்து விடுமோ என்பது போல வலித்தது கால்கள் பாதத்தின் அடிப்பகுதி வரை அதிகமாக வீங்கிக்கொண்டு கொதித்தன.
கடந்த சில தினங்களாக மூன்று வேளைக்கும் ஏறத்தாள பத்துப் பேருக்கு விருந்துணவு போல சாதாரணத்துக்கும் அதிகமாக விஷேசமாக தனியொருத்தியாகச் சமைத்திருக்கிறாள். அப்போதும் இந்த வலி இருக்கத்தான் செய்தது. அதிக நேரம் வயிற்றில் பாரத்துடன் நின்று சமைத்ததால் ஏற்பட்டிருக்கலாம் என எண்ணிக்கொண்டாள். அவர்கள் முதல் நாள் இரவுணவுடன் புறப்படும் நேரம் வரை பல்லைக்கடித்து வலிதாங்கி செய்ய வேண்டிய அத்தனையையும் குறைவின்றிச் செய்து கொடுத்தாள். குறைவின்றிச் செய்தாலும் குறைதேடிப் பிடிக்கத் தவற மாட்டார்கள் என்பது தெரிந்திருந்தும் . உண்ணும் நேரம் கூடிச் சாப்பிடுவதற்காகவோ, பரிமாறுவதற்காகவோ கூட அவள் அவர்கள் கூடியிருக்கும் இடத்தில் நிற்பதில்லை. அனுமதிக்கப்படுவதில்லை என்ற வார்த்தையைப் பாவிக்காமல் மிக நாசுக்காக தம் முகச் சிணுங்கல்கள் சுளிப்புக்கள், கண்ஜாடைகள் மூலம் வெளியேற்றி விடுவார்கள்.. அந்த வீட்டில் அவர்கள் கூடியிருக்கும் நேரங்களிலெல்லாம் அவள் அன்னியப் படுத்தப்படுவாள். முக்கியமாகக் கட்டியவனாலேயே கூட.
வெளிநாட்டில் கால்வைத்த ஆரம்ப காலங்களில் சமையலறையில் அவள் இருக்கும் நேரங்களில் வரவேற்பறையில் அவனும் அவனது சகோதரர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் எல்லோரும் கூடி பேசிச்சிரித்துக் கலகலக்கும் ஒலிகேட்கும்.. அவளும் அதில் கலந்து கொள்ளும் ஆவலுடன் அவசரமாக வேலைகளை முடித்து விட்டுப் போவாள். போனால் சட்டென எல்லாச் சத்தமும் ஓய்ந்து விடும். அநேகரின், முக்கியமாக தாலி கட்டியவனின் பார்வையில் ஏன் இங்கு வந்தாய் என்ற அன்னியம் அதிகமாக ஒருவித வெறுப்பைக் கக்குவது போலிருக்கும். இந்த முக வாசிப்புகளில் ஆரம்பத்தில் முகம் கன்ற ஒதுங்கிக்கொண்டவள் , பின்னாட்களில் அவர்கள் யாரும் என்னவர்கள் இல்லை என மனத்தால் தள்ளிவைத்து உடலால் அங்கிருக்கக் கற்றுக்கொண்டாள்.
தனக்கென விதிக்கப்பட்ட இவ் வாழ்வில் தனக்கான உறவுகளைத் தன் வயிற்றில் சுமந்து பெற்றெடுத்துக்கொண்டு தனக்கான நெருக்கமான உறவுகளை உருவாக்கிக் கொண்டு, ஊருக்குச் சென்று வரும் பொழுதுகளிலும் உற்றாரைச் சந்திக்கும் போதும், முடிந்தவரை அழகாக உடுத்திக் கொண்டு, உதட்டில் ஒரு நிரந்தரப் புன்னகையை ஓட்டிவைத்துக் கொண்டு, மகிழ்ச்சியும் நிறைவுமாகவே இருப்பதாக இயலுமானவரை நடித்துக்கொண்டு திருமணம் என்ற என்ற பந்தம் மூலம் உருவாக்கப்பட்ட குடும்ப அமைப்புக் கலைந்து விடாமல் காப்பாற்றிக் கொண்டு காலத்தைக் கழித்து விடலாம் என எண்ணிக் கொண்டாள். அறிமுகமும் ஆதரவும் அற்ற நாடொன்றில் தனித்து நின்று கேள்வி கேட்க முடியாத சூழலில் அவளால் அவ்வளவு தான் முடிந்தது.
இருந்தும் எல்லாப் பெண்களையும் போல கல்யாணத்துக்கு முன்னால் வாழ்க்கை பற்றிய கனவுகள் ஏராளம் இருந்தன அவளுக்கும் . அதில் அவளுக்காக மட்டுமே அவளை மணந்து கொண்ட அவளுக்கு மட்டுமேயான ஒரு கணவன் இருந்தான். காதலும் ஊடலும் சீறலும் சிணுங்கலுமான அன்பான ஒரு தாம்பத்தியமும், இருந்தது. கழுத்தில் தாலி விழுந்த கணத்தில் கனவுகள் காலாவதியாகி காலத்தை அவளுக்குள் கொன்று புதைத்துக் கொண்டாள்.
படுக்கையிலிருந்து எழ முயன்றாள். சோர்வு அதிகமாக இருந்தது. தலை சுற்றி வாந்தி வந்தது. எழுந்தோடி கொமெட்டில் குனிந்தாள்.. முதல் நாளிரவு உண்ட அனைத்தும் எந்த மாற்றமும் அடையாமல் அப்படியே புளித்துப் போய் மூக்காலும் வாயாலும் வெளியே கொட்டியது. சுவாசக்குழாய் அடைத்துக்கொண்டு மூச்சுத் திணறியது. மூக்கைச் சீறி , முகத்தைக் கழுவிக்கொண்டு சோர்வுடன் வெளியில் வந்தாள். இந்த வாந்தியும் தலைசுற்றலும் எட்டாவது மாதத்தில் வருவதற்கு சாத்தியமில்லை என தன் முதல் கர்ப்பகால அனுபவத்தை வைத்து எண்ணிக் கொண்டாள். ஒருவேளை மூன்று வாரமாக மருந்தையும் மீறித் தொடரும் காச்சல், அதனால் ஏற்பட்ட பித்தம் இந்த வாந்திக்குக் காரணமாக இருக்குமோ என்று காரணம் தேட முயன்றாள். அதிகம் சிந்திக்க முடியாது தலை சுற்றியது. . கால்கள் பலமற்றுத் துவண்டன.
வயிற்றின் அதீத வலி பற்றி, இந்த குமட்டல் பற்றி இரண்டு தரம் அவளது பெண்மருத்துவரிடம் அவள் முறையிட்டு விட்டாள். எல்லாவற்றுக்கும் "alles normal " (அனைத்தும் சாதாரணம்) என்ற பதிலையே அவர் சொல்லியிருந்த போதும் அவளது உடல் நிலையில் ஏதோ பாதிப்பிருப்பதாக உணர்ந்தாள். அந்த alles normal இற்கு மேல் அவளுக்கு அந்த நாட்டின் மொழி விளங்காது. அவளுக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு வைத்தியர் தயாராக இருக்கவில்லை. ஜெர்மனியில் இந்நிலை ஒரு சாபக்கேடு .
ஜெர்மானியர்கள் அயல் நாட்டு மொழிகளைக் கூடப் பாவிக்க விரும்பாதவர்கள். மற்றத் தொழில் துறைகளில் இருந்தாலும் இல்லாது விட்டாலும் வைத்தியத்தொழிலில் சர்வதேச மொழியான ஆங்கிலக் கல்வி அவசியமாகக்கப்பட்டு அவர்களது மருத்துவப் படிப்பின் போது நடைமுறைப் படுத்தப் பட்டிருக்கிறது. இருந்தும் கல்விக் காலம் முடிந்த பின் தனியாக இயங்கும் வைத்தியர்கள் சிலர் அந்நிய மொழி மீதான தம் இரத்தத்தோடும் உணர்வோடும் கலந்து விட்ட துவேசத்தைக் காட்டும் நோக்கில் ஜேர்மனிய மொழி தெரியாத தமது நோயாளிகளுடன் கூட ஆங்கிலத்தில் கதைக்க முற்றாக மறுத்து விடுவார்கள். அந்தக் கூட்டத்தில் ஒருவராகத்தான் அவளது வைத்தியப் பெண்ணும் இருந்தார்.
அறிமுகமில்லா ஒரு புதிய நாட்டில் , மொழியறிவும், அறிமுகங்களும், ஆலோசனைகளும் தன்னின மக்களுடனான தொடர்புகளும் அற்று திக்குத் தெரியாத காட்டில் விடப்பட்ட தட்டத்தனி உயிராய் வயிற்றில் கருவுடன் அவள் அரவணைப்பின்றித் தடுமாறி நின்றபோது,அவளை அவளது நிலையைப் புரிந்து கொண்டவர் அவளது குடும்ப வைத்தியர் ஒருவர் மட்டுமே. அவர் அறிமுகப்படுத்திய பெண் மருத்துவர் அவர்.
"நீ நினைப்பது போல இங்குள்ள பெரும்பாலானோருக்கு ஆங்கிலம் அதிகம் தெரியாது என்பது உண்மை தான் என்றாலும் மருத்துவர்களுக்கு படிக்கும் காலத்தில் அது கட்டாயப் பாடம். நிச்சயமாக அவர்களுக்கு ஆங்கிலம் தெரியும் பயப்படாமல் போ " என சிபாரிசு செய்து அனுப்பிய பெண் மருத்துவர் அவர்.
கல்யாணத்தின் முன் தன் உடல் பற்றிய எந்த ஒரு விபரத்தையோ அல்லது பாலியல் உறவு , அது தொடர்ந்த கர்ப்பகாலம் அதன் அறிகுறிகள் , அவதிகள் குழந்தைப் பேறுஎன்பவை பற்றியோ வெளிப்படையாகக் கதைக்கும் அனுமதி மறுக்கப்பட்ட , அதையே நல்ல, ஒழுக்கமான பெண்ணுக்கு அடையாளமான கலாச்சாரமாகக் கொள்ளப்பட்ட ஒரு பிற்போக்கு சமூகச் சூழலில் வளர்க்கப்படும் இனத்தின் ஒரு பிரதிநிதி அவள் என்பதால் முதற் கருவுற்றிருந்த காலத்தில் அது பற்றிய விபரங்கள் தெரியாமல்தானிருந்தது.
உடலின் அசாதாரண நிலையுணர்ந்து குடும்பவைத்தியரிடம் போனபோது, அது தாய்மைக்கான அறிகுறிகள் எனக் கூறி, அதை உறுதிப்படுத்தும் நோக்கில், பெண் மருத்துவரிடம் அனுப்பிவைத்த முதல் நாளிலேயே அவர் தனக்கு ஆங்கிலம் தெரியவே தெரியாது எனத் தீர்மானமாகச் சொல்லிவிட்டிருந்தார். இருந்தும் அவ்விடத்தில் அவர் தவிர வேறு பெண் வைத்தியர்கள் இல்லையாதலால், மருத்துவரானாலும் ஒரு ஆணிடம் தன் அந்தரங்கத்தைக் காட்டுமளவு அப்போது அவளது மனம் பக்குவப்பட்டிருக்கவில்லை ஆதலாலும் வேறு தேர்வுகள் அவளுக்கு இல்லாது போயின.
இந்த வாந்தி, தலைசுற்றல் , சமிபாடின்மை போன்ற அனைத்தும் வைத்தியர் சொல்வது போல மசக்கையின் அறிகுறிகள் இல்லை என்ற அவளது குழப்பத்தைத் தீர்க்க வேண்டுமானால் அவளுடன் இயல்பாக , நட்பாக அவளுக்குத் தெரிந்த மொழியில் பேசக்கூடிய குடும்பவைத்தியரிடம் போவதே சரியானதென முடிவெடுத்துக் கொண்டாள்.
தாங்கள் வசித்த ஐந்தாம் மாடியிலிருந்து குழந்தையின் கைப்பிடித்து இறங்கும் போதே. வயிறு பிளந்து கொட்டிவிடும் போல உடன் அறுத்த காயமாக அடிவயிறு வலித்தது. குழந்தையைத் தூக்கி வண்டிலுக்குள் இருத்தும் போதே அதனுடன் சேர்ந்து அதன் மீதே வண்டிலுக்குள் குப்புறச் சரிவது போல உணர்ந்தாள் . சிரமப்பட்டு நிமிர்ந்து கைப்பிடியில் பிடித்து மூச்சு வாங்கிக்கொண்டு தன்னைச் சமாளித்தாள் . தள்ளிக்கொண்டே நடக்கத் தொடங்கினாள். காச்சலினால் ஏற்பட்ட சோர்வு மட்டுமல்லாது ஒரு வித மயக்கம் வீதியிலேயே சாய்த்து விழுத்தி விடுவது போல அசத்திக்கொண்டிருந்தது. குளிர்காலம் ஆரம்பித்து விட்ட அந்த நேரத்திலும் உடல் வியர்த்தது.
வைத்தியரிடம் சென்று சேர்ந்த போது கிட்டத்தட்ட விழுந்து படுக்கும் நிலையிலிருந்தாள். அதிகமாக மூச்சுவாங்கியது. அவளை உள்ளே அழைத்து குடிக்க நீர் கொடுத்து விசாரித்த அந்த வைத்தியரிடம் தொழிலை விட மனிதாபிமானம் அதிகமிருந்தது. நிலா தன் உடலின் அசாதாரண நிலைபற்றி விபரித்தவைகளைக் கேட்டு ஒரு சில நிமிடப் பரிசோதனையிலேயே வைத்தியரின் முகம் மாறியது. அவளை அவசரமாக அழைத்துச் சென்று படுக்கையில் படுக்கவிட்டார். அனைத்து வேலைகளையும் ஒத்திவைத்து விட்டு அவளது பெண் மருத்துவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். இருவரும் பேசிய மொழி புரியவில்லையாயினும் நட்பாகப் பேசவில்லை, எதுவோ வாதிடுகிறார்கள் என்பது மட்டும் அவளுக்குத் தெளிவாகப் புரிந்தது. கேட்கும் திறனற்ற ஒருவர் வாயசைவுகளை வைத்து விளங்கிக்கொள்ள முயற்சிக்கும் தவிப்பு அவளிடம் இருந்தது.
பேசி முடித்துவிட்டு அவளது கையை ஆதரவுடன் பற்றி, " பயப்படாதே உன் பெண் மருத்துவரிடம் கதைத்திருக்கிறேன். அம்புலன்சை அழைத்திருக்கிறேன் . அதில் உன் பெண் மருத்துவரிடம் போ. அனேகமாக உடனடியாக வைத்தியசாலைக்குப் போகவேண்டியிருக்கும் பயந்து விடாதே " என்றார்.,
"மாதம் வரவில்லையே என்னாச்சு?" அவளின் குரலில் பதற்றம் இருந்தது.
"நீ சற்று அசாதாரணமான நிலையில் இருக்கிறாய் இந்த வாந்தி காய்ச்சல் காரணமானதோ அன்றி, மசக்கை காரணமானதோ அல்ல. உன் உடலில் கிருமித் தொற்றுப் பரவியிருக்கிறது. அதனால் ஏற்பட்டதே இந்நிலை. அது கர்ப்பத்தின் மூலமான தாக்கம் என நான் சந்தேகிக்கிறேன் "
என்று சொன்ன மருத்துவரின் கண்களில் வழமையை விட கருணையும் கனிவும் அதிகமாக இருந்தன. அந்த மண்ணிற்கு வந்தது முதலாய் அவளுக்கென உண்மையாக இருந்த ஒரே மனிதரும் அவளது சூழ்நிலைகள் புரிந்தவரும் அவராகத்தான் இருந்தார். அவரோடு தான் அவளால் கொஞ்சமாவது தனிமையாக மனம் விட்டுப் பேச முடிந்ததும். தன் முதற் குழந்தை தனித்துத் தன்னைப் போலவே இந்தப் பூமியில் ஆதரவற்று நின்றுவிடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே இந்தக் குழந்தை அவளுக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும், அதன் பின்னால் இரண்டு குழந்தைகளையும் கொண்டு ஜடமாகிப் போன இந்த வாழ்வை விடுத்து அவள் உயிரோடு வாழ்ந்த அவளது நாட்டுக்கே மீண்டும் அவளாகவே திரும்பிவிடும் தீர்மானத்தில் இருந்த அவசியத்தையும் அதன் பின்னாலிருந்த நியாயங்களையும் அவர் மட்டுமே அறிந்திருந்தார், அவளதும் குழந்தைகளினதும் எதிர்காலத்துக்கு அது தான் ஏற்றதாக இருக்கும் என்று அங்குள்ள அவளின் வாழ் நிலைமைகளை உணர்ந்த அவரும் அறிவுறுத்தியிருந்தார். அவரைச் சந்திக்கலாம் என்பதாலேயே அவளுக்கு அடிக்கடி நோய்கள் வருவது கூடப் பிடித்திருந்தன.
அம்புலன்ஸ் பெண் மருத்துவரிடம் அழைத்துச் சென்ற போது வழமையான வெளிநாட்டினர் மீதான அசட்டையான பார்வையற்று அவரது முகம் அன்று குழம்பிக் கிடந்தது. செயல்களில் அவசரமும் பதட்டமும் இருந்தது. ஒரு சில சிறு பரிசோதனைகளுடன் நிறுத்திக் கொண்டு, அவசரமாக அம்புலன்ஸில் ஏற்றி அனுப்பிவைத்தார். கேள்வி கேட்க அவளுக்குத் தோன்றவில்லை. கேட்டாலும் துவேஷத்தைத் தூரவைத்துவிட்டு அவளுக்குப் புரியும் மொழியில் பதில் சொல்ல அவர் தயாராக இருக்கப் போவதில்லை என்பது சலிப்பாக இருந்தது.
அம்புலன்ஸ் பயணித்துக் கொண்டிருந்த போது குழப்பமும் பயமும் சூழத் தொடங்கின. அவளது நாட்டில் அவளுக்கு மிகவும் பிடித்தமான அரவணைப்பான மனிதர்களை எண்ணிக் கொண்டாள். அவர்களுடன் கதைக்கவேண்டும் போலத் தோன்றியது, வெளிநாட்டு வாசத்தில் எப்போதும் பணம் இல்லாத தன் வெறுங்கைகளை அப்போதும் விரித்துப் பார்த்துக் கொண்டாள். அவள் நாட்டைப் பிரிந்தபின் யாரையும் தனிப்பட அவள் விருப்பப்படி தொடர்புகொள்வதற்கான சிறு பொருளாதார வசதி கூட அவளுக்கு இருந்ததில்லை.
பருத்திருக்கும் வயிற்றுக்கு வசதியாக கர்ப்பகால உடைகள் கூட அவளிடம் இருக்கவில்லை. அதைக் கேட்பதற்கும் யாரும் இருக்கவில்லை, சாதாரண உடையைப் பருத்த வயிற்றுடன் அணிய முடியவில்லை. வெட்டுகிறது எனக் கருவுக்குக் காரணமானவனிடம் கேட்டு உன் வீட்டுக் காரர்கள் அல்லவா அனுப்பியிருக்க வேண்டும் என்ற பதிலில் காயப்பட்டபின் அது பற்றி அவள் சிந்திப்பதில்லையான நிலையில் கடிதத் தொலைபேசித் தொடர்புகளுக்கான வசதிகள் இல்லாதது மட்டுமில்லை, வீட்டுத் தபால் பெட்டியின் சாவி எப்போதும் அவளது கைகளுக்குத் தூரமாகவே இருந்ததும் , அப்படி கையடையும் கடிதங்கள் பிரித்துப் பார்க்கப்பட்டிருப்பதும் , தபாலில் சேர்க்கும்படி கொடுக்கப்பட்ட கடிதங்கள் சென்று சேர்ந்திராத செய்திகளும், தொலைபேசிக்கு அருகிலான இன்னொருவரின் அவதானிப்புக்கு முன் அவளால் இயல்பாகப் பேச முடியாமையுமாக அவள் அந்த சில வருடங்களில் தான் மிக அதிகமாக நேசித்த அனைவரையும் விரும்பியே தொலைத்து விட்டிருந்தாள்.
அவர்கள் காரணம் அறியாது தவிப்பார்கள் என்பதுணர்ந்தும் காரணம் அறிந்தால் தவிப்பை விட அவளது நிலை அறிந்து அதிகம் துடிக்கக் கூடும் என்பதால் அனைத்தையும் விழுங்கி தனியாக நின்றிருந்தாள். இப்போது அவர்களது தலைவருடலுக்கு மனம் ஏங்கியது. அனைத்து உறவுக்கும் ஈடாய் குழந்தை தான் அம்புலன்ஸ் பணியாளரின் மடியில் அவளின் கைகளைப் பற்றியபடி மலங்க மலங்க விழித்தபடி அமர்ந்திருந்தாள்.
அம்புலன்சிலிருந்து படுக்கையோடு இறக்கித் தள்ளியவாறே உரிய பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்ட போது வைத்தியசாலை அவளுக்காக ஆயத்தமாகக் காத்திருந்தது போலிருந்தது. அம்புலன்ஸில் இருந்து தள்ளிச் செல்லப்பட்ட படுக்கையில் இருந்து வைத்தியசாலைப் படுக்கையில் படுக்கவைத்ததும் ஒரு வைத்தியர் இரு தாதிகள் என அமைதியாக ஆரம்பித்த பரிசோதனை நேரமாக ஆக ஒவ்வொரு வைத்தியராக அதிகரித்து , வேறு பிரத்தியேக அறைக்கு மாற்றப்பட்டு அதற்குள் விவாதங்களும் ஆலோசனைகளுமாக அமர்க்களமாக, அவள் புரியாமல் அலங்கமலங்க முழிக்கத் தொடங்கினாள்.
வயிற்றில் அகலமான பண்டேஜ் சுற்றப்பட்டு அதற்குள் குழந்தையின் இதயத்துடிப்பை அறிவதற்கான பட்டி செருகப்பட்டு, கருவியில் பதிவு செய்துகொள்ளப்பட்டுக் கொண்டிருக்க, அவள் வைத்தியசாலை உடைகளுக்கு மாற்றப்பட்டு மார்பில் முதுகில் என முக்கிய இடங்களில் ஒட்டப்பட்ட உபகரணங்களுடன், அவளது இதயத்துடிப்பு கருவி ஓடத்தொடங்கியது. அவளது கணவனை தொலைபேசி மூலம் அழைத்து வரவழைத்திருந்தார்கள். இதுவரை அவளது மகளை பொறுப்பேற்று வைத்திருந்த தாதியக் கல்வி மாணவியிடமிருந்து குழந்தையைத் தந்தையிடம் ஒப்படைத்து, அவளுக்கான மாற்றுடை எடுத்து வரும்படி அனுப்பி வைத்தார்கள்.
நேரம் கடக்கக் கடக்க வைத்தியர்கள், தாதியர்கள் பொறுமையற்று உலாவத் தொடங்கினார்கள். கூடிக் கூடிப் பேய்க் கொண்டார்கள்.
"என்னாச்சு" என்றாள் மிரட்சியுடன். நர்ஸ் தலை வருடினாள். பயப்படாதே என்றாள். மருத்துவர் கைகளை இறுகப் பற்றிப் பிடித்தவாறே,
"அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்" என்றார். ஆங்கிலத்தில் .
"இப்பவேவா? இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளனவே?"
அவர் பதில் சொல்லாமல் அவளின் நெற்றியை விரல்களின் பின்பக்கத்தால் வருடினார். சம்மதம் தெரிவித்துக் கையொப்பமிடும் படி பத்திரங்களை நீட்டினார்.
"இல்லை எனக்குப் பயமாக இருக்கிறது"
"எதுவும் ஆகாது . ஆகக் கூடாது என்பதற்காகத்தான் செய்கிறோம் கையெழுத்திடு."
"இல்லை நான் என் மகளைப் பார்க்க வேண்டும்"
"மாற்றுடை எடுத்து வரச் சொல்லி நாங்கள் அனுப்பும் போது ஒன்பது மணி, இப்போது பன்னிரண்டு மணியாச்சு. தற்போதய உன் உடல் நிலை குறித்து அறிவிக்க உன் வீட்டுக்குப் பலமுறை தொடர்பு கொண்டோம் அங்கு யாருமில்லை, காத்திருக்கும் ஒவ்வொரு மணித்துளியும் ஆபத்து சூழ்ந்து கொண்டிருக்கிறது. கையெழுத்திடு."
"இல்லை இன்னும் கொஞ்சநேரம் பார்க்கலாம் எனக்கு என் மகளைப் பார்க்க வேண்டும்"
அடுத்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் அதே வினா அதே விடை
பின் வினாவும் விடையுமான நேரங்கள் குறுகத் தொடங்கின. மெல்ல மெல்ல பதட்டம் இன்னும் அதிகரிக்கத் தொடங்கியது. மெதுவாக நடந்து அவள் இருந்த அறைக்கு வந்து போய்க் கொண்டிருந்தவர்கள் சற்று அவசரமும் ஆற்றாமையுமாக அலையத் தொடங்கினார்கள் . ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வைத்தியர் அவளிடம் பத்திரம் காட்டி அனுமதி கேட்டார். அவள் சலிக்காமல் ஒரே பதிலைச் சொல்லிக்கொண்டே இருந்தாள். தன்னைச் சூழும் ஆபத்து புரியாமல்.
பருத்த அவளது வயிற்றில் செல்லைப் பரவி அதன் மீது உள் நோக்குக் கருவியை உருட்டியவாறே தன் முன்னே இருந்த கணனியில் வைத்தியர் சில குறிப்பீடுகளை புள்ளியிட்டுக்கொண்டார் அவரின் முதுகுப்பக்கத்தில் சுவரை அடைத்தது போலிருந்த மொனிட்டர் திரையில் அவளது வயிற்றுப்பகுதி காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்தது. சில இடங்களைச் சுட்டி வைத்தியர்கள் கூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள் அவளுக்கு எதுவும் புரியாமல் சிவப்பாகவும் நீலமாகவும் வேறும் ஆங்காங்கே வேறுபல நிறங்களிலும் தெரிந்த தன் உடல் நிலைபற்றிய விபரங்களை வெறும் ஒரு நவீன ஓவியம் போலப் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவர்கள் பேசப் பேச அவளருகே நின்ற நர்சின் முகம் மாறி இருண்டது. நெற்றி முடியை மேவி வருடிவிட்டாள். ஒரு நாய் கடித்தால், இடறி விழுந்தால் கூடிவிடும் சுற்றமும் தேடிவரும் நட்புக்களும் சமயசந்தர்ப்பம் அறியாமல் அந்நேரத் தனிமையில் நினைவில் வந்தார்கள். அவளையறியாமலே கண்கள் கலங்கின. யாருமற்ற தனிமையில் இறந்து விடுவேனோ. என் குழந்தை அன்பையும் ஆதரவையும் இழந்தவளாக அந்தரித்து நிற்பாளோ என்ற பயம் பதற வைத்தது.
வைத்தியர் மீண்டும் அருகில் வந்தார். இம்முறை அவர் ஆரம்பிக்கமுன் அவளே ஆரம்பித்தாள்
"உங்களால் என்னுடன் ஆங்கிலத்தில் உரையாட முடியுமா.?"
"கட்டாயமாக/ என்ன பேச விரும்புகிறாய்?"
"ஏதோ ஆபத்தென்பது புரிகிறது. என்னவென எனக்கு விளங்கும் வகையில் சொல்லமுடியுமா ?"
அவர் விளக்கினார். விளக்கிய பின் இறுகிப் போன மனநிலையுடன்
" ஆபத்து எனக்கா குழந்தைக்கா " என்றாள்.
வைத்தியர் சட்டென தன் குரலையும் முகபாவனையையும் மாற்றி
"யாருக்கென்றால் அதிகம் பயப்படுவாய்.?"
"என்னை வெட்டினாலும் பரவாயில்லை குழந்தைக்கு எதுவும் ஆகக் கூடாது. ஆனால் என் இரண்டு குழந்தைகளுக்கும் என்னை விட்டால் யாருமில்லை. நான் இறந்து விடக் கூடாது. "
அந்த வார்த்தையில் , அதற்காகவே காத்திருந்தது போல சட்டென பத்திரங்களை நீட்டி
"கையெழுத்திடு" என்றார்,
அவள் அமைதியாக இருந்தாள்.
"எனக்கு என் மகளைப் பார்க்க வேண்டும் ."
தனித்துப்போன ஒரு தேசத்தில் சுற்றுவர வெண்ணிற உடையோடு அந்நிய மனிதர்கள் காத்திருக்க ஒரு பலியாடுபோல அவர்கள் நடுவே படுத்துக்கொண்டு மொழி கூட அறியா இடத்தில் சாவுக்கும் வாழ்வுக்கும் இடையில் தனியாகப் போராடும் தன்மீதே பச்சாதாபம் வந்தது.
இருந்தாற்போல் அவர்கள் அனைவரும் மதிப்புடன் விலகி வழிவிட, தலை முழுவதும் வெண்மையாக நரைத்த , கனிவும் நிதானமும் தேங்கிய கண்களுமாக வெள்ளை உடையில் ஒரு வயதான தேவதூதன் போல அந்த மனிதர் வந்தார். படுத்திருந்தவளது கைபற்றிக் குலுக்காமல் , ஒரு கையால் தோளை ஆதரவுடன் அழுத்தி மறுகையால் தலையைச் சுற்றி வளைத்து முகத்துக்கு நேரே குனிந்து
"நான் உன் அப்பா போல"
என்ற அவருக்கு மனோவசியம் தெரிந்திருக்க வேண்டும் . சட்டென அவரது முகத்தையே பார்த்தாள். "நான் உன் குடும்ப வைத்தியருடன் உன்னைப்பற்றிய உடல் நிலை மட்டுமல்ல, மற்றைய அனைத்தும் கூடப் பேசினேன் " என்றபோது ஏனோ நெருக்கமாக உணர்ந்தாள்.
"உனக்கு குழந்தை வேண்டும். உன் மூத்தகுழந்ந்தைக்காக நீ வேண்டும். நீ இல்லாவிட்டால் அவள் யாருடன் இருப்பாள். ?"
"நான் அவளுடன் இருந்தாக வேண்டும். நான் இல்லாது விட்டால் அவள் இருக்கக் கூடாது. என் வாழ்க்கை நிலவரம் உணரமுதல் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் அவளைப் பெற்று என்னில் விலங்கு பூட்டிக் கொண்டு விட்டேன் . "
"ஏன்?"
"ஏனென்றால் பெற்றோரை இழந்த இழப்புடனான சகோதரமற்றுத் தனித்துப் போன வாழ்க்கை பற்றி, எனக்கு நன்றாகவே தெரியும் . என் திருமணத்துக்கு முன்னாலேயே அதை அனுபவித்தவள் நான் அது நிர்ப்பந்தங்களால் ஆனது. அதில் எந்த ஆதரவும் நிரந்தரமில்லாதது. உரிமையற்றது. பாசம் கூட சந்தர்ப்பங்களால் ஆனது ஏதோ ஒரு கை, ஏதேதோ சந்தர்ப்பங்கள் என ஒவ்வொரு திருப்பத்திலும் காயங்கள் காத்திருக்கும். அதை அனுபவித்தோரால் மட்டுமே உணரமுடியும். நான் தாராளமாக அனுபவித்திருக்கிறேன் . அதை என் மகள் அனுபவிக்கக் கூடாது. "
"அப்படியானால் கையெழுத்திடு".
"ஆபத்தில் இருப்பது யார் நானா குழந்தையா?"
"இருவருமே தான் . நான் மிகக் கவனமாக இந்த அறுவைச் சிகிச்சையை செய்வேன். பயம் கொள்ளாதே"
அவள் பேசவில்லை.
"முதல் ஒரு அறுவைக்கு முகம் கொடுத்தாய் தானே இதற்கு எதற்கு இத்தனை தயங்குகின்றாய்?"
"அது அப்போது அந்த அறுவைச் சிகிச்சையின் போது எனக்கு ஒரு குழந்தை கிடைக்கும் என்பது தெரியும் ஆனால் அதன் முகத்தை நான் பார்த்திருக்கவில்லை. என்னைப்பற்றிய சிந்தனை அதிகம் இருந்தது . நான் யாருக்காகவேனும் வாழவேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இருப்பதாக உணரவில்லை. ஆதலால் உயிர் பற்றிய பயம் இருக்கவில்லை. இப்போது.... உங்கள் பதட்டங்கள் குழந்தையின் இருத்தல் மீதான் பயங்களை எனக்கு உண்டாக்குகின்றது. என் மீது பரவும் கனிவுப் பார்வைகளும் வருடல்களும் நான் இருப்பேனா என்ற பதட்டத்தை உண்டாக்குகின்றது. உயிர் பற்றி எனக்குப் பயம் ஏதுமில்லை. நான் இறந்து சில வருடங்களாச்சு. ஆனால்..........
என் மகளுக்காக இருந்தாக வேண்டும் . அவளை விட்டுப் போய் விடுவேனோ எனப் பயமாக இருக்கிறது. அவளை நான் பார்க்க வேண்டும். "
"காலை பத்துமணியில் இருந்து உன் வீட்டுக்குத் தொடர்பு கொள்கிறோம். இப்போது மாலை எட்டு மணி வீட்டில் இதுவரை யாருமில்லை. யாரும் எங்களை தொடர்பு கொள்ளவோ உன்னை தேடிவரவோ இல்லை. இதற்கு மேல் காத்திருக்கும் நிலையில் நீயும் உன் வயிற்றில் இருக்கும் குழந்தையும் இல்லை "
அவள் உடைந்து அழத்தொடங்கினாள். அவர்களின் கார் சீற்றின் இடுக்குக்குள் கிடந்த அவளது அல்லாத அவள் புலம்பெயர்ந்த பின் பாவிக்க அனுமதிக்கப்படாத நகப்பூச்சுப் போத்தில் நினைவு வந்தது. சீற்றின் பின்பக்கத்தில் ஒட்டியிருந்த அவளது அல்லாத முடிகள் நினைவில் அவளது தொண்டையை இறுக்கின. அவள் எடுத்த போதெல்லாம் கட செய்யப்பட்ட தொலைபேசி அழைப்புகள் இப்போதும் அவளது தனிமையை முகத்தில் அறைந்து நினைவு படுத்தின. கூடவே ஒரு ஊசி போட்டாலும் நொந்து விடும் என்று துடித்த சில உறவுகள், கல்லடி பட்ட கால்விரலை வாயில் வைத்துச் சூப்பிய நட்பு என ஒவ்வொன்றாக நினைவில் வந்து அடிவயிற்றிலிருந்து எழுந்த கேவலில் பருத்திருந்த வயிறு துடிப்பதும் வலிப்பதும் தவிர்க்கமுடியாததாக இருந்தது.
"என்னை உன் தந்தையாக நினைத்துக் கொள் . என்னை நம்பு கையெழுத்து வை" என பத்திரங்களை நீட்டினார்.
"என் மகள்"
"உன்னை நலமாக அவளிடம் ஒப்படைப்பது என் பொறுப்பு"
அவள் அடைக்கலமாகுபவள் போல பரிதாபமாக அவரைப் பார்த்தாள். அவர் தாதியைப் பார்த்துத் தலையைத்ததும்,
உடலில் செருகப்பட்டிருந்த உபகரணங்களை அசைக்காது மெதுவாக தன்னில் சாய்த்து அவளைக் கைத்தாங்கலாக நிமிர்த்தினார் தாதியப் பெண். பொட்டல் காட்டில் கூட்டமிழந்து தனித்துப் போன வலசைப் பறவையாக மிரண்ட விழிகளுடன் பத்திரங்களின் மீது விழுந்து தெறித்த கண்ணீர்த்துளிகளுடன் கையெழுத்திட்டு முடிக்கவும், அதற்கே காத்திருந்தது போல சத்திர சிகிச்சைக்கான மயக்க ஊசி அவளில் ஏறவும் சரியாக இருந்தது . ஏறிக்கொண்டிருந்த சேலைன் குழாயை சற்று நிறுத்திக் கழட்டி அதில் மயக்க மருந்தை ஏற்றும் போது அதிகமாக வலித்து ஒரு வினாடி நரம்புகள் முறுக்கி இறுக்குவது போல இருந்தது. நெற்றியை வருடி,
"உன் அன்பு மகளின் பெயர் என்ன?" என்று வைத்தியர் கேட்டதும் அவள் மகளின் பெயரை உச்சரித்ததும் கனவு போல இறுதியாக மனதில் பதிந்திருந்தது.
நிலாவுக்கு சற்று சுயஉணர்வு வந்த போது கண்கள் திறக்க முடியவில்லை. எங்கோ தூரத்தில் பேச்சொலிகள் கேட்பது போலும் தான் ஏதோ ஆழத்தில் கட்டை யாகக் கிடப்பது போலும் உணர்ந்தாள். யாரோ அவள் பெயர் சொல்லி அழைப்பது போலிருந்தது. ம் என்றாவது பதில் சொல்ல வேண்டும் போலிருந்தது. ஆனாலும் ஒரு முனகலைகூட வெளிப்படுத்த முடியவில்லை. மீண்டும் மீண்டும் அழைத்தார்கள். அந்தக் குரல்கள் பரீட்சயமற்றவையாக உணர்ந்தாள். மிகச் சோர்வும் சலிப்புமாக ஓய்ந்து கொண்டிருக்கும் உணர்வுகளிலிருந்து வெளிவர விருப்பமற்றிருந்தது. அப்படியே ஓய்ந்துவிடுவது சுகமானது போல உணர்ந்தாள். பதட்டமாக பலமாக அழைக்கத் தொடங்கினார்கள்.
ஆழ்ந்த தூக்கத்திலிருந்து கட்டாயப்படுத்தி எழுப்ப முயல்வது போல உணர்ந்தாள் பதில் சொல்ல முயன்றும் முடியவில்லை. கன்னத்தில் சற்றுப் பலமாக தட்டினார்கள். உணர்ந்தாலும் ஓய்ந்தாள். இரண்டு கன்னங்களையும் மாறிமாறித் தட்டினார்கள். கால்களை நீட்டி மடித்தார் கள் . அவளுக்கு எழுந்திருக்கத் தோன்றவில்லை.
காதினருகே "அம்மா" என்ற குரல் கேட்டது. அவளது முகத்தை அவளுக்குப் பழக்கமான, உணர்வோடு இணைந்த பிஞ்சுக் கை வருடியது. அவளுக்கு கண் விழிக்க வேண்டும் போலிருந்தது வைத்தியரின் குரல் காதருகில் கேட்டது.
" உன் மகள் வந்திருக்கிறாள். உன் மகளுக்காக எழுந்திரு கண்களைத் திற " மந்திரம் போல அது கேட்டுக்கொண்டேயிருக்க பிரயத்தனப்பட்டுக் கண் திறந்தாள். அவளைச் சுற்றிப் பலமான கரவொலி கேட்டது அவளது மகளை முத்தமிட வைத்தார்கள். இப்போது கண்ணைக் கூசிக்கொண்டு வெளிச்சம் தெரிந்தது.
"குழந்தை" என்றாள் பலகீனமான் குரலில் .
"காட்டலாம். இப்போது இதோ உனக்காக உன் மகள் காத்திருக்கிறாள். நான் உனக்கு வாக்குத்தந்தது போல உன்னைப் பாதுகாத்து உன் மகளிடம் ஒப்படைத்து விட்டேன் ."
என்ற அந்த வயோதிக வைத்தியர் குனிந்து நெற்றியை வருடி
"தூங்கு" என்றார்..
அவள் தன்னில் செருகப்பட்ட அத்தனை உபகரணங்களுடனும் தன் படுக்கையில் தலைமாட்டருகே அமர்த்தப்பட்திருந்த தன் மகளின் கையைப்பற்றியவாறே மருந்து மயக்கத்தில் ஓய்ந்து உறங்கத் தொடங்கினாள்.
ஆயிற்று அத்தனை வலியும் பட்டுச் சுமந்த குழந்தையை வயிற்றைக் கிழித்தெடுத்துக் குழியில் வைத்தாயிற்று. வயிற்றை அறுத்த வலியைக் கூட உணர முடியாதளவு உயிரையே அறுத்துவிடும் வலியைக் கொடுத்தது குழந்தையை இழந்த வலி. அரவணைக்க, ஆறுதல் சொல்ல யாருமற்ற தேசத்தில் எல்லா உணர்வுகளையும் விழுங்கிச் செரிப்பதைப் போல இழந்த குழந்தைக்காய் மனம் விட்டுக் கதறி அழக் கூட வாய்ப்பதில்லை என்பதை அவள் நடைமுறையில் உணர்ந்தாள். இங்கு வந்த காலமிருந்து பல்லைக்கடித்து விழுங்கப்பட்ட அனைத்து வலிகளோடும் சேர்த்து இந்த வலியையும் விழுங்க முயன்றாள் அவளது மகளுக்காக..
அவளது கண்ணீரும் உடைவும், எந்நேரமும் அவளது கால்களையே சுற்றி வரும் அவளது முதற் குழந்தையை அதிகமாகப் பாதித்தது. அடிக்கடி அம்மாவின் முகத்தைப் பரிதாபமாகப் பார்த்தாள், கண்களைத் தன் பிஞ்சுக் கரங்களால் துடைத்து விட்டு பசியைக் கூடச் சொல்லாது தவிர்த்தாள். தாய் அழும் போது தானும் அழுதாள். அது அந்தக் குழந்தையின் மனநிலைக்கு ஏற்றதில்லை. சிறுவயதுப் பாதிப்பாக அதனது இயல்பான மனவளர்ச்சியில் ஆளுமை செலுத்தி விடும் எனப் பயந்தாள். பகல் முழுதும் மகளுக்காகத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, குழந்தை உறங்கிய இரவுகளில் மனம் குமுற தனிமையில் ஓசையற்றுக் கதறினாள்.
ஒரு கர்ப்பம் ஆரோக்கியமான சதாரண நிலையில் இல்லையெனில் வயிற்றில் மூன்றாம் மாதமாக இருக்கும் போதே அதன் அறிகுறிகள் மெல்லமெல்ல வெளிப்பட ஆரம்பித்து விடும். சொந்த நாட்டிலிருந்தால் குடும்பத்தில், அயலட்டையில் உள்ள அனுபவப்பட்ட பெண்களால் இயல்புக்கு மாறான அந்த மாற்றம் உணரப்பட்டுவிடும். அதற்கு மேல் கருவுற்ற பெண்ணைத் துளைத்தெடுக்கும் கேள்விகளால் அவர்கள் அதை ஊர்ஜிதம் செய்து கொள்வார்கள். ஆரம்பத்திலேயே அதற்கான சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்து விடுவதோடு, கவனிப்பும் கண்காணிப்பும் அதிகரித்து விடும். குழந்தை சுமக்கும் பெண் தனக்கான சந்தேகங்களை, குழப்பங்களை உடல் மாறுபாடுகளை தன் மொழியில் தெளிவாகவும் உற்றோர் உரியோரிடம் உரிமையோடும் பேசிக்கொள்ள முடியும். அதன் மூலம் பல ஆபத்தான விளைவுகளையும் தவிர்த்து விடலாம்.
அவள் போல அந்நியநாட்டில் தன் தேவைகள், உபாதைகள், சந்தேகங்களை விளக்கிச் சொல்லும் அளவு கூட அந்த மொழி தெரியாது, தன் மொழி பேசுபவர்களின் தொடர்பும் அற்று, கர்ப்பத்தைச் சுமப்பது என்பது அனுபவமற்ற ஒரு பெண்ணுக்கு மிகப் பெரும் சவாலான அனுபவம்.. அதில் ஜெயித்தல் என்பது சாதாரண விடயமல்ல. அந்த அசாதாரண கர்ப்பகாலத்தை ஒரு இனத் துவேஷம் கொண்ட வைத்தியருடன் இணைந்து கடப்பது இலகுவானதல்ல. அவள் அப்படியான அழுத்தங்களோடே தான் அதைக் கடந்திருந்தாள்.
ஒரு மொழித் துவேசம், பாதிக்கப்பட்டவரின் உடல் பற்றிய நிலைமைகளைக் கேட்டறிய விரும்பா நிலையை, உண்ண, வாழ வழியற்று எம்மிடம் அடைக்கலம் கேட்டு வந்தவர்கள் தானே எனும் கீழைத்தேயத்தவர்கள் மீதான தாழ்வான கணிப்பீடு கொண்ட உள்ளப்பாங்கு, அவள் மீண்டும் மீண்டும் தன்னை உணர்த்த முற்பட்டும் ஏற்றுக்கொள்ளப்படாத மேம்போக்கு ஒரு கர்ப்பம் சுமந்த பெண்ணையும் அவளது குழந்தையையும் எவ்வளவு ஆபத்தான நிலைக்குத் தள்ளி விட்டிருக்கிறது என்று புரிந்த போது செயற்படுத்த முடியாத கோபம் வந்தது. வெளிநாடு, கல்யாணம் பிரசவம் வாழ்க்கை என எல்லாவற்றின் மீதும் வெறுப்பு கசந்து வழிந்தது .
. எத்தனை உடல் வலியிலும் மன வலியிலும் வீட்டுக் கடமைகளிலிருந்து ஓய்வு கிடைக்காத அநேகமான பெண்களில் ஒருத்தியாகவே அவளும் இருந்தாள். வயிற்றைக் கைகளால் தாங்கிக்கொண்டு வழமை போல இயங்க வேண்டிய நிர்ப்பந்தமிருந்தது. இந்த சில நாட்களில் அவளது வீட்டிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பு எதுவும் அவளுக்கு வழங்கப்படவில்லை. அவள் தூங்குகிறாள் என்றும் அவள் சாப்பிடுகிறாள் நான் ஊட்டிக் கொண்டிருக்கிறேன் என்றும் தொடர்ந்து கொண்டிருந்த இதமான மறுப்புகளின் பின்னிருந்த அசிங்கமான பொய்முகத்தை அவதானித்த படியே எந்நேரமும் கைகளுக்குள்ளேயே சுருண்டு கிடக்கும் மகளை அணைத்தபடி முடிந்தவரை வீட்டுவேலைகளைச் செய்து விட்டு ஒடுங்கிக் கிடந்தாள்.
மனைவியையும் குழந்தையையும் பராமரிக்க வழங்கப்பட்ட மருத்துவ ஓய்வில் கணவன் வழமை போல பகல் முழுதும் ஊர் சுற்றினான். அவள் சமைத்து வைத்ததை உண்டு வயிற்றுப் பசியாறிவிட்டு இரவுகளில் சுவாரசியமாக பாலியல் படங்கள் பார்த்தான். பகல் முழுவதும் மகளுக்காக மறைத்து விழுங்கிக் கொள்ளும் இழந்த குழந்தைக்கான கண்ணீருடன் தனியாகப் படுக்கையில் கிடந்தது குமுறி அழும் மனைவியின் சத்தத்துக்குச் சினந்து சீறினான். அவள் மூச்சுத் திணறி இருமும் போது, தனது தொலைக்காட்சிச் சுவாரசியம் குழம்பும் ஆத்திரத்தில் எழுந்து வந்து ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் குழந்தையை அப்படியே தூக்கி காயப்பட்ட அவள் வயிற்றின் மீது போட்டு கொம்மாவைய்ப் பார் என்று உறுமி விட்டு மீண்டும் தொலைக்காட்சியில் லயித்தான். அது மலங்க மலங்க விழித்து வீரிட்டு அழத் தொடங்கும் போது சுள் என அதன் முதுகில் விழும் அறையில் அது மீண்டும் தாயின் வயிற்றில் தொப்பென விழுந்து வீறிடும் . அதன் அழுகையையும் அது வயிற்றில் விழுந்த வலியையும் ஒரே நேரத்தில் தாங்கித் துடித்தாள் அவள்.
உடல் வலி, குழந்தையை இழந்ததில் ஏற்பட்ட மனச்சோர்வு காரணமாக , அவசியம் ஏற்பட்டால் மட்டும் பாவிக்கும் படி வைத்தியரால் வழங்கப்பட்ட மன அமைதிக்கும் நித்திரைக்குமான மாத்திரையை மட்டும் எப்போதும் மறக்காமல் எடுத்து நீட்டுவது போல அன்றும் நீட்டியவனிடம் வாங்கி வாயில் போட்டு விட்டு பொய் மயக்கத்துள் ஓய்ந்து கிடந்தாள். அப்படியான பல இரவுகளில் , குழந்தையை எடுத்த அறுவைத் தழும்புகள் முற்றாக ஆறியிராத அவளது ரணப்பட்ட உடல் அவளது அனுமதியின்றி, இரவுநேர நீலப்படங்களைப் பார்த்து முறுக்கேறிக் கொண்ட அவனது உடற் பசிக்குத் தீனியாகிக்கொண்டிருந்தது.
மன ஓய்வுக்கான மருந்து என்பது கிட்டத்தட்ட போதைக்கு ஒப்பானது. தனக்கு நேர்வதை கனவிலோ மயக்கத்திலோ நடப்பது போல உணர்ந்தாலும் தடுக்கும் சக்தியற்று ஒரு கட்டையெனக் கிடக்கும் உடலைப் புணர்வது . கிட்டத்தட்ட பிணத்தைப் புணர்வது போலான கீழ்த்தரமான கொடுமை என்பதை உணர்ந்து கொள்வதற்குக் கூட மனதில் மனிதமும் ஈரமும் இருந்தாக வேண்டும்.
பருந்தின் வாயில் அகப்பட்ட பலவீனப் பட்ட ஒரு பறவையின் எதிர்த்துப் போராடச் சக்தியற்ற நிலையில் வாழ்நாட்களைக் கழித்துக் கொண்டிருந்த அந்த வலசைப் பறவைக்கு, அவள் ஏந்தியெடுத்து வளர்க்க வரமற்றுப் போன அந்தக் குழந்தைதான் உலகத்தைக் கற்பிக்கப் போகிறதென்பதையும் அதை எதிர்த்துப் போராடும் உறுதியையும் கொடுக்கப்போகின்றது என்பதையும் அவள் அப்போது உணர்ந்திருக்கவில்லையாயினும்,
கானம் ஓய்ந்த ஒரு வானம்பாடியின் இறக்கைகளில் முள் முளைக்கத் தொடங்கியிருப்பதை உணரத் தொடங்கியிருந்தாள் முள்ளம்பன்றிகளின் முட்களைப் போல சிலிர்த்து உதறக் கூடிய தகமையையும் அதன் மூலம் தன்னைச்சுற்றிய ஒரு பாதுகாப்பு வட்டத்தையும் வரைந்து கொள்ள இறக்கைகளுக்குக்கற்றுக் கொடுக்க ஆரம்பித்தாள்
Tuesday, September 3, 2019
சிக்கிட்டி
அந்த வீடு ஒரு மரண வீட்டுக்குரிய அடுக்குகளோடு தான் ஆயத்தப்படுத்தப்பட்டிருந்தது. வாசலில் வீதியின் இரண்டு பக்கமும் நீளமாய் கிடந்த பூவரசம் வேலியைத் தொடுத்த இடத்தில் சிவப்பு நிற பெயின்ற் அடித்து கிரில் கம்பி கேற் போட்டு மேல் பகுதிக்கு மறக்காமல் தகரமடித்து அதில வீட்டு நம்பரும் 'நாய் கடிக்கும் கவனம்' என்று காலகாலமாய் வரும் நாய் விளம்பரமும் எழுதி வைத்திருந்தார்கள்.
அதன் இரண்டு பக்கமும் இரண்டு வாழைகள், அவை தள்ளிய குலைகள் போலவே இணைத்துக் கட்டிய பச்சை மொந்தன் குலைகளுடன் தொங்கிக் கொண்டிருந்தன. அதிலிருந்து இரண்டு பக்கமும் ஒரு லைட்போஸ்ட் தூரத்துக்குக் கயிறு கட்டி உட்பக்கமா மடித்துப் பின்ன ப்பட்ட தோரணம் தொங்கிக்கொண்டிருந்தது.
காலகாலமாய் வரும் வழக்கத்தை மாற்றக்கூடாது என்கிற மாதிரி அந்த வீட்டின் வாசலில் சைக்கிள் சீற்றில் இருந்த படி ஒரு கால் விரல்களைக் கீழே ஊன்றிய படி சிலரும் , ஒரு காலை முற்று முழுதா கீழே பலமா ஊன்றி மற்றக் காலை சைக்கிள் பார் கம்பிக்கு மறுபக்கம் தொங்கவிட்டுக் கொண்டு தண்டனை கொடுத்த மாதிரி இன்னும் நாலைந்து இளம்பெடியளும், ஏதோ இந்த மரண வீட்டையே தாங்கள் தான் தோளில் சுமந்து கொண்டிருக்கிறமாதிரி உணர்ச்சி பொங்கக் கதைத்துக்கொண்டு ,கண்களால் வீதியை சுவாரசியமாக அளந்து கொண்டிருந்தார்கள் .
அதென்னவோ எல்லா மரண வீட்டிலும் இது கட்டாயம் நடந்தேற வேண்டிய முக்கிய சடங்கு மாதிரி அந்த இளைஞர்களுக்குக் சற்றுத் தள்ளி வாய்க்குள் வெற்றிலையை குதப்பிய படி நாலைந்து பெரியவர்கள் தலையை அண்ணாந்து காறிக் காறி வேலிக்கரையில துப்பி கானிற்குள் வளர்ந்திருந்த இக்கீரிச் செடியையும் அதன் சிறிய மஞ்சள் பூவையும் சிவப்பாக்கிக் கொண்டு, இடைக்கிடை செருமிப் ஆளுக்காள் தங்களுக்குத் தெரிந்தளவில் இறந்தவரின் வாழ்க்கை வரலாறு பற்றித் தீவிரமா விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
அது தாண்டி உள்ளே போனால் நீண்ட முற்றத்தைக் கடந்து வீட்டின் வாசல் படியை ஓட்டினாற் போலப் போடப்பட்டிருந்த அவசரப் பந்தலின் நடுவில் இறந்து போன அந்த உடல் வளர்த்தப்பட்டுத் தலைமாட்டில் தேங்காயெண்ணெய் விளக்கு ஒற்றைத் திரியில் எரிந்து கொண்டிருந்தது. இப்போது சவம் என்றும், பிணம் என்றும், பிரேதம் என்றும் உடலம் என்றும் அழைக்கப்படும் அந்த உருவத்துக்கு உயிரிருக்கும் போது ஒரு பெயரிருந்தது. அப்போது தேவகி என அந்தப் பெயரைச் சொல்லியோ சின்னம்மா என்றோ மாமி என்றோ இன்னும் பல உறவு முறைகளாலும் அது அழைக்கப்பட்டது . இப்போது அந்த உடல் அனேகமாக எல்லா அழைப்பையும் இழந்து உடல் என்ற ஒரு சொல்லுக்குள் அடங்கிக் கிடந்தது.
அங்கிங்கென ஆள் நடமாட்டம் இருந்த போதும் தலை மாட்டிலோ, கால்மாட்டிலோ தலையைக் குப்புறப் போட்டு விசும்பிக் கொண்டோ, அல்லது அடிக்கொரு தரம் இறந்த முகத்தை நிமிர்ந்து பார்த்து வெடிக்கும் அழுகையை உதடு கடித்து அடக்கிக் கொண்டு, அந்த உடலில் ஈ கூட உட்கார்ந்து விடக் கூடாது என கையை வீசி வீசிப் பாதுகாத்துக் கொண்டோ யாரும் அருகிலில்லாததிலிருந்து நெருங்கிய உறவுகளுக்குத் தூரமாக விழுந்த மரணம் என்பது உணர முடிந்தது.
வீட்டின் உரிமையாளர்கள், அல்லது இறந்தவரின் உறவினர்கள் என எண்ணக் கூடிய உரிமையுடன் திரிந்தவர்கள் குறிப்பிட்ட சிலர் வரும் போது மட்டும் சோகம் மிகவும் அதிகமாகி ஒரு முறை குரலெடுத்து அழுது விட்டு வராத கண்ணீரையும் சளியையும் கஸ்ரப்பட்டு சீலைத் தலைப்பில் சிந்தி முகத்தை தலைப்பால் அழுந்தத் துடைத்து ஒருமாதிரி கண்ணைச் சிவக்க வைத்து தங்கள் சோகத்தை வெளிக்காட்ட, அவர்களுக்கு சற்றும் சளைக்காமல் வந்தவர்களும் போட்டிக்கு ஈடு கொடுத்தார்கள்.
பிறகு உடனேயே கவலையைக் களைந்து போட்டு விட்ட மாதிரி "ஏன் ஹோல் எடுத்துச் செய்திருக்கலாமே வசதியாயிருந்திருக்குமேல்லோ" என்று விசாரணையை ஆரம்பித்தார்கள்.
"உரித்துக்காரர் நாங்கள் இருக்க எதுக்கு ஹால் எல்லாம். மேள்க்காரி வந்து என்ன நினைப்பாள். நீங்கள் எல்லாம் எதுக்கு இருக்கிறியள் எண்டு பேசமாட்டாளோ எங்களை" என்றார்கள் வீட்டுக்காரர்.
"மோள் வாறாவாமோ?"
"ஓம் வராமல் பின்ன "
"ஓ.... அதுதானே" என்று அவர்களை ஆமோதித்து விட்டு அவர்கள் சற்றுக் கடந்ததும்
"ஹால் எடுத்தால் எல்லாச் செலவும் ஹாலோட போயிடுமெல்லே. அவங்கள் குடுக்கிற பில்லுக்கு, வாறவள் அங்க ரொக்கமா குடுத்துக் கணக்குத் தீர்த்துப் போடுவாள் இவைக்கு எதுவும் மிஞ்சாது வீட்டில வைச்சால் எல்லாம் முடிய அந்தக் காசு இந்தக் காசு என்று கணக்குக் காட்டி சுளையா சுருட்டலாமெல்லே அதுக்குத் தான். " ஏதோ இவையைப் பற்றி எங்களுக்கு தெரியாது போல" என்று வாயைக் கோணிச் சிரித்துக் கொண்டு நடந்து வேறு யாருக்கோ பக்கத்தில போய் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு வேறு கதையைத் தொடங்கினார்கள் அல்லது கதைத்துக் கொண்டிருந்த விடுப்பில் கலந்து கொண்டார்கள்.
வந்திருந்தவர்களில் பலர் சின்னச்சின்ன வித்தியாச உரையாடலோடு இதே காட்சியை அரங்கேற்றிக் கொண்டிருந்தாலும், ஒரு சிலராவது எதுவும் பேச்சற்று இருண்டு போன முகத்துடன் ஒரு துக்கவீட்டின் மானசீக அடையாளமாக இருந்தார்கள்.
கூட்டம் கூட்டமாகப் பிரிந்திருந்த மனிதக் கூட்டத்துக்குள் காரசார அரசியல் தீர்மானங்கள், சுடச்சுட சினிமாச் செய்திகள், கலியாணப் பேச்சுக்கள் இன்னும் இன்னோரன்ன மரணவீட்டில் செய்யவேண்டிய அதி முக்கிய விண்ணானங்களும் விடுப்புகளும் பங்கமில்லாமல் கடை விரித்திருந்தன.
வீட்டின் வேலிக்கரை எங்கும் புளிச் புளிச் என்று சிவப்பாக வெற்றிலைச் சாறைத் துப்பி வைத்தார்கள். ஆனால் எல்லோரிடமும் பொதுவாக அடிக்கடி வாசல் பார்த்த ஒரு எதிர்பார்ப்பிருந்தது. அது இறந்தவரின் மகளின் வருகைக்கானது.
இத்தனையிலும் எதனோடும் பட்டுக் கொள்ளாமல், எவரோடும் ஒட்டிக் கொள்ளாமல் வீட்டின் தாழ்வார நீளத்துக்குப படி போல ஒன்றரையடி அகலத்துக்கு இழுக்கப்பட்டிருந்த கொங்கிரீட் தளத்தில் வீட்டின் மூலைப் பகுதியில் வெள்ளை வேட்டியும் சுற்றிச் சால்வை போர்த்திய உடலை மீறி மார்பில் புரளும் வெண் முடிக்கற்றையுடன் சாய்ந்திருந்தார் அந்தப் பெரியவர்.
எதையெல்லாம் எந்தெந்த வயதுகளில் இழக்கக் கூடாதோ அதையெல்லாம் தப்பாமல் அந்தந்த வயதுகளில் இழந்து விட்ட பின் மரணம் வாழ்வின் முடிவல்ல என்பதும், அது இந்நேரத்தில் நிகழவேண்டும் என விதிக்கப்பட்டு விட்டால் தவிர்க்க முடியாதது என்பதும் என்னால் அனுபவபூர்வமாக உணரப்பட்டு விட்டபின், மரணம் பற்றிய அதீத பயங்களை நான் இழந்துவிட்டிருப்பதால் இப்போதெல்லாம் எந்த நிகழ்விலும் முகங்களைப் பார்த்து மனங்களைப் படிக்கமுயல்வது ஒரு பொழுது போக்கு போலவும், வாழும் சூழலை அறிவது ஆர்வம் போலவும் ஆகி விட்ட நிலையில் ஏனோ மற்றவர்களிலிருந்து வித்தியாசப்பட்ட அந்தப் பெரியவர் மனதில் பதிந்தார்.
பக்கத்தில் போய் அமர்ந்த போது அவரது, வயதுக்கு மீறி பொக்கை விழுந்தது போன்ற தோற்றம் கொண்ட வாய் புன்னகைப்பது போன்ற பாங்கில் இருந்த போதும், சற்றே குழிவிழுந்த கண்களில் அடிக்கடி ஈரம் கசிய எங்கோ பார்த்துத் துடைத்துக் கொண்டார்.
இறந்து கிடந்த உடலில் காய்ந்து உதிர்ந்த சந்தனத்தையும் விபூதியையும் யாரோ ஒழுங்கு படுத்தி மறுபடியும் இட்டார்கள்.
"சிக்கிட்டிக்கு செஞ்சாந்துப் பொட்டென்றால் நல்ல பிரியம் பெரியபிள்ளையாகினப் பிறகு அது தான் வைக்கிறவள். அவளின்ர நிறத்துக்கு நல்ல எடுப்பா இருக்கும் " தாத்தா சம்பந்தமில்லாமல் தனக்குத் தானே சொல்லிக் கொண்டார்.
"கடைசிப்பயணத்துக்கு . நல்ல வெளிப்பா இல்லாமல் ஏன் இப்பிடி ஒரு மங்கல் நிறத்தில சீலை உடுத்தி விட்டிருக்கீனம். " யாரோ கேட்டார்கள்.
"வயதான மனிசி. அதிலையும் புருசன் செத்த மனிசி .கண்ணைப்பறிக்கிற மாதிரி மங்களகரமான நிறத்தில கட்டினா நல்லாவா இருக்கும்" யாரோ பதில் சொன்னார்கள்
தாத்தா சம்பந்தமில்லாதவராக எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தார்.
" சிக்கிட்டிக்கு வாடாமல்லிக் கலர் எண்டால் நல்ல விருப்பம் அந்த நிறத்தில சீலையும் கட்டிக் கொண்டு தலை கொள்ளாமல் மல்லிகை மொட்டு சரம் சூட்டி குஞ்சம் அசைய கோயிலுக்கு வந்தாள் எண்டால் ஒரு சனமும் சாமியைப் பாராது அவளைத் தான் பார்க்கும்"
தாத்தா அந்தச் சூழ்நிலைக்குச் சம்பந்தமில்லாமல் அருகில் இருந்த எனக்குச் சொல்வது போலோ தன் பாட்டில் சொல்வது போலோ தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தார். ஏதோ ஒருவித மனப்பாதிப்புக்கு உள்ளானவர் என்று எனக்குள் ஊகித்துக் கொண்டேன்.
"மேள் வந்து கிருத்தியம் எல்லாம் கழிச்சுத் தானே போவா?" எங்களைக் கடந்த யாரவோ அந்த வீட்டுக்காரரிடம் கேட்டார்கள்.
"இல்லை காடாத்திப் போட்டு கழியசெலவு கழியப் போக வேணுமாம் இருந்தாப் போல ஒருமாதம் லீவெடுக்க முடியாதாம்"
"அது சரி திண்டது குடிச்சதை படைச்சு செலவை முடிச்சுப் போட்டுப் போறதும் நல்லது தான்"
"செலவு வீடு என்ன செத்தவைக்கோ செய்யீனம் தாங்கள் திண்டு மூக்கு முட்டக் குடிக்க எடுக்கிற எடுப்பெல்லோ" வேறு யாரோ முணுமுணுத்தார்கள்
"சிக்கிட்டிக்கு இலந்தைப்பழம் நாவல்பழம் கொய்யாப்பழம் விளாங்காய் எண்டால் நல்ல பிரியம் காச்சல் காஞ்சாலும் ஒளிச்சு வைச்சாகிலும் சாப்பிடுவாள் " தாத்தா பெருமூச்சு விட்டார்.
செத்தவீட்டில் சிறு சலசலப்புக் கேட்டது. வாசலில் கார் வந்து நின்றது. இருந்தாற்போல் பீறிட்டுக் கிளம்பியது ஒப்பாரி. இறந்தவரின் மகள் வந்திறங்கினாள். அனேகமாக அனைவரின் பார்வையும் வாசலைக் குறிவைத்தது. தாத்தா தவிர.
"சிக்கிட்டியின்ர பிள்ளை இப்ப பெரிய பொம்பிளையாகி இருப்பாள் சின்னவயசில அப்பிடியே தாயை உரிச்சு வைச்ச மாதிரி இருந்தவள் "
தாத்தா அப்போதும் எங்கோ பார்த்துக் கொண்டு உதட்டில் புன்னகையும் குழி விழுந்த கண்ணின் மடல் தாண்டிக் கசியும் நீருமாகச் சொன்னார்.
எதனோடும் ஒட்டிக் கொள்ளாமல் எதோ ஒரு வேறு உலகத்தில் தனிமையில் பேசிக்கொண்டிருக்கும் மனிதனிடம்
"அது யாரு தாத்தா சிக்கிட்டி?" என்றேன்.
கனவிலிருந்து விளித்தது போல திரும்பிப் பார்த்தார்.
திரும்பவும் புறங்கையால் தன் குழிவிழுந்த கண்ணைக் கசக்கிக் கொண்டார்.
"சிக்கிட்டி எண்டால் அவள்தான் சின்னங்கச்சி."
"அது யார் தாத்தா சின்னங்கச்சி.?"
"அவையள் அக்காளும் தங்கையும் தானே . மூத்தவவை பெரியங்கச்சி எண்டு கூப்பிடுகிறது சின்னவளை சின்னங்கச்சி எண்டு கூப்பிடுறது"
"அது தான் யார் அந்த சின்னங்கச்சி தாத்தா?"
"அவள் தான் சிக்கிட்டி"
எனக்குத் தலை வெடித்தது.
தாத்தாவின் பார்வை முன்னிலை மறுத்து கனவுக்குள் புதைந்தது. உதடு வெம்பலும் புன்னகையுமாக ஒரு வித்தியாசமான உணர்வுக் கலப்பில் நடுங்கியது.
"அவள் சிக்கிட்டி சிற்றாடை கட்டிற பருவத்திலேயே நல்ல துரு துருவெண்டு இருப்பாள். பக்கத்து வீடு தானே எந்த நேரமும் எங்கட வீடு மாறி தங்கட வீடு மாறி ஓடிக்கொண்டே இருப்பாள். நான் பெடியளோட அங்கன இங்கன போட்டு வரேக்குள்ள எல்லாம் நாவல் பழமோ இலந்தைப் பழமோ கொய்யாவோ விளாங்காயோ ஏதாவது ஒன்று கொண்டு வரவேணும் இல்லாட்டி அவனே இவனே என்று உண்டு இல்லையென்று பண்ணிப் போடுவாள்."
தாத்தா பொக்கைவாயில் குழந்தையாகி அழகாகச் சிரித்தார் .
"புளியளை திண்டு காச்சல் கீச்சல் வந்திதெண்டு வை என்ர ஆச்சி வாசல் சீமேக்கிளுவையில நீட்டுக்கொப்பா முறிச்சுக் கொண்டு ' பச்சைப் பிள்ளைக்கு கண்டதை குடுத்து படுக்கையில போட்டிட்டான் பாவி ' எண்டு திரத்தும் . அப்பவும் என்னை ஒரு சொல்லு விட்டுக் குடாள் எண்டால் பாரன். 'நீ கண்டனியே எணேய் அவன் தான் தந்தவன் அது தான் காச்சல் வந்ததெண்டு எண்டு 'எனக்காக வரிஞ்சு கட்டிக் கொண்டு வந்திடுவாள். "
தாத்தாவின் பேச்சில் இருந்த துள்ளலில் ஒரு விடலைப் பையன் ஓடி விளையாடினான்.
"சிக்கிட்டி சடங்காகினா போல தான் கதைக்காமல் விட்டிட்டாள் எண்டாலும் ஒரு பார்வை பாப்பாள் பாரு ஆயுளுக்கும் அது போதும்"
தாத்தா எங்கோ பார்த்தார் வாலிபக் கனவில் சிரித்தார். கண்ணை துடைத்தார்
"பெரியங்கச்சின்ர கலியாணத்துக்குத் தான் முதலில சீலை கட்டினாள் நல்ல வாடாமல்லி நிறத்தில அந்தச் சீலையும் மூண்டு குமிழ் குஞ்சரமும், மல்லிகைச் சரமுமாய் அம்பாளாச்சி முன்னால வந்து நிண்ட மாதிரி இருந்தது அண்டைக்கு "
"என்ர கூட்டாளி மாரெல்லாம் கண்ணைக் காட்டிறாங்கள் எனக்கு ஒரு மாதிரிப் போச்சு கலியாணவீட்டுக்கு தோரணக் கால் நட்டுக்கொண்டிருந்த என்னைக் கடக்கேக்க கண்ணை வெட்டிப் போட்டுப் போனாள் பார் ஒரு பார்வை அப்பிடியே ஆட்டம் அசைவு இல்லாமல் போச்சுது எனக்கு "
யாருக்கு இந்த மனிதர் கதை சொல்கிறார் எதற்காகச் சொல்கிறார் என்பதெல்லாம் எனக்குப் புரியவில்லை ஆனாலும் ஒரு ஆத்மாவின் உள்ளக் கிடக்கை கொட்டப்படும் போது கேட்கவேண்டியது மனிதக் கடமை என்பதை வாழ்க்கை உணர்த்தியிருந்ததால் கூடவே இருந்தேன். ஒரு வயோதிபத்தின் இளமைக்காலம் எந்த வித மிகைப்படுத்தலும் அலங்காரமும் இன்றிப் பகிரப்படுவது சுவாரசியமாக இருந்தது. பிடித்திருந்தது.
"ஆச்சியும் அண்டைக்கு பெரியங்கச்சியின்ர கலியாணம் முடிஞ்சு கால் மாறி பொம்பிளை மாப்பிள்ளையை மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பிப் போட்டு வீட்டுக்கு வந்த உடனேயே சொல்லிப் போட்டுது. 'ஊரில உள்ளவன் எல்லாம் கண்ணை வைக்கிறான் கண்ணுக்கு முன்னால வளர்ந்த பிள்ளை சின்னங்கச்சி எங்கட வீட்டுக்குத் தான்' எண்டு "
"அப்பு தான் ஒரு வரியத்தில ரெண்டு கலியாணம் நடந்தால் ஒண்டு உய்யாதாம் எண்டு அடுத்த வரியம் வரைக்கும் காத்திருந்து கேப்பம் எண்டார். அதுக்குள்ளே அங்கின இங்கின பூமரத்துக்கு தண்ணி விடேக்குள்ள பனங்கிளங்கு கொடியில ஓடியலுக்கு காயவிடேக்குள்ள, மாட்டை கண்டை அவிட்டு விடேக்குள்ள எண்டு அவள் வெளியில அங்க இங்கே வரேக்குள்ள வெட்டுவாள் பார் ஒரு வெட்டு ஆயுசுக்கும் போதும் அந்தப் பார்வை. "
தாத்தா கொஞ்சம் அமைதியானார். எங்கேயோ வெறிச்சுப் பார்த்தார். பின்
"அவள் நல்ல கெட்டிக்காரி கண்டியோ அதால தான் சடங்காகினப் பிறகும் படிப்பை நிப்பாட்டாமல் படிக்க வைச்சவை. நானும் எந்தப் பொறுக்கி என்ன புறணி சொன்னாலும் புறங்கையால தட்டிப் போட்டு கலியாணத்துக்குப் பிறகும் படிக்க விட்டு ஒரு ரீச்சராக்க வேணும் எண்டு தான் நினைச்சுக் கொண்டிருந்தன் அப்பத்தான் அது நடந்தது"
தாத்தாவின் முகம் இருண்டது
"அவள் பத்தாம்பு படிச்சுக் கொண்டிருக்கேக்க தான் பெரியங்கச்சிக்கு தலைப்பிரசவத்தில இரணைப் பிள்ளை பிறந்தது"
தாத்தா முகம் இறுக பேசாமல் இருந்தார்.
"இப்ப இருக்கிற வசதியள் அப்பவே இருந்திருந்தால் பெரியங்கச்சி பிள்ளை பெத்த வீட்டுக்குள்ள சுவாதம் வந்து சன்னி கண்டு போயிருக்காது. "
"என்ன தாத்தா சொல்லுறியள்"
"ஓம் பெரியங்கச்சி போனாப் போல அந்த ரெண்டு பாலனையும் பார்க்க ஆருமில்லை என்று போட்டு புருஷன்காரன் ரெண்டாம் கலியாணம் கட்டினால் வாறவள் மாற்றாந்தாய் கொடுமை செய்து பிள்ளைகள் சீரழிஞ்சு போங்கள் எண்டு அக்காளின்ர பிள்ளையளுக்கு தங்கையை தாயாக்கிப் போட்டினம்,"
"ஹ்ம்ம் அதில ஒரு குறையும் ஒருத்தரும் செய்யயில்ல அது தானே முறையும் . விதி தான் எனக்கு அவளை விதிச்சிருக்கியில்லை . அந்த மனுஷன் வேற சாகும் வரைக்கும் முதல் பெஞ்சாதியை மறக்கவேயில்லை . பாவம் இடுப்பில ஒண்டும் கையில ஒண்டுமா துடுக்கடங்கி துவண்டு போய் அவள் அலைஞ்ச அலைச்சல் ."
"பிறகு அதுக்குமொரு குஞ்சு பிறந்து மூன்றையும் இழுத்துக் கொண்டு திரியிறதே வாழ்க்கையா போச்சுது. மக்களைக் கட்டிக் குடுத்தாப் போல மனுசனும் அவசர அவசரமா போய்ச் சேர்ந்திட்டுது. பிள்ளை வளர்த்தது தவிர என்னத்தைக் கண்டாள் சிக்கிட்டி . ஆனாலும் நல்ல குஞ்சுகள் தாயை தவிக்க விடையில்ல. தாங்கள் கட்டிப் போன இடத்தில காலூன்டின உடன கூப்பிட்டு எடுத்துப் போட்டுதுகள். "
"அவளுக்குத் தான் இந்த மண்ணைப் பிரிய மனம் வரயில்லை. நாட்டை விட்டுப் போறதுக்கு முதல் நாள் தன்ர வீட்டு முத்தத்தில தனிய இருந்து கொண்டு வாழ்ந்த கதை சொல்லிக் குழறத் தொடங்கினாள் பார். பத்து செத்தவீட்டு ஒப்பாரி தேறும் பாவம் . தாய் தகப்பன் தமக்கை என்று எல்லாருக்கும் வலு செல்லம் அவள். பெரியங்கச்சி போனதோட தாயும் தகப்பனும் ஆளுக்கொரு மூலையில முடன்கினது தான் அடுத்தடுத்துப் போய் சேர்ந்திட்டுதுகள் அதுக்கெல்லாம் அழாமல் விறைச்சுப் போய் பார்த்த்துக் கொண்டிருந்தவள் நாட்டை விட்டுப் போகும் போதுதான் சேர்த்துவைச்சுக் கதறினாள். ஆற்ற தேற்ற எண்டு ஆருமில்லாமல் ...... அது பெரிய கொடுமை. நான் போகைக்கையும் உன்ர மடியில தான் போவனம்மா எண்டு முத்தத்து மண்ணில அடிச்சுச் சத்தியம் பண்ணிப் போட்டுத் தான் சிக்கிட்டி போனவள் "
"நீங்கள் எங்க தாத்தா இருக்கிறனீங்கள்?"
"உங்க அருகில தான் என்ர மூத்த மகளுக்கு குடுத்த சீதன வீட்டில ".
"மகளோட இருக்கிறியளோ. அப்ப உங்கட மனைவி...."
தயங்கித் தயங்கித்தான் அந்தக் கேள்வியைக் கேட்டேன்
"மகள் வீட்டில நான் தனியாத்தான் இருக்கிறனான் . அவையள் எல்லாரும் அங்கன கனடா பிரான்ஸ் என்று நல்லா இருக்கீனம்"
"நீங்க ஏன் போகயில்ல?"
"மனிசி போகேக்க என்னையும் கூப்பிட்டவ தான். நான் தான் மாட்டன் எண்டு சொல்லிப் போட்டன். இந்தக் ,காத்தும், சுவாத்தியமும் ஊரும் எனக்குப் பழகிப் போச்சு வேற எங்கேயாவது போனால் ஒத்துவராது செத்துப் போவன் கண்டியோ அதோட ஆளாளுக்கு உள்ள இடமெல்லாம் சிதறிப் போனால் ஒருத்தரையும் ஒருத்தராலும் திரும்பக் கண்டு பிடிக்க முடியாது. ஒராள் உரித்தான இடத்தில இருந்தால் தான் வெளிக்கிட்டுப் போறத்துக்கு முன்னால உசிர வைச்ச ஆத்துமம் தேடி வரும் " என்றார்
எனக்கு ஏனோ கடல் மீன்கள் நினைவு வந்தன. அவை எந்த வித சுத்திகரிக்கப்பட்ட சுகந்தத் தண்ணியில் விட்டாலும் கூட கடல் தவிர்த்து எங்கும் வாழாது. இறந்து போகும்
"குண்டி காஞ்சால் குதிரை கொள்ளுத் தின்னத்தானே வேணும். எல்லாம் அடிபட்டுப் புத்தி வந்ததும் நீங்களாவே கெஞ்சிக் கேட்டு வருவியள். எனக்கு உங்க குண்டடிபாட்டுக்குள்ள இருக்கேலாது" எண்டு போட்டு அவ போட்டா "
"ஓ... பின்ன நீங்களும் கனடா பிரான்ஸ் எண்டு வெளிக்கிட்டிடுவியள் . அது சரி உங்கட சிக்கிட்டி எந்த நாட்டில தாத்தா இருக்கிறா அவவும் கனடா பிரான்ஸ் எங்கையும் தானோ?"
தாத்தா கொஞ்ச நேரம் சத்தம் போடாமல் இருந்தார். பிறகு இலக்கில்லாமல் எங்கெல்லாமோ வெறித்தார். கண்கள் பொல பொலவெண்டு வடித்தன.. தாத்தா மௌனமாகவே இருந்தார்.
மரணவீடு இப்போது சற்று ஆரவாரமாகியது இறுதிக் கிரியைகள் இறுதி நிலையை அடைந்திருந்தன. இரு சிறு குழந்தைகளோடு நின்ற , கன்னங்களில் வெளிநாட்டுக் குளிர்ச்சியை அள்ளிப் பூசியிருந்த பெண் மட்டும் இதய பூர்வமாக விம்மிக் கொண்டு காரியம் செய்து கொண்டிருந்தாள் மற்றவர்கள் எல்லோரும் ஒரு துக்க வீட்டில் அந்நியம்போலத் தோன்றினார்கள்.
கிரியைகளில் அவள் ஒத்துழைக்க முடியாமல் குழந்தைகள் அவளின் உடையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு சிணுங்கிக் கொண்டிருந்தார்கள். யாருக்கும் அவர்களை அணைத்து வைக்கத் தோன்றாத அளவு உரிமை அற்றவர்களாக இருந்திருக்க வேண்டும். அவள் துயரமும் சங்கடமுமாகத் தவித்துக் கொண்டிருந்தாள்.
தாத்தா அருகே போய் ஒரு குழந்தையை தூக்கித் தோளில் போட்டவாறே மறு குழந்தையை கையில் பிடித்துக் கொண்டார்.
"கொம்மா கடமை எண்டு வந்திட்டால் உணர்ச்சியைக் காட்ட மாட்டாள். பல்லைக் கடிச்சுக் கொண்டு செய்து முடிப்பாள். நீ அம்மா மாதிரி ""
என்றார் ஒரு விதமான மந்திரக் குரலில். அவள் புரியாமல் பார்த்தாள். அதற்கு மேல் அவ்விடத்தில் அவர் பற்றி ஆராய நேரமும் திராணியும் அற்றவளாக புரோகிதரின் ஏவலுக்கு இயங்கினாள்.
பெட்டி மூடப் போகும் நேரம் கையில் வைத்திருந்த ஒரு நெட்டு மல்லிகை மொட்டை அவள் கையில் கொடுத்து
"கொம்மாவுக்குப் பிரியமானது. உங்கட முத்தத்தில பூத்தது. கொம்மா நட்ட கொடி " என்றார். அவள் புரியாமல் வாங்கி தாயினருகில் வைத்தாள்.
ஊர்வலம் புறப்பட்டது அவள் ஒரு குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு, மற்றக் குழந்தையைக் கையில் பிடித்துக் கொண்டு
"நாங்கள் எல்லாம் அங்கிருக்க எதுக்கம்மா தனியா இங்கே வந்தீங்க ? யாரைத் தேடி வந்தனீங்க ? இன்னும் ஒரு நாள் தானே இருந்தது திரும்பி வர அதுக்கிடையில எதுக்கம்மா உனக்கு மாரடைப்பு ? ஏனம்மா? ஒரு வேளை..... ஒரு வேளை... நாங்கள் சொன்னது தான் காரணமோ? ...... ஊரில தேவையில்லாமல் கிடக்கிற காணியை வித்துப் போட்டு வாங்கோஅங்கே எங்களுக்கு என்ன தேவையிருக்கு இனி எண்டு நாங்கள் நச்சரிச்சது தான் காரணமோ அம்மா?
அதுக்குள்ளை தான் நீங்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறீங்கள் என்று சொல்லியிருக்கலாமே அம்மா. எப்பவும் மாதிரி எல்லாத்தையும் நெஞ்சுக்குள்ள மூடி வைச்சிருந்த பாரத்தில தான் திரும்பி வர விரும்பாமல் இதயம் நிண்டிட்டுதோ அம்மா.
பூர்வீகம் என்பது, வெறும் மண்ணல்ல நினைவுகளில் உயிர் என்று உயிரை விட்டா நிரூபிக்க வேணும் அம்மா " என்று உடைந்து உள்ளிருந்த கவலை பீறிடக் கதறிக்கொண்டிருந்தாள்.
இறுதி ஊர்வலம் பிரதான வீதிவழியாக சுடுகாட்டை நோக்கி நகர, தாத்தா,
"இனி இங்கே என்ன இருக்கு "
என்று வானத்தையும் பூமியையும் அண்ணாந்து சுற்றிப்பார்த்து முணுமுணுத்துக் கொண்டார். ஆவி வெளியேறுவது போல நீண்ட பெருமூச் சொன்றை இழுத்து விட்டுக் கொண்டார். ஊர்வலத்தோடு கூடப் போகாமல் பக்கத்தில் கிடந்த ஒழுங்கையால் திரும்பினார்.
"சிக்கிட்டிக்கு நெருப்பெண்டா பயம். ஒரு சாம்பிராணிக் குச்சி சுட்டால் கூடத் துடிச்சுப் போவாள்" என்று சொல்லிக் கொண்ட குரலில் சத்தம் எழாது நெஞ்சுக்குள் நின்றது. நடந்து கொண்டிருந்த நடையில் உயிரற்று உடல் தொய்வுடன் தடுமாறிக் கால்கள் பின்னலிடத் தொடங்கின.
கல்யாணங்களுக்கு எப்படி காதலோடு சம்பந்தமிருக்க வேண்டிய கட்டாயம் இல்லாமலிருக்கிறதோ
அதே போல , காதல்களுக்கும் கல்யாணத்தில் முடிந்து நிரூபிக்கும் அவசியங்கள் வேண்டியிருப்பதில்லை.
என்ற யதார்த்தத்தை மீண்டுமொருமுறை சந்தித்த அதிர்வோடு ஊர்வலத்திலிருந்து விலகி, தாத்தா சென்ற பாதையில் விக்கித்து நின்றுகொண்டிருந்தேன்.
அதன் இரண்டு பக்கமும் இரண்டு வாழைகள், அவை தள்ளிய குலைகள் போலவே இணைத்துக் கட்டிய பச்சை மொந்தன் குலைகளுடன் தொங்கிக் கொண்டிருந்தன. அதிலிருந்து இரண்டு பக்கமும் ஒரு லைட்போஸ்ட் தூரத்துக்குக் கயிறு கட்டி உட்பக்கமா மடித்துப் பின்ன ப்பட்ட தோரணம் தொங்கிக்கொண்டிருந்தது.
காலகாலமாய் வரும் வழக்கத்தை மாற்றக்கூடாது என்கிற மாதிரி அந்த வீட்டின் வாசலில் சைக்கிள் சீற்றில் இருந்த படி ஒரு கால் விரல்களைக் கீழே ஊன்றிய படி சிலரும் , ஒரு காலை முற்று முழுதா கீழே பலமா ஊன்றி மற்றக் காலை சைக்கிள் பார் கம்பிக்கு மறுபக்கம் தொங்கவிட்டுக் கொண்டு தண்டனை கொடுத்த மாதிரி இன்னும் நாலைந்து இளம்பெடியளும், ஏதோ இந்த மரண வீட்டையே தாங்கள் தான் தோளில் சுமந்து கொண்டிருக்கிறமாதிரி உணர்ச்சி பொங்கக் கதைத்துக்கொண்டு ,கண்களால் வீதியை சுவாரசியமாக அளந்து கொண்டிருந்தார்கள் .
அதென்னவோ எல்லா மரண வீட்டிலும் இது கட்டாயம் நடந்தேற வேண்டிய முக்கிய சடங்கு மாதிரி அந்த இளைஞர்களுக்குக் சற்றுத் தள்ளி வாய்க்குள் வெற்றிலையை குதப்பிய படி நாலைந்து பெரியவர்கள் தலையை அண்ணாந்து காறிக் காறி வேலிக்கரையில துப்பி கானிற்குள் வளர்ந்திருந்த இக்கீரிச் செடியையும் அதன் சிறிய மஞ்சள் பூவையும் சிவப்பாக்கிக் கொண்டு, இடைக்கிடை செருமிப் ஆளுக்காள் தங்களுக்குத் தெரிந்தளவில் இறந்தவரின் வாழ்க்கை வரலாறு பற்றித் தீவிரமா விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
அது தாண்டி உள்ளே போனால் நீண்ட முற்றத்தைக் கடந்து வீட்டின் வாசல் படியை ஓட்டினாற் போலப் போடப்பட்டிருந்த அவசரப் பந்தலின் நடுவில் இறந்து போன அந்த உடல் வளர்த்தப்பட்டுத் தலைமாட்டில் தேங்காயெண்ணெய் விளக்கு ஒற்றைத் திரியில் எரிந்து கொண்டிருந்தது. இப்போது சவம் என்றும், பிணம் என்றும், பிரேதம் என்றும் உடலம் என்றும் அழைக்கப்படும் அந்த உருவத்துக்கு உயிரிருக்கும் போது ஒரு பெயரிருந்தது. அப்போது தேவகி என அந்தப் பெயரைச் சொல்லியோ சின்னம்மா என்றோ மாமி என்றோ இன்னும் பல உறவு முறைகளாலும் அது அழைக்கப்பட்டது . இப்போது அந்த உடல் அனேகமாக எல்லா அழைப்பையும் இழந்து உடல் என்ற ஒரு சொல்லுக்குள் அடங்கிக் கிடந்தது.
அங்கிங்கென ஆள் நடமாட்டம் இருந்த போதும் தலை மாட்டிலோ, கால்மாட்டிலோ தலையைக் குப்புறப் போட்டு விசும்பிக் கொண்டோ, அல்லது அடிக்கொரு தரம் இறந்த முகத்தை நிமிர்ந்து பார்த்து வெடிக்கும் அழுகையை உதடு கடித்து அடக்கிக் கொண்டு, அந்த உடலில் ஈ கூட உட்கார்ந்து விடக் கூடாது என கையை வீசி வீசிப் பாதுகாத்துக் கொண்டோ யாரும் அருகிலில்லாததிலிருந்து நெருங்கிய உறவுகளுக்குத் தூரமாக விழுந்த மரணம் என்பது உணர முடிந்தது.
வீட்டின் உரிமையாளர்கள், அல்லது இறந்தவரின் உறவினர்கள் என எண்ணக் கூடிய உரிமையுடன் திரிந்தவர்கள் குறிப்பிட்ட சிலர் வரும் போது மட்டும் சோகம் மிகவும் அதிகமாகி ஒரு முறை குரலெடுத்து அழுது விட்டு வராத கண்ணீரையும் சளியையும் கஸ்ரப்பட்டு சீலைத் தலைப்பில் சிந்தி முகத்தை தலைப்பால் அழுந்தத் துடைத்து ஒருமாதிரி கண்ணைச் சிவக்க வைத்து தங்கள் சோகத்தை வெளிக்காட்ட, அவர்களுக்கு சற்றும் சளைக்காமல் வந்தவர்களும் போட்டிக்கு ஈடு கொடுத்தார்கள்.
பிறகு உடனேயே கவலையைக் களைந்து போட்டு விட்ட மாதிரி "ஏன் ஹோல் எடுத்துச் செய்திருக்கலாமே வசதியாயிருந்திருக்குமேல்லோ" என்று விசாரணையை ஆரம்பித்தார்கள்.
"உரித்துக்காரர் நாங்கள் இருக்க எதுக்கு ஹால் எல்லாம். மேள்க்காரி வந்து என்ன நினைப்பாள். நீங்கள் எல்லாம் எதுக்கு இருக்கிறியள் எண்டு பேசமாட்டாளோ எங்களை" என்றார்கள் வீட்டுக்காரர்.
"மோள் வாறாவாமோ?"
"ஓம் வராமல் பின்ன "
"ஓ.... அதுதானே" என்று அவர்களை ஆமோதித்து விட்டு அவர்கள் சற்றுக் கடந்ததும்
"ஹால் எடுத்தால் எல்லாச் செலவும் ஹாலோட போயிடுமெல்லே. அவங்கள் குடுக்கிற பில்லுக்கு, வாறவள் அங்க ரொக்கமா குடுத்துக் கணக்குத் தீர்த்துப் போடுவாள் இவைக்கு எதுவும் மிஞ்சாது வீட்டில வைச்சால் எல்லாம் முடிய அந்தக் காசு இந்தக் காசு என்று கணக்குக் காட்டி சுளையா சுருட்டலாமெல்லே அதுக்குத் தான். " ஏதோ இவையைப் பற்றி எங்களுக்கு தெரியாது போல" என்று வாயைக் கோணிச் சிரித்துக் கொண்டு நடந்து வேறு யாருக்கோ பக்கத்தில போய் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு வேறு கதையைத் தொடங்கினார்கள் அல்லது கதைத்துக் கொண்டிருந்த விடுப்பில் கலந்து கொண்டார்கள்.
வந்திருந்தவர்களில் பலர் சின்னச்சின்ன வித்தியாச உரையாடலோடு இதே காட்சியை அரங்கேற்றிக் கொண்டிருந்தாலும், ஒரு சிலராவது எதுவும் பேச்சற்று இருண்டு போன முகத்துடன் ஒரு துக்கவீட்டின் மானசீக அடையாளமாக இருந்தார்கள்.
கூட்டம் கூட்டமாகப் பிரிந்திருந்த மனிதக் கூட்டத்துக்குள் காரசார அரசியல் தீர்மானங்கள், சுடச்சுட சினிமாச் செய்திகள், கலியாணப் பேச்சுக்கள் இன்னும் இன்னோரன்ன மரணவீட்டில் செய்யவேண்டிய அதி முக்கிய விண்ணானங்களும் விடுப்புகளும் பங்கமில்லாமல் கடை விரித்திருந்தன.
வீட்டின் வேலிக்கரை எங்கும் புளிச் புளிச் என்று சிவப்பாக வெற்றிலைச் சாறைத் துப்பி வைத்தார்கள். ஆனால் எல்லோரிடமும் பொதுவாக அடிக்கடி வாசல் பார்த்த ஒரு எதிர்பார்ப்பிருந்தது. அது இறந்தவரின் மகளின் வருகைக்கானது.
இத்தனையிலும் எதனோடும் பட்டுக் கொள்ளாமல், எவரோடும் ஒட்டிக் கொள்ளாமல் வீட்டின் தாழ்வார நீளத்துக்குப படி போல ஒன்றரையடி அகலத்துக்கு இழுக்கப்பட்டிருந்த கொங்கிரீட் தளத்தில் வீட்டின் மூலைப் பகுதியில் வெள்ளை வேட்டியும் சுற்றிச் சால்வை போர்த்திய உடலை மீறி மார்பில் புரளும் வெண் முடிக்கற்றையுடன் சாய்ந்திருந்தார் அந்தப் பெரியவர்.
எதையெல்லாம் எந்தெந்த வயதுகளில் இழக்கக் கூடாதோ அதையெல்லாம் தப்பாமல் அந்தந்த வயதுகளில் இழந்து விட்ட பின் மரணம் வாழ்வின் முடிவல்ல என்பதும், அது இந்நேரத்தில் நிகழவேண்டும் என விதிக்கப்பட்டு விட்டால் தவிர்க்க முடியாதது என்பதும் என்னால் அனுபவபூர்வமாக உணரப்பட்டு விட்டபின், மரணம் பற்றிய அதீத பயங்களை நான் இழந்துவிட்டிருப்பதால் இப்போதெல்லாம் எந்த நிகழ்விலும் முகங்களைப் பார்த்து மனங்களைப் படிக்கமுயல்வது ஒரு பொழுது போக்கு போலவும், வாழும் சூழலை அறிவது ஆர்வம் போலவும் ஆகி விட்ட நிலையில் ஏனோ மற்றவர்களிலிருந்து வித்தியாசப்பட்ட அந்தப் பெரியவர் மனதில் பதிந்தார்.
பக்கத்தில் போய் அமர்ந்த போது அவரது, வயதுக்கு மீறி பொக்கை விழுந்தது போன்ற தோற்றம் கொண்ட வாய் புன்னகைப்பது போன்ற பாங்கில் இருந்த போதும், சற்றே குழிவிழுந்த கண்களில் அடிக்கடி ஈரம் கசிய எங்கோ பார்த்துத் துடைத்துக் கொண்டார்.
இறந்து கிடந்த உடலில் காய்ந்து உதிர்ந்த சந்தனத்தையும் விபூதியையும் யாரோ ஒழுங்கு படுத்தி மறுபடியும் இட்டார்கள்.
"சிக்கிட்டிக்கு செஞ்சாந்துப் பொட்டென்றால் நல்ல பிரியம் பெரியபிள்ளையாகினப் பிறகு அது தான் வைக்கிறவள். அவளின்ர நிறத்துக்கு நல்ல எடுப்பா இருக்கும் " தாத்தா சம்பந்தமில்லாமல் தனக்குத் தானே சொல்லிக் கொண்டார்.
"கடைசிப்பயணத்துக்கு . நல்ல வெளிப்பா இல்லாமல் ஏன் இப்பிடி ஒரு மங்கல் நிறத்தில சீலை உடுத்தி விட்டிருக்கீனம். " யாரோ கேட்டார்கள்.
"வயதான மனிசி. அதிலையும் புருசன் செத்த மனிசி .கண்ணைப்பறிக்கிற மாதிரி மங்களகரமான நிறத்தில கட்டினா நல்லாவா இருக்கும்" யாரோ பதில் சொன்னார்கள்
தாத்தா சம்பந்தமில்லாதவராக எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தார்.
" சிக்கிட்டிக்கு வாடாமல்லிக் கலர் எண்டால் நல்ல விருப்பம் அந்த நிறத்தில சீலையும் கட்டிக் கொண்டு தலை கொள்ளாமல் மல்லிகை மொட்டு சரம் சூட்டி குஞ்சம் அசைய கோயிலுக்கு வந்தாள் எண்டால் ஒரு சனமும் சாமியைப் பாராது அவளைத் தான் பார்க்கும்"
தாத்தா அந்தச் சூழ்நிலைக்குச் சம்பந்தமில்லாமல் அருகில் இருந்த எனக்குச் சொல்வது போலோ தன் பாட்டில் சொல்வது போலோ தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தார். ஏதோ ஒருவித மனப்பாதிப்புக்கு உள்ளானவர் என்று எனக்குள் ஊகித்துக் கொண்டேன்.
"மேள் வந்து கிருத்தியம் எல்லாம் கழிச்சுத் தானே போவா?" எங்களைக் கடந்த யாரவோ அந்த வீட்டுக்காரரிடம் கேட்டார்கள்.
"இல்லை காடாத்திப் போட்டு கழியசெலவு கழியப் போக வேணுமாம் இருந்தாப் போல ஒருமாதம் லீவெடுக்க முடியாதாம்"
"அது சரி திண்டது குடிச்சதை படைச்சு செலவை முடிச்சுப் போட்டுப் போறதும் நல்லது தான்"
"செலவு வீடு என்ன செத்தவைக்கோ செய்யீனம் தாங்கள் திண்டு மூக்கு முட்டக் குடிக்க எடுக்கிற எடுப்பெல்லோ" வேறு யாரோ முணுமுணுத்தார்கள்
"சிக்கிட்டிக்கு இலந்தைப்பழம் நாவல்பழம் கொய்யாப்பழம் விளாங்காய் எண்டால் நல்ல பிரியம் காச்சல் காஞ்சாலும் ஒளிச்சு வைச்சாகிலும் சாப்பிடுவாள் " தாத்தா பெருமூச்சு விட்டார்.
செத்தவீட்டில் சிறு சலசலப்புக் கேட்டது. வாசலில் கார் வந்து நின்றது. இருந்தாற்போல் பீறிட்டுக் கிளம்பியது ஒப்பாரி. இறந்தவரின் மகள் வந்திறங்கினாள். அனேகமாக அனைவரின் பார்வையும் வாசலைக் குறிவைத்தது. தாத்தா தவிர.
"சிக்கிட்டியின்ர பிள்ளை இப்ப பெரிய பொம்பிளையாகி இருப்பாள் சின்னவயசில அப்பிடியே தாயை உரிச்சு வைச்ச மாதிரி இருந்தவள் "
தாத்தா அப்போதும் எங்கோ பார்த்துக் கொண்டு உதட்டில் புன்னகையும் குழி விழுந்த கண்ணின் மடல் தாண்டிக் கசியும் நீருமாகச் சொன்னார்.
எதனோடும் ஒட்டிக் கொள்ளாமல் எதோ ஒரு வேறு உலகத்தில் தனிமையில் பேசிக்கொண்டிருக்கும் மனிதனிடம்
"அது யாரு தாத்தா சிக்கிட்டி?" என்றேன்.
கனவிலிருந்து விளித்தது போல திரும்பிப் பார்த்தார்.
திரும்பவும் புறங்கையால் தன் குழிவிழுந்த கண்ணைக் கசக்கிக் கொண்டார்.
"சிக்கிட்டி எண்டால் அவள்தான் சின்னங்கச்சி."
"அது யார் தாத்தா சின்னங்கச்சி.?"
"அவையள் அக்காளும் தங்கையும் தானே . மூத்தவவை பெரியங்கச்சி எண்டு கூப்பிடுகிறது சின்னவளை சின்னங்கச்சி எண்டு கூப்பிடுறது"
"அது தான் யார் அந்த சின்னங்கச்சி தாத்தா?"
"அவள் தான் சிக்கிட்டி"
எனக்குத் தலை வெடித்தது.
தாத்தாவின் பார்வை முன்னிலை மறுத்து கனவுக்குள் புதைந்தது. உதடு வெம்பலும் புன்னகையுமாக ஒரு வித்தியாசமான உணர்வுக் கலப்பில் நடுங்கியது.
"அவள் சிக்கிட்டி சிற்றாடை கட்டிற பருவத்திலேயே நல்ல துரு துருவெண்டு இருப்பாள். பக்கத்து வீடு தானே எந்த நேரமும் எங்கட வீடு மாறி தங்கட வீடு மாறி ஓடிக்கொண்டே இருப்பாள். நான் பெடியளோட அங்கன இங்கன போட்டு வரேக்குள்ள எல்லாம் நாவல் பழமோ இலந்தைப் பழமோ கொய்யாவோ விளாங்காயோ ஏதாவது ஒன்று கொண்டு வரவேணும் இல்லாட்டி அவனே இவனே என்று உண்டு இல்லையென்று பண்ணிப் போடுவாள்."
தாத்தா பொக்கைவாயில் குழந்தையாகி அழகாகச் சிரித்தார் .
"புளியளை திண்டு காச்சல் கீச்சல் வந்திதெண்டு வை என்ர ஆச்சி வாசல் சீமேக்கிளுவையில நீட்டுக்கொப்பா முறிச்சுக் கொண்டு ' பச்சைப் பிள்ளைக்கு கண்டதை குடுத்து படுக்கையில போட்டிட்டான் பாவி ' எண்டு திரத்தும் . அப்பவும் என்னை ஒரு சொல்லு விட்டுக் குடாள் எண்டால் பாரன். 'நீ கண்டனியே எணேய் அவன் தான் தந்தவன் அது தான் காச்சல் வந்ததெண்டு எண்டு 'எனக்காக வரிஞ்சு கட்டிக் கொண்டு வந்திடுவாள். "
தாத்தாவின் பேச்சில் இருந்த துள்ளலில் ஒரு விடலைப் பையன் ஓடி விளையாடினான்.
"சிக்கிட்டி சடங்காகினா போல தான் கதைக்காமல் விட்டிட்டாள் எண்டாலும் ஒரு பார்வை பாப்பாள் பாரு ஆயுளுக்கும் அது போதும்"
தாத்தா எங்கோ பார்த்தார் வாலிபக் கனவில் சிரித்தார். கண்ணை துடைத்தார்
"பெரியங்கச்சின்ர கலியாணத்துக்குத் தான் முதலில சீலை கட்டினாள் நல்ல வாடாமல்லி நிறத்தில அந்தச் சீலையும் மூண்டு குமிழ் குஞ்சரமும், மல்லிகைச் சரமுமாய் அம்பாளாச்சி முன்னால வந்து நிண்ட மாதிரி இருந்தது அண்டைக்கு "
"என்ர கூட்டாளி மாரெல்லாம் கண்ணைக் காட்டிறாங்கள் எனக்கு ஒரு மாதிரிப் போச்சு கலியாணவீட்டுக்கு தோரணக் கால் நட்டுக்கொண்டிருந்த என்னைக் கடக்கேக்க கண்ணை வெட்டிப் போட்டுப் போனாள் பார் ஒரு பார்வை அப்பிடியே ஆட்டம் அசைவு இல்லாமல் போச்சுது எனக்கு "
யாருக்கு இந்த மனிதர் கதை சொல்கிறார் எதற்காகச் சொல்கிறார் என்பதெல்லாம் எனக்குப் புரியவில்லை ஆனாலும் ஒரு ஆத்மாவின் உள்ளக் கிடக்கை கொட்டப்படும் போது கேட்கவேண்டியது மனிதக் கடமை என்பதை வாழ்க்கை உணர்த்தியிருந்ததால் கூடவே இருந்தேன். ஒரு வயோதிபத்தின் இளமைக்காலம் எந்த வித மிகைப்படுத்தலும் அலங்காரமும் இன்றிப் பகிரப்படுவது சுவாரசியமாக இருந்தது. பிடித்திருந்தது.
"ஆச்சியும் அண்டைக்கு பெரியங்கச்சியின்ர கலியாணம் முடிஞ்சு கால் மாறி பொம்பிளை மாப்பிள்ளையை மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பிப் போட்டு வீட்டுக்கு வந்த உடனேயே சொல்லிப் போட்டுது. 'ஊரில உள்ளவன் எல்லாம் கண்ணை வைக்கிறான் கண்ணுக்கு முன்னால வளர்ந்த பிள்ளை சின்னங்கச்சி எங்கட வீட்டுக்குத் தான்' எண்டு "
"அப்பு தான் ஒரு வரியத்தில ரெண்டு கலியாணம் நடந்தால் ஒண்டு உய்யாதாம் எண்டு அடுத்த வரியம் வரைக்கும் காத்திருந்து கேப்பம் எண்டார். அதுக்குள்ளே அங்கின இங்கின பூமரத்துக்கு தண்ணி விடேக்குள்ள பனங்கிளங்கு கொடியில ஓடியலுக்கு காயவிடேக்குள்ள, மாட்டை கண்டை அவிட்டு விடேக்குள்ள எண்டு அவள் வெளியில அங்க இங்கே வரேக்குள்ள வெட்டுவாள் பார் ஒரு வெட்டு ஆயுசுக்கும் போதும் அந்தப் பார்வை. "
தாத்தா கொஞ்சம் அமைதியானார். எங்கேயோ வெறிச்சுப் பார்த்தார். பின்
"அவள் நல்ல கெட்டிக்காரி கண்டியோ அதால தான் சடங்காகினப் பிறகும் படிப்பை நிப்பாட்டாமல் படிக்க வைச்சவை. நானும் எந்தப் பொறுக்கி என்ன புறணி சொன்னாலும் புறங்கையால தட்டிப் போட்டு கலியாணத்துக்குப் பிறகும் படிக்க விட்டு ஒரு ரீச்சராக்க வேணும் எண்டு தான் நினைச்சுக் கொண்டிருந்தன் அப்பத்தான் அது நடந்தது"
தாத்தாவின் முகம் இருண்டது
"அவள் பத்தாம்பு படிச்சுக் கொண்டிருக்கேக்க தான் பெரியங்கச்சிக்கு தலைப்பிரசவத்தில இரணைப் பிள்ளை பிறந்தது"
தாத்தா முகம் இறுக பேசாமல் இருந்தார்.
"இப்ப இருக்கிற வசதியள் அப்பவே இருந்திருந்தால் பெரியங்கச்சி பிள்ளை பெத்த வீட்டுக்குள்ள சுவாதம் வந்து சன்னி கண்டு போயிருக்காது. "
"என்ன தாத்தா சொல்லுறியள்"
"ஓம் பெரியங்கச்சி போனாப் போல அந்த ரெண்டு பாலனையும் பார்க்க ஆருமில்லை என்று போட்டு புருஷன்காரன் ரெண்டாம் கலியாணம் கட்டினால் வாறவள் மாற்றாந்தாய் கொடுமை செய்து பிள்ளைகள் சீரழிஞ்சு போங்கள் எண்டு அக்காளின்ர பிள்ளையளுக்கு தங்கையை தாயாக்கிப் போட்டினம்,"
"ஹ்ம்ம் அதில ஒரு குறையும் ஒருத்தரும் செய்யயில்ல அது தானே முறையும் . விதி தான் எனக்கு அவளை விதிச்சிருக்கியில்லை . அந்த மனுஷன் வேற சாகும் வரைக்கும் முதல் பெஞ்சாதியை மறக்கவேயில்லை . பாவம் இடுப்பில ஒண்டும் கையில ஒண்டுமா துடுக்கடங்கி துவண்டு போய் அவள் அலைஞ்ச அலைச்சல் ."
"பிறகு அதுக்குமொரு குஞ்சு பிறந்து மூன்றையும் இழுத்துக் கொண்டு திரியிறதே வாழ்க்கையா போச்சுது. மக்களைக் கட்டிக் குடுத்தாப் போல மனுசனும் அவசர அவசரமா போய்ச் சேர்ந்திட்டுது. பிள்ளை வளர்த்தது தவிர என்னத்தைக் கண்டாள் சிக்கிட்டி . ஆனாலும் நல்ல குஞ்சுகள் தாயை தவிக்க விடையில்ல. தாங்கள் கட்டிப் போன இடத்தில காலூன்டின உடன கூப்பிட்டு எடுத்துப் போட்டுதுகள். "
"அவளுக்குத் தான் இந்த மண்ணைப் பிரிய மனம் வரயில்லை. நாட்டை விட்டுப் போறதுக்கு முதல் நாள் தன்ர வீட்டு முத்தத்தில தனிய இருந்து கொண்டு வாழ்ந்த கதை சொல்லிக் குழறத் தொடங்கினாள் பார். பத்து செத்தவீட்டு ஒப்பாரி தேறும் பாவம் . தாய் தகப்பன் தமக்கை என்று எல்லாருக்கும் வலு செல்லம் அவள். பெரியங்கச்சி போனதோட தாயும் தகப்பனும் ஆளுக்கொரு மூலையில முடன்கினது தான் அடுத்தடுத்துப் போய் சேர்ந்திட்டுதுகள் அதுக்கெல்லாம் அழாமல் விறைச்சுப் போய் பார்த்த்துக் கொண்டிருந்தவள் நாட்டை விட்டுப் போகும் போதுதான் சேர்த்துவைச்சுக் கதறினாள். ஆற்ற தேற்ற எண்டு ஆருமில்லாமல் ...... அது பெரிய கொடுமை. நான் போகைக்கையும் உன்ர மடியில தான் போவனம்மா எண்டு முத்தத்து மண்ணில அடிச்சுச் சத்தியம் பண்ணிப் போட்டுத் தான் சிக்கிட்டி போனவள் "
"நீங்கள் எங்க தாத்தா இருக்கிறனீங்கள்?"
"உங்க அருகில தான் என்ர மூத்த மகளுக்கு குடுத்த சீதன வீட்டில ".
"மகளோட இருக்கிறியளோ. அப்ப உங்கட மனைவி...."
தயங்கித் தயங்கித்தான் அந்தக் கேள்வியைக் கேட்டேன்
"மகள் வீட்டில நான் தனியாத்தான் இருக்கிறனான் . அவையள் எல்லாரும் அங்கன கனடா பிரான்ஸ் என்று நல்லா இருக்கீனம்"
"நீங்க ஏன் போகயில்ல?"
"மனிசி போகேக்க என்னையும் கூப்பிட்டவ தான். நான் தான் மாட்டன் எண்டு சொல்லிப் போட்டன். இந்தக் ,காத்தும், சுவாத்தியமும் ஊரும் எனக்குப் பழகிப் போச்சு வேற எங்கேயாவது போனால் ஒத்துவராது செத்துப் போவன் கண்டியோ அதோட ஆளாளுக்கு உள்ள இடமெல்லாம் சிதறிப் போனால் ஒருத்தரையும் ஒருத்தராலும் திரும்பக் கண்டு பிடிக்க முடியாது. ஒராள் உரித்தான இடத்தில இருந்தால் தான் வெளிக்கிட்டுப் போறத்துக்கு முன்னால உசிர வைச்ச ஆத்துமம் தேடி வரும் " என்றார்
எனக்கு ஏனோ கடல் மீன்கள் நினைவு வந்தன. அவை எந்த வித சுத்திகரிக்கப்பட்ட சுகந்தத் தண்ணியில் விட்டாலும் கூட கடல் தவிர்த்து எங்கும் வாழாது. இறந்து போகும்
"குண்டி காஞ்சால் குதிரை கொள்ளுத் தின்னத்தானே வேணும். எல்லாம் அடிபட்டுப் புத்தி வந்ததும் நீங்களாவே கெஞ்சிக் கேட்டு வருவியள். எனக்கு உங்க குண்டடிபாட்டுக்குள்ள இருக்கேலாது" எண்டு போட்டு அவ போட்டா "
"ஓ... பின்ன நீங்களும் கனடா பிரான்ஸ் எண்டு வெளிக்கிட்டிடுவியள் . அது சரி உங்கட சிக்கிட்டி எந்த நாட்டில தாத்தா இருக்கிறா அவவும் கனடா பிரான்ஸ் எங்கையும் தானோ?"
தாத்தா கொஞ்ச நேரம் சத்தம் போடாமல் இருந்தார். பிறகு இலக்கில்லாமல் எங்கெல்லாமோ வெறித்தார். கண்கள் பொல பொலவெண்டு வடித்தன.. தாத்தா மௌனமாகவே இருந்தார்.
மரணவீடு இப்போது சற்று ஆரவாரமாகியது இறுதிக் கிரியைகள் இறுதி நிலையை அடைந்திருந்தன. இரு சிறு குழந்தைகளோடு நின்ற , கன்னங்களில் வெளிநாட்டுக் குளிர்ச்சியை அள்ளிப் பூசியிருந்த பெண் மட்டும் இதய பூர்வமாக விம்மிக் கொண்டு காரியம் செய்து கொண்டிருந்தாள் மற்றவர்கள் எல்லோரும் ஒரு துக்க வீட்டில் அந்நியம்போலத் தோன்றினார்கள்.
கிரியைகளில் அவள் ஒத்துழைக்க முடியாமல் குழந்தைகள் அவளின் உடையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு சிணுங்கிக் கொண்டிருந்தார்கள். யாருக்கும் அவர்களை அணைத்து வைக்கத் தோன்றாத அளவு உரிமை அற்றவர்களாக இருந்திருக்க வேண்டும். அவள் துயரமும் சங்கடமுமாகத் தவித்துக் கொண்டிருந்தாள்.
தாத்தா அருகே போய் ஒரு குழந்தையை தூக்கித் தோளில் போட்டவாறே மறு குழந்தையை கையில் பிடித்துக் கொண்டார்.
"கொம்மா கடமை எண்டு வந்திட்டால் உணர்ச்சியைக் காட்ட மாட்டாள். பல்லைக் கடிச்சுக் கொண்டு செய்து முடிப்பாள். நீ அம்மா மாதிரி ""
என்றார் ஒரு விதமான மந்திரக் குரலில். அவள் புரியாமல் பார்த்தாள். அதற்கு மேல் அவ்விடத்தில் அவர் பற்றி ஆராய நேரமும் திராணியும் அற்றவளாக புரோகிதரின் ஏவலுக்கு இயங்கினாள்.
பெட்டி மூடப் போகும் நேரம் கையில் வைத்திருந்த ஒரு நெட்டு மல்லிகை மொட்டை அவள் கையில் கொடுத்து
"கொம்மாவுக்குப் பிரியமானது. உங்கட முத்தத்தில பூத்தது. கொம்மா நட்ட கொடி " என்றார். அவள் புரியாமல் வாங்கி தாயினருகில் வைத்தாள்.
ஊர்வலம் புறப்பட்டது அவள் ஒரு குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு, மற்றக் குழந்தையைக் கையில் பிடித்துக் கொண்டு
"நாங்கள் எல்லாம் அங்கிருக்க எதுக்கம்மா தனியா இங்கே வந்தீங்க ? யாரைத் தேடி வந்தனீங்க ? இன்னும் ஒரு நாள் தானே இருந்தது திரும்பி வர அதுக்கிடையில எதுக்கம்மா உனக்கு மாரடைப்பு ? ஏனம்மா? ஒரு வேளை..... ஒரு வேளை... நாங்கள் சொன்னது தான் காரணமோ? ...... ஊரில தேவையில்லாமல் கிடக்கிற காணியை வித்துப் போட்டு வாங்கோஅங்கே எங்களுக்கு என்ன தேவையிருக்கு இனி எண்டு நாங்கள் நச்சரிச்சது தான் காரணமோ அம்மா?
அதுக்குள்ளை தான் நீங்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறீங்கள் என்று சொல்லியிருக்கலாமே அம்மா. எப்பவும் மாதிரி எல்லாத்தையும் நெஞ்சுக்குள்ள மூடி வைச்சிருந்த பாரத்தில தான் திரும்பி வர விரும்பாமல் இதயம் நிண்டிட்டுதோ அம்மா.
பூர்வீகம் என்பது, வெறும் மண்ணல்ல நினைவுகளில் உயிர் என்று உயிரை விட்டா நிரூபிக்க வேணும் அம்மா " என்று உடைந்து உள்ளிருந்த கவலை பீறிடக் கதறிக்கொண்டிருந்தாள்.
இறுதி ஊர்வலம் பிரதான வீதிவழியாக சுடுகாட்டை நோக்கி நகர, தாத்தா,
"இனி இங்கே என்ன இருக்கு "
என்று வானத்தையும் பூமியையும் அண்ணாந்து சுற்றிப்பார்த்து முணுமுணுத்துக் கொண்டார். ஆவி வெளியேறுவது போல நீண்ட பெருமூச் சொன்றை இழுத்து விட்டுக் கொண்டார். ஊர்வலத்தோடு கூடப் போகாமல் பக்கத்தில் கிடந்த ஒழுங்கையால் திரும்பினார்.
"சிக்கிட்டிக்கு நெருப்பெண்டா பயம். ஒரு சாம்பிராணிக் குச்சி சுட்டால் கூடத் துடிச்சுப் போவாள்" என்று சொல்லிக் கொண்ட குரலில் சத்தம் எழாது நெஞ்சுக்குள் நின்றது. நடந்து கொண்டிருந்த நடையில் உயிரற்று உடல் தொய்வுடன் தடுமாறிக் கால்கள் பின்னலிடத் தொடங்கின.
கல்யாணங்களுக்கு எப்படி காதலோடு சம்பந்தமிருக்க வேண்டிய கட்டாயம் இல்லாமலிருக்கிறதோ
அதே போல , காதல்களுக்கும் கல்யாணத்தில் முடிந்து நிரூபிக்கும் அவசியங்கள் வேண்டியிருப்பதில்லை.
என்ற யதார்த்தத்தை மீண்டுமொருமுறை சந்தித்த அதிர்வோடு ஊர்வலத்திலிருந்து விலகி, தாத்தா சென்ற பாதையில் விக்கித்து நின்றுகொண்டிருந்தேன்.
Monday, September 2, 2019
'Resa Newspaper' on 28th August, 2019 இல் வெளியான உரையாடலின் தமிழாக்கம்
உங்களைப் பற்றிய சிறிய அறிமுகம் ஒன்றை தாருங்கள் ????
என்னைப்பற்றிய அறிமுகம் என்றால், நான் ஈழத்தைத் தாய்தேசமாகக் கொண்டவள். இப்போது ஜெர்மனியில் வசித்துக்கொண்டிருக்கிறேன், நாட்டின் அமைதியின்மை மற்றும் பாதுகாப்பற்ற சூழலால் விரும்பாமல் வேறு வழியற்று புலம் பெயரும் நிர்ப்பந்தத்துக்கு ஆளாக்கப்பட்ட ,. என் நாட்டின் மீது மிகுந்த நேசம் கொண்டிருந்த, கொண்டுள்ள ஒருத்தி. ஓரளவு உலகம் புரியத் தொடங்கிய வயதிலிருந்து, இலங்கை இலக்கியத் துறையில் எனக்கான ஒரு இடத்தை ஏற்படுத்திவிடவேண்டும் என்ற ஆர்வத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்தேன் ., வடபகுதி நிலைமைகள் உயிருக்கு உத்தரவாதம் தராத காலத்தில், தலைநகருக்குப் பெயர்ந்தேன். அங்கு தான் எழுதுவதற்கான வாய்ப்பு அதிகம் ஏற்பட்டது பத்திரிகைகள் , வானொலி என ஓரளவு என் பெயரை அடையாளப்படுத்தி வரும் காலத்தில், தலைநகரில் தமிழ் மக்கள் குறிப்பாக வடக்கு கிழக்கைச் சேர்ந்தோரின் பாதுகாப்பு நிலைமை சீரற்று எந்த நேரத்திலும் நாம் காரணமற்றுக் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் இருந்த காலத்தில் இலக்கியம், அது பற்றிய கனவுகள் எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டு புலம்பெயர்ந்தவள். பின் சிறு இடைவெளிக்குப் பின் எனக்குள் உறங்கிக் கிடந்த எழுத்தார்வத்தை தட்டியெழுப்பிப் பற்றிக் கொண்டேன். .
இலங்கை தமிழ் இலக்கிய துறையில் தங்களின் பங்களிப்பு ?
நான் வாழும் காலத்தில் என்னோடு பயணிக்கும் இந்தச் சமூகம் பற்றி, சிறுகதை , நாவல், கட்டுரைகள், கவிதைகள் என்ற ரீதியில் எழுதிக்கொண்டிருக்கிறேன். எழுதியவைகளை விட எழுத வேண்டியவை திட்டமிட்டிருப்பவை அதிகம் உண்டு. காலம் அனுமதிக்கிறதா பார்க்கலாம்.
இளையோருக்கும் இலக்கிய துறைக்கும் இடையிலான உறவு (வாசிப்பது , கருத்து) தொடர்பில் ?
தற்கால இளையோருக்கும் இலக்கியத்துறைக்குமான உறவு அத்தனை தூரம் சிறப்பாக உள்ளதாக நான் எண்ணவில்லை. சொற்ப தொகையினரிடமே இப்போது வாசிப்புப்பழக்கம் உள்ளதாக உணர்கிறேன். ஒரு விதமான அவசரகதியில் இயங்கிக்கொண்டிருக்கும் இவர்களிடம், வாசிப்பு, அதுபற்றிய கருத்துப் பகிர்வு போன்றவற்றுக்கான பொறுமை அமைதி இல்லாதது போலவே தோன்றுகிறது. அத்துடன் , நான் வாழும் தேசத்திலிருந்து என் தாய்நாட்டை ஒப்பிட்டுப் பார்க்கும் போது கல்விக்கூடங்கள் மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தினை ஏற்படுத்துவதற்கான காத்திரமான முயற்சிகள் எதனையும் பெரியளவில் எடுப்பதாக அறிய முடியவில்லை.. அத்துடன் சேணம் கட்டிய பந்தயக் குதிரை மாதிரி, பாடத்திட்டம் பரீட்சை வெற்றி , குறிவைத்த உயர் உத்தியோகமாக எம் மக்களால் பார்க்கப்படும் தொழில் நோக்கிய ஓட்டம் என்பன தாண்டி மாணவர்களோ பெற்றோரோ பாடசாலைகளோ சிந்திப்பதும் ஊக்குவிப்பதும் குறைவாகவே இருக்கிறது , இளையவர்கள் அல்லது மாணவர்கள் தாம் சுயமாக முயன்றாலொழிய அதற்காக வழி காட்டப்படுதல் இல்லை எனும் போது , ஈடுபடுவோரும் குறைவாகவே காணப்படும் நிலையே உள்ளது . வாசிப்பு என்பது இது தான் , இதைத்தான் என்றில்லாமல் பரந்துபட்ட விதமாக அமையும் போது தான் உலகை அறிய முடியும். அந்த ரீதியில் மிகக் குறுகிய தொகையினரே உள்ளதாக எண்ணுகிறேன். தொழில் நுட்பத்தின் அபார வளர்ச்சியினால் , ஒரு விரல் சொடுக்கில் நமக்கு வேண்டிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளும் காலப்பகுதியில் நாம் வாழ்ந்தாலும் ஆழவாசிப்பு என்பது நமக்குள் கேள்விகளை எழுப்பி சிந்திக்கவைத்து பதில் தேடிப் பண்படுத்தும். அத்தன்மை அருகிவருவதாக உணர்கிறேன்
தமிழ் இலக்கிய துறையில் பெண்களின் பங்களிப்பு தொடர்பில் தங்கள் நிலைப்பாடு ??
எனது பார்வையில் கனதியாக உள்ளது எனக் கூற முடியாது. ஆனால் போர்க்காலத்தின் பின் ஈடுபாடும் பங்களிப்பும் அதிகரித்திருக்கின்றது என்பது மறுக்க முடியாது.. குறிப்பாக போர்க்காலங்களில் வெளிவந்த போரிலக்கியங்களில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்திருந்ததுடன் காத்திரமானதாக இருந்தது என்பதும் மறுப்பதற்கில்லை. பொதுவாக பலர் இத்துறையில் நுழைந்தாலும், அதைத் தொடர்வதில் ஆர்வம் காட்டுவதில்லை, அல்லது வாழ்க்கைச் சூழலில் அவர்களுடைய எழுத்துத் திறமை மழுங்கடிக்கப் படுகிறது. அதையும் தாண்டியும் தொடர்வோரில் சிலராலேயே சமூகத்தை ஆழமாக நோக்க முடிகிறது. தாம் சார் சமூகத்தை வெளிப்படையாக உடைத்து எழுத முடிகிறது. அந்த வகையில் இசுலாமிய சமூகத்திலிருந்து பெண்களின் பங்களிப்பு அதிகரித்தும் , சமூகத்தை எதிர்கொள்ளும் தென்போடும் வெளிவரத் தொடங்கியிருக்கிறது. இப்படியான மயக்கமற்ற எழுத்துக்களால் ஆன , சமூகத்தை நேரப்படப் பேசும் பங்களிப்புக்கள் எல்லாத்தரப்பினரிடத்திலும் ஊக்குவிக்கப் படவேண்டும்
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை தமிழ் இலக்கியத்தில் பெண்களின் பங்களிப்பு எவ்வாறு உள்ளது ??
அதிகளவானோர் முயல்கிறார்கள். ஆனால் ஆழமாக இல்லை. வெறுமனே காதலையும் , இயற்கையையும் பாடுவோர் தான் அதிகமாக உள்ளார்கள். நான் அவதானித்தவரை ஏனைய நாடுகளில் பொழுதுபோக்கப் பேனா எடுத்தவர்களை விட, குறிக்கோளுடன் எடுத்தவர்கள் அதிகம், ஆகவே அவர்கள் எழுத்தில் மையம் வரை சென்று பிரச்சனைகளை உணர்வுகளை உடைத்து வெளிக்காட்டும் தன்மை அதிகமாக இருக்கிறது. இலங்கைத் தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபடும் மிகச் சொற்பமானோர் தவிர மற்றவர்களிடம் ஆழம் செல்லாது மேலோட்டமாக நகர்ந்து கொண்டு விமர்சனங்கள் மற்றும் பொதுப்பார்வையில் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் உணர்வே தெரிகிறது.
இலங்கை தமிழ் இலக்கியம் கண்டுகொள்ளாத விடயங்கள் எவையேனும் இருப்பின் அது தொடர்பிலும் , தமிழ் இலக்கியத்தின் ஊடாக சொல்லப்பட வேண்டியவைகள் தொடர்பில் உங்கள் கருத்து ? அவை இந்த சமூகத்திற்கு சொல்லப்பட வேண்டிய அவசியம் என்ன ??
கண்டுகொள்ளாத விடயங்கள் பல உண்டு. உள்ளே அனுபவித்தாலும் வெளிப்படையாக ஒத்துக்கொள்ள பல பெண்களே தயங்கும் நிலையில் தான் இன்னும் எங்கள் பெண்கள் மீதான அடக்குமுறைகள், அவர்களின் நியாயமான அபிலாசைகள் இருக்கின்றன. அவள் கட்டுகள் தளர்த்தி வெளியே வர ஆண்களை விட பெண்களே அதிகளவில் எதிரிகளாக உள்ளார்கள். குடும்பங்களுக்குள் குழந்தைகள் மீது பிரயோகிக்கப்படும் பாலியல் துஸ்பிரயோகங்கள், புலப்பெயர்வுக்குப் பின்னான பண ரீதியாக மிகவும் ஏற்றத் தாழ்வு கொண்ட சமுதாய அமைப்பு, முப்பது வருடங்களாக மெல்ல அருகிச்சென்று இப்போது வீச்சமாக வளரவைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பிரதேச, சாதிய , மற்றும் சமய ரீதியான வேறுபாடுகள் , அவை விளைவிக்கப்போகும் அவல நிலை. மற்றும் இனங்களுக்கிடையேயான அடிப்படைப் புரிதல், இவை எல்லாமே சொல்லப்படவேண்டியதாக எண்ணுகிறேன். அவை சொல்லப்படுவதற்கான அவசியம் என்றால், ஒரு மரமானால் கூட அது மேல்நோக்கி சடைத்து வளர்ந்து தான் வேர்களை ஆழ ஊன்றிக் கொள்வதே அது சார் மனிதர்களின் விருப்பும் நோக்குமாக இருக்கும் பட்சத்தில் தான் சார் சமூகம் தன்னில் புரையோடிக்கிடக்கும் பலவிதமான தேவையற்ற ஒட்டுண்ணிகளை க் களைந்து ஒரு புரிதலுக்குள் வரும் போது தான் அதுவும் உயரிய நிலையை அடையும் என நம்புகிறேன் .
.ஈழத்தமிழிலக்கியம் இன்று பலபரிணாமங்களை எடுத்திருந்தாலும், அது இன்னும் பயணிப்பதற்கான தூரமும், செய்யவேண்டிய கடமைகளும் அதிகமாகவேயுள்ளது. பல்வேறுகாலகட்டங்களில் அது சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளைப் பேசியிருந்தாலும் இன்று மிகவும் முக்கியமானதோர் திருப்பத்தில் வந்து நிற்கிறது.
கடந்த எழுபதாண்டுகளில் இலங்கைத்தீவில் அரசியலுரிமைகள் தொடர்பாக ஈரினங்களுக்கிடையே நிலவிவரும் பகைமை பற்றி ஈழத்திலக்கியம் பேசிவந்திருந்தாலும் அதனை முழுமையான முறையில் இதுவரையில் பதிவுசெய்யப்படவில்லை. ஓரினத்தின் அரசியலுரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் அவ்வினம் எதிர்கொண்ட நெருக்கடிகள், அடக்குமுறைகள், உயிர், உடமையிழப்புகள், சொந்த நாட்டிற்குள்ளேயும், தாய்நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளிலும் அகதிகளாகி வாழ்ந்துவரும் அவலநிலை, இதனால் பொருளாதார, கலாசார, பண்பாடுகளில் எதிர்கொள்ளும் மாற்றங்கள் சிக்கல்கள், சரியான முறையில் பதியப்படவோ பேசப்படவோ இல்லை.
எழுத்துகள், இலக்கியங்கள் மூலம் ஒரு சமூகத்தின் அறியப்படாத விடயங்களை அறியமுடியுமென்பதுடன், பரஸ்பரம் உறவுகள், நல்லிணக்கம், நெருக்கம் என்பவைகளையும் ஏற்படுத்த முடியும்.
இங்கே நாம் இதற்கான முயற்சிகளை இன்னமும் பெருமளவில் ஈடுபடவில்லையென்பது மனத்தாங்கலானதோர் விடயம். சிங்கள இலக்கியமும் கூட இம் முரண்பாடுகளை சரிவரப் பதிந்திருக்கிறார்களா என்பதும், இணக்கத்திற்கான முயற்சிகளை எடுத்திருக்கிறார்களா என்பதும் தெரியவில்லை.
இவ்வாறான பொறுப்புணர்ச்சிகள் உள்ள நிலையில் இலங்கை தமிழ் இலக்கியம் எதனை நோக்கி பயணிக்கின்றது ?
என்னைக் கேட்டால் பெரியளவில் ஆரோக்கியமாகப் பயணிக்கின்றது என்று சொல்லமாட்டேன். அதன் பயணத்தில் பொறுப்புப் பற்றி ஆராயும் இந்த நோக்கு பெரியளவில் இல்லை. பல சுயதம்பட்டங்களும், இனங்களுக்குள் சொந்த சமூகத்துக்குள் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும், தூரநோக்குச் சிந்தனையை மழுங்கடிக்கும் ஏதோ ஒரு தூண்டல் பலரின் எழுத்தில் வெளிப்படுவதாக உணர்கிறேன். மீதி ஒரு பகுதி ஒரு கனவு நிலை மயக்கத்துக்குள் தொலைந்து கொண்டு மேலோட்டமாக எதையோ எழுதுகிறார்கள். மிகச் சொற்ப எழுத்தாளர்களே சமூகப் பொறுப்போடு எழுதுவதாக உணர்கிறேன்.
எழுத்தாளரின் கடமை , பொறுப்பு என்னவென தாங்கள் நினைக்கிறீர்கள் ?
பொறுப்புள்ள எழுத்தாளரின் கடமை உள்ளதை உள்ளபடி காலத்தின் நகலாகப் பிரதிபலித்தல். வாசகர் எழுத்துக்குள் தம்மை இறக்கி உணர்ந்து தெளியும் தன்மை எழுத்துக்கு இருக்கவேண்டும் என நினைக்கிறேன். புனைவு இலக்கியங்களில் கூட நடைமுறையில் சாத்தியமில்லாத கனவு மயக்கத்துக்குள் சமுதாயத்தைக் கிறங்கிக் கிடக்கவைப்பதை நான் விரும்புவதில்லை.
பல எழுத்தாளர்கள் வருடத்திற்கு ஒரு புத்தகம் வெளியிடுவது தொடர்பில் கவனம் செலுத்தும் அவர்கள் , அதன் உள்ளடக்கம் தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதில்லை எனும் குற்றசாட்டு தொடர்பில் ???
இந்தக் குற்றச் சாட்டுக்குள் எல்லோரும் அடங்குவர் எனக் கூறமுடியாது. ஆனாலும் அதில் ஓரளவு உண்மையும் உண்டு என நினைக்கிறேன். மற்றும் பிரபலங்களினதும் ஊடகங்களினதும் கவனிப்புக்குத் தம்மை ஆளாக்கி, தமக்கான ஒரு முகவரியை இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டு படைக்கும் படைப்பாளிகளின் நூல்களில் கூட நீங்கள் மேலே குறிப்பிட்டது போல உள்ளடக்கத்தில் வெறுமைத் தன்மை இருக்கவே தான் செய்கிறது. ஒருவேளை நான் படைப்பது எல்லாமே தரம் வாய்ந்த இலக்கியம் எனும் அதீத தன்னம்பிக்கை அதற்குக் காரணமாக இருக்கலாம் .
இலங்கை தமிழ் இலக்கியத்துறையை பொறுத்த வரையில் பக்கசார்பாக ஒரு தரப்புக்கு சார்பாக எழுதுகின்றார்கள் எனும் குற்றசாட்டு உண்டு அல்லது அவர்கள் எழுதியதை வாசகர்கள் ஒரு தரப்பு சார்பாகவே பிரித்து பார்க்கின்றனர் ?
நீங்கள் போரியல் சார்பான நூல்களின் அடிப்படையில் இக்கேள்வியைக் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். நீங்கள் மேற்குறிப்பிடும் இரண்டும் உள்ளதாகவே உணர்கிறேன். இதைத்தான் மேலே நீங்கள் கேட்ட வினாவிலும் தொட்டுக் காட்டினேன். தம் சுயஆதாயங்களை , சுய விரோதங்களை மனதில் வைத்து, தம் சார் பக்கத்தரப்பு வாசகர்களைத் திருப்திப்படுத்தும் விதமே படைக்கப் படுகிறது. மேலும் அதற்குள் நடைமுறையில் சம்பவித்திராத, சாத்தியமற்ற சம்பவங்களையும் தம் உளப்பாங்குக்கு ஏற்ப பக்கச் சார்பாகப் படைக்கப்படும் படைப்புகளை எப்படி இலக்கியம் என்ற வகைக்குள் அடக்க முடியும். இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி., அந்தக் கண்ணாடியில் பல படைப்புகளில் பல இடங்களில் காலம் பிரதிபலிக்கவில்லை. பல இடங்களில் அதன் இரசம் அழிக்கப் பட்டே படைக்கப் படுகிறது. மற்றும் , வெறுமனே போர் நடந்தது, அதில் இவை இவை எல்லாம் நடந்தன என்று உண்மைகளோடும் ஊகங்களோடும் எத்தனை காலத்துக்கு எழுதுவது. எதனால் நிகழ்ந்தது, இனியும் நிகழாதிருக்க என்னவெல்லாம் செய்யலாம், தொடர்ந்தும் கொதிநிலை பதட்டச் சூழலில் இந்த மண்ணின் மக்களை வைத்திருப்பதால் ஏற்படப்போகும் பின்விளைவுகள் என்ன என்ற ரீதியில் சிந்திக்காது தொடர்ந்தும் வெளிவரும் போரியல் புனைவு நூல்கள் இலக்கியம் என்ற வகைக்குள் அடக்க முடியுமா என்பது எனக்குச் சற்றுக் குழப்பம் . இப்படியானவை வெளிவரும் வரை மக்கள் தத்தமக்கு வாகான வகையில் பிரித்துப் பார்ப்பதும் தவிர்க்க முடியாது.
என்னைப்பற்றிய அறிமுகம் என்றால், நான் ஈழத்தைத் தாய்தேசமாகக் கொண்டவள். இப்போது ஜெர்மனியில் வசித்துக்கொண்டிருக்கிறேன், நாட்டின் அமைதியின்மை மற்றும் பாதுகாப்பற்ற சூழலால் விரும்பாமல் வேறு வழியற்று புலம் பெயரும் நிர்ப்பந்தத்துக்கு ஆளாக்கப்பட்ட ,. என் நாட்டின் மீது மிகுந்த நேசம் கொண்டிருந்த, கொண்டுள்ள ஒருத்தி. ஓரளவு உலகம் புரியத் தொடங்கிய வயதிலிருந்து, இலங்கை இலக்கியத் துறையில் எனக்கான ஒரு இடத்தை ஏற்படுத்திவிடவேண்டும் என்ற ஆர்வத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்தேன் ., வடபகுதி நிலைமைகள் உயிருக்கு உத்தரவாதம் தராத காலத்தில், தலைநகருக்குப் பெயர்ந்தேன். அங்கு தான் எழுதுவதற்கான வாய்ப்பு அதிகம் ஏற்பட்டது பத்திரிகைகள் , வானொலி என ஓரளவு என் பெயரை அடையாளப்படுத்தி வரும் காலத்தில், தலைநகரில் தமிழ் மக்கள் குறிப்பாக வடக்கு கிழக்கைச் சேர்ந்தோரின் பாதுகாப்பு நிலைமை சீரற்று எந்த நேரத்திலும் நாம் காரணமற்றுக் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் இருந்த காலத்தில் இலக்கியம், அது பற்றிய கனவுகள் எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டு புலம்பெயர்ந்தவள். பின் சிறு இடைவெளிக்குப் பின் எனக்குள் உறங்கிக் கிடந்த எழுத்தார்வத்தை தட்டியெழுப்பிப் பற்றிக் கொண்டேன். .
இலங்கை தமிழ் இலக்கிய துறையில் தங்களின் பங்களிப்பு ?
நான் வாழும் காலத்தில் என்னோடு பயணிக்கும் இந்தச் சமூகம் பற்றி, சிறுகதை , நாவல், கட்டுரைகள், கவிதைகள் என்ற ரீதியில் எழுதிக்கொண்டிருக்கிறேன். எழுதியவைகளை விட எழுத வேண்டியவை திட்டமிட்டிருப்பவை அதிகம் உண்டு. காலம் அனுமதிக்கிறதா பார்க்கலாம்.
இளையோருக்கும் இலக்கிய துறைக்கும் இடையிலான உறவு (வாசிப்பது , கருத்து) தொடர்பில் ?
தற்கால இளையோருக்கும் இலக்கியத்துறைக்குமான உறவு அத்தனை தூரம் சிறப்பாக உள்ளதாக நான் எண்ணவில்லை. சொற்ப தொகையினரிடமே இப்போது வாசிப்புப்பழக்கம் உள்ளதாக உணர்கிறேன். ஒரு விதமான அவசரகதியில் இயங்கிக்கொண்டிருக்கும் இவர்களிடம், வாசிப்பு, அதுபற்றிய கருத்துப் பகிர்வு போன்றவற்றுக்கான பொறுமை அமைதி இல்லாதது போலவே தோன்றுகிறது. அத்துடன் , நான் வாழும் தேசத்திலிருந்து என் தாய்நாட்டை ஒப்பிட்டுப் பார்க்கும் போது கல்விக்கூடங்கள் மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தினை ஏற்படுத்துவதற்கான காத்திரமான முயற்சிகள் எதனையும் பெரியளவில் எடுப்பதாக அறிய முடியவில்லை.. அத்துடன் சேணம் கட்டிய பந்தயக் குதிரை மாதிரி, பாடத்திட்டம் பரீட்சை வெற்றி , குறிவைத்த உயர் உத்தியோகமாக எம் மக்களால் பார்க்கப்படும் தொழில் நோக்கிய ஓட்டம் என்பன தாண்டி மாணவர்களோ பெற்றோரோ பாடசாலைகளோ சிந்திப்பதும் ஊக்குவிப்பதும் குறைவாகவே இருக்கிறது , இளையவர்கள் அல்லது மாணவர்கள் தாம் சுயமாக முயன்றாலொழிய அதற்காக வழி காட்டப்படுதல் இல்லை எனும் போது , ஈடுபடுவோரும் குறைவாகவே காணப்படும் நிலையே உள்ளது . வாசிப்பு என்பது இது தான் , இதைத்தான் என்றில்லாமல் பரந்துபட்ட விதமாக அமையும் போது தான் உலகை அறிய முடியும். அந்த ரீதியில் மிகக் குறுகிய தொகையினரே உள்ளதாக எண்ணுகிறேன். தொழில் நுட்பத்தின் அபார வளர்ச்சியினால் , ஒரு விரல் சொடுக்கில் நமக்கு வேண்டிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளும் காலப்பகுதியில் நாம் வாழ்ந்தாலும் ஆழவாசிப்பு என்பது நமக்குள் கேள்விகளை எழுப்பி சிந்திக்கவைத்து பதில் தேடிப் பண்படுத்தும். அத்தன்மை அருகிவருவதாக உணர்கிறேன்
தமிழ் இலக்கிய துறையில் பெண்களின் பங்களிப்பு தொடர்பில் தங்கள் நிலைப்பாடு ??
எனது பார்வையில் கனதியாக உள்ளது எனக் கூற முடியாது. ஆனால் போர்க்காலத்தின் பின் ஈடுபாடும் பங்களிப்பும் அதிகரித்திருக்கின்றது என்பது மறுக்க முடியாது.. குறிப்பாக போர்க்காலங்களில் வெளிவந்த போரிலக்கியங்களில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்திருந்ததுடன் காத்திரமானதாக இருந்தது என்பதும் மறுப்பதற்கில்லை. பொதுவாக பலர் இத்துறையில் நுழைந்தாலும், அதைத் தொடர்வதில் ஆர்வம் காட்டுவதில்லை, அல்லது வாழ்க்கைச் சூழலில் அவர்களுடைய எழுத்துத் திறமை மழுங்கடிக்கப் படுகிறது. அதையும் தாண்டியும் தொடர்வோரில் சிலராலேயே சமூகத்தை ஆழமாக நோக்க முடிகிறது. தாம் சார் சமூகத்தை வெளிப்படையாக உடைத்து எழுத முடிகிறது. அந்த வகையில் இசுலாமிய சமூகத்திலிருந்து பெண்களின் பங்களிப்பு அதிகரித்தும் , சமூகத்தை எதிர்கொள்ளும் தென்போடும் வெளிவரத் தொடங்கியிருக்கிறது. இப்படியான மயக்கமற்ற எழுத்துக்களால் ஆன , சமூகத்தை நேரப்படப் பேசும் பங்களிப்புக்கள் எல்லாத்தரப்பினரிடத்திலும் ஊக்குவிக்கப் படவேண்டும்
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை தமிழ் இலக்கியத்தில் பெண்களின் பங்களிப்பு எவ்வாறு உள்ளது ??
அதிகளவானோர் முயல்கிறார்கள். ஆனால் ஆழமாக இல்லை. வெறுமனே காதலையும் , இயற்கையையும் பாடுவோர் தான் அதிகமாக உள்ளார்கள். நான் அவதானித்தவரை ஏனைய நாடுகளில் பொழுதுபோக்கப் பேனா எடுத்தவர்களை விட, குறிக்கோளுடன் எடுத்தவர்கள் அதிகம், ஆகவே அவர்கள் எழுத்தில் மையம் வரை சென்று பிரச்சனைகளை உணர்வுகளை உடைத்து வெளிக்காட்டும் தன்மை அதிகமாக இருக்கிறது. இலங்கைத் தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபடும் மிகச் சொற்பமானோர் தவிர மற்றவர்களிடம் ஆழம் செல்லாது மேலோட்டமாக நகர்ந்து கொண்டு விமர்சனங்கள் மற்றும் பொதுப்பார்வையில் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் உணர்வே தெரிகிறது.
இலங்கை தமிழ் இலக்கியம் கண்டுகொள்ளாத விடயங்கள் எவையேனும் இருப்பின் அது தொடர்பிலும் , தமிழ் இலக்கியத்தின் ஊடாக சொல்லப்பட வேண்டியவைகள் தொடர்பில் உங்கள் கருத்து ? அவை இந்த சமூகத்திற்கு சொல்லப்பட வேண்டிய அவசியம் என்ன ??
கண்டுகொள்ளாத விடயங்கள் பல உண்டு. உள்ளே அனுபவித்தாலும் வெளிப்படையாக ஒத்துக்கொள்ள பல பெண்களே தயங்கும் நிலையில் தான் இன்னும் எங்கள் பெண்கள் மீதான அடக்குமுறைகள், அவர்களின் நியாயமான அபிலாசைகள் இருக்கின்றன. அவள் கட்டுகள் தளர்த்தி வெளியே வர ஆண்களை விட பெண்களே அதிகளவில் எதிரிகளாக உள்ளார்கள். குடும்பங்களுக்குள் குழந்தைகள் மீது பிரயோகிக்கப்படும் பாலியல் துஸ்பிரயோகங்கள், புலப்பெயர்வுக்குப் பின்னான பண ரீதியாக மிகவும் ஏற்றத் தாழ்வு கொண்ட சமுதாய அமைப்பு, முப்பது வருடங்களாக மெல்ல அருகிச்சென்று இப்போது வீச்சமாக வளரவைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பிரதேச, சாதிய , மற்றும் சமய ரீதியான வேறுபாடுகள் , அவை விளைவிக்கப்போகும் அவல நிலை. மற்றும் இனங்களுக்கிடையேயான அடிப்படைப் புரிதல், இவை எல்லாமே சொல்லப்படவேண்டியதாக எண்ணுகிறேன். அவை சொல்லப்படுவதற்கான அவசியம் என்றால், ஒரு மரமானால் கூட அது மேல்நோக்கி சடைத்து வளர்ந்து தான் வேர்களை ஆழ ஊன்றிக் கொள்வதே அது சார் மனிதர்களின் விருப்பும் நோக்குமாக இருக்கும் பட்சத்தில் தான் சார் சமூகம் தன்னில் புரையோடிக்கிடக்கும் பலவிதமான தேவையற்ற ஒட்டுண்ணிகளை க் களைந்து ஒரு புரிதலுக்குள் வரும் போது தான் அதுவும் உயரிய நிலையை அடையும் என நம்புகிறேன் .
.ஈழத்தமிழிலக்கியம் இன்று பலபரிணாமங்களை எடுத்திருந்தாலும், அது இன்னும் பயணிப்பதற்கான தூரமும், செய்யவேண்டிய கடமைகளும் அதிகமாகவேயுள்ளது. பல்வேறுகாலகட்டங்களில் அது சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளைப் பேசியிருந்தாலும் இன்று மிகவும் முக்கியமானதோர் திருப்பத்தில் வந்து நிற்கிறது.
கடந்த எழுபதாண்டுகளில் இலங்கைத்தீவில் அரசியலுரிமைகள் தொடர்பாக ஈரினங்களுக்கிடையே நிலவிவரும் பகைமை பற்றி ஈழத்திலக்கியம் பேசிவந்திருந்தாலும் அதனை முழுமையான முறையில் இதுவரையில் பதிவுசெய்யப்படவில்லை. ஓரினத்தின் அரசியலுரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் அவ்வினம் எதிர்கொண்ட நெருக்கடிகள், அடக்குமுறைகள், உயிர், உடமையிழப்புகள், சொந்த நாட்டிற்குள்ளேயும், தாய்நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளிலும் அகதிகளாகி வாழ்ந்துவரும் அவலநிலை, இதனால் பொருளாதார, கலாசார, பண்பாடுகளில் எதிர்கொள்ளும் மாற்றங்கள் சிக்கல்கள், சரியான முறையில் பதியப்படவோ பேசப்படவோ இல்லை.
எழுத்துகள், இலக்கியங்கள் மூலம் ஒரு சமூகத்தின் அறியப்படாத விடயங்களை அறியமுடியுமென்பதுடன், பரஸ்பரம் உறவுகள், நல்லிணக்கம், நெருக்கம் என்பவைகளையும் ஏற்படுத்த முடியும்.
இங்கே நாம் இதற்கான முயற்சிகளை இன்னமும் பெருமளவில் ஈடுபடவில்லையென்பது மனத்தாங்கலானதோர் விடயம். சிங்கள இலக்கியமும் கூட இம் முரண்பாடுகளை சரிவரப் பதிந்திருக்கிறார்களா என்பதும், இணக்கத்திற்கான முயற்சிகளை எடுத்திருக்கிறார்களா என்பதும் தெரியவில்லை.
இவ்வாறான பொறுப்புணர்ச்சிகள் உள்ள நிலையில் இலங்கை தமிழ் இலக்கியம் எதனை நோக்கி பயணிக்கின்றது ?
என்னைக் கேட்டால் பெரியளவில் ஆரோக்கியமாகப் பயணிக்கின்றது என்று சொல்லமாட்டேன். அதன் பயணத்தில் பொறுப்புப் பற்றி ஆராயும் இந்த நோக்கு பெரியளவில் இல்லை. பல சுயதம்பட்டங்களும், இனங்களுக்குள் சொந்த சமூகத்துக்குள் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும், தூரநோக்குச் சிந்தனையை மழுங்கடிக்கும் ஏதோ ஒரு தூண்டல் பலரின் எழுத்தில் வெளிப்படுவதாக உணர்கிறேன். மீதி ஒரு பகுதி ஒரு கனவு நிலை மயக்கத்துக்குள் தொலைந்து கொண்டு மேலோட்டமாக எதையோ எழுதுகிறார்கள். மிகச் சொற்ப எழுத்தாளர்களே சமூகப் பொறுப்போடு எழுதுவதாக உணர்கிறேன்.
எழுத்தாளரின் கடமை , பொறுப்பு என்னவென தாங்கள் நினைக்கிறீர்கள் ?
பொறுப்புள்ள எழுத்தாளரின் கடமை உள்ளதை உள்ளபடி காலத்தின் நகலாகப் பிரதிபலித்தல். வாசகர் எழுத்துக்குள் தம்மை இறக்கி உணர்ந்து தெளியும் தன்மை எழுத்துக்கு இருக்கவேண்டும் என நினைக்கிறேன். புனைவு இலக்கியங்களில் கூட நடைமுறையில் சாத்தியமில்லாத கனவு மயக்கத்துக்குள் சமுதாயத்தைக் கிறங்கிக் கிடக்கவைப்பதை நான் விரும்புவதில்லை.
பல எழுத்தாளர்கள் வருடத்திற்கு ஒரு புத்தகம் வெளியிடுவது தொடர்பில் கவனம் செலுத்தும் அவர்கள் , அதன் உள்ளடக்கம் தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதில்லை எனும் குற்றசாட்டு தொடர்பில் ???
இந்தக் குற்றச் சாட்டுக்குள் எல்லோரும் அடங்குவர் எனக் கூறமுடியாது. ஆனாலும் அதில் ஓரளவு உண்மையும் உண்டு என நினைக்கிறேன். மற்றும் பிரபலங்களினதும் ஊடகங்களினதும் கவனிப்புக்குத் தம்மை ஆளாக்கி, தமக்கான ஒரு முகவரியை இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டு படைக்கும் படைப்பாளிகளின் நூல்களில் கூட நீங்கள் மேலே குறிப்பிட்டது போல உள்ளடக்கத்தில் வெறுமைத் தன்மை இருக்கவே தான் செய்கிறது. ஒருவேளை நான் படைப்பது எல்லாமே தரம் வாய்ந்த இலக்கியம் எனும் அதீத தன்னம்பிக்கை அதற்குக் காரணமாக இருக்கலாம் .
இலங்கை தமிழ் இலக்கியத்துறையை பொறுத்த வரையில் பக்கசார்பாக ஒரு தரப்புக்கு சார்பாக எழுதுகின்றார்கள் எனும் குற்றசாட்டு உண்டு அல்லது அவர்கள் எழுதியதை வாசகர்கள் ஒரு தரப்பு சார்பாகவே பிரித்து பார்க்கின்றனர் ?
நீங்கள் போரியல் சார்பான நூல்களின் அடிப்படையில் இக்கேள்வியைக் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். நீங்கள் மேற்குறிப்பிடும் இரண்டும் உள்ளதாகவே உணர்கிறேன். இதைத்தான் மேலே நீங்கள் கேட்ட வினாவிலும் தொட்டுக் காட்டினேன். தம் சுயஆதாயங்களை , சுய விரோதங்களை மனதில் வைத்து, தம் சார் பக்கத்தரப்பு வாசகர்களைத் திருப்திப்படுத்தும் விதமே படைக்கப் படுகிறது. மேலும் அதற்குள் நடைமுறையில் சம்பவித்திராத, சாத்தியமற்ற சம்பவங்களையும் தம் உளப்பாங்குக்கு ஏற்ப பக்கச் சார்பாகப் படைக்கப்படும் படைப்புகளை எப்படி இலக்கியம் என்ற வகைக்குள் அடக்க முடியும். இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி., அந்தக் கண்ணாடியில் பல படைப்புகளில் பல இடங்களில் காலம் பிரதிபலிக்கவில்லை. பல இடங்களில் அதன் இரசம் அழிக்கப் பட்டே படைக்கப் படுகிறது. மற்றும் , வெறுமனே போர் நடந்தது, அதில் இவை இவை எல்லாம் நடந்தன என்று உண்மைகளோடும் ஊகங்களோடும் எத்தனை காலத்துக்கு எழுதுவது. எதனால் நிகழ்ந்தது, இனியும் நிகழாதிருக்க என்னவெல்லாம் செய்யலாம், தொடர்ந்தும் கொதிநிலை பதட்டச் சூழலில் இந்த மண்ணின் மக்களை வைத்திருப்பதால் ஏற்படப்போகும் பின்விளைவுகள் என்ன என்ற ரீதியில் சிந்திக்காது தொடர்ந்தும் வெளிவரும் போரியல் புனைவு நூல்கள் இலக்கியம் என்ற வகைக்குள் அடக்க முடியுமா என்பது எனக்குச் சற்றுக் குழப்பம் . இப்படியானவை வெளிவரும் வரை மக்கள் தத்தமக்கு வாகான வகையில் பிரித்துப் பார்ப்பதும் தவிர்க்க முடியாது.
Saturday, July 27, 2019
நாணயத்தைக் கையில் வைத்து..........
'துரோகி துரையப்பா.' துரையப்பா என்ற பெயர் காதில் விழுந்த சிறுவயதுகளில், அதற்கு முன்பே சுட்டுக் கொல்லப்பட்ட (27.07.1975) அவர் அப்படித்தான் நாம் வாழ்ந்த யாழ் சமூகத்தால் அடையாளப் படுத்தப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டார்.
அதன் பின் வளர்ந்து கடந்து கொண்டிருந்த வாழ்வில் இன்று வரை அரசியல், சமூகம் , என்ற அடிப்படையில் அடிக்கடி இந்த துரோகி என்ற பதத்துக்குள் பலபெயர்கள் அடையாளப்படுத்தப் பட்டுக்கொண்டே இருக்கின்றன. அவர் எவர். எவரெல்லாம் துரோகி. துரோகம் என்றால் என்ன? என்று ஆராய்வதல்ல இந்தப் பதிவு.
மக்கள் மனம் பற்றிய என் இப்போதைய புரிதலின் படி, அதிக மக்கள் போகும் பாதைக்கு எதிர்த்திசையில் எவர் போகிறாரோ, காலத்துக்கேற்ப அவரவர் கருத்துக்கு எவர் முரணோ அவர் அவர்களுக்குத் துரோகி. அந்தப் பட்டத்துக்குள் அவர் அந்த மக்களுக்காக , தன்னலம் கருதியோ, பொதுநலம் கருதியோ அதுவரை செய்த அத்தனை நன்மையையும் மறைக்கப்பட்டு பின் மறக்கப்பட்டும் விடும். துரோகி என்ற வரலாற்றுப் பெயருடன் அவர் இறப்பு நிகழும். என்பது தான் இன்று வரை போராளித் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், அரசாங்க அதிகாரிகள் , ஊர்ப் பெரியமனிதர்கள் எனப் பொதுத்துறையில் பயணித்த அனேகமாக அனைவர்க்கும் ,அவர்கள் வாழ்ந்த காலத்திலும் சூழலிலும் வாழ்ந்த அவர்கள் சாரா மக்கள் கூட்டம்வழங்கிய கைம்மாறு
ஒரு இறப்பின் பரிதாபப்படக் கூடிய நகைச்சுவை என்னவெனில் ஒருவரைத் துரோகி எனச் சொன்ன மக்கள் கூட்டமே , அவரின் பெயரை, அவரின் இறப்பை தம் சுயநலத்துக்குப் பாவித்த துரோகம் .
அவர் சுட்டுக்கொல்லப்பட்ட பின் மெல்ல மெல்ல கலவரபூமியாக மாறத்தொடங்கிய மண்ணை விட்டு பொருளாதார நோக்கோடு புலம்பெயர்ந்து அகதி அனுமதி கேட்டு ஐரோப்பாவுக்குள் நுழைந்த கூட்டத்தில் ஐம்பது வீதமானோராவது ஐரோப்பிய நாடுகளின் குடிவரவுத் திணைக்களத்து விசாரணையில் அகதி அந்தஸ்துக் கோருவதற்குக் காரணமாகக் கொடுத்த அறிக்கையில் துரையப்பாவைச் சுட்டுவிட்டேன். நாட்டிலிருக்க
உயிராபத்துப்பயம். என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
இத்தனை வருடமாக இத்தனையாயிரம் பேர் நாளாந்தம் சுட்டுக்கொல்லும் அளவு அத்தனை வலிய சீவனா துரையப்பா என கிண்டலாகவும், துரையப்பா கதையை விட்டு விட்டு வேறு கதை விடு எனக் கோபமாகவும் அதிகாரிகளால் கேட்கப்பட்டவர்கள் உண்டு.. நான் இதில் கூறவந்தது இதுவல்ல. யாழ் நகரில் திரு அல்பிரட் துரையப்பாவை ஞாபகப் படுத்திக்கொண்டிருக்கும் கட்டிடத் தொகுதிகள் பற்றியதுமல்ல. இது நீங்கள் பலர் அறியாத ஒரு மூலையில் நிகழ்ந்தது. அது.........
கொழும்புத்துறை என்ற சிறு கிராமம் பற்றியது, யாழ் கடநீர்ஏரியிலிருந்து பாண்டியன் தாழ்வு சுண்டுக்குளி வரை கொழும்புத்துறை என்பதற்குள் அடங்கினாலும், தற்போதுள்ள மணியன் தோட்டம் , வளன்புரம் போன்ற குடியேற்றக்கிராமங்கள் உருவாவதற்கு முன்னான காலத்தில் சில குறுக்குத் தெருக்களையும் அவை சந்திக்கும் பிரதான வீதியையும், கடல்வழிப் போக்குவரத்தின் துறைமுகத்தையும் கொண்ட இறுதிக் கிராமம்.
குறைந்தளவான மக்கள் தொகையைக் கொண்ட ஊரில் உயர் கல்வியறிவும், பொருளாதார வசதியும் மிக்கவர்கள் விரல் விட்டு எண்ணும் தொகையினராகவே இருந்திருக்கிறார்கள். மாதச் சம்பளம் என்பதும் இந்த ஒரு குறிக்கப்பட்ட சிறு தொகையினரிடமே இருக்க, அன்றாடம் காய்ச்சிகளான ஏனைய மக்களின் தொழில் கடலை நம்பியே இருந்தது.
பெருவலை, தொலைதூரக் கடற்பயணம் எல்லாம் இவர்கள் மீன்பிடி வழக்கில் இருந்ததாக நான் அறியவில்லை.. ஆகவே அவர்கள் அள்ளிவரும் கடல் வளமும் அவர்கள் நாளாந்தப் பொழுதை நடாத்த மட்டுமே போதுமானதாக இருந்தது.
அயலூரான அரியாலைக்கும் கொழும்புத்துறைக்கும் கைத்தொழிற் பொருளாதாரத் தொடர்புகள் இருந்தன. அரியாலைத்தென்னந்தோட்டங்களின் தேங்காய் மட்டைகளை மாலைவேளைகளில் பெண்கள் கடகத்தில் உயரமாக அடுக்கி தலையில் சுமந்து சென்று கடல்கரைச் சேற்று மண்ணில் புதைப்பார்கள். மற்றும் மாட்டுக்கு உணவாகப் பயன்படுத்தப்படும் பனையோலை ஈர்க்குகள், பனைமட்டைகள் அனைத்தும் ஆண்கள் சைக்கிளிலும் சுமந்து சென்று பச்சைமட்டையில் நார் உரித்து காயவிடுவார்கள்.
போனவருடம் தாட்ட மட்டைகள் காலைகளில் தோண்டி எடுத்து அலசி தண்ணீர் வழிய வழிய தலையில் சுமந்து வரப்பட்டு வீட்டிலிருக்கும் இளவயதுப் பெண்களால் மட்டையடித்துத் தும்பாக்கிக் காயவிடப்படும். மாலைகளில் புதியமட்டைகளை வாங்கி வந்து கடலில் தாட்டுவிட்டு வந்ததும் அவரவர் வீட்டு வாசலில் கயிறு திரிக்கும் உபகரணத்தோடு பெண்கள் கயிறு திரிக்க , ஆண்கள் உரித்தெடுத்த நாரில் இறால் கூடு முடைவதும், வலைதைப்பதுமாக ஒரு சாண் வயிற்றுக்கு நாள் முழுவதும் உடம்பு முறிய உழைத்தார்கள்.
துறைமுகம் என்பதால் பூநகரி வெட்டுக்காடு போன்ற பக்கங்களில் விளையும் தென்னையும் நெல்லும் கடல்வழி வத்தைப் போக்குவரத்தும் அதைச் சுமக்கும் மாட்டுவண்டிக்களுமாக எப்போதும் உயிர்ப்போடு இயங்கி அதன் மூலம் உயிர்வாழ்ந்த அந்தக் கிராமத்துக்கு
இடையில் மழையோ, அன்றி வேறு காரணமோ, அனைவரும் சைவமதத்தைத் தழுவியவர்களாக இருந்ததால் கோவில் திருவிழாவோ ஆரம்பித்து விட்டால் மச்சம் புரளாது. மச்சம் புரளாவிடத்து மீன்பிடி இராது. மீன் பிடிக்காவிட்டால் வருமானமிராது. அன்றாடங்காய்ச்சி மக்களின் குடல் காயும்.
தவிரவும் கல்விசார் முக்கிய பிரச்சனை ஒன்றும் அங்கிருந்தது. ஐயர்கடைச் சந்தி என வழங்கப்படுமிடத்தில் அமைந்துள்ள கொழும்புத்துறை இந்துமகாவித்தியாலயம் மட்டுமே அவ்விடத்து மாணவர்களுக்கெல்லாமாக இருந்த ஒரே பாடசாலை. பல்சமூகம்சார்.மத்தியில் அமைந்திருந்தது அது, அதனால் சிலபகுதி மாணவர்கள் உளவியல் பிரச்சனைகளையும் சந்திக்க நேர்ந்தது.
வசதி படைத்தவர்கள் தங்கள் பிள்ளைகளை காசைக் கொட்டி யாழில் பெரியதாகச் சொல்லப்பட்ட பாடசாலைகளுக்கு அனுப்ப. வறிய பிள்ளைகளின் கல்வி ஈடாடிக் கிடந்த காலத்தில் யாழ் நகர மேயர் துரையப்பாவின் பார்வையின் கீழ் வந்தது அக்கிராமமும் அதன் வறுமையும்.
ஒரு குடும்பத்தில் ஓரளவு பாடசாலைத் தகுதி கொண்ட ஒவ்வொருவரையாவது அவரவர் தகுதிக்கேற்ப மின்சாரசபை , கூட்டுறவுச் சங்கங்கள் போன்றவற்றில் பணிக்கமர்த்தி, மாதவருமானத்துக்கு அம்மண்ணிற்கு வித்திட்டு வைத்தார். கூடவே
1964 ஆம் ஆண்டு அவர்கள் மண்ணிலேயே 'துரையப்பா வித்தியாசாலை'
என்ற என்ற பத்தாம் தரம் வரையுள்ள பாடசாலையை அமைத்து, அந்த மண்ணின் சிறந்த கல்வியாளரும், மண்நேயம், மனிதநேயம் மிக்கவருமான திரு .செல்வராஜா அவர்களை அதிபராக நியமித்து அம்மண்ணின் கல்விவறுமையையும் தீர்த்து வைத்தார்.
அந்த ஏணியைப் பற்றிக்கொண்டு ஏறத்தொடங்கி எத்தனையோ உயரத்துக்குச் சென்றுவிட்ட அந்த மக்களின் வேர்களிடம் இன்றும் அவருக்கான நன்றியும் அஞ்சலியும் கசிந்துகொண்டேயிருப்பதை ஒரு நாணயத்தைக் கையில் வைத்து இருபக்கங்களும் பிரட்டிக்கொண்டே எண்ணிப் பார்க்கிறேன்
Wednesday, January 16, 2019
பொங்கல் வாசனைகள்
நான் என் தாயகத்தை விட்டு விடைபெறுவது வரை அரிந்த செம்மண் அல்லது சீமேந்துக் கல் அடுக்கிய அடுப்பில் எரியும் பொங்கல் பானைகளைக் கண்டதில்லை.
பொங்கலுக்கு அடுப்புப் பிடிக்கவென்றே ஒரு சிறு வாளி வீட்டிலிருக்கும் அப்போது. எங்கள் பக்கம் மேற்றரையை கொஞ்சம் கொத்தினால் போதும் உள்ளே நல்ல சிவந்த செம்பாட்டுக் களிமண். அதை வெட்டி எடுத்து தண்ணிவிட்டு நல்லா குழைத்து வாளியில் நிரப்பி கவிழ்த்து பின் அதன் மேற்பக்க அச்சுமுனைப்பகுதியை கத்தியால் சீவி மழித்து, மெழுகி காய வைத்து விடுவார்கள்.
சூரியப்பொங்கலுக்கு,, பட்டிப் பொங்கலுக்கு, அருகிலிருக்கும் ஏதாவது கோவிலுக்கு என ஒன்பது அடுப்புகளையும் மழைவர தூக்கி தாவாரத்தி்ல் வைத்து வைத்து பாதுகாத்து பொங்கலன்று பசுஞ்சாணத்தால் முற்றம் மெழுகும் போது அடுப்பையும் மெழுகி கோலத்தின் நடுவில் குடியேற்றுவார்கள்
இதே நடைமுறைதான் அருகிலுள்ள ஊரான கொழும்புத்துறையிலும் இருந்தது. அங்கு வண்டல் களிமண். அல்லது சொரிமணல். ஆதலால் பொங்கலுக்கு ஒன்று ஒன்றரை மாதத்துக்கு முன்பே அவர்கள் எங்கள் ஊரில் ரயில்பாதையை அண்மித்த வெற்றுநிலத்தில் வெட்டியெடுத்த செம்மண்ணை பெண்கள் கடகங்களிலும் ஆண்கள் உரப்பை, சாக்கு போன்றவற்றிலும் சுமந்து சென்று பொங்கலுக்கான புது அடுப்புப்பிடித்துக் கொள்வார்கள்.
நான் வேடிக்கை மட்டும் பார்க்கும் வயதில் ஒவ்வொரு பொங்கலும் கடந்த அடையாளமாக வீட்டிலும் வீதியிலும் பொங்கல் குழி இருக்கும் அப்போது.
நானறிந்து சுப்பையா குடும்பம் ஒன்று மட்டுமே அப்போது அங்கு மட்பாண்டத்தொழில் செய்து கொண்டிருந்ததால் அரிவுவெட்டுக்குப் பின் விவசாயி கையில் பணம் புரள்வது போல வெட்டிய நெல்லை அரிசியாக்கிப் பொங்கும் இந்தக் காலப்பகுதி தான் அவர்கள் கையி்ல் சற்றுப் பணம் புரள்வதும்.
வீட்டில், அயலில், உறவில் எங்கும் புதிய மண்பானை தவிர்த்து வேறெதிலும் பொங்கிப் பார்த்ததில்லை. பொங்கல் நாளுக்கு முதலே வாங்கி வந்த பானையில் நீர் விட்டு, கசிவு தெரிகிறதா, பொங்கும் போது விண்டு விடுமா என்றெல்லாம் கவனித்து வைப்பார்கள். விண்டால் பரவாயில்லை அடுத்த நாள் பட்டிப்பொங்கலுக்கு வாங்கிய பானையில் தொடரலாம் என பாட்டி தாத்தா எண்ணுவதே இல்லை. செண்டிமன்ற் அதிகம் என்பதால் பானை விண்டால் தம் வம்ச வாரிசுகளுக்கு ஏதாவது ஆகிவிடும் அறிகுறியோ என்ற பயமும் அதிகம் அவர்கட்கு.
பொங்கலை விட பொங்கலுக்கு அடுத்த நாள் பட்டிப் பொங்கல் சிறப்பாக இருக்கும். பட்டிப்பொங்கல் சூரியனுக்கல்ல பட்டிக்கு நன்றி சொல்வதற்கானது என்பதால் காலை நான்கு மணிக்கு முதல் எழுந்து பனிக் குளிருக்குள் அரக்கப்பரக்க முழுகி மெழுகி கோலம் போட்டு சூரியன் எழும்பி வரும்போது பொங்கி வழியும் அவசியம் எல்லாம் இல்லை. மேய்ச்சலுக்குப் போன பசுக்கள் எருதுகள் பசியாறி நிறைவாக வீட்டுக்கு வந்த பின் குளிப்பாட்டி விபூதி சந்தனம் குங்குமம் இட்டு கழுத்துக்கு பூமாலை போட்டு பட்டியில் கட்டிவைத்து அவர்கள் இருப்பிடத்துக்கு நடுவே மெழுகி கோலமிட்டு பொங்குவது.
வீட்டில் எல்லாரும் தங்கள் இடத்திற்குள் குழுமி இருப்பதும், விளக்கும் அடுப்புமா ஜகஜகவென்று ஜோதிமயமாக இருப்பதிலும் குதூகலித்துப் போய் கும்பம் வைத்த வாழையிலை தொடக்கம் திருவிற தேங்காய் வரை தலையாட்டி தலையாட்டி தாவெனக்க் கேட்பதும். கிட்டக் கிடைக்கும் யாரையும் பிடித்துக் கொஞ்சி அரம் மாதிரி தம் நாக்கினால் நக்கி விட்டு பதிலுக்கு, கழுத்தின் தொங்கு தோலைத் தடவி கொஞ்சிவிடு என கழுத்து வழைத்துக் கேட்பதும், இன்றெல்லாம் கோடியாய் கொட்டிக் கொடுத்தாலும் உணரமுடியாத சுகானுபவங்கள்.
பட்டிப் பொங்கல் அன்று தான் மூன்று ,ஐந்து ஏழு, என ஒற்றை விழ அதிகம் அதுவும் பாரம்பரியப் பலகாரங்கள் மட்டும் செய்வார்கள். அந்த ஒரு நாள் மட்டுமே பொரித்த மோதகம் செய்வதும். அப்போது இவைகள் நலனுக்கு வேண்டி வருடமொருமுறை தில்லியம்பலப் பிள்ளையார் கோவிலுக்குச் சென்று பொங்குவார்கள். அப்போதும் இந்தப் பொரித்த மோதகம் கட்டாயம் இருக்கும். காரணம் இன்று வரை எனக்குத் தெரியாது. அப்போது எதையும் ஆராய்ந்து கேட்கும் வயதில்லை. கேட்க நினைக்கும் இப்போது பாட்டி தாத்தா இல்லை. சின்னப்பாட்டி இருக்கிறா கேட்கலாம். ஆனால்....
என்ர . மாலுக்குட்டி இஞ்சவாம்மா என்று கூப்பிட்டு பக்கத்தில இருத்தி அது ஏனென்டால் ..... ஏனெண்டால்..... அக்காவையும், அம்மானையும் தான் கேட்க வேணும் செல்லம் என்று அப்ப மாதிரித்தான் இப்பவும் பதில் சொல்லுவா. ஆனாலும் பாட்டி தாத்தா விசேசமா செய்த எல்லாத்திலும் விபரங்களற்று கூடவே இருந்தவ.
அன்றைய கால அந்த வாழ்வு அப்படித்தான் இருந்தது. எல்லா நிகழ்விலும் உறவுகள் குடியிருந்தன. பாசம் பொங்கி வழிந்தது. ஜீவகாருண்ணியம் மிகுந்திருந்தது.
"பசுவுக்கெல்லாம் பொங்கிறீங்க நாய் பாவமில்லையா கவலைப்பட மாட்டானா" என்று கேட்டால்,
" இஞ்ச வா தம்பி" இதிலை படு என்று அதையும் கொண்டுவந்து மாட்டுக்கட்டைக்குள் விட்டு விட்டு, "பூசாவைத்தேடிக்கொண்டு வாங்கோ இல்லாட்டி நாளைக்கு பூனை பாவம் அதுக்கும் பொங்கு எண்டு நிப்பாள் " என எல்லாவற்றையும் வேடிக்கையாகவும் புரிதலோடும் பார்க்க அன்றைய மனிதர்களால் முடிந்தது.
பட்டிப்பொங்கல் படையலில் பலகாரம் மட்டுமல்ல பழவகை காய்கறி அபாரமாக இருக்கும். வாழையிலைகளில் அத்தனையும் பரப்பி அவைகளின் நலம் வேண்டிப் பிரார்த்தித்து ஒவ்வொருவருக்கும் முன்னால் படைத்து அவர்கள் சாப்பிடும் வரை கழுத்தை நெற்றியை தடவிக் கூடவேயிருந்து பின்னாலேயே எமக்கு சாப்பாடாகும்.
மொத்தத்தில் பொங்கல் என்பது பரஸ்பரம் வாழ்ந்து வாழவைத்து முழுவதும் நன்றி பகிரும் நிகழ்வாக நிறைவேறும்.
இப்போது பரவலாக வெளிவரும் படங்களில் தேடினேன் எங்குமே இந்த மண்ணடுப்பை காணக்கிடைக்கவேயில்லை. மண்பானை இல்லை. அனேக உலோகப் பானைகளின் கழுத்தில் இஞ்சி மஞ்சல் கட்டப்படவும் இல்லை. உலோகப்பானைக்கு அது அவசியம் இல்லை . என்பது அது கட்டப்படும் காரணம் அறிந்தோர்க்கு மட்டுமே புரியும்.
எல்லாத்தானிய இலைகளும் இருக்க தொற்று நீக்கி மூலிகைகளான இந்த இரண்டும் கட்டப்பட, புதிய மண் பானை, புதிய விளைச்சலின் பரீட்சிக்காத முதல் அரிசி, முதல் பயறு, கருப்பஞ்சாறு போன்றவை காரணமாக இருந்தன. கழுத்திலிருந்து பானைவாய்வரை சிலும்பி நிற்கக் கட்டப்படும் இந்த இலைகள் வெளியே தென்னம்பாளை நெருப்பில் காண்டற்று பானை சூடேறும் போதும், பானைக்குள் நீர் கொதித்து பொங்கும் போதும் மண்பானை வழி இதன் மருத்துவக்குணங்கள் உள்ளே கடத்தப்பட்டுக் கலக்கும் வாய்ப்புண்டு கூடவே சிலும்பி நிற்கும் இலைகள் பொங்கும் நீரில் அவிந்து விடுவதால் புதிய பயறு புதிய அரிசி போன்றவற்றால் குடலுக்கு தீங்கேற்படாதிருக்கவும் வழிவகுத்திருந்தது.
இப்போதெல்லாம் வாழ்க்கை அவசரமயமாகி விட்டதா, நீங்கள் அறிந்த உணர்ந்த பலகாரணங்களினாலா தெரியவில்லை. சமையலறைகளில் காஸ் அடுப்பு இடம்பிடித்து, மாத வருமானத்தில் நிரந்தரமாக தனக்கென ஒரு பணத்தொகையை ஒதுக்கவைத்து வளவுக்குள் விழும் பாளையும் ஓலையும் மட்டையும் பண்ணாடையும் அடிவளவுக்குள் ஒதுக்கி கொழுத்தி எரிக்கப்படும் குப்பைகள் ஆகிவிட்டன.. புதிய மண்பானை தாங்கும் சூட்டில் தென்னம்பாளைமடலின் மென் நெருப்பில் பொங்கிய பொங்கல் , இப்போது கடையில் வாங்கிய அரிசி சர்க்கரை பருப்பு பலங்களை வைத்து உலோகப்பானையின் கட்டை நெருப்பில் வேகிறது.
பால் பசுவிலிருந்தல்ல பக்கற்றிலிருந்து வரும் அல்லது மாவைக்கரைத்தால் பால் வரும் என்ற விளக்கத்துக்குள் குழந்தைகள் வளரும் காலத்தை அருகிய நிலையில் பட்டிப் பொங்கல் வாழ்த்துச் சொல்லி பசு இல்லாத வீட்டில் அடுப்படியில் சர்க்கரை சாதம் செய்து அண்டை அயலுக்குப் பகிர்ந்தளிக்கிறோம். .
ஆனால் இன்றும் நாம் பொங்கல் என்று ஒரு நாளைக் கொண்டாடிக்கொண்டே இருக்கின்றோம்.
குதூகலிப்பதும் கொண்டாடுவதும் தானே வாழ்க்கை தரக்கூடிய சுவாரசியங்கள். அந்தவகையில் மனம் மகிழ்ந்து பொங்கினால் போதும் என்பதாகவேனும் பொங்கல் இருந்துவிட்டுப் போகட்டுமே .
பொங்கலுக்கு அடுப்புப் பிடிக்கவென்றே ஒரு சிறு வாளி வீட்டிலிருக்கும் அப்போது. எங்கள் பக்கம் மேற்றரையை கொஞ்சம் கொத்தினால் போதும் உள்ளே நல்ல சிவந்த செம்பாட்டுக் களிமண். அதை வெட்டி எடுத்து தண்ணிவிட்டு நல்லா குழைத்து வாளியில் நிரப்பி கவிழ்த்து பின் அதன் மேற்பக்க அச்சுமுனைப்பகுதியை கத்தியால் சீவி மழித்து, மெழுகி காய வைத்து விடுவார்கள்.
சூரியப்பொங்கலுக்கு,, பட்டிப் பொங்கலுக்கு, அருகிலிருக்கும் ஏதாவது கோவிலுக்கு என ஒன்பது அடுப்புகளையும் மழைவர தூக்கி தாவாரத்தி்ல் வைத்து வைத்து பாதுகாத்து பொங்கலன்று பசுஞ்சாணத்தால் முற்றம் மெழுகும் போது அடுப்பையும் மெழுகி கோலத்தின் நடுவில் குடியேற்றுவார்கள்
இதே நடைமுறைதான் அருகிலுள்ள ஊரான கொழும்புத்துறையிலும் இருந்தது. அங்கு வண்டல் களிமண். அல்லது சொரிமணல். ஆதலால் பொங்கலுக்கு ஒன்று ஒன்றரை மாதத்துக்கு முன்பே அவர்கள் எங்கள் ஊரில் ரயில்பாதையை அண்மித்த வெற்றுநிலத்தில் வெட்டியெடுத்த செம்மண்ணை பெண்கள் கடகங்களிலும் ஆண்கள் உரப்பை, சாக்கு போன்றவற்றிலும் சுமந்து சென்று பொங்கலுக்கான புது அடுப்புப்பிடித்துக் கொள்வார்கள்.
நான் வேடிக்கை மட்டும் பார்க்கும் வயதில் ஒவ்வொரு பொங்கலும் கடந்த அடையாளமாக வீட்டிலும் வீதியிலும் பொங்கல் குழி இருக்கும் அப்போது.
நானறிந்து சுப்பையா குடும்பம் ஒன்று மட்டுமே அப்போது அங்கு மட்பாண்டத்தொழில் செய்து கொண்டிருந்ததால் அரிவுவெட்டுக்குப் பின் விவசாயி கையில் பணம் புரள்வது போல வெட்டிய நெல்லை அரிசியாக்கிப் பொங்கும் இந்தக் காலப்பகுதி தான் அவர்கள் கையி்ல் சற்றுப் பணம் புரள்வதும்.
வீட்டில், அயலில், உறவில் எங்கும் புதிய மண்பானை தவிர்த்து வேறெதிலும் பொங்கிப் பார்த்ததில்லை. பொங்கல் நாளுக்கு முதலே வாங்கி வந்த பானையில் நீர் விட்டு, கசிவு தெரிகிறதா, பொங்கும் போது விண்டு விடுமா என்றெல்லாம் கவனித்து வைப்பார்கள். விண்டால் பரவாயில்லை அடுத்த நாள் பட்டிப்பொங்கலுக்கு வாங்கிய பானையில் தொடரலாம் என பாட்டி தாத்தா எண்ணுவதே இல்லை. செண்டிமன்ற் அதிகம் என்பதால் பானை விண்டால் தம் வம்ச வாரிசுகளுக்கு ஏதாவது ஆகிவிடும் அறிகுறியோ என்ற பயமும் அதிகம் அவர்கட்கு.
பொங்கலை விட பொங்கலுக்கு அடுத்த நாள் பட்டிப் பொங்கல் சிறப்பாக இருக்கும். பட்டிப்பொங்கல் சூரியனுக்கல்ல பட்டிக்கு நன்றி சொல்வதற்கானது என்பதால் காலை நான்கு மணிக்கு முதல் எழுந்து பனிக் குளிருக்குள் அரக்கப்பரக்க முழுகி மெழுகி கோலம் போட்டு சூரியன் எழும்பி வரும்போது பொங்கி வழியும் அவசியம் எல்லாம் இல்லை. மேய்ச்சலுக்குப் போன பசுக்கள் எருதுகள் பசியாறி நிறைவாக வீட்டுக்கு வந்த பின் குளிப்பாட்டி விபூதி சந்தனம் குங்குமம் இட்டு கழுத்துக்கு பூமாலை போட்டு பட்டியில் கட்டிவைத்து அவர்கள் இருப்பிடத்துக்கு நடுவே மெழுகி கோலமிட்டு பொங்குவது.
வீட்டில் எல்லாரும் தங்கள் இடத்திற்குள் குழுமி இருப்பதும், விளக்கும் அடுப்புமா ஜகஜகவென்று ஜோதிமயமாக இருப்பதிலும் குதூகலித்துப் போய் கும்பம் வைத்த வாழையிலை தொடக்கம் திருவிற தேங்காய் வரை தலையாட்டி தலையாட்டி தாவெனக்க் கேட்பதும். கிட்டக் கிடைக்கும் யாரையும் பிடித்துக் கொஞ்சி அரம் மாதிரி தம் நாக்கினால் நக்கி விட்டு பதிலுக்கு, கழுத்தின் தொங்கு தோலைத் தடவி கொஞ்சிவிடு என கழுத்து வழைத்துக் கேட்பதும், இன்றெல்லாம் கோடியாய் கொட்டிக் கொடுத்தாலும் உணரமுடியாத சுகானுபவங்கள்.
பட்டிப் பொங்கல் அன்று தான் மூன்று ,ஐந்து ஏழு, என ஒற்றை விழ அதிகம் அதுவும் பாரம்பரியப் பலகாரங்கள் மட்டும் செய்வார்கள். அந்த ஒரு நாள் மட்டுமே பொரித்த மோதகம் செய்வதும். அப்போது இவைகள் நலனுக்கு வேண்டி வருடமொருமுறை தில்லியம்பலப் பிள்ளையார் கோவிலுக்குச் சென்று பொங்குவார்கள். அப்போதும் இந்தப் பொரித்த மோதகம் கட்டாயம் இருக்கும். காரணம் இன்று வரை எனக்குத் தெரியாது. அப்போது எதையும் ஆராய்ந்து கேட்கும் வயதில்லை. கேட்க நினைக்கும் இப்போது பாட்டி தாத்தா இல்லை. சின்னப்பாட்டி இருக்கிறா கேட்கலாம். ஆனால்....
என்ர . மாலுக்குட்டி இஞ்சவாம்மா என்று கூப்பிட்டு பக்கத்தில இருத்தி அது ஏனென்டால் ..... ஏனெண்டால்..... அக்காவையும், அம்மானையும் தான் கேட்க வேணும் செல்லம் என்று அப்ப மாதிரித்தான் இப்பவும் பதில் சொல்லுவா. ஆனாலும் பாட்டி தாத்தா விசேசமா செய்த எல்லாத்திலும் விபரங்களற்று கூடவே இருந்தவ.
அன்றைய கால அந்த வாழ்வு அப்படித்தான் இருந்தது. எல்லா நிகழ்விலும் உறவுகள் குடியிருந்தன. பாசம் பொங்கி வழிந்தது. ஜீவகாருண்ணியம் மிகுந்திருந்தது.
"பசுவுக்கெல்லாம் பொங்கிறீங்க நாய் பாவமில்லையா கவலைப்பட மாட்டானா" என்று கேட்டால்,
" இஞ்ச வா தம்பி" இதிலை படு என்று அதையும் கொண்டுவந்து மாட்டுக்கட்டைக்குள் விட்டு விட்டு, "பூசாவைத்தேடிக்கொண்டு வாங்கோ இல்லாட்டி நாளைக்கு பூனை பாவம் அதுக்கும் பொங்கு எண்டு நிப்பாள் " என எல்லாவற்றையும் வேடிக்கையாகவும் புரிதலோடும் பார்க்க அன்றைய மனிதர்களால் முடிந்தது.
பட்டிப்பொங்கல் படையலில் பலகாரம் மட்டுமல்ல பழவகை காய்கறி அபாரமாக இருக்கும். வாழையிலைகளில் அத்தனையும் பரப்பி அவைகளின் நலம் வேண்டிப் பிரார்த்தித்து ஒவ்வொருவருக்கும் முன்னால் படைத்து அவர்கள் சாப்பிடும் வரை கழுத்தை நெற்றியை தடவிக் கூடவேயிருந்து பின்னாலேயே எமக்கு சாப்பாடாகும்.
மொத்தத்தில் பொங்கல் என்பது பரஸ்பரம் வாழ்ந்து வாழவைத்து முழுவதும் நன்றி பகிரும் நிகழ்வாக நிறைவேறும்.
இப்போது பரவலாக வெளிவரும் படங்களில் தேடினேன் எங்குமே இந்த மண்ணடுப்பை காணக்கிடைக்கவேயில்லை. மண்பானை இல்லை. அனேக உலோகப் பானைகளின் கழுத்தில் இஞ்சி மஞ்சல் கட்டப்படவும் இல்லை. உலோகப்பானைக்கு அது அவசியம் இல்லை . என்பது அது கட்டப்படும் காரணம் அறிந்தோர்க்கு மட்டுமே புரியும்.
எல்லாத்தானிய இலைகளும் இருக்க தொற்று நீக்கி மூலிகைகளான இந்த இரண்டும் கட்டப்பட, புதிய மண் பானை, புதிய விளைச்சலின் பரீட்சிக்காத முதல் அரிசி, முதல் பயறு, கருப்பஞ்சாறு போன்றவை காரணமாக இருந்தன. கழுத்திலிருந்து பானைவாய்வரை சிலும்பி நிற்கக் கட்டப்படும் இந்த இலைகள் வெளியே தென்னம்பாளை நெருப்பில் காண்டற்று பானை சூடேறும் போதும், பானைக்குள் நீர் கொதித்து பொங்கும் போதும் மண்பானை வழி இதன் மருத்துவக்குணங்கள் உள்ளே கடத்தப்பட்டுக் கலக்கும் வாய்ப்புண்டு கூடவே சிலும்பி நிற்கும் இலைகள் பொங்கும் நீரில் அவிந்து விடுவதால் புதிய பயறு புதிய அரிசி போன்றவற்றால் குடலுக்கு தீங்கேற்படாதிருக்கவும் வழிவகுத்திருந்தது.
இப்போதெல்லாம் வாழ்க்கை அவசரமயமாகி விட்டதா, நீங்கள் அறிந்த உணர்ந்த பலகாரணங்களினாலா தெரியவில்லை. சமையலறைகளில் காஸ் அடுப்பு இடம்பிடித்து, மாத வருமானத்தில் நிரந்தரமாக தனக்கென ஒரு பணத்தொகையை ஒதுக்கவைத்து வளவுக்குள் விழும் பாளையும் ஓலையும் மட்டையும் பண்ணாடையும் அடிவளவுக்குள் ஒதுக்கி கொழுத்தி எரிக்கப்படும் குப்பைகள் ஆகிவிட்டன.. புதிய மண்பானை தாங்கும் சூட்டில் தென்னம்பாளைமடலின் மென் நெருப்பில் பொங்கிய பொங்கல் , இப்போது கடையில் வாங்கிய அரிசி சர்க்கரை பருப்பு பலங்களை வைத்து உலோகப்பானையின் கட்டை நெருப்பில் வேகிறது.
பால் பசுவிலிருந்தல்ல பக்கற்றிலிருந்து வரும் அல்லது மாவைக்கரைத்தால் பால் வரும் என்ற விளக்கத்துக்குள் குழந்தைகள் வளரும் காலத்தை அருகிய நிலையில் பட்டிப் பொங்கல் வாழ்த்துச் சொல்லி பசு இல்லாத வீட்டில் அடுப்படியில் சர்க்கரை சாதம் செய்து அண்டை அயலுக்குப் பகிர்ந்தளிக்கிறோம். .
ஆனால் இன்றும் நாம் பொங்கல் என்று ஒரு நாளைக் கொண்டாடிக்கொண்டே இருக்கின்றோம்.
குதூகலிப்பதும் கொண்டாடுவதும் தானே வாழ்க்கை தரக்கூடிய சுவாரசியங்கள். அந்தவகையில் மனம் மகிழ்ந்து பொங்கினால் போதும் என்பதாகவேனும் பொங்கல் இருந்துவிட்டுப் போகட்டுமே .
Subscribe to:
Posts (Atom)